அத்தியாயம் 1. நாட்டிய ஊர்வலம் - புவன மோகினி - Bhuvana Mohini - எஸ். லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் - S.Lakshmi Subramanian Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



1. நாட்டிய ஊர்வலம்

     “புள்ளிமயில் வாகனனை ஈன்றிடும் கடவுள்
          பரிபூரண உல்லாச வாசர்
     பொருந்த சுருதிக்கும் எட்டாத பெருவுடை ஈசர்
          பொன்னடி வணங்கி ஓங்கி
     வெள்ளி ரிஷபம் செய்து வைத்த வள்ளல்
          சரபோசி துரைவேந்தன்”

               -கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தம்

     “நேரமாகிறது சுலக்‌ஷணா! மஹாராஜா சுவாமி ஊர்வலத்தைப் பார்க்க புறப்பட்டு விட்டார். நாம் இருவரும் பல்லக்கில் போக வேண்டும். பத்து வயதுப் பெண்ணுக்கு அலங்காரம் செய்து கொள்ள இவ்வளவு தாமதமா?” என்று சிறிது கோபமும் அதில் கலந்த கனிவுமாக வந்து நிலைக் கண்ணாடி அருகில் நின்றாள் அகல்யா பாய்.

     “அலங்காரம் செய்து கொள்வதில் ஆசை என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி தான் அம்மா! பத்து வயதுப் பெண் என்றால் குறைவு என்றும் அவளுடைய தாய் மகாராணியார் என்றால் கூடுதல் என்றும் உனக்கு கணக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார்?” என்று உதட்டைத் திருகி அழகு காட்டினாள் சுலக்‌ஷணா.

     மெல்லச் சிரித்த வண்ணம் அருகில் வந்து நின்ற அகல்யா பாய் ஒருகணம் மகளையே பார்த்தாள். இன்னும் பருவம் வராத பத்து வயதுப் பெண்ணேயானாலும், ராஜ வம்சத்தில் பிறந்து வளர்ந்த விதமும், செல்லமாகச் சேமித்த செழிப்பும் அவளிடம் புதுமலரின் மொட்டவிழும் அழகாகப் பூரித்திருந்தன. தன் கண்ணே பட்டுவிடும் போலத் தோன்றிய உணர்வில், மகளுடைய கன்னத்தைத் தொட்டு வழித்து சொடுக்கிக் கொண்டாள்.

     “நான் கிளம்பியாயிற்று, சரிதானே?” என்று கிளம்பினாள் சுலக்‌ஷணா. கும்டா போட்டுக் கொண்டு அவள் நடந்து வருவது, அந்த அறையையே ஒளிரச் செய்வது போலிருந்தது. பின்னந்தலையில் நழுவப் போட்டிருந்த பட்டாடையில் ஜிலுஜிலுவென மயில் ஒளி தெறித்தது.

     “கொஞ்சம் பொறு மகளே! மூத்த ராணியார் யமுனா பாய் புறப்பட்டு விட்டாரா என்று பார்த்துக் கொண்டுதான் நாம் கிளம்ப வேண்டும். அதான் முறை!” என்று அவளை அமைதிப்படுத்தினாள் அகல்யாபாய்.

     “பார்த்தீர்களா? பார்த்தீர்களா? என்னால் தாமதம் என்று இடித்துக் காட்டுவதைப் போல சற்று முன்பு சொன்னீர்கள். இப்போது நான் பொறுக்க வேண்டுமென்று கூறுகிறீர்களே, எதை நான் பொறுக்க வேண்டுமென்று கூறுகிறீர்களே, எதை நான் எடுத்துக் கொள்வது?” என்று தாயின் முதுகில் சரிந்தவாறு, கொஞ்சியபடி நின்றாள், சுலக்‌ஷணா.

     “நம்மால் தாமதம் ஏற்படக்கூடாது என்று தான் சொன்னேன் மகளே! எல்லோருக்கும் முன்னால் நாம் போய் விடவேண்டும் என்று சொல்லவில்லை. மகாராஜாவின் முதல் மகாராணி உன் பெரியம்மாதான். மகாராஜாவுக்கு கோவில் மரியாதை செய்யப்படும் போது அவர்கள் தான் அருகில் நிற்க வேண்டும். நாம் உடன்நிற்பதுதான் முறை!” என்று சற்று அழுத்தமாகவே சொன்னாள் அகல்யாபாய்.

