அத்தியாயம் 37. “என்றும் மறவேன்!” - புவன மோகினி - Bhuvana Mohini - எஸ். லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் - S.Lakshmi Subramanian Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



37. “என்றும் மறவேன்!”

கண்ணிலும் உளை நீ; தையல் கருத்திலும் உளை நீ; வாயில்
எண்ணிலும் உளை நீ; கொங்கை இணைக்குவை தன்னின் ஓவாது
அண்ணல் வெம்காமன் எய்த அவர் தொளைத்த ஆறாப்
புண்ணிலும் உளை நீ; நின்னைப் பொருந்திற்று ஆமோ!

     - கம்பராமாயணம் (கணையாழிப் படலம்)

     பதறித் துடித்த புவனமோகினியின் காதருகே அந்தக் குரல் கேட்டது. “புவனா! என்னுடைய விரல்களை நீ அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? உன் கன்னங்களையும், அதரங்களையும் தீண்டும் உரிமை எனக்கு மட்டும்தானே உண்டு?” என்று ரகசிய குரலில் கேட்டான் சிவாஜி. புவனாவின் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கிற்று.

     “இந்த வேளையில் எதற்காக இங்கே வந்தீர்கள்? பிறர் பார்த்தால் தங்களுக்கு நல்லதல்லவே? மன்னர் தங்கள் பின்னாலேயே தொடர்ந்து வர ஒற்றர்களை வைத்திருப்பது தாங்கள் அறியாததா?” என்று கவலையுடன் கேட்டாள் புவனா.

     “அதையும் நான் அறிவேன்! இனி மன்னரிடம் நான் மறைக்க வேண்டியது எதுவும் இல்லை. நாடக விழாவைக் காண வந்தேன். நடுவில் வெளியே எழுந்து போய்த் திரும்புவதைப் போல இங்கே வந்துவிட்டேன். அதுவும் எனது அரச உடைகளை மறைத்துக் கொண்டு, சால்வையைப் போர்த்தி மூடிக் கொண்டு தான் வந்திருக்கிறேன். திலகவதியாரை அவையில் பார்த்தேன். இங்கே யாரும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு தான் வந்தேன்! மேலே உன் அறைக்குப் போகலாமா?” என்று கேட்டான் சிவாஜி.

     “வேண்டாம் சுவாமி! இங்கேயே மரத்தடியில் இருள் தேங்கும் மறைவான இடத்தில் அமர்ந்து பேசுவோம். உங்களை நான் மனமார அணைத்து மகிழ்கிறேன். உங்கள் முகத்தோடு முகம் வைத்து ஆனந்தப்படுகிறேன். ஏனென்றால், மீண்டும் நாம் இப்படிச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. மறுபடி நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே மாட்டோம் என்ற ஓர் எண்ணம் என் உள் மனத்தில் இருந்து கொண்டே இருக்கிறது...” என்று கூறி நிறுத்தினாள் புவனா.

     “அப்படி எல்லாம் சொல்லாதே புவனா! அவ்வாறு நினைத்தாலே எனது மனம் அளவிலாத வேதனைக்கு ஆளாகிறது. எனக்கு நீதான் வேண்டும்; அரச பதவி வேண்டாம்; அரியாசனம் வேண்டாம்! உன்னை முறைப்படி மணக்க அரசகுல சம்பிரதாயம் இடம் கொடுக்காது என்றால், எனக்கு இந்த அரசபட்டம் வேண்டாம். இந்த நிமிடம் நாமிருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோமே, இந்த இன்பம் போதும் புவனா!” என்றான் சிவாஜி.

     புவனமோகினி அவசரமாக அவன் வாயைத் தனது தளிர் விரல்களால் மூடினாள். அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டாள். மரத்தடி நிழலில் அவனுடைய மடிமீது தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள். அவளுடைய கண்களிலிருந்து நீர் வழிந்தது.

     “இளவரசே! நம்முடைய நட்பு காதலாகவே இருக்கட்டும். இதற்குமேல் ஓரடி கூடப் போக வேண்டாம். காதல் என்னும் வெள்ளத்தில் கால் தரை தட்டினால் அன்பு வடிந்து போகும். கல்யாணத்தை விடக் காதலுக்குத்தான் மதிப்பு அதிகம். அழியாத காதல் மட்டுமே வரலாற்றில் காவியங்களாகி இருக்கின்றன. கல்யாணம் சரித்திரம் ஆவதில்லை...!”

