15

     அவரிடம் தான் வந்த காரியத்தைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிற சாமர்த்தியம் சின்னிக்கு இருந்தது.

     “இந்தத் தம்பி பேரு முத்துராமலிங்கம்! தமிழிலே கதை, பாட்டு எல்லாம் நல்லா எழுத வரும். நம்ப கையிலே ஒரு வேலை போட்டுக் குடுத்தா உபகாரமா இருக்கும்...”

     “ஆமாங்க! சின்னி அண்ணனுக்குக் கட்டாயம் நாம உதவி செய்யணும்... அவரு தான் நம்பளை இப்பிடி ஒண்ணு சேர்த்து வச்ச தெய்வம்...”

     - ஒரு மூன்றாந்தரப் படத்தின் நாலாந்தர ‘டயலாக்’ போலச் செயற்கையாயிருந்தன அவளுடைய சிபாரிசு வார்த்தைகள். ஆனால் அவற்றுக்கு உரிய செல்வாக்கு இருப்பது உடனே தெரிந்தது.

     ‘அண்ணன்’ என்கிற வார்த்தைக்கு அடுத்தபடி ‘தெய்வம்’ என்னும் வார்த்தைக்கும் இப்போது ‘டெப்ரசியேஷன் வேல்யூ’ மட்டுமே கிடைத்திருப்பது போல் பட்டது முத்துராமலிங்கத்துக்கு.

     “சரி! நம்ப ஜோதியே சொல்லிடிச்சு!... நீ நாளையிலேருந்து இங்கே ஃப்ளோருக்கே நேரா வந்துடு... முதல்லே மாசம் முந்நூறுக்குக் குறையாம ஏதாச்சும் போட்டுத் தரேன்... அப்பாலே பார்க்கலாம்.”

     இப்படி அவர் கூறியதைக் கேட்டு முத்துராமலிங்கம் வியந்து நிற்கையில் சின்னி அவருக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தான்.

     “எப்பவுமே நம்ப ஐயா கை ரொம்ப ராசியானதுங்க... முதல் வேலை இங்கே கெடைச்சாலே வேகமா முன்னுக்கு வந்துடலாங்க... தங்கச்சியையே எடுத்துக்குங்க... ஐயா கையிலே இட்டாந்து விட்டப்பெறவுதான் இப்பிடி ஜொலிக்குது!”

     இப்படிச் சின்னி புகழ்வதை அவரும் விரும்பி ஏற்று மகிழ்ந்து இரசிப்பது நன்றாகப் புரிந்தது. பட்டனம் என்ற அந்தக் கலாசார மயானத்தில் புகழ் பலரை முட்டாள்களாகவும், மன நோயாளிகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருப்பது புரிந்தது. புகழ் பொருள் காரணமாக அயோக்கியர்களும், அக்கிரமக்காரர்களும் நிமிர்ந்து நடந்து ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். புகழும் பொருளும் இல்லாத காரணத்தால் யோக்கியர்களும் நியாயவான்களும் கூனிக்குறுகித் தவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த முரண்பாடு வெளிப்படையாகவே அங்கு தெரிந்தது.

     கவர்ச்சி நடிகை ஜெகஜோதிக்கும் அவளுக்கு வேண்டிய அந்தப் பிரபல படத் தயாரிப்பாளருக்கும் நன்றி சொல்லிவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொள்ளுமாறு முத்துராமலிங்கத்திடம் ஜாடை காட்டினான் சின்னி.

     சற்றே சிக்கனமான புன்னகையோடு கூடிய ஒரு வணக்கத்தை அவர்களுக்குச் செலுத்தி விடைபெற்றான் முத்துராமலிங்கம். புறப்படுமுன் சின்னியிடம் அவர் கூறினார்:

     “செட்ல பாபுராஜ் இருக்கான். உன் ஆளை அவங்கிட்ட இண்ட்ரொட்யூஸ் பண்ணி வுட்டுடூ...”

     “சரிங்க...”

     சின்னி முத்துராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு ‘செட்’க்குள் நுழைந்தான். முத்துராமலிங்கம் சின்னியோடு உடன் நடந்து கொண்டே, “அது யாரு பாபுராஜ்?” என்று சின்னியைக் கேட்டான்.

     “அவன் தான் இவுங்க கதை இலாகா ஆளு... அவனோட தான் நீ வேலை பார்க்கணும்!”

     “அது சரி! என்ன வேலைன்னே சொல்லலியே சின்னி?”

     “கதை வசனம் இதுவெல்லாம் நீ பாபுராஜுக்கு உதவியா இருக்கணும்னு நெனைக்கிறேன்.”

