4. அரசரின் ஆசை

     உலக மன்னர்க ளுற்றெதிர் பணிய
     நலமுறு காசி நண்ணி யொண்கங்கை
     மென்புனல் படிந்து விசுவநாதன்
     தன்படி பங்கயத்தனை எதிர்பணிந்து
     வேண்டிய வரங்கள் விருப்புடனேற்று
     நின்புகு மகிழ்ச்சி நிலவுற வந்தோன்!

          - சரபேந்திர பூபால குறவஞ்சியில் சிவக்கொழுந்து தேசிகர்

     மன்னர் சரபோஜி ஒரு முறை சிவாஜியைத் தலைமுதல் கால்வரையில் உற்று நோக்கினார். பிறகு முகத்தில் பெருமை ததும்ப மகனின் தோளைத் தட்டிக் கொடுத்தார். அவருடைய கண்கள் ஒளிவிட்டன.

     “மகனே! உன்னை அரச பதவிக்குத் தயார் செய்யப் போகிறேன். இந்தத் தஞ்சைத் தரணியின் ஆட்சி பற்றிய நுட்பங்களை உனக்குச் சொல்லப் போகிறேன். நான் இல்லாத போது நீ எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை உனக்குக் கற்றுக் கொடுக்கப் போகிறேன்!” என்றார் சரபோஜி.

     சிவாஜியின் கண்கள் கலங்கின. கம்மிய குரலில், “தந்தையே! என்னென்னவோ சொல்கிறீர்களே? தங்கள் திட்டம் தான் என்ன? ஆட்சியைப் பற்றி எனக்கு இப்போது கூறவேண்டிய அவசியம் என்ன? பிரகதீசுவரன் திருவருளால், தங்களுக்கு ஆரோக்கியமும் ஆயுளும் குறைவின்றி இருக்க வேண்டும் என்றல்லவா நாங்கள் எல்லோரும் தினந்தோறும் வேண்டிக் கொள்கிறோம்!” என்று கேட்டான் சிவாஜி.

     “இருக்கலாம் மகனே! ஆனாலும் எனக்கு இப்போதெல்லாம் அரச பதவியில் பிடிப்பு குறைந்து விட்டது. ஒவ்வொரு இந்துவும் போய் வரவேண்டுமென்று விரும்பும் காசி யாத்திரைக்குச் சென்று வர நானும் ஆசைப்படுகிறேன். தீபாவளியை ஒட்டி நான் உற்றார் - உறவினருடன் புறப்பட்டுச் செல்லவிருக்கிறேன். அதற்கு முன் உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்துப் பதவியில் அமர்த்திவிட்டுச் செல்லப் போகிறேன். ரெசிடெண்ட் துரையிடம் இதைக் கூறி விட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.”

     “அப்பா! எனக்கு எதற்கு இப்போது பட்டாபிஷேகம்? தாங்கள் இருக்க நானும் மன்னன் என்று சொல்லிக் கொள்வதா? இது நமது ஆட்சியில் வழக்கம் இல்லையே? மேலும் தாங்கள் காசி யாத்திரை சென்று வர எவ்வளவு காலம் ஆகப் போகிறது? அது வரையில் இங்கு ஒரு மன்னரை ஆட்சியில் வைத்துவிட்டுப் போக வேண்டியது அவசியம் தானா?”

     “மிகவும் அவசியம் மகனே! உனக்குத் தெரியாது. கும்பெனியார் இந்த ஆட்சி பீடத்தை ஒவ்வொரு நிமிடமும் குறி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னராக இங்கே நீ இல்லாவிட்டால் உனக்கு எதையும் கூற அதிகாரம் இருக்காது. அந்த நிலையில் அவர்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். நாம் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்காமல் போனால் அவர்களே வரியை வசூல் செய்து நேரடியாக எடுத்துக் கொள்ளவும் முற்பட்டிருக்கிறார்கள். மன்னார்குடி, திருவையாறு, மாயவரம், பட்டுக்கோட்டை ஆகிய சுபாக்களில் இவ்வாறு வசூல் செய்து கொள்ளலாம் என்று எனக்கு முன் இருந்த அரசரிடம் ஒரு முறை ஒப்பந்தம் கூட செய்து கொண்டு விட்டார்கள். பிறகு இவ்வாறு அடமானம் செய்யப்பட்ட பகுதியை தம் வசப்படுத்திக் கொள்ளவும் முனைந்தார்கள். ஆகவே, நான் தகுந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான் போக வேண்டும். காவிரி மண் கும்பெனியார் கைக்குப் போய்விடுவதற்கு நான் காரணமாக் ஆகிவிடக்கூடாது!” என்று சிவாஜியை மெல்லத் தட்டிக் கொடுத்தார் சரபோஜி.