     “என்னவெல்லாமோ பேசுகிறாயே புவனா? உனக்கு என் மனத்தில் வாழ விருப்பம் இல்லையா? நாம் பரிமாறிக் கொண்ட பார்வைகளும், இதயத்தால் கலந்து நின்ற நமது எண்ணங்களும், கைகளின் பிணைப்பில் இணைந்த காதல் மனமும் மறந்து விட வேண்டியவை தானா?”

     “ஒரு நாளும் இல்லை! தங்கள் இதயத்தில் நான் சிரஞ்சீவியாக வாழ்வேன். நீங்களும் என் மனத்தில் என்றென்றும் இருப்பீர்கள். ஆடல்வல்லான் சிதம்பரநாதனின் அடிமையாக மட்டுமே வாழ்ந்து மறைவேன். இன்னொரு ஆடவன் என்னைத் தீண்ட ஒரு நாளும் அனுமதியேன். எனக்காக நீங்கள் அன்று மோதிரம் கொடுத்தீர்கள். கணையாழி நம்முடைய உள்ள ஒற்றுமைக்கு அடையாளம் ஆயிற்று. அதுவே போதும்... எனக்கு விடை கொடுங்கள் சுவாமி!”

     “விடை கொடுப்பதா? அது எப்படி முடியும் புவனா? வா! நாம் இருவருமே கண்காணாமற் போய்விடுவோம். எங்கேயாவது போய் எளிய மக்களாக வாழ்வோம். அரசகுல சம்பிரதாயங்கள் நம்மைப் பிணைக்க வேண்டாம். அரச பதவி நமக்கு வேண்டாம்!”

     “அப்படிச் சொல்லாதீர்கள் சுவாமி! அரச பதவி வேண்டாம் என்று சொல்லலாம். அன்னையும் தந்தையும் வேண்டாம் என்று சொல்லி விடுவீர்களா? இந்தத் தஞ்சை மண் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதே? தாங்கள் அரியணை ஏறி இந்தக் கலைச்செல்வங்களை வளர்க்க வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதே? அந்தப் பொறுப்பைத் தாங்கள் ஒதுக்கி விடலாமா? பண்ணும் பரதமும், ஓவியமும் காவியமும், சரித்திரமும் மருத்துவமுமாக, சரஸ்வதி மகாலில் குவிந்து கிடக்கின்றனவே? தங்கள் தந்தையாருக்குப் பின் அதை ஒரு கலைப்பெட்டகமாக உருவாக்கி, நீங்கள் தமிழுக்குப் பெருமை சிறக்கச் செய்ய வேண்டாமா? எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னுடன் ஓடிவந்து எதைச் சாதிக்கப் போகிறீர்கள்?”

     “அதற்காக உன்னை இழக்க முடியுமா புவனா? எவ்வளவு இனிமையாக நெருங்கிப் பழகினோம்? எப்படி மனம்விட்டுப் பேசிக் கொண்டோம்? இளமையை எட்டும் வாசலில் எவ்வாறு காதல் தெய்வத்தின் அடியில் நம்மை மனமொத்த இருவராக அர்ப்பணித்துக் கொண்டோம்? மீண்டும் இதை நான் வேறு யாரிடமாவது பெற முடியுமா அன்பே? உன்னைப் பிரிந்து நான் வாழலாம். அரச போகங்களை அனுபவிக்கலாம். ஆனால், இதயத்தில் வைத்து உன்னை அன்பு மலர்களால் பூஜித்தது போல வேறு யாரை நான் அணுக முடியும்? அதை இழந்து நான் வாழ்வதை விடச் சாவதே மேல்!”

