முதற் பாகம்

6. கனவில் கண்ட ஒளி

     காவலுக்கு வந்து அன்று போல் ஜோகியின் தந்தை ஒரு நாளும் கண் அயரவில்லை. கடனும் கவலையும் வஞ்சமும் வறுமையும் வருத்தும் உடலை ஏறிட்டுப் பார்க்காத நித்திரா தேவி, அவனை அன்று பரிபூரண நிம்மதியில் தாலாட்டிக் கண்ணயரச் செய்து விட்டாள். அந்த உறக்கத்தினூடே பின்னிரவில் அவன் ஒரு கனவு கண்டான்; கவலையில் பிறந்த கனவல்ல அது; நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, பொல்லா மனம் சிருஷ்டித்த மாயமல்ல அது. அவனுக்கு அது இறைவன் அருள் கொண்டு கூறிய நற்செய்தியாகத் தோன்றியது.

     பெருநெருப்பு ஒன்று கீழ்த்திசையில் தெரிகிறது. செஞ்சோதியாய், சொக்க வைக்கும் ஒளிப்பிழம்பாய், இருளைக் கரைக்கவல்ல அனற் குவையாய்த் தோன்றிய அந்த மண்டலத்தில், முதியவர் ஒருவரின் முகம் தெரிந்தது. கம்பீரமான அகன்ற நெற்றி; வீரத் திருவிழிகள்; உயர்ந்த மூக்கு, சாந்தம் தவழும் புன்னகை இதழ்கள்; செவிகளில் மணிக்குண்டலங்கள் ஒளிர்கின்றன; நெற்றியிலே செஞ்சந்தனம் துலங்குகிறது. அந்த முகத்தை வைத்த கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாமென்று தோன்றியது லிங்கையாவுக்கு. அறிவும் ஞானமும் பழுத்த அந்த முகம் தன்னை அழைப்பதாகவும், ஓயாது அழைத்துக் கொண்டே இருப்பதாகவும் தோன்றியது. யார் இவர்? அழற்கடவுளோ? அல்லது அழலேந்தும் பெம்மானின் ஒரு தோற்றமோ?... இல்லை தருமதேவனோ? காலதேவனோ? ஒளித் தெய்வமோ?

     அவன் அந்த முகத்தின் காந்தியில் லயித்துக் கிழக்கு நோக்கியே செல்ல ஆரம்பித்தான். சிறி து நேரம் சென்ற பின்னரே, அவனுக்குத் தான் மட்டும் நடக்கவில்லை, கூடச் சிறு பையன் ஒருவனையும் அழைத்து வருகிறோம் என்று புலனாயிற்று. அவன் ரங்கன் என்பது அவன் மனசுக்குத் தெரிந்தது. பையன் சாதாரணமான கச்சையும், மேற்போர்வையும் கம்பளியுமாக இல்லை. உள்ளாடை, மேலாடை இரண்டும் அணிந்திருக்கிறான். தலைமுடியை உச்சியில் முடிந்து கொண்டு நெற்றியில் சந்தனப் பொட்டுடன் விளங்குகிறான். மேலாடை நழுவி நழுவி விழுவதால் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொள்கிறான்.

     “வேகமாக வா, ரங்கா!” என்று கூறிய வண்ணம் லிங்கையா திரும்பிப் பார்க்கிறான்.

     ஆ! ரங்கன் என்று நினைத்தேனே? சந்தனப் பொட்டணிந்த பால் வடியும் இந்த முகம் ஜோகிக்கு உரியதல்லவோ?

     “நீயா வந்தாய்? ஜோகி, நெருப்புச் சுடும். நீ சிறியவன் போ” என்றான் அவன்.

     “சுடாது. ