நிசப்த சங்கீதம் - Nisaptha Sangeetham - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



31

     சிவகாமிநாதன் எவ்வளவோ உபசாரமாகவும் வற்புறுத்திக் கூறியும் கேட்காமல் பசுங்கிளித் தேவரும், அவர் மனைவியும் ஓர் ஓரமாகத் தரையிலேயே குத்த வைத்து உட்கார்ந்தார்கள். பசுங்கிளித் தேவரை மட்டும் கையைப் பிடித்து இழுத்து வந்து எப்படியோ கட்டாயப்படுத்திப் பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து விட்டார் சிவகாமிநாதன். ஆனால் திருமதி தேவர் மட்டும் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் கூசினாற் போலத் தரையிலேயே ஒதுங்கி உட்கார்ந்து விட்டாள். தேவர், நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் தரையில் உட்கார்ந்திருப்பதை விட அதிகக் கூச்சமும் ஒடுக்கமுமாகத்தான் உட்கார்ந்திருந்தார். இன்னும் நவீன மேஜை நாற்காலிக் கலாசாரத்துக்குப் பலியாகிவிடாத அசல் இந்திய கிராமவாசிகளை அப்போது தம்மெதிரே பார்த்தார் சிவகாமிநாதன். அவர்களை அவர் இரசித்துப் பழகினார்.

     “சர்க்கிள் இன்ஸ்பெட்கர் குருசாமி சேர்வை எனக்கு ரொம்ப வேண்டியவன்” என்று நாட்டுப்புறத்து மனிதர்களுக்கே உரிய ‘பெரிய உத்தியோகஸ்தர்களை எல்லாம் தெரியும்’ என்கிற பாணியில் பேச்சைத் தொடங்கினார் தேவர். அதில் மிகவும் வறண்டு போன நாட்டுப்புறத்துக் கர்வம் தான் தொனித்தது. உளுத்துப்போன இந்திய அதிகார வர்க்கமும் பதவிக்கு வருகிறவர்களுக்கு சலாம் போட்டுப் போட்டே கை தளர்ந்து போன உத்தியோக சாதியும் இன்னும் கிராமவாசிகளிடமும், நாட்டுப்புறத்து மக்களிடமும் கொஞ்சம் மரியாதைக்குரியனவாகவே இருப்பதைப் பற்றி யோசித்தார் சிவகாமிநாதன்.

     “கூட்டம், பேச்சு, அடிதடி, கலவரம்னு சீரழியவா அவனைப் பட்டணத்துக்கு அனுப்பினேன்? ஒரு நல்ல வேலையாகப் பார்த்துக்கிட்டு எனக்கு நாலு காசு அனுப்புவானின்னு பார்த்தேன், அவன் என்னடான்னா...?”

     பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே முத்துராமலிங்கத்தின் தந்தையைச் சரியாகப் புரிந்தது சிவகாமிநாதனுக்கு.

     “என்னமோ கூட்டத்திலே பேசி அதுலே கல்லடி பட்டு மண்டையிலே கட்டுப் போட்டுக்கிட்டுக் கெடக்கான்னு அந்தப் பொம்பளை வந்து சொல்லிச்சே ஐயா?”

     “எந்தப் பொம்பளை?”

     “அதான் கலையரசி கண்மணீன்னு எங்க பக்கத்துப் பொம்பளை ஒண்ணு அரசியல்லே அலையிதுங்களே?”

     “அப்பிடியா?” என்று அந்தப் பேச்சை வளர்க்காமல் விட்டார் சிவகாமிநாதன். கிராமாந்தரத்துப் பெற்றோர்களுக்கும், நகரங்களில் பட்டப் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பும் இளைஞர்களுக்கும் நடுவேதான் சிந்தனையிலும் செயல்களிலும் தலைமுறை இடைவெளியே உருவாகிறது என்று அவருக்குத் தோன்றியது.

     முத்துராமலிங்கம் எழுந்திருந்து வந்தான். அவனையும் அவன் பெற்றோரையும் முன் அறையில் தனியே விட்டு விட்டுச் சிவகாமிநாதன் அச்சகப் பகுதிக்குச் சென்றார்.

     முதல் சில விநாடிகள் பரஸ்பர க்ஷேமலாப விசாரணையில் கழிந்தன.

     “இதுக்காகவா பணத்தை வீணாச் செலவழிச்சிக்கிட்டு ரெண்டு பேரும் இங்கே பொறப்பட்டு வந்தீங்க? இங்கே என்ன மனுஷாளே இல்லாத காட்டிலியா இருக்கேன்? கூட இருக்கறவங்க கவனிச்சுக்க மாட்டாங்களா?”