     “உதவியா இருக்கிறதுன்னா...?”

     “என்ன செய்யணும்னு பாபுராஜையே கேட்டுட்டாப் போவுது...”

     “அங்கே ஜெகஜோதியும், நீயும் அறிமுகப்படுத்தினீங்களே அதான் அந்தப் ப்ரொட்யூசரு... அவர் பேரு என்ன?”

     “கன்னியப்ப முதலியாரு... முதலியாருன்னுதான் ஃபீல்டிலே எல்லாரும் கூப்பிடுவாங்க... அவரோட கம்பெனி... ஜெய் அங்காள பரமேஸ்வரி பிக்சர்ஸுங்கறது. இதுலதான் கதை இலாகாவில் உனக்கு வேலை...”

     “பாபுராஜுங்கறவர் ரொம்பப் படிச்சவரோ...!”

     “ரொம்ப படிச்சவனா இல்லியாங்கறது எனக்குத் தெரியாது... ஆனா ரொம்பப் படிச்சவனா இருக்க முடியாதுன்னு தோணுது... ரொம்ப நாளா முதலியாரு கூடவே இருக்கான்...”

     பேசிக் கொண்டே செட்டுக்குள் நுழைந்திருந்தார்கள் அவர்கள்.

     உள்ளே ஒரு ரேப் ஸீனுக்கான ஒத்திகையை இயக்குநர் உதவி இயக்குநர்கள் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். படத்தின் பொருளாதார வெற்றியும், வசூலும், வியாபாரமும் எல்லாமுமே அதில் தான் முழுவதும் அடங்கியிருப்பது போல் அத்தனை அக்கறை காட்டிக் கொண்டிருந்தார்கள். அது தத்ரூபமாக வரவேண்டுமென்று மாய்ந்து கொண்டிருந்தார்கள்.

     அரசியல், கலை, இலக்கியம், சமூகம் முதலிய சகல துறைகளிலும் அந்தந்தத் துறைகளைக் கற்பழிப்பதற்கான ஒரு திட்டமிட்ட ஒத்திகை இப்படித்தான் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ என்று கூட அவனுக்குத் தோன்றியது.

     பலவீனங்களுக்கும், நைப்பாசைகளுக்கும் நச்சுத் தீனி போடும் முயற்சியே ‘பாபுலர் ஆர்ட்’ என்ற பிரமையோடு எல்லாரும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சமூகத்துக்குப் பயன்படாததெல்லாம் பிரசித்தப் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

     கையில் நோட்டுப் புத்தகத்துடன் இருந்த கழுத்து எது என்று தெரியாமல் இறுகிப்போன ஒரு குள்ளமான பருத்த மனிதனிடம் போய், “பாபுராஜ் சார்! ஒரு நிமிஷம்...” என்று மெல்லக் குழைந்தான் சின்னி.

     “அட ஏன்ப்பா உயிரை வாங்கறீங்க... இந்த ‘ரேப்ஸீன்’ நல்லா வரவிட மாட்டீங்க போல்ருக்கே...?” என்று அலுத்துக் கொண்டே திரும்பிய பாபுராஜ் சின்னியைப் பார்த்ததும், “அடேடே நீயா? வாப்பா... என்ன சங்கதி?” என்றான்.

     “ஒண்ணுமில்லேப்பா! முதலியாரைப் பார்த்துச் சொல்லியாச்சு... இந்தத் தம்பியை இங்க வேலைக்கி எடுத்துக் கிட்டிருக்காரு... உன் கையில் ஒரு வார்த்தை சொல்லிக் கதை இலாகாவில் வுட்டுடச் சொன்னாரு.”

     “தம்பி யாரு...?”

     “நம்பளுக்கு ரொம்ப வேண்டியவரு... எம்.ஏ. படிச்சிருக்காரு.”

     “அடி சக்கைன்னானாம். அத்தினி பெரிய படிப்புப் படிச்சவருக்கு இங்கென்னப்பா காரியம்?”

     சின்னி அறிமுகப்படுத்திய அறிமுகத்தை மதித்து அந்த மனிதருக்கு ஒரு கும்பிடு போட்டு வைத்தான் முத்துராமலிங்கம்.

     கலைகளிலோ, திருந்திய முழுமையைத் தேடுவதிலோ அக்கறையும் சத்தியவேட்கையுமில்லாத மனிதர்களே அங்கு நிரம்பியிருந்தார்கள். பணம், திடீர்ப் புகழ், அதிர்ஷ்டம், யோகக்காரனாவது போன்ற தவிப்புக்களோடு ஊடாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்கும் கடினமாக உழைப்பதில் அதிக நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை.

