அத்தியாயம் 7. கலைமகள் கொலு மண்டபம் - புவன மோகினி - Bhuvana Mohini - எஸ். லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் - S.Lakshmi Subramanian Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



7. கலைமகள் கொலு மண்டபம்

     “கற்ற உடுக்கை இடக்கை களப்பறை
          மத்தளி கொட்டிய முற்றும் அடிப்பன
     காரென முழங்கு குரலேறுதுடி சந்திரவளை
          வீர முரசுந்திமில் சுடாரிகுட பஞ்சமுகி
     கரடி பளையங்கு அனத்தங் கொட்டுவன.”

               - அருணகிரிநாதர் பாடல்

     தஞ்சைக்குத் திரும்பியதும் முதற்காரியமாக சுலக்‌ஷணா மன்னரிடம், “தந்தையே! என்னிடம் சரசுவதி மஹாலைப் பற்றிச் சொன்னீர்களே? எப்போது அழைத்துக் கொண்டு போய்க் காட்டப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

     சரபோஜி புன்முறுவலுடன், “மகளே! நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உனக்கு இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு உனக்கு வயதாகவில்லை. இருக்கட்டும்! உன்னை மட்டும் அல்ல, உன் அண்ணன் சிவாஜியையும் நாளை மாலை நான் அங்கே அழைத்துச் செல்கிறேன். நீங்கள் பார்த்து ரசிக்கக்கூடிய சில இடங்களைக் காட்டுகிறேன்!” என்றார்.

     “ஏன் அப்பா மாலை நேரத்தில் போக வேண்டும்? பகல் நேரத்தில் போய்ப் பார்க்கக் கூடாதா? நிறைய நேரம் சுற்றிப் பார்க்கலாமே” என்று கேட்டாள் சுலக்‌ஷணா.

     “மகளே! மன்னரை அப்படியெல்லாம் பொழுது போகாமல் அலைபவர் என்று மக்கள் சொல்லும்படி செய்து விடாதே! சரசுவதி மஹால் ஒரு கலைக்கூடமும் நூல் நிலையமும் மட்டுமல்ல, அங்கே நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. பல நாட்டு அறிஞர்களும், நிபுணர்களும் அங்கே வந்து வேலை பார்க்கிறார்கள். நானும் அவர்களுடன் இருந்து கவனிக்கிறேன். அந்த நேரத்தில் உன்னை அழைத்துக் கொண்டு போக முடியுமா? உன் குறும்புத்தனமான கேள்விக்குப் பதில் சொல்லத்தான் முடியுமா?”

     “பயப்படாதீர்கள் அப்பா! நான் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன். நானும் ஒரு பக்கம் அமர்ந்து ஆராய்ச்சி செய்வேன். எத்தனையோ கலைகளை அங்கே வளர்ப்பதாகச் சொல்கிறீர்கள். என் போன்ற பெண் குழந்தைகளைக் கவரக்கூடிய பகுதி ஒன்று அங்கே இல்லாமலா போய்விடப் போகிறது?”

     சரபோஜி வாய்விட்டுச் சிரித்தார். “மகளே! நீ உன் அம்மாவைப் போலவே பேச்சில் என்னை மடக்குகிறாய். பரவாயில்லை! அதுவும் எனக்கு மகிழ்ச்சிதான். நாளை மாலை என்று நான் நேரம் குறிப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நீ பியாண்டு வாத்தியம் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

     “இல்லையே அப்பா! அரண்மனைப் பண்டிகைகளில் நான் நாதஸ்வரம் வாசித்துத்தானே கேட்டிருக்கிறேன்? வெளியில் ஊர்வலத்தில் துரை வரும்போது இதை வாசிப்பார்கள் என்று அம்மா ஒரு முறை சொன்னதுண்டு. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.”

     “அதற்காகத்தான் சொல்லுகிறேன், திருவிழாவை ஒட்டி அங்கே பூங்காவில் ‘ஐரிஷ் பைப்’ என்ற வாத்தியத்தை ஒரு சட்டைக்காரன் வாசிக்கப் போகிறான். அதையும் நீ கேட்க வேண்டும். அதற்குப் பிறகு நாம் சரசுவதி மஹாலைச் சுற்றிப் பார்க்கலாம்!”