     “தந்தையே! நீங்கள் இடும் கட்டளை எதுவானாலும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், தாங்கள் அப்படி எத்தனை நாட்கள் விலகி இருப்பதாகத் திட்டம் போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான் சிவாஜி.

     “குறைந்தது ஆறு மாத காலமாவது காசி-ராமேசுவர யாத்திரை செல்லத் திட்டமிட்டிருக்கிறேன். புண்ணியத்தலம் ஒவ்வொன்றிலும் தங்கித் தரிசனம் செய்யவும் எண்ணி இருக்கிறேன். போக்குவரத்து வசதிகள் அளவாகவே இருப்பதால், இவ்வளவு தூரம் பிரயாணம் செய்வது எளிதல்ல. மேலும் உடல்நலம் சீர்கெடாமல் இருக்க வேண்டும். அதற்காக ஓர் ஆங்கிலேய டாக்டர் உட்பட ஒரு சிறு குழுவையே அழைத்துப் போகப் போகிறேன்!”

     “தங்களுக்கு வைத்தியம் செய்ய ஓர் ஆங்கிலேய டாக்டரா? தாங்கள் அறியாத மருத்துவ முறையா தந்தையே?”

     “காசி யாத்திரை என்பது எளிதன்று! அவ்வாறு செய்யும் நெடுந்தூரப் பயணமும், மாறிமாறி வரும் தட்பவெப்பமும் என் போன்ற வயது கூடியவர்களை நிச்சயமாகப் பாதிக்கும். காசிக்கு யாத்திரை போவதென்றால் திரும்பி வருவது நிச்சயமில்லை. ஆகையால் ‘விடைபெற்றுக் கொள்கிறேன்!’ என்று உறவினர்களிடம் சொல்லிக் கொண்டு புறப்படுவதும் இன்று வழக்கமாக உள்ளது. ஆகையால் நான் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் செல்ல வேண்டும். என்னுடன் டாக்டர் ஸட்டன் என்ற ஆங்கிலேய வைத்தியரை மாதம் எழுநூறு ரூபாய் சம்பளம் கொடுத்து அழைத்துப் போகிறேன். சுமார் நூறு வெவ்வேறு மருத்துவமுறை மருந்துகளையும், உபகரணங்களையும் எடுத்து செய்யவும் திட்டமிட்டுள்ளேன். யார் கண்டார்கள்? எதற்கும் உபயோகம் வரும் அவசியம் ஏற்படலாம்!”

     “அப்பா! அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். என் நெஞ்சு துடிக்கிறது!” என்று பதறினான் சிவாஜி.

     “என்னுடைய உள்மனம் இந்த யாத்திரையில் அப்படி ஒரு நிகழ்ச்சி நேரிடக் கூடும் என்றே சொல்கிறது. என் வாழ்நாளில் இப்படித் தோன்றிய போதெல்லாம் அவ்வாறே பலித்திருக்கிறது. இம்முறையும் அப்படி நடந்தால் ஆச்சரியமில்லை மகனே! ஆகையால் நீ எதற்கும் தயாராக இருக்க வேண்டும். வீரமராட்டியர்கள் இதற்கெல்லாம் மனம் கலங்குவதில்லை. பவானியின் பேரருளால் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய வீரமன்னரின் பெயரை உனக்கு நான் வைத்திருக்கிறேன். அதற்கு ஏற்ற திடசித்தம் கொண்டவனாக நீ இருக்க வேண்டுமென்பதே என் ஆசை!” என்று கூறி நிறுத்தினார் சரபோஜி.

     ஒரு நிமிடம் பேசாமல் இருந்தான் சிவாஜி. பிறகு “தந்தையே! ஒரு வேண்டுகோள்... இன்று தங்களிடம் பேசியதில் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். ஆயினும் இப்போது என் மனநிலை சரியாக இல்லை. தாங்கள் மேலும் ஆட்சியைப் பற்றி இப்போது எதையும் கூற வேண்டாம்! அடுத்தமுறை தங்களிடம் தெரிந்து கொள்ள முற்படுவேன். இப்போது என்னை இந்தப் பூங்காக் குடிலிலிருந்து செல்ல அனுமதி கொடுங்கள்!” என்று கூறி வணங்கினான்.