     “அதில்லேடா, கண்மணி வந்து சொன்னதைக் கேட்டப் பெறவு உனக்கு ஆளுக்கே ஆபத்தோன்னு பயமாயிரிச்சு!”

     “அதுமாதிரி இருந்தா நானே தாக்கல் எழுதியிருப்பேனே!”

     “சரி குருசாமி சேர்வையை மறுவாட்டி பார்த்தியா, பாக்கலியா?”

     “அவருக்கு நீங்க யாருன்னே ஞாபகம் இல்லே! அப்புறம் என்னை எங்கே கவனிக்கப் போறாரு...?”

     “இப்போ நானும் உங்க ஆத்தாளும் அவரைப் பார்க்கப் போறோம்... நீயும் எங்க கூடப் பொறப்பிடு. இன்னிக்கே அவருகிட்டச் சொல்லி உனக்கு ஒரு வேலை வாங்கிக் குடுத்துடறேன்.”

     “நான் வரலே ஐயா! நீங்களும் ஆத்தாவும் மட்டும் போயிட்டு வாங்க.”

     “ஏண்டா வரமாட்டியா...?”

     “அவர் எதுவும் செய்வார்னு எனக்குத் தோணலை.”

     “சரி நாங்க போக வழியாச்சும் சொல்லி அனுப்பு.”

     போலீஸ் அதிகாரி குருசாமி சேர்வையைத் தேடிக் கொண்டு தன் பெற்றோர் போவதற்கு வழி விவரம் சொல்லி ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏற்றி வாடகையையும் கொடுத்தான் முத்துராமலிங்கம்.

     “இதெல்லாம் எதுக்குப்பா பக்கத்திலே இருந்தா நாங்க நடந்தே போய்க்குவோம்” என்று மறுத்துப் பார்த் தார் அவன் தந்தை.

     “நீங்களா அலைஞ்சு விசாரிச்சு எடம். கண்டுபிடிக்கிறது கஷ்டம் ரிக்‌ஷான்னா அவங்களே கொண்டுபோய் விட்டுடுவாங்க” என்று சொல்லிச் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தான் முத்துராமலிங்கம்.

     “நல்லாருக்கியா முத்துராமு!” என்று அவன் தாய் தான் மிகவும் கனிவாக அவனை அருகே வந்து விசாரித்தாள். புது இடம் என்கிற சங்கோஜம் தடுக்க அந்நியர் முன்னிலையில்கூட விட்டுக் கொடுக்க முடியாத பாசம் உந்த அருகே வந்து அவன் தலையைத் தொட்டுப் பார்த்து மயிர்க்கற்றைகளிடையே தடவி, “எங்கேடா காயம்? ரொம்ப வலுவாப் பட்டிரிச்சோ என ஆதரவாகவும் ஆறுதலாகவும் கேட்டாள் அன்னை.

     “அதெல்லாம் ஒண்ணுமில்லே ஆத்தா” என்று அவனிடமிருந்து தலையை மெதுவாக விடுவித்துக் கொண்டான் முத்துராமலிங்கம்.

     தன்னை வந்து பார்த்துவிட்டுப் போன கலையரசி கண்மணி ஊருக்குத் திரும்பிப் போய்த் தந்தையிடம் உள்ளதும் இல்லாததுமாகத் திரித்துவிட்டிருப்பாள் எனத் தோன்றியது. சிவகாமிநாதன் தான் முத்துராமலிங்கத்தை உருப்படாமல் அடிக்கிறார் என்பது போலவும் அவள் தந்தையிடம் சொல்லியிருப்பாள் என்று பட்டது.

     போலிஸ் சர்க்கிள் குருசாமி சேர்வையைப் பார்ப்பதற்காக ரிக்‌ஷா ஏறியபோது, “ஏம்பா, காலையிலே நான் வர்றப்ப இருந்தாரே அந்தப் பெரியவருதான் , உங்க தியாகியா?” என்று அவனை விசாரித்தார் தந்தை.

     “ஆமாம் ஐயா” என்று செல்லிவிட்டுப் பேசாமல் இருந்த முத்துராமலிங்கத்தை மேலும் விடாமல் கண்டிக்கிற தொனியில், “பொழைப்பைத் தேடிக்கிட்டுத்தான் மெட்ராஸ் வந்தியா? இல்லே தியாகிங்களையும் தொண்டருங்களையும் தேடிக்கிட்டு இங்கே வந்தியா? புரியாமத்தான் கேட்கிறேன். சொல்லு” என்றார். அவனுக்கு அவர் அப்படிக் கேட்டது பிடிக்கவில்லை என்றாலும் அப்போது தந்தையோடு வாதிட்டுக் கொண்டிராமல், “நீங்க போயிட்டு வாங்க. அப்புறம் பேசிக்கலாம்” என்று கூறி அவரை அனுப்பி வைத்தான். அவர்களை அனுப்பிவிட்டு அவன் வீட்டுக்குள் வந்ததுமே சிவகாமிநாதன் அவனை எதிர்கொண்டார். அவரே இதமாக அவனிடம் சொன்னார்.