     “போங்கள் அப்பா! நீங்கள் இசை என்றால் அதில் அப்படியே ஒன்றிப் போய் விடுவீர்கள். அதற்கே வெகுநேரம் ஆகிவிடும். அப்புறம் சுற்றிப் பார்ப்பது எங்கே? எனக்கும் தூக்கம் வந்துவிடும். நான் தூங்கி வழிந்தால் அண்ணனும் கேலி செய்வான். எனக்கென்னவோ பகலில் சுற்றிப் பார்ப்பதே நல்லது என்று தோன்றுகிறது!” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டாள் சுலக்‌ஷணா.

     “எனக்கென்னவோ மாலை நேரத்தில் போவதுதான் பொருத்தம் என்று தோன்றுகிறது. என்ன செய்வது?” என்று குறும்பாகச் சொல்லி, மகளின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் சரபோஜி.

     மாலை இறங்கிக் கொண்டிருந்தது. லேசான மேகக் குவியல்கள் அரும்பத் தொடங்கி விட்டன. குளிர்காற்றில் மலர்களின் வாசம் மிதந்து வந்தது. மன்னரிடமிருந்து சுலக்‌ஷணாவை அழைத்து வரச் சொல்லி ஆள் வந்துவிட்டது. சிவாஜி தந்தையுடன் இருப்பதாகவும் அவன் சொன்னான்.

     பட்டாடை உடுத்து, தலையில் மல்லிகைச் சரம் சூடி, மார்பில் தாயிடம் கேட்டுப் பெற்ற அவளுடைய இரத்தினப் பதக்கம் கோத்த மாலையை அணிந்து கொண்டு, கிளம்பினாள் சுலக்‌ஷணா. “அம்மா! நான் போய் வருகிறேன். அங்கு போய் நிறைய பார்த்துவிட்டு வந்து அவற்றைப் பற்றி நாளை உனக்குச் சொல்லுகிறேன். இப்போதே உன்னை அழைத்துக் கொண்டு போகவில்லையே என்று வருத்தப்படாதே” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். தாய் சிரித்துக் கொண்டாள்.

     மன்னரும் குழந்தைகளும் சாரட்டு வண்டியில் புறப்பட்டார்கள். லேசாக இருட்ட ஆரம்பித்து விட்டது. திருவிழாவையொட்டித் தெருவில் கலகலப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. விஸ்தாரமான கடைவீதியில் ‘ஜே ஜே’ என்று களைகட்டியிருந்தது. மக்களும் குதிரைகளும் வண்டிகளும் போய்க் கொண்டிருந்த வீதியில் முன்னால் சென்ற குதிரை வீரன் குழல் ஊத, நெரிசல் விலகி வழிவிட்டது. நகரம் தோகை விரித்தது போல இருபுறமும் வண்ண விளக்குகள் கண்சிமிட்டின. கதம்ப மலர் வாசம் கடைகளிலிருந்து எழுந்து வந்து கவர்ந்தது.

     “சுலக்‌ஷணா! பாண்டு வாசிப்பதை இன்று கேட்கப் போகிறாய். உடனே, ‘அதையும் எனக்குக் கற்றுக் கொடு’ என்று தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடாதே. கர்நாடக இசையையே நீ இன்னும் சரியாகக் கற்றுக் கொண்ட பாடில்லை” என்று அவளைச் சீண்டினான் சிவாஜி.

     “நீயும் தான் மல்யுத்தம், குதிரை ஏற்றம், வாள் சண்டை எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறாய். எந்த நாட்டுக்குப் படை எடுத்துச் செல்ல நீ சைனியத்தை நடத்திக் கொண்டு போவதாக இருக்கிறாய்?” என்று பதிலுக்குக் கேட்டு விட்டாள் சுலக்‌ஷணா.

     அந்த அறியாப் பெண் விளையாட்டாகக் கேட்ட கேள்வியேயானினும், அது சிவாஜியை வேதனைக்கு உட்படுத்தியது என்பது, அவன் நெற்றிச் சுருக்கத்திலிருந்து தெரிய வந்தது. அவன் தந்தையைத் திரும்பிப் பார்த்த போது சரபோஜி மன்னர் பார்வையை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டார். தந்தையின் மனநிலையை உணர்ந்திருந்த சிவாஜி தனது மன உணர்வுகளை விரைவாகவே மறைத்துக் கொண்டான்.