     “இரு மகனே! நானும் வருகிறேன். உன்னிடம் என்னைப் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் சிலவற்றைக் கூற எண்ணி இருந்தேன். அதற்கு இது தகுந்த தருணம் இல்லை என்று தோன்றுகிறது. போகட்டும்! நீ உன் அன்னையைக் காணத்தானே போகிறாய்? நானும் உன்னோடு வருகிறேன். அங்கு இன்று இரவு வீணை வாசிக்க நமது சமஸ்தான வித்துவான் வீணைபெருமாளையரை வரும்படி கூறியிருக்கிறேன். போகலாம் வா!” என்று கூறிப் புறப்பட்டார் சரபோஜி.

     அந்தப்புரத்தை ஒட்டி அமைந்திருந்த விஹாரத்தில் அந்த இசைக் கச்சேரிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கலைகளுக்கெல்லாம் உரிய தெய்வமான சரசுவதியின் திருவுருவம் மஹாலின் பிரதானப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. வெள்ளைக்கலை உடுத்து, முல்லை மலர் மாலை அணிந்து, அபயகரமும் கருணை பொழியும் கண்களுமாகக் கொலுவிருந்த தேவியின் முன், வீணை பெருமாளையர் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார். பச்சை நிறப் பட்டுத் துணியினால் மூடிய வீணை கம்பீரமாக அவர் முன் அமர்ந்திருந்தது. அரசவையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அமைச்சரும், சமஸ்தான கலைஞர்களும் வந்து கூடி இருந்தார்கள். மூத்த ராணியார் யமுனாபாய், இளையராணி அகல்யாபாய், இளவரசர் சிவாஜி ஆகியோருடன் சரபோஜி மன்னர் அங்கு வந்ததும் அனைவரும் எழுந்திருந்து, அவர்கள் அமர்ந்த பிறகு தத்தம் இருக்கையில் அமர்ந்தார்கள்.

     சிவாஜியின் புறம் திரும்பி சரபோஜி பெருமை ததும்பும் குரலில், “மகனே! நமது சமஸ்தானத்தில் உள்ள இசைப்புலவர்களில் முக்கியமானவர் பெருமாளையர். ராகங்களை வாசிப்பதில் வல்லவர். தாளம் வாசிப்பது அவருடைய தனித் திறமி. புதுக்கோட்டை மன்னர் முன் ஒரே ராகத்தை இருபது நாட்கள் வாசித்து முடித்து, அதன் பொருட்டு பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்றவர். சௌராஷ்டிரம், சாவேரி ராகங்களில் அடதாள வர்ணங்களைக் கையாளுவதில் வல்லவர். இன்று அவருடைய வீணை இசையை முதலாக வைத்து, அரண்மனையில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். சமீபத்தில் கேரள நாட்டிற்குச் சென்று நுண்கலைகள் பலவற்றையும் ரசித்துத் திரும்பி வந்தவன் நீ. இந்த அரும்பெரும் கலைஞரின் இசையைக் கேட்டு நீ மகிழ வேண்டுமென்பது என்னுடைய ஆசை!” என்றார்.

     மூத்தராணி யமுனாபாய் பரிவுடன் சிவாஜியைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டார். மன்னரையும் தேவியரையும் வணங்கிவிட்டு, இசை நிகழ்ச்சியைத் தொடங்கினார் பெருமாளையர்.

     கம்பீரமான நாதம் அலை அலையாக எழுந்தது. எல்லோருடைய முகத்திலும் அந்த இனிமையை உணர்ந்து ஒரு மகிழ்ச்சியும், பிரமிப்பும் ஒளிர்ந்தன. சங்கராபரண ஆலாபனையும் தொடர்ந்து சுகசி மன்னரின் க்ஷேத்திரக்கிருதியும் அமுத மழையாகப் பெய்தன. ஒவ்வொரு வடிவமாக, கீர்த்தனைகளும், ராகம் தாளம் பல்லவியும், ராகமாலிகையுமாகத் தவழ்ந்து வந்தன. மன்னர் சரபோஜி கண்களை மூடி புன்னகையுடன் தலையை அசைத்த வண்ணம் இருந்தார். மகுடி முன் நாகம் போல அவருடைய உடம்பு ஆடிக் கொண்டிருந்தது. மாண்ட் ராகத்தில் பாடல் ஒன்றை இசைத்து மங்களம் இசைத்து முடித்தார் பெருமாளையர்.