     அரண்மனை சம்பிரதாயப்படி கூடிய வரையில் குழந்தைகளை வெளியே செல்லும்போது அரசர் அழைத்துச் செல்வதில்லை. மகாராணியார் மட்டுமே போவது வழக்கம். இது குலதெய்வமான சந்திரமௌலீசுவரர் ஊர்வலம் வரும் திருநாள். மகள் சுலக்‌ஷணா பருவம் எய்துவதற்கு முன், மணமாகி புகுமனை செல்வதற்கு முன், கொஞ்சம் உலகறிய வெளியே போய் வருவது நல்லது என்று அவள் எண்ணினாள். ஆக, இதுவே அவள் வெளியே முதல் தடவையாகப் பல்லக்கில் அவளுடன் வெளியே வருவது. அது ஈசன் ஊர்வலம் வரும் நிகழ்ச்சியாக இருக்கட்டுமே என்று எண்ணினாள் அகல்யாபாய்.

     காவலன் வந்து பணிந்து நின்றான்.

     “மகாராணி! பெரிய மகாராணி அழைத்து வரச் சொன்னார்கள். அவர்கள் புறப்படத் தயாராக இருக்கிறார்கள். மகாராஜாவிடமிருந்து உடனே வந்து சேரும்படி தகவல் வந்ததாகக் கூறச் சொன்னார்கள்!” என்றான் அவன்.

     மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள் அகல்யாபாய். அந்தப்புரத்துக்கு வெளியே மூத்த மகாராணியின் பல்லக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதை அடுத்து அவர்கள் இருவரும் செல்ல வேண்டிய பல்லக்கும் தயாராக இருந்தது.

     “அகல்யா! வா! என் அருமை மகளுக்கு ஊர்வலத்தின் அற்புதமான அம்சங்கள் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லிக் கொண்டு வா. மகாராஜா செய்து வைத்த வெள்ளி ரிஷபத்தில் சுவாமி பவனி வருகிறார். முன்னால் மகாராஜா அமைத்துக் கொடுத்த புதிய விநாயக விக்கிரகம் ஊர்வலமாக வருகிறது, நாம் இருவரும் கட்டாயமாக வந்து உடன் இருந்து பார்க்க வேண்டும் என்பது மகாராஜாவின் ஆசை. சீக்கிரமாகப் புறப்படு” என்று முகத்திரையை இட்டுக் கொண்டு, முன்னால் படி இறங்கிச் சென்றாள் யமுனாபாய். மற்ற இருவரும் பின்னால் படி இறங்கிச் சென்றார்கள்.

     பல்லக்குகள் புறப்பட்டன. பல்லக்கில் இருபுறமும் பட்டுத்துணியின் மேற்புறத்தில் இருந்த சல்லாத் துணியின் வழியாகப் பார்த்தவாறு மகளுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டே வந்தாள் அகல்யாபாய்.

     “நாதசுர இசை கேட்கிறதா மகளே? இதுதான் பெரிய மல்லாரி என்ற பெயரில் இசைக்கப்படுவது. நாம் எப்போது வேண்டுமானாலும் எந்த இசையை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் ஈசுவரனுக்கு அப்படியில்லை. வேளைக்குத் தகுந்தபடி இசையின் ராகம் மாறும்...”

     “எப்படி அம்மா?”

     “விடியற்காலைப் பொழுதில் பூபாளம். அடுத்த காலத்துப் பூசையில் தன்யாசி. உச்சிக்காலத்தில் மத்தியமாவதி. மாலைப்பொழுது பூசையில் பூர்விகல்யாணி. இரண்டாம் காலத்தில் நாட்டை. அர்த்தயாமப் பூசையில் ஆனந்த பைரவி...”

     “அம்மா! அம்மா! அந்தப்புரத்தில் இருக்கும் போது தான் என்னை விளையாடக் கூடப் போகவிடாமல் வீணை வாசிக்கச் சொல்லுகிறாய். அதில் நுட்பமான ராகங்களையும் சங்கதிகளையும் வாசிக்கச் சொல்லி என் விரல்களை ஒடித்து விடுகிறாய். வெளியே அபூர்வமாய் வந்துள்ள இன்றைக்குமா எனக்கு இசைப்பயிற்சி? கொஞ்சம் இந்த வாண வேடிக்கைகளைத் தான் பார்க்க விடுங்களேன்!” என்று சிணுங்கினாள் சுலக்‌ஷணா.