     கோட்டை மதிலின் பெரிய கதவுகளைத் தாண்டி, சாரட்டு வண்டி உள்ளே சென்றது. மக்கள் கூடி இருந்த மைதானத்தின் வாயிலில் நின்றது. வாளேந்திய வீரர்கள் வண்டியின் பின்பக்கக் கதவுகளைத் திறந்து விட்டார்கள். வெள்ளைக்காரர்கள் இருவர் வேகமாக வந்து உபசரிக்கும் தோற்றத்துடன் வணங்கி அழைத்துச் சென்றார்கள்.

     வித விதமான தீபங்களும், தலையில் சுமந்த மண்ணெண்ணெய் விளக்குகளும் அந்த இடத்தை ஒரு சுவர்க்கபுரியைப் போலவே மாற்றி இருந்தன. கூடி இருந்த மக்கள் வாத்திய இசையைக் கேட்க ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். மேனாட்டு வாத்தியங்களும் சாரங்கி, ஸ்பாத் போன்ற வடநாட்டு இசைக்கருவிகளும் வைக்கப்பட்டிருந்தன. ஐரிஷ் பைப், ஹார்ப், பிடில் போன்றவற்றை இசைக்கத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

     மன்னர் தமது குழந்தைகளுடன் இருக்கையில் அமர்ந்து தலையை அசைத்ததும் இசை ஆரம்பமாயிற்று. மேற்கத்திய இசையானாலும் அதில் இனிமை இருந்தது. கேட்கக் கேட்க இன்னும் கொஞ்சம் கேட்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டிற்று. நல்ல விஷயங்கள் எந்த நாட்டிலும் இருக்கின்றன என்பதை அது ஞாபகப்படுத்திற்று. பிரபஞ்சம் முழுவதும் பரவிய நாதப் பிரும்மத்தை நினைவு படுத்தியது.

     மன்னர் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார். சிவாஜியும் சுலக்‌ஷணாவும் அந்த வித்தியாசமான இசையை அனுபவித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். ஒரு மணி நேர இசையின் முடிவில் காவடிச்சிந்து ஒன்றை வாசிக்க ஆரம்பித்தான் அந்த ஆங்கிலேய இசைக்கலைஞன். அதைக் கேட்டு மன்னரின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது. ஏதோ புரிந்தது போல சுலக்‌ஷணா அவரைத் திரும்பிப் பார்த்தாள்.

     “நம்முடைய ஊருக்குத் தங்க வந்திருக்கிறார்கள் அல்லவா? அதனால் நம்முடைய பாட்டைப் பாடுகிறார்கள்!” என்றாள் அவள்.

     “சங்கீதத்துக்கு மொழி முக்கியம் இல்லை மகளே! நெஞ்சைத் தொட வேண்டும். எங்கிருந்தாலும் உன்னைப் பற்றி இழுக்க வேண்டும். மனத்தைக் கவரச் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். புரந்தரதாசர் கன்னடத்திலும், மீராபாய் இந்தியிலும், முத்துசாமி தீக்ஷிதர் சம்ஸ்கிருதத்திலும், தியாகராஜ சுவாமிகள் தெலுங்கிலும் பாடவில்லையா? அவற்றையெல்லாம் கேட்டு நாம் மனம் உருகவில்லையா?” என்று கேட்டார் சரபோஜி.

     சுலக்‌ஷணா அவருக்கு அருகில் சற்று நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். அவருக்கு மட்டுமே கேட்கக் கூடிய மென்மையான குரலில், “அப்பா ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளை ஒரு தடவையாவது நம்முடைய சபையில் வந்து பாடச் சொல்லுங்கள் அப்பா! எனக்கு அந்த தெய்வீகம் நிறைந்த குரலைக் கேட்க வேண்டும் போல இருக்கிறது” என்றாள். அந்தக் குழந்தையின் ஆவலை உணர்ந்த மன்னர், ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்தார். பிறகு பெருமூச்சு விட்டபடி, “ஆகட்டும் குழந்தாய்! சகல மரியாதைகளுடன் அவரை அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

     கச்சேரி முடிந்து கூட்டம் கலைந்து விட்டது. மெய்க்காப்பாளர்களின் துணையுடன் குழந்தைகளை மன்னர் அழைத்துக் கொண்டு சரசுவதி மஹாலுக்குப் போனார். காவலாளிகளைத் தவிர வேறு யாருமில்லை.