     “அப்படி ஏதும் செய்துவிடாதீர்கள் அன்பே! வீரர்கள் தியாகத்துக்காக உயிரை விடலாம். நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கலாம். ஆனால், சொந்த நலனுக்காக அப்படிச் செய்யவே கூடாது! தியாக செய்த அருஞ்சுடராக ஒளி வீச முயலுங்கள். நான் பிரிந்து போகிறேன். கடமையை ஆற்ற என்னைப் பிரிய ஒப்புக் கொள்ளுங்கள். என்னை என்றும் மறக்க மாட்டேன் என்று சொல்லுங்கள், அதுபோதும்!”

     “என் உள்ளத்தில் உனக்கு மட்டும்தான் இடம் புவனா! ஆனால் நம்முடைய காதல் திருமணத்திலும் முடிய வேண்டும் என்று தான் இன்னும் நான் விரும்புகிறேன். அரசரை இதற்குச் சம்மதிக்க வைப்பேன். என்னைத் துறந்தாவது அரசகுல கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று அவர் நினைக்கமாட்டார்!”

     “உண்மைதான். ஆனால் எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால்? நான் உயிரிழந்து விட்டால்? எதுவும் நடக்கலாமே? புவனா உங்களுடன் வாழ்ந்த அனுபவம் நினைவுகளாகவே நின்றுவிடலாம். அப்போது நீங்கள் வாழ்க்கை நடத்துவீர்கள் அல்லவா? நெஞ்சில் என்னை வைத்துக் கொண்டு, காலமெல்லாம் என் நினைவில் வாழ்ந்து கொண்டு கடமை ஆற்றுவீர்கள் அல்லவா? எனக்கு அப்படிச் சத்தியம் செய்து கொடுங்கள்! காலமெல்லாம் என் காதலை மனத்தில் வைத்துப் பூஜிப்பேன் என்று உறுதிமொழி கொடுங்கள். அது போதும்... காதல் என்பதை கவிதையாக அனுபவித்தோம். அது போதும்; வாழ்க்கையில் அதற்கு உயிர் வடிவம் தேவை இல்லை!” என்று சொல்லும் போதே அவளுடைய கண்களில் கண்ணீர் பெருகிற்று. துணிவாகப் பேசினாலும் துவண்ட இதயம் அந்தப் பார்வையில் தெறித்தது.

     சிவாஜி அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். இதழ்கள் இனிய உறவில் கலந்தன. உள்ளத்தால் இணைந்த ஒற்றுமை அந்த உணர்வில் தெரிந்தது. புவனமோகினி எழுந்து நின்றாள். கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

     “சுவாமி! இதுதான் எனது வேண்டுகோள்... நான் பிரிந்தோ, மறைந்தோ போகலாம். ஆனால் அதன் பின்னும் தாங்கள் மனம் தளராமல் உயிர் வாழ வேண்டும். தாங்கள் வாழ்ந்தால் தான் நான் தங்கள் இதயத்தில் என்றும் நீங்காமல் வாழ முடியும். தாங்கள் அப்படிச் செய்வதாக உறுதிமொழி கொடுப்பீர்களா?” என்று கண்ணீரில் குரல் கலங்கக் கேட்டாள் புவனா.

     “நிச்சயமாக அப்படிச் செய்வேன் புவனா! உன் நினைவு என்றும் அழியாமல் இருக்க நானும் வாழ்வேன். நீ கலையரசி மட்டும் அல்ல; என் இதயத்தின் அரசியும் கூட. எனக்கு இணையான அரசியாக உன்னை அடைய என் தந்தையிடம் வாதாடுவேன். என் முயற்சியில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!”

     “மனத்தால் உங்கள் மனைவியானேன். அதுபோதும் இளவரசே! எனக்கு கலைச்செல்வத்தைக் கொடுத்த மண்ணில் கலைகள் செழிக்க, நான் எனது வாழ்வை விட்டுக் கொடுத்தேன் என்ற பெருமை எனக்குப் போதும். இராமனின் கௌரவம் காக்க அன்னை ஜானகி பிரிந்து செல்லவில்லையா? என்னையும் அதேபோல என் தாய் ஏற்றுக் கொள்வாள். அவளுடைய ஆதரவில் உங்களை நினைத்து வாழ்வேன். அதுவே போதும்! எங்கே? உங்கள் கைகளைக் கொடுங்கள்! அதைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். என்னை வழி அனுப்பி வைக்கும் போது தாங்கள் எனக்கு கொடுத்தனுப்பிய அன்புப் பரிசாக அதை மட்டும் ஏற்கிறேன். இதோ தாங்கள் கொடுத்த முத்திரை மோதிரம். இதைத் தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்!” என்று கழற்றிக் கொடுத்தாள் புவனமோகினி.