     மூன்று மணி நேரம் கானமழையில் திளைத்து மெய்ம்மறந்து இருந்தார்கள் அனைவரும். கச்சேரி முடிந்து எழுந்து வந்து அரசரை வணங்கினார் பெருமாளையர். பொற்காசுகள் அடங்கிய பணமுடிப்பை அவருக்கு வழங்கினார் சரபோஜி.

     “தங்கள் இசை இனிமையில் தோய்ந்து கம்பீரமாகப் பொழிந்தது. அண்டாத ஆழத்திலும் எட்டாத உயரத்திலும் ஆயாசம் இல்லாமல் அலைந்து மீண்ட தங்கள் வீணை இசை மெய்ம்மறக்கச் செய்துவிட்டது. இங்கே கொலுவிருக்கும் கலைமகள் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் மேன்மேலும் வளரும் வல்லமையையும் கொடுக்க வேண்டுகிறேன்!” என்று கூறி எழுந்தார் சரபோஜி மன்னர். தேவியர் இருவரும், இளவரசரும் அவருடன் புறப்பட்டுச் சென்றார்கள்.

     வெளியே வந்ததும், “அகல்யா! சற்று நேரம் நிலா முற்றத்தில் அமர்ந்து பேசலாமா?” என்று அழைத்தார் மன்னர். அதை எதிர்பாராத யமுனாபாய் ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள். அதைக் கண்ட சிவாஜி அவளை நோக்கி, “பெரியம்மா! நாம் உள்ளே போகலாம் வாருங்கள்! உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேச வேண்டும்” என்று சாதுரியமாகக் கூறி அழைத்துக் கொண்டு போய்விட்டான்.

     “தாங்கள் என்னை இப்படிப் பிரித்து அழைத்திருக்கக் கூடாது அரசே! அக்கா என்ன எண்ணிக் கொண்டார்களோ?” என்றாள் அகல்யாபாய். புன்சிரிப்புடன் அவளைக் கண் கொட்டாமல் பத்து விநாடி பார்த்தார் மன்னர்.

     “உனக்கு அந்தக் கவலை வேண்டாம் அகல்யா! உன்னுடைய மகன் கெட்டிக்காரனாக வளர்ந்து விட்டான். குறிப்பறிந்து பெரியம்மாவை அவன் சாமர்த்தியமாக அழைத்துக் கொண்டு போய்விட்டான்!” என்றார் சரபோஜி. இளையராணி பதில் சொல்லவில்லை. அவள் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது.

     “நீங்கள் மட்டும் என்ன? இன்னும் வாலிபக் குறும்பு மாறாதவராகத் தான் இருக்கிறீர்கள்!” என்று கூறியபடி அவர் மீது மெல்லச் சாய்ந்து கொண்டாள் இளையராணி. மெல்லிய மூச்சும், பூவின் மணமும், சாந்தும் நெடியுமாக அந்த இளமை அவரைத் தாக்கிற்று. கைகளால் சேர்த்து இழுத்து அணைத்துக் கொண்டார்.

     “நாளை நாமிருவரும் குழந்தைகள் இருவருடனும் திருவையாற்றுக்குப் போகிறோம்” என்றார் சரபோஜி. அணைப்பிலிருந்து விலகாமலேயே அவரை நிமிர்ந்து பார்த்தாள் அகல்யாபாய்.

     “ஆமாம் தேவி! இந்த முறை நாம் விநாயகர்சதுர்த்தி கொண்டாடுவதில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதனால் தான் இதற்குமுன் பஞ்சநதீச்வரரிடமும் தர்ம சம்வர்த்தினியிடமும் பிரார்த்தனை செய்து கொள்ள விரும்புகிறேன்.”

     “என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

     “தாராளமாக! உனக்குத் தெரியாமலா இருக்கப் போகிறது? விரைவில் நான் எனது தேவியர்களுடனும், முக்கிய உறவினர்களுடனும் காசி யாத்திரை செல்ல இருக்கிறேன்!”

     “இது என்ன திடீர் முடிவு அரசே!”

     “திடீரென்று எடுத்த முடிவு அல்ல தேவி! சிலகாலமாகவே நான் சிந்தித்து வந்த ஒன்றுதான். நாளுக்கு நாள் வயதாகிக் கொண்டு வரும்போது, உடலில் மூப்பின் தளர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே காசிக்குச் சென்று திரும்ப வேண்டும் என்ற ஆசை தான். வழியில் நாம் காண வேண்டிய புண்ணிய தலங்கள் அறுபதுக்குமேல் இருக்கின்றன. நெடுந்தூரம் போயாக வேண்டும். புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். அந்தச் சிரமத்தை உடல் இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் புண்ணிய யாத்திரை தடைபட்டுப் போகும். அதை உத்தேசித்துத் தானே மேலே தள்ளிப் போடாமல் இந்த தீபாவளியை ஒட்டியே புறப்படலாமென்றிருக்கிறேன்! இளவரசன் சிவாஜியிடம் பொறுப்பை ஒப்படைத்துச் செல்லவும் தீர்மானம் செய்திருக்கிறேன்!”