     “அப்பா! எத்தனை எத்தனையோ நிபுணர்களும் கலைஞர்களும் இங்கே இரவு பகலாகப் பணி புரிவதாகக் கூறினீர்களே? இங்கே இப்போது யாருமே இல்லையே?” என்று கேட்டான் சிவாஜி.

     “உண்மைதான் மகனே! அவர்களுடைய ஆராய்ச்சி ஆர்வம் கட்டுக்கடங்காதது. அவர்களுடன் நானும் ஒருவனாக அமர்ந்து ஈடுபடுவேன். ஆனால் இன்று என்னுடைய குழந்தைக்குச் சுற்றிக் காட்டி, மனம் விட்டுப் பேச விரும்பிய போது, அவர்கள் தாமாகவே விலகிப் போய் விட்டார்கள். சரபோஜி ஒரு தந்தையாகத் தனது குழந்தைகளுடன் பேசும் சுகானுபவத்தில் குறுக்கிடக் கூடாது என்று அந்தப் பெரியோர்கள் கருதி இருக்க வேண்டும்!” என்றார் அவர்.

     “தந்தையே! தாங்கள் காட்ட விரும்பியது எல்லாவற்றையும் காட்டி விளக்கம் சொல்லுங்கள். புரிந்து கொள்ளக் கூடிய மட்டும் முயற்சி செய்கிறோம். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!” என்று புன்முறுவலுடன் சொன்னான் சிவாஜி.

     “ஆமாம்! நானும் தூக்கம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்கிறேன்” என்று குதிநடை போட்டபடி சொன்னாள் சுலக்‌ஷணா.

     “பார்க்கலாம் வாருங்கள்! இது கலைமகள் கொலுவிருக்கும் மண்டபம். ஞானாட்சியாக அவர் தாம் இங்கே ஆளுகை புரிகிறார்கள். அதற்குப் பணிந்து தொண்டனாக நானும் பணிபுரிகிறேன். அருமையான நூல்கள் பனையோலைச் சுவடிகளின் வடிவத்தில் இங்கே சேகரிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளுக்குப் பிரதிகளும் எடுத்து வருகிறோம். விரைவில் இங்கே ஓர் அச்சகம் நிறுவவும் ஏற்பாடு செய்து வருகிறேன். இலக்கியம் தவிர, மருத்துவம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளும் இங்கே இடம் பெறுகின்றன!” என்றார் சரபோஜி.

     “அப்பா! உங்களுடைய ஓவியத்தை இங்கே வைத்திருக்கிறீர்களோ?” என்று ஆவலுடன் கேட்டாள் சுலக்‌ஷணா.

     “இருக்கிறது அம்மா! ஆனால் அது முக்கியம் இல்லை. இது சரசுவதி தேவிக்குரிய மஹால். அதனால் அந்தக் கலை தேவியின் உருவத்தையே நடுவில் வைத்து பூஜிக்கிறோம். தஞ்சைக்கே உரிய தனியான ஓவியக்கலை ஒன்று உண்டு. அந்த முறையில் ராதாகிருஷ்ணன், ஆலிலை கிருஷ்ணன், ரிஷபாரூட பார்வதி - பரமேசுவரர் போன்றவற்றையும் எழுதி வைத்திருக்கிறோம்!” என்றார் அரசர்.

     “மிருகங்களுக்கும் இங்கே இடம் உண்டோ?” என்று கேட்டான் சிவாஜி.

     “நிச்சயமாக உண்டு! மக்கள் தாம் விரும்பும் அல்லது வளர்க்கும் மிருகங்களுக்குப் பெயர் வைப்பதைப் போல இங்கே குதிரைக்குட்டிக்கும் யானைக் கன்றுகளுக்கும் கூடப் பெயர் வைத்திருக்கிறோம். சம்பூர்ண பிரசாத், கிரிராஜ், லக்ஷ்மிராஜ சாம்ராட் என்றெல்லாம் குதிரைக்குப் பெயர் வைப்பதுண்டு. யானைக் கன்றுகளுக்கு கன்னியாகுமாரி, பவானிபிரசாத், காமாட்சி, ஜாங்ஜி பிரசாத் என்றெல்லாம் பெயரிடுவதுண்டு. வைத்தீசுவரன் கோவிலுக்கு இங்கிருந்து ஒரு யானைக் கன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஆனந்தவல்லி என்று பெயரிட்டோம்!”