     “ஏன் புவனா? எதற்காக அதைக் கழற்றிக் கொடுக்கிறாய்? நான் உன்னை மணந்து கொண்டது மெய்யல்லவா?” என்று பதறினான் சிவாஜி.

     “அது மெய்தான். ஆனால் மெய்யை நிரூபிக்க வேண்டியதில்லையே? அது சாசுவமானது அல்லவா? மனத்தால் நாம் மணம் செய்து கொண்டோம். அதுவே போதும்! அதற்கு சாட்சி தேவை இல்லை. உங்களை நான் இதயத்தில் வைத்துப் பூட்டி வைக்கிறேன். மனத்தில் பூட்டியது போதும்! கை விரலிலும் பூட்டி மகிழ வேண்டியதில்லை! தங்களை முறைப்படி மணந்து கொண்ட ஓர் அரசகுமாரி அரியணையில் உங்களுடன் அமருவாள். அவளுக்கு அதை உரிமையுடன் அணிவியுங்கள்! அந்த வேளையில் அந்த உரிமையை மனமுவந்து விட்டுக் கொடுத்தவளாக என்னை நினைத்து ஆசீர்வதியுங்கள்! அது போதும்!” என்று கூறிவிட்டு மெல்ல விலகிச் சென்றாள் புவனமோகினி.

     சிறிது தூரம் நடந்தவள் மனம் பொறாதவளாய் மீண்டும் ஓடி வந்து சிவாஜியை அணைத்துக் கொண்டாள். ஆசை தீர ஒரு முறை அவனைப் பார்வையால் முழுமையாகக் கண்டு இதயத் தாகம் தீர்த்தாள். பின் சிவாஜி தடுப்பதற்கு முன் ஓடிப் போய் வீட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டுவிட்டாள்!

     மெய் சோர்ந்தவனாய் - மனம் வாடியவனாய்த் திரும்பி நடக்கத் தொடங்கினான் சிவாஜி. வெளியே அவனது குதிரை காத்து நின்றது. அதில் ஏறி அரண்மனையை நோக்கி ஓட்டிக் கொண்டு போனான். மீண்டும் நாடக, அரங்கிற்குச் செல்ல மனம் இடம் தரவில்லை...

     நாடக விழாவின் கடைசி நாள் விமரிசையாக நடந்து முடிவடைந்துவிட்டது. விழாவிற்கு வந்த மன்னர் சரபோஜி, துரைசாமி ஐயா, குப்புசுவாமி ஐயா போன்ற தமிழ்ப் புலவர்களுக்கும், வெங்கட்ராமையா, மாத்ருபூதண்ணா போன்ற தெலுங்குக் கவிஞர்களுக்கும் பரிசளித்துக் கௌரவித்தார். சித்திரம் கோவிந்தசாமி, செங்கம்மாள் போன்ற ஓவியர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது. நாடகக் கலைஞர்களை வாழ்த்திப் பாராட்டிவிட்டு புறப்படும் போது, மன்னர், சார்க்கேலை அனுப்பி சுப்பராய ஓதுவாரை அழைத்து வரச் சொன்னார். சார்க்கேலை வைத்துக் கொண்டு அவரிடம் பேசினார்.

     “இன்று இரவு கூட்டம் கலைந்த பிறகு, நாளைய அரங்கேற்றத்துக்காக ஒத்திகை இங்கேயே நடக்கட்டும். வாத்தியக்காரர்களுடன் நிகழ்ச்சியை இங்கேயே புவனமோகினியுடன் ஒத்திகை பாருங்கள். அந்தப்புரத்தில் உள்ள பெண்மணிகள் சிலர் புவனமோகினியின் நாட்டியத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அவர்கள் நாளை அரங்கிற்கு வந்து பார்க்க இயலாது. அவர்கள் இன்றிரவு இங்கே வந்து பார்க்க வசதியாக இருக்கட்டும்!” என்று கட்டளையிட்டு விட்டுப் போனார்.