     “சுவாமி! சுலக்‌ஷணா எங்கே இருப்பாள்?”

     “இது என்ன கேள்வி அகல்யா? தஞ்சையில்தான் இருப்பாள். காசியாத்திரை, மனப்பக்குவம் அடைந்தவர்களுக்குத்தான் ஏற்றது. குழந்தைகளுக்கு அதில் இடம் ஏது? அவள் தஞ்சையில் தகுந்த பாதுகாப்புடன் இருப்பாள். குழந்தை தானே? விளையாட்டாகவே பொழுதைக் கழித்து விடுவாள்!”

     அகல்யா மன்னரின் கழுத்தில் தனது கரங்களைப் போட்டு அவருடைய அணைப்பில் தன்னை இழந்தாள். அவருடைய தலையைக் கோதினாள். காதோடு பேசுகிற குரலாகச் சொல் கம்மிற்று.

     “சுலக்‌ஷணா குழந்தையல்ல அரசே! அவள் மனம் இந்த விளையாட்டுக்களில் ஈடுபடவும் விரும்பாது. மொட்டு மலரத் தொடங்கி விட்டது. அதுதான் என் கவலை!”

     “கவலைப்படாதே அகல்யா! நாம் இல்லாத போது நடக்க வேண்டிய ஒவ்வொன்றுக்கும் நான் உத்தரவுகள் கொடுத்துவிட்டுச் செல்லப் போகிறேன். சமஸ்தானத்துக்கு மாமூல்படி பானக பூஜை செய்வது முதல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரெசிடெண்ட் துரைக்குச் சர்க்காரிலிருந்து வழக்கப்படி செய்ய வேண்டிய மரியாதைகள் வரை, எல்லாவற்றையும் குறிப்பிட்டுச் சொல்லி உத்தரவிடப் போகிறேன்!”

     “அரசே! அதில் முக்கியமாக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நாம் திரும்பி வரும்வரை சிவாஜியோ, சுலக்‌ஷணாவோ நாட்டிய நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டாம். அப்படியே போவதானாலும் அவன் தங்கையை அழைத்துச் செல்ல வேண்டாம்!”

     “என்ன கூறுகிறாய் அன்பே! அவர்களை அரண்மனைக்குள்ளேயே அடக்கி வைக்க நினைக்கிறாயா? பெண்களும் குழந்தைகளும் அந்தப்புரத்திலிருந்து தகுந்த காவலோடு மூன்று நாட்கள் வரை வெளியே சென்று திரும்பலாம் என்று ஏற்பாடு செய்யப் போகிறேன்.”

     “வேண்டாம் அரசே! இந்த விளையாட்டு வேண்டாம். சுலக்‌ஷணா முன் போல இல்லை. அவளுடைய ஆசைகளும் கேள்விகளும் என்னை அமைதியற்றுத் தவிக்கச் செய்கின்றன...”

     “ஒரு பருவத்தில் எல்லாத் தாய்மாரும் அனுபவிக்கும் தவிப்புதான் இது அகல்யா! கவலைப்படாதே. நாளை நாம் திருவையாற்றில் இரவு கோவிலில் இருக்கும் போது, பஞ்சநதீசுவரிடம் வேண்டிக் கொள்வோம். அவர் முன்னிலையில் மண்டபத்தில் சுந்தரியும் விஜயாவும் கலந்து கொள்ளும் குறவஞ்சி நாடகமும் நடனமும் நடைபெற இருக்கிறது. குழந்தைகள் அதையும் பார்க்கட்டும்.”

     “சுவாமி! என்ன சொல்லுகிறீர்கள்? அம்பலத்தில் ஆடும் நடனமாதரை சுலக்‌ஷணா அருகில் இருந்து பார்க்கலாமா? இது என்ன விபரீத யோசனை?” என்று கலங்கிப் போய்க் கேட்டாள் அகல்யாபாய்.

     ஒரு குழந்தையை அணைப்பது போல, அவளை அள்ளித் தூக்கியபடி சமாதானப்படுத்த முனைந்தார் சரபோஜி.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38