     “நாம் எவ்வளவோ மறைச்சி வச்சிருந்தும் போலீஸுக்கு விஷயம் தெரியும். எப்ப ரிஜிஸ்தர் பண்ணினோமோ அப்பவே அது பகிரங்கமும் ஆகிவிடுகிறது. உங்கப்பா சர்க்கிள் இன்ஸ்பெக்டரைப் பார்த்தால் இந்தக் கலியான விஷயத்தை எப்படியும் தெரிஞ்சுக்கப் போறாரு! நாமதான் சொல்லாம மறைச்சோம்னு இருப்பானேன்? அவர் திரும்பி வந்ததும் உள்ளதைச் சொல்வி நீயும், மங்காவுமாக அவரையும் உங்கம்மாவையும் கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கிறது தான் முறை. ஆயிரம் இருந்தாலும் அவங்க உன்னைப் பெத்தவங்க.”

     “எங்கப்பா கோபக்காரரு. இதைக் கேட்டா ஆகாசத்துக்கும் பூமிக்குமாக் குதிப்பாரு! வீணா உங்க வீட்டுக்குள்ளாரச் சண்டையும் சத்தமும் வேணாம்னுதான் பார்த் தேன் ஐயா?”

     “சண்டையோ சத்தமோ எது வந்தாலும் பரவாயில்லை! நடந்ததை நடந்தபடியே அவங்ககிட்டச் சொல்லிடறதுதான் நல்லது.”

     “அவர் மனசை யாரோ போய்ச் சொல்லிக் கலைச்சு இங்கேஅனுப்பி வச்சிருக்காங்க. என்னைப் பத்தியும் உங்களைப் பத்தியும் கூடத் தப்பாச் சொல்லியிருப்பாங்க போலிருக்கு. நான் உங்க பேச்சைக் கேட்டுத்தான் வேலை தேடிக்காம இருக்கேன்கிற மாதிரிப் பேசினாரு. மறுபடியும் உங்க முன்னாடியே அப்படிப் பேசினாருன்னா என் மனசு பொறுக்காது. உண்மையிலே உங்களை நான் என்னோட் ஞானத் தந்தையா நெனைச்சுக்கிட்டிருக்கேன்.”

     “இருக்கலாம்ப்பா! ஆனால் பெற்ற தந்தைக்கு எந்த உரிமையும் இல்லேன்னு சொல்லிட முடியாதே” என்று சிரித்துக் கொண்டே அவனைப் பதிலுக்கு வினவினார் சிவகாமிநாதன்! அவன் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான். எதிர்த்துப் பதில் எதுவும் சொல்லவில்லை. சண்முகம் வேறு அப்போது கூட இல்லை. முந்திய இரவு தான் கோடம்பாக்கம் போயிருந்தார். அவர் இருந்தால் இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் உதவியாக இருக்கும். அவரை விட்டே தன் தந்தையிடம் பேசச் செய்யலாம். அவரும் நிதானமாக எடுத்துச் சொல்லுவார். இப்போது அதற்கு வழி இல்லை. சிவகாமிநாதன்தான் இவ்வளவுக்கும் காரணம் என்று தந்தையே அவர் மீது காரணம் புரியாத கோபத்தோடு இருப்பதனால் அவரை விட்டுப் பேசுவது சரியில்லை என்று தோன்றியது. சிவகாமிநாதனும் அதற்கு மனம் இணங்கவில்லை.

     “உங்கப்பா வந்ததும், சர்க்கிள் இன்ஸ்பெக்டரைத் தனக்குத் தெரியும்கிற பாணியில் பேச ஆரம்பிச்சதே எனக்குப் பிடிக்கலேப்பா... நான் அவரிட்ட உனக்காகப் பரிஞ்சுப் பேசறது நல்லா இருக்காது. நீயே பேசிக்கிறது தான் சரீன்னு படுது” என்றார் அவர்.

     “பணத்தையும், உத்தியோகத்தையுமே மதிக்கிற நாட்டுப்புற மனப்போக்கு அவருக்கு.”

     “அது தப்பு இல்லேப்பா! முக்காவாசி ஜனங்க அப்பிடித்தான் இருக்காங்க. இருப்பாங்க... ஆனா அந்த ரெண்டையும் தவிர எதுவுமே வேண்டாம்னு நெனைக்கிற மனப் பான்மைதான் கெடுதல். அப்படி மனப்பான்மையாலேதான் பணம் இல்லாத யோக்கியனைக் கேவலப்படுத்தறாங்க. பதவி இருந்தா மோசமானவனையும் மதிக்கிறாங்க. பதவி இல்லாட்டா முதல்தரமான மனிதனைக்கூட உதாசீனப்படுத்தறாங்க.”