     மன்னர் போன பிறகு ஓதுவாரிடம் சார்க்கேல், “மன்னர் கட்டளையைக் கருத்தாக மனத்தில் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் செய்யுங்கள்! புவனமோகினியின் பரத நாட்டியம் அரங்கேற்றம் நல்லமுறையில் நடந்தேற வேண்டும் என்று அரசர் பெரிதும் விரும்புகிறார். அதற்கு முக்கியமான காரணங்களும் உண்டு. ஆகையால் கவனமாக இருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள். இன்று இரவு ஒத்திகை நாளை நடைபெறப் போகும் நிகழ்ச்சியைப் போலவே முழுமையாக அமையட்டும்!” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

     மண்டபத்தில் போதிய காவல் ஏற்பாடுகளும் வசதிகளும் செய்யப்பட்டன. நடன அரங்கத்தில் தீப அலங்காரங்கள் மறுநாளைய நிகழ்ச்சிக்கு உரியது போலவே பிரமாதமாகச் செய்யப்பட்டன. வாத்தியங்கள் வரவழைக்கப்பட்டு இனிய குரலில் நட்டுவாங்கம் பின்னிசையுடன் ஒத்திகை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

     சுப்பராய ஓதுவார் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார். தனது நிகழ்ச்சிக்கு மன்னர் இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்ததை எண்ணிப் பெருமை அடைந்தார். திலகவதியாரும் புவனமோகினியை முழு அலங்காரத்துடன் அணிகள் பூட்டி, மலர்கள் சூட்டி, அழகுபடுத்தி அனுப்பி வைத்தார். மறுநாள் அரங்கேற்றம் நல்லமுறையில் நடந்தேற வேண்டும் என்று பூக்கடை கோதண்டராமசுவாமி கோவிலில் வேண்டிக் கொண்டார்.

     இரவு ஒன்பது மணி. ஒத்திகையே ஆனாலும் அதைக் காண மக்கள் வந்து கூடி விட்டார்கள். குதிரை வீரர்கள் அவர்களைக் கட்டுப்படுத்தினாலும், சாலையின் இரு மருங்கிலும் கூடி அமர்ந்து பார்த்தாலும், அரண்மனைப் பெண்மணிகள் தகுந்த காவலுடன் வந்து நிகழ்ச்சியைக் கவனித்தார்கள்.

     அவ்வளவிற்கும் இடையே புவனாவின் உள்ளத்தில் மட்டும் ஏனோ ஒரு கலக்கம் உறுத்திக் கொண்டே இருந்தது. இந்த வித்தியாசமான ஒத்திகைக்கு ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டும் என்று அவளுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் ஊசலாடிக் கொண்டே இருந்தது. பட்டும், முத்தும், மணியும், மலர்களும் அணிந்து ஆடினாலும், மனம் முழுமையாக நாட்டியத்தில் நிறைந்து ஈடுபட மறுத்தது. அதனால் ஓதுவாரின் கடுஞ்சொற்களுக்கு நிறைந்து ஆளாக வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

     ஒத்திகை நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் நடந்திருக்கும் அங்கே கூடி இருந்த அனைவரும் மிகுந்த சுவாரசியத்துடன் புவனாவின் நாட்டியத்தைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். நிகழ்ச்சியின் விஸ்தாரமான பகுதி ஒன்றை ஆடி முடித்து, வியர்த்து நனைந்த உடுப்பை மாற்றி வர, புவனா உள்ளே சென்றாள். அப்போதுதான் அந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.

     அரங்கமன்றத்தின் இருபுறமும் இருந்த பாவை விளக்குகள் ஆடிக் கவிழ்ந்தன. அவற்றில் இடப்பட்டிருந்த பெரிய விளக்குத் திரிகளின் கொழுந்து மேலே விழுந்து, பட்டுத் திரைச்சீலைகளும், ஓலைப்பந்தலும் தீப்பிடித்தன! ஒரு சில வினாடிகளில் பெருந்தீ ‘கணகண’வென்று எல்லா திசைகளிலும் பரவத் தொடங்கிற்று! கூட்டம் கலைந்து நாற்புறமும் சிதறி ஓடிற்று!


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247