     அதைக் கேட்டு சுலக்‌ஷணா மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகளைக் கொட்டி ‘கலீர்’ என்று சிரித்தாள். அவளுக்கு மிகவும் பிடித்தது யானையாதலால் அதைப் பற்றியே மன்னரிடம் கேட்டாள். “யானைக்கு உடம்புக்கு வந்தால் எப்படி வைத்தியம் செய்வார்கள்?” என்று கேட்டாள். “யானைக்கு இளைப்பு உண்டாகும், காலில் வாயு பிடிப்பு ஏற்படும், கண்ணில் நீர் வடியும், மதம் பிடிக்கும். இவற்றுக்கெல்லாம் இங்கே வைத்தியக் குறிப்புகள் இருக்கின்றன. அது மட்டும் அல்ல மகளே! குதிரை, மாடு, ஒட்டகம், நாய், ஜவ்வாது பூனை போன்ற மிருகங்களுக்கும் வைத்தியம் செய்ய வழிகாட்டுகிறோம்!” என்றார் சரபோஜி.

     “மக்களுக்கும் வைத்தியம் செய்யக் கற்றுக் கொடுப்பீர்களா தந்தையே?” என்று கேட்டான் சிவாஜி.

     “நிச்சயமாகக் கற்றூக் கொடுப்போம்! அந்த மருந்து வகைகளின் பெயரைக் கேட்டாலே சாப்பிடத் தோன்றும். ‘பூர்ணசந்திரோதயம்’ என்றும், ‘சுவர்ணமாலே வசந்தம்’ என்றும் வைக்கப்பட்டுள்ள பெயர்களைப் பார்த்தாலே உனக்கு ஆசை ஏற்படுகிறது அல்லவா? வைத்தியர் சிதம்பரம் பிள்ளை, வைத்தியர் மஸ்தான் போன்ற தேர்ந்த நிபுணர்கள் அருமையாகப் பணிபுரிகிறார்கள்!”

     “மருத்துவ முறையைச் சொல்லுபவர் யார் என்று தெரியுமா தந்தையே?” என்று கேட்டான் சிவாஜி.

     “நிச்சயமாகத் தெரியும்! ஒவ்வொரு குறிப்பையும் வைத்தியர் தனது கையாலே எழுதி கையொப்பம் இட வேண்டும். அந்த மருந்தினால் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால், மருத்துவக் குறிப்பு கொடுத்தவர்களுடன் தொடர்பு கொள்ளப்படும். இப்படிப்பட்ட குறிப்புகளுக்குத் தமிழ்ப் புலவர்கள் தமிழில் எளிய பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இவற்றையும் ‘சரபேந்திரர் வைத்தியக் குறிப்புகள்’ என்று நூலாகத் தொகுத்து வெளியிடலாம் என்று கருதுகிறேன்” என்றார் அவர்.

     அவர் பேசியபடி மேலே நடந்தார். குழந்தைகளும் கூடவே நடந்தார்கள்.

     மன்னர் குதிரையில் சவாரி செய்யும் தோற்றத்தில் வரையப்பட்டிருந்த சித்திரத்தைப் பார்த்தாள் சுலக்‌ஷணா. “அப்பா! இது ரொம்ப அழகாக இருக்கிறது. இதை வரைந்தது யார்? அதற்காக நீங்கள் குதிரையில் அமர்ந்து தோற்றம் கொடுத்தீர்களா? எத்தனை நாட்கள் அப்படி இருந்தீர்கள்? குதிரைக்கு கால் வலிக்கவில்லையா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் அவள், ஒரு குறும்புப் புன்னகையுடன்.

     “இது வெங்கடப் பெருமாள், வெங்கடநாரணப்பையா ஆகிய இரு ஓவியர்கள் சேர்ந்து வரைந்தது. அதற்காக அவர்களுக்கு எழுநூறு சக்கரம் சன்மானமாக அளிக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து எழுதியதால் அவர்களுடைய பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை!”

     “அரச மாதேவியின் படங்களையும் வரைகிறார்களா தந்தையே?” என்று கேட்டான் சிவாஜி.