     சொல்லும்போதே சரவிளக்குகளைப் போலத் தொங்க விடப்பட்ட வாணங்கள் பூமழை பொழிந்தன. திடீரென ஓர் அவுட்டுவாணம் கிளம்பி ஆகாயத்தில் சீறிக் கொண்டே போய் ‘பட்’ என்று வெடித்தது. அதிலிருந்து நாலைந்து வர்ணங்களில் நடசத்திரக் கூட்டங்கள் உதிர்ந்து குடை கவிழ்ந்து அவிந்தன. அதில் ஒரே ஒரு நீலப்பொறி மாத்திரம் அழியாது, வானவெளியில் வெகுதூரம் மிதந்து சென்றது. சுலக்‌ஷணா கண்களில் அதிசயிப்பு எழ அதைப் பார்த்த வண்ணம் சிலையாக அமர்ந்திருந்தாள்.

     “அம்மா! எத்தனை விதமான வாணவேடிக்கைகள் பார்த்தாயா? நாம் அந்தப்புரத்தில் தீபாவளி கொண்டாடும் போது கூட இத்தனை விதங்களைப் பார்த்ததில்லையே? இவ்வளவு நாளும் இதையெல்லாம் பார்க்க என்னை ஏனம்மா நீங்கள் அழைத்து வரவே இல்லை?” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தாள் அவள்.

     “இனிமேல் நிறைய பார்க்கத்தான் போகிறாய். உனது திருமணம் என்று வரும் போது யானைகளும் குதிரைகளும் ஊர்வலமாக வரும். வாண வேடிக்கைக்குக் குறைவிராது. விளக்கொளியில் சதிராடும் பெண்களும் ஆடியபடியே வருவார்கள். இசை முழங்கிக் கொண்டே பின்னால் வரும் மகளே!”

     “போதும் அம்மா! என்னுடைய கல்யாணப் பேச்சு இப்போது ஒன்றும் வேண்டாம். உன்னை விட்டு நான் போகவே மாட்டேன். அதோ நாட்டியமாடிக் கொண்டு வருகிறார்களே? அவர்கள் யாரம்மா? பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். எவ்வளவு நகைகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்! தலையை மட்டும் பக்கத்துக்கு பக்கம் அசைத்து, கண்களை வட்டமாகச் சுழற்றி எவ்வளவு அழகாக ஆடுகிறார்கள் பார்த்தாயா?”

     “ஆமாம். மிகவும் அழகாகத்தான் ஆடுகிறார்கள். அவர்கள் அப்படி ஆடுவதற்கென்றே பிறந்தவர்கள்...”

     “நானும் அப்படி ஆட முடியுமா அம்மா?”

     “சீ! உளறாதே. நாம் ஆளப்பிறந்தவர்கள். நாம் மணம் செய்து கொள்ளும் கணவனுக்கு மட்டுமே நம்முடைய அழகும், பொலிவும், கவர்ச்சியும் உரியவை. பிற ஆண்கள் நம்மை ஏறிட்டுப் பார்க்கவும் நாம் விடுவதில்லை. இதை நன்றாகத் தெரிந்து கொள் சுலக்‌ஷணா.”

     “பின் அவர்கள் மாத்திரம் ஏன் அப்படி அழகைப் பலரும் காண நாட்டியமாடிக் கொண்டு வர வேண்டும்? அதுவும் கச்சை அணிந்த உடம்பில் மேல் துணி கூட இன்றி அங்கப் பூரிப்பைக் காட்டி ஆடுகிறார்களே? விளக்கொளியில் நகைகளைப் போல் அவர்களுடைய புன்னகையும் ஜொலிக்கிறதே? அவ்வளவு ஆண்களுக்கு மத்தியில் முன்னும் பின்னும் அழகு தெரிய சுழன்று சுழன்று ஆடுகிறார்களே? அவர்களுக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடு ஏதும் இல்லையா? அதுவும் அந்த ஆண்கள் அவர்களை எப்படி உற்றுப் பார்க்கிறார்கள்... அழகைப் பருகுவதைப் போலக் கண்களைக் கொட்டாமல் பார்க்கிறார்கள்! அந்தப் பெண்களுக்கு மட்டும் வெட்கமாக இராத அம்மா?” என்று சற்று மனத்தாங்கலுடன் கேட்டாள் சுலக்‌ஷணா.