     “பிரிட்டிஷ் ஆட்சியின் பழக்க தோஷத்தாலே ஏற்பட்டு விட்ட நிரந்தர நோக்காடு இது! பணத்துக்கும், அதிகாரத் துக்குமே மரியாதை தரப் பழக்கப்படுத்தியதே அந்த ஆட்சி தான். அது சுதந்திர இந்தியாவிலேயும் தொடருது. ஜனநாயகவாதியான நேரு காலத்திலேயே பணக்காரங்களை நம்பி-அவங்க பணத்திலேதான் கட்சி, தேர்தல் செலவு எல்லாத்தையும் சமாளிச்சிருக்காங்க!”

     “உண்மை! இன்றுள்ள நிலையில் நமது அரசியல் ஜன நாயகம், கட்சி தேர்தல் எல்லாமே பணத்தையும் அதிகாரத்தையும் அடைவதற்காகப் பணத்தையும் அதிகாரத்தையுமே துஷ்பிரயோகம் செய்கிற ஏற்பாடுதானப்பா...”

     பகல் ஒரு மணிக்குமேல் பசுங்கிளித் தேவரும், அவர் மனைவியும் சிந்தாதிரிப்பேட்டைக்குத் திரும்பி வந்தார்கள். சிவகாமிநாதன் அச்சகப் பகுதியில் இருந்தார். தாக்குதலுக்கு ஆளான அச்சகப் பகுதி அப்போதுதான் செம்மைப்படுத்தப் பெற்றிருந்தது.

     முத்துராமலிங்கம்தான் அவர்களை எதிர்கொண்டான். பசுங்கிளித் தேவர் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டார்.

     “மந்திரி மகளைக் கடத்திக்கிட்டுப் போயித் திருட்டுத் தாலி கட்டினியாமே? உனக்கு ஏண்டா இப்பிடிப் புத்தி போச்சு? துப்புக் கெட்டுப் போனியா? ஏதோ நாம ஏழைப் பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க. நீ படிச்சு மானமா ஒரு உத்தியோகம் பார்த்து எங்களைக் காப்பாத்துவேன்னு பார்த்தாத் தலைக்குக் கல்லைக் கொண்டாந்திட்டியே!... இதெல்லாம் எங்கே போயி நிக்கப் போகுதோ?”

     அவரது கூப்பாட்டைக் கேட்டு மங்கா வெளியே வந்தாள். அவரைக் கும்பிடும்படி அவளுக்கு ஜாடைகாட்டி விட்டுத் தானும் அவளருகே சென்று நின்று கொண்டு பெற்றோரை அவளோடு சேர்ந்து வணங்கினான். முத்துராமலிங்கம்.

     “திருட்டுக் கலியாணம் பண்ணிக்கிட்டதோடப் போகாம என்னைக் கும்பிட வேறவா செய்யிறீங்க?” என்று சீறினார் பசுங்கிளித் தேவர்.

     “கொஞ்சம் மெதுவாகத்தான் பேசுங்களேன். எதுக்கு இப்படிக் கத்தணும்?... ஊரைக் கூட்டாதீங்க” என்று முத்துராமலிங்கத்தின் தாய் அவரைச் சிறிது சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் அவர் கேட்கிற வழியாயில்லை.

     “இதுக்காகவா பட்டணத்துக்கு வேலைமெனக்கெட்டு உன்னை அனுப்பி வெச்சேன். ‘உங்க மவன் உருப்படவே மாட்டான். அதான் உருப்படாத ஆளுங்களோட போய்ச் சேர்ந்துக்கிட்டு அலையிறான்’னு குருசாமி சேர்வையே சொல்றான்.”

     “அப்பா நிறுத்துங்க... இது உங்க வீடு இல்லே! இன்னொருத்தர் இடத்திலே வந்து நின்னுக்கிட்டு அவங்களையே இப்படியெல்லாம் நீங்க விவரம் புரியாமப் பேசப்பிடாது”... என்று முத்துராமலிங்கம் குறுக்கிட்டபோது, “யாரைடா விவரம் புரியாதவன்னு சொல்றே? என்னைத் தானே? நீ செஞ்சிருக்கிறதெல்லாம் ரொம்ப விவரமான காரியமில்லே? அதான் பேசறே ஏன் பேச மாட்டே? இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே... என்ன திமிருடா உனக்கு?” - என்று பதிலுக்கு மேலும் கூப்பாடு போட்டு ஆத்திரப்பட்டார் அவர்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247