     பாபுராஜின் கையிலிருந்த வசனக் கோப்புக்கள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தில் விரித்திருந்த பக்கத்தை எட்டிப் பார்த்தன முத்துராமலிங்கம்.

     “தமில்த்தாயின் தணிப்பெருமைக்கு உறிய கர்ப்புக் கறசிகளின் இறத்தம் எண் உடலிலும் ஓடுகிரதடா பாவீ!”

     என்று எழுதியிருந்தது. கற்பழிக்க வந்த முரடர்களிடம் அகப்பட்டுச் சிக்கிக் கொண்ட பெண் பேச வேண்டிய வசனம் போலும் அது. புரிந்தாலும் ஆவலை அடக்க முடியாமல்,

     “என்னங்க இது?” - என்று பாபுராஜையே கேட்டு வைத்தான் முத்துராமலிங்கம்.

     “டயலாக்... அந்தப் பொம்பிளை அவனுகளை எதிர்த்துப் பேசவேண்டியதுப்பா.”

     “டயலாக்லே கற்பு ரொம்பப் பலவீனமா இருக்குதுங்களே?... அழுத்தமே இல்லியே?”

     “எதைச் சொல்றே...?”

     “இல்லே கர்ப்புன்னு இருக்கே...?”

     “ஆமா இருந்தா என்ன?...”

     “இப்போ நாம காப்பாத்த வேண்டியது ரெண்டு பேரோட கற்புன்னு தெரியுதுங்க. ஒண்ணு அந்தப் பொண்ணோடது. இன்னொண்ணு தமிழ் மொழியோடது.”

     முத்துராமலிங்கத்தின் இந்தக் கிண்டலைப் புரிந்து கொள்ள முடியாமல் வேறு யாரோ அவசரமாக வந்து டைரக்டர் கூப்பிடுவதாகக் கூறிப் பாபுராஜைக் கூட்டிக் கொண்டு போய்விட்டதால் ஒரு சிறு ஆரம்ப விரோதம் தவிர்க்கப்பட்டது.

     “ரொம்ப முரண்டும், பிடிவாதமும் பண்ணி எடுத்த எடுப்பிலேயே விரோதம் சம்பாதிக்க வேணாம் தம்பீ!” என்று சின்னி மெல்ல எச்சரித்து வைத்தான்.

     வாய் நிறைய வெற்றிலை போட்டுக் கொண்டு அந்தச் செக்கச்செவேரென்ற வெற்றிலைச் சாற்றையே இரண்டு கடைவாயும் நிறைய வழிய விட்டபடி, “ஐயோ! பாவியைப்பாருங்கய்யா. ரத்தங் கக்கிச் சாகறதுக்குள்ளே ரெண்டு காசு தர்மம் பண்ணுங்கய்யா” என்று குறக் குளித்தனம் பண்ணிக் காசு கேட்கும் ஒரு கல்லடி மங்கனைப் போல அந்த உலகம், கற்பழிப்பு, வறுமை, கன்ஃபைட், ஸ்டண்ட் என்று ஏதேதோ பண்ணிக் காசு சேர்த்துக் கொண்டிருப்பது போல் புரிந்தது.

     “யோவ் சின்னீ! இன்னிக்கி நேரம் நல்லால்லேப்பா. என்னான்னுப்பா இந்த ஆளை இட்டாந்தே... சரியான ராகுகாலமாப் பார்த்தியா?... புதன்கிழமை வரச்சொல்லு. அன்னிக்கி நல்ல நாளு” என்று பாபுராஜ் வந்து சொன்னான்.

     சின்னியும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

     “இந்த ரேப்ஸீனுக்கு நாளு, நட்சத்திரம், நேரம்லாம் சரிபார்த்துப் பண்ணியே இன்னும் நல்லாப் புடிபடாமத் தவிக்கிறோம்...”

     “ரேப்ஸீனுக்கு நாள் நட்சத்திரமா?”

     “ஆமான்னேன்! வடபழநிக் கோயிலாண்டே நம்ப முதலியாருக்கு ஆஸ்தான ஜோசியர் ஒருத்தரு இருக்காரு. அவருதான் குறிச்சுக் குடுத்தாரு...”

     சின்னியும் முத்துராமலிங்கமும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். திரும்பும் போது மாலை நேரமாகியிருந்தது.

     “வடபழநிக்குப் போயி முருகனைக் கண்டு ரெண்டு நல்ல வார்த்தை சொல்லிக் கும்பிட்டுப் போட்டுப் போகலாமா தம்பீ!”

     “போகலாம் சின்னீ! எனக்கும் அந்தக் கோயிலுக்குப் போகணும்னு ஆசை.”