     “அவர்கள் கணிகையர் மகளே! இந்தப் பெண்கள் இந்த ஊர்வலத்துக்காக திருவாரூரிலிருந்து வந்திருக்கிறார்கள். ஆடல் மகளிர் குலத்தில் தோன்றிய இவர்களுக்கு இந்த அழகு தான் சொத்து. இதைப் பலர் காண மலர்கள் மணம் விரிப்பது போல, விரித்துக் காட்டுவதே இவர்களுக்கு உரியது. அச்சமும் நாணமும் நம்மைப் போன்ற குலப்பெண்களுக்கு மட்டும் தான் சுலக்‌ஷணா! இவர்கள் அப்படி பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்!”

     “என்னம்மா சொல்லுகிறாய்?”

     “ஆமாம் மகளே! புராணக் கதைகளைச் சில சமயம் இவர்கள் நடித்துக் காட்டிக் கொண்டே ஆடிக் கொண்டு வருவார்கள். ‘மிசிர நிருத்தம்’ என்று அதற்குப் பெயர். கதையை முழுமையாகவோ, ஏதேனும் ஒரு பகுதியையோ ஆடிக் காட்டுவார்கள். அதுமட்டும் அன்று, கவர்ச்சியாக எல்லார் முன்பாகவும் பலதரப்பட்ட நடனங்களை ஆடுவதும் உண்டு. அதற்கு ‘கேவல நிருத்தம்’ என்று பெயர்.

     “அம்மா! அப்படிச் சொல்லாதே. என்னுடைய மனம் வேதனைப்படுகிறது. எவ்வளவு அழகாக ஆடுகிறார்கள்? அதுவும் ஈசனுக்கு முன்பாக வரும் ஊர்வலத்தில் வழிபாட்டு இசைக்கு ஏற்ப ஆடுகிறார்கள். அதைப் பற்றி குறைவாகச் சொல்லலாமா? ஈசனே ஆனந்த நடமிடும் பாதன் அல்லவா? அவரைப் போற்றி அவர்கள் ஆடுவதில் நீ என்ன குறையைக் கண்டாய்?”

     “மகளே! உனக்கு இப்போது புரியாது. போகப் போகப் புரியும். இவர்களிலேயே தேவதாசி, ராஜதாசி, அலங்கார தாசி என்றெல்லாம் வகைகளும் உண்டு. வைணவக் கோவில்களில் விஷ்ணுதாசி என்றும் பிரிவுகள் உண்டு. கலையிலும், இசையிலும் தேர்ச்சி பெற்று ஆலயத் தொண்டு புரிவது மட்டும் இன்றி, அரண்மனையிலும் இடம் பெறுவதும் உண்டு!” என்று சொல்லிவிட்டு, கூறத்தகாத ஏதோ ஒன்றை களங்கம் அறியாத அந்த இளம் பெண்ணிடம் பகன்று விட்டதை எண்ணி, வாயை மூடிக் கொண்டாள் இளைய மகாராணி. அவள் பேச்சை மாற்றுவதற்கு வசதியாக அப்போது கட்டியம் கூறுபவர்கள் முழங்க, குதிரைகள் முன்னால் வர, அந்த அலங்கார சாரட்டு வீதியில் அவர்களைக் கடந்து சென்றது.

     “யாருடைய சாரட்டு அம்மா இது? எதற்காக அதற்கு இவ்வளவு மரியாதை?” என்று ஆவலில் கண்கள் விரியக் கேட்டாள் சுலக்‌ஷணா.