     “வரைய ஏற்பாடு செய்திருக்கிறேன். அவர்களை ஆண் ஓவியர்கள் படம் எழுதலாகாது. ஆகையால் சித்திரக்காரி செங்கம்மாளைப் போன்ற பெண்டிரை இதில் ஈடுபடுத்தி இருக்கின்றேன். நீ திருவாங்கூர் சமஸ்தானத்துக்குப் போயிருந்தாயே? அங்கே எப்படி?” என்று கேட்டார் மன்னர்.

     “அங்கேயும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஆண்கள் படம் எழுத முடியாது. ஆனால் ஆங்கிலேயப் பெண்கள் அமர்ந்து படம் எழுதிக் கொள்ளுவது உண்டு. ஒரு படம் எழுத ஒரு மாதம் வரை ஆகலாம் என்று சொன்னார்கள்” என்றான் சிவாஜி.

     “நாட்டியம் ஆடும் பெண்களைக் கூடப் படமாக எழுதுவார்கள். அப்படித்தானே அண்ணா? சித்திரசேனா என்ற பெண்ணைக்கூட...” என்று குறும்பாகச் சொல்லிவிட்டு, உதட்டைக் கடித்துப் பேசுவதை நிறுத்திக் கொண்டாள் சுலக்‌ஷணா.

     “சொல்லம்மா! அதில் என்ன தவறு இருக்கிறது? கலைக்குத் தொண்டு செய்பவர்கள் யாரானாலும் அவர்களை மதித்துப் பாராட்ட வேண்டியதுதானே?” என்று கூறினார் அரசர்.

     “அப்படியானால் அந்தப் பெண்மணி இங்கே நாட்டியமாட வந்தால் கூட நீங்கள் தடைசொல்ல மாட்டீர்களா தந்தையே!” என்று கேட்டான் சிவாஜி.

     “எதற்காகத் தடுக்க வேண்டும்? கர்நாடகத்தில் பிறந்த காவேரியைத் தஞ்சைத் தரணியில் நாம் வரவேற்கவில்லையா? கலையும் அப்படிப்பட்டதுதான்! அதன் நுட்பம் எங்கே தெரிந்தாலும் அதை மதித்து வரவேற்கும் மனப்பாங்கு நமக்கு இருக்கவேண்டும். இதைப் பிறருக்கு தெரியப்படுத்தவும், நானே உணர்ந்து கொள்ளவும் தானே காசியாத்திரை போகப் போகிறேன்?” என்றார் சரபோஜி.

     எல்லோருமாக இசைக் கருவிகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குப் போனார்கள். அங்கிருந்த வீணை ஒன்றின் தந்தியை மீட்டினாள் சுலக்‌ஷணா. அது எழுப்பிய நாதத்தில் ஒரு கணம் கட்டுண்டு நின்றாள். பிறகு தந்தையைப் பார்த்து, “அப்பா! நீங்கள் கட்டாயம் தியாகராஜ சுவாமிகளை நம்முடைய சபைக்கு அழைத்துக் கொண்டு வர வேண்டும். நான் அவருடைய பாதங்களில் விழுந்து வணங்க வேண்டும்!” என்றாள்.

     கள்ளமில்லாத அந்தக் குழந்தை ஆர்வத்தில் மன்னரின் மனம் உருகிற்று. “குழந்தாய்! உன்னுடையின் ஆசையின் வேகம் எனக்குப் புரிகிறது. ஆனால் சுவாமிகளுக்குப் புரிய வேண்டுமே அம்மா? முயன்று பார்க்கலாம்!” என்றார் மன்னர் சிறிது தயக்கத்தோடு.

     “அண்ணா! நீயும் தான் அப்பாவிடம் வற்புறுத்திச் சொல்லேன். சுவாமிகளைப் பார்க்கவேண்டும் என்றும், அவருடைய கீர்த்தனைகளை அவரே பாடக் கேட்க வேண்டும் என்றும், உனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன?” என்று குமுறினாள் அவள்.

     அரசர் சிவாஜியை ஓர் அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் பார்த்தார். சிவாஜியும் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். தொடர்ந்து அவர்கள் சிற்பப் பகுதியில் நுழைந்தார்கள்.

     அங்கே இருந்த சிற்பத்தைக் கண்டதும் மன்னரின் கண்களில் நீர் ததும்பிற்று. பேச இயலாமல் குரல் தழுதழுத்தது.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247