     “அவர் தான் தஞ்சாவூரில் இருக்கும் கம்பெனியாரின் பிரதிநிதி. அந்த வெள்ளைக்காரத் துரையின் பெயர் வில்லியம் பிளாக்பர்ன். நம்முடைய மக்கள் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்து தான் அவர் மாதம் ஒன்றுக்கு ஆயிரத்து நாறூற்றைம்பது புலிவராகன் சம்பளம் வாங்கிக் கொள்கிறார். ஆனாலும் என்ன? நம்முடைய மகாராஜாவைப் பற்றி கவர்னரிடம் புகார் செய்யும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. அதனால் மகாராஜாவும், இளவரசரும் கூட அவருக்கு மாலை போட்டு மரியாதை பண்ணுகிறார்கள்!” என்று கூறிப் பெருமூச்செறிந்தாள் அகல்யாபாய்.

     “அதுரும் சுவாமி ஊர்வலத்தைப் பார்க்க வருகிறாரா அம்மா?” என்று கேட்டாள் சுலக்‌ஷணா.

     “அப்படித்தான் நினைக்கிறேன். நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளிலும் சிமோல லங்கணம் வகையறா உற்சவங்களிலும் அவர் வந்து கலந்து கொள்வார். பூரணகும்பம் கொடுத்து அவரை வரவேற்பார்கள். பண்டிகையிலோ, உற்சவத்திலோ பங்கு பெறுவது அவர்கள் நோக்கம் அல்ல. ஆனால் நம்மை வெள்ளையர்கள் மேலதிகாரிகளாக இருந்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அதை மக்கள் தெரிந்து கொள்ளச் செய்வது எப்படி? இப்படி எல்லோரும் கூடும் விழாவில் அரசரே அவருக்கு மரியாதை செய்வது என்ற சம்பிரதாயத்தை வைத்துவிட்டால் அந்த நோக்கம் நிறைவேறிவிடும் அல்லவா?” என்று கொஞ்சம் வருத்தத்துடன் சொன்னாள் இளைய மகாராணி.

     பல்லக்கு நின்றது. சுவாமி ஊர்வலம் முடிந்து நிற்பது தெரிந்தது. சாரட்டிலிருந்து துரை இறங்கிவிட்டார். ஏற்கெனவே மகாராஜா அங்கே இறங்கி நிற்பதும் தெரிந்தது. வாத்தியங்கள் முழங்கின. கோவில் யானை வந்து மகாராஜாவுக்கும், துரைக்கும் மாலை அணிவித்தது. தோரணங்கள் அலையாடின. பூரண கும்பம் எடுத்துக் கொண்டு வேதியர்கள் வருவதும், தேவாரம் பாடியபடி ஓதுவார்கள் வருவதும் காதில் இனிமையாக ஒலித்தது.

     மூத்தராணி அவசரமாக இறங்கி, இளையராணியாரையும், சுலக்‌ஷணாவையும் கூட வரும்படி அடையாளம் காட்டி விட்டு, வேகமாக அரசருடன் போய் நின்று கொண்டார். இருவரும் பின் தொடர்ந்து போய் பின்னால் நின்று கொண்டனர். நாதசுர இசை முழங்கிற்று. பேரிகைகள் அதிர்ந்தன.

     சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. அழகு மிகுந்த ஒரு பெண் குடத்தீபம் ஏற்றிக் கொண்டு வந்தாள். அதை அர்ச்சகர் பெற்று மந்திரம் சொல்லியபடி காட்டி முடித்தார். அதையே கண்கொட்டாமல் பார்த்த வண்ணம் நின்றாள் சுலக்‌ஷணா.

     குடத்தீபம் ஏற்றி வந்த அந்தப் பெண் நடந்து வந்தது கூட மெல்லிய காற்றில் தீபக்கொழுந்து ஆடி வருவது போலத் தெரிந்தது. கடைந்தெடுத்த தந்தப் பதுமையைப் போல இருந்த அவளுடைய இடையும் தொடைகளும் இசை பாடுவதைப் போல அசைந்து வந்தன. இறைவனை வரவேற்கத் தாளமிடுவதைப் போல கால்மெட்டி ‘கலீர் கலீர்’ என்று அழகாக இசைத்தது. பருவத்தின் முழுப்பொலிவை அடைந்துவிட்ட ஒரு பெண்ணின் அழகும், அங்கச் செருக்கும் அசைவும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் கூறுவது போல இருந்தது, அந்த அழகியின் தோற்றமும் ஒயிலான அசைவும்.

     அந்தப் பெண் அதைத் தொடர்ந்து முன்னே வந்து மகாராஜாவையும், ரெசிடெண்ட் துரையையும் தலைகுனிந்து வணங்கினாள். மைதீட்டிய கண்களால் ஒருமுறை மலர விழித்து அவள் பார்வையாலும், ஜாடையாலும் காட்டிய மரியாதை, பார்ப்போரின் மனத்தைப் பரவசப் படுத்திற்று. நாட்டியம் ஆடுவதைப் போல ஒரு தனிக் கவர்ச்சியுடன் அவள் இடுப்பை ஒடித்து வணங்கியபோது, கச்சையை இறுக முடிந்த முதுகின் அழகும் பளிங்கு போன்ற வெண்ணிறமும், கழுத்தின் அழகும், அணிகளின் சிறப்பும் தெரியக் கூட்டிச் சேர்த்துக் கட்டிய கொண்டையின் பொலிவும் தெரிந்தன. தந்தச் சிற்பமெனக் கடைந்தெடுத்த இடையின் நயமிகுந்த எழிலும் வெளிப்பட்டது.

     மகாராஜா ஒரு முத்துமாலையை எடுத்துக் கொடுத்தார். துரை பொற்காசுகளை அளித்தார். அவற்றை ஏற்றுக் கொண்டு கைகூப்பி வணங்கியபடியே, தலை நிமிராமல், முதுகை அவர்களுக்குக் காட்டாமல் பின்னோக்கி நகர்ந்தபடி, மெல்ல அசைந்து விலகி மறைந்தாள் அந்தக் கணிகைமாது.

     “உங்கள் மகன் எங்கே?” என்று கேட்டார் துரை.

     “உங்களுக்குத் தெரியாதா? கேரள நாட்டிற்குச் சுற்றுலாவாகப் போய்வர அனுப்பியிருக்கிறேன். நெடு நாட்களாக அவன் அங்கே போய்வர வேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை. இம்முறை அவனாகவே வந்து கேட்ட போது என்னால் மறுக்க முடியவில்லை” என்றார் சரபோஜி மகாராஜா.

     சுலக்‌ஷணா சற்று நகர்ந்து முன்னால் வந்தாள். மூத்த மகாராணி யமுனாபாய் நிமிர்ந்து பார்த்தபடி கைவிரல்களை மெல்லப் பற்றிக் கொண்டாள். முல்லைச் சரமென முறுவல் விரிந்தது.

     “இவள் தான் என் மகள் சுலக்‌ஷணா!” என்று துரைக்கு அறிமுகப்படுத்தினார் மகாராஜா. அவள் கையைக் குவித்து வணங்கினாள். துரை தலையைச் சற்றே சாய்த்து வணக்கம் தெரிவிக்கும் பாவனையாகச் சிரித்துக் கொண்டார். அவருடைய நீலவிழிகள் அந்தச் சிறு பெண்ணின் வினயத்தைப் பாராட்டுவது போலச் சுழன்று பெரிதாகிச் சுருங்கி அடங்கின.

     மெதுவான குரலில் சுலக்‌ஷணா, “பெரியம்மா! இங்கே வந்து வணங்கினாளே ஒரு பெண் - அது யார்?” என்று கேட்டாள்.

     “அது குடத்தீபம் ஏற்றி வந்த தேவதாசி மகளே! அது தான் கோவில் சம்பிரதாயம். அந்த உரிமை அவர்களுக்கு உண்டு” என்று மெதுவாகக் கூறினாள் யமுனாபாய்.

     “தேவதாசி என்றால் என்ன பெரியம்மா?” என்று ஆவல் நிறைந்த குரலில் சற்று உரக்கவே கேட்டுவிட்டாள் சுலக்‌ஷணா.

     மகாராஜா ஆச்சரியமும், சிறிது கோபமும் கண்களில் தெரியத் திரும்பிப் பார்த்தார். முடியில் தரித்த முத்துமாலை நலுங்கி ஓய்ந்தது. கேட்கக் கூடாத ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டோம் என்ற அச்சம் அந்தச் சிறுமியைப் பற்றிக் கொண்டது. மூத்த மகாராணியின் பட்டுச் சேலையை ஒட்டி ஒதுங்கிக் கொண்டாள்.

     திடீரென மௌனமாகி நின்ற யமுனாபாய் அவளை வலது கையால் வளைகள் குலுங்க, மெல்லச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்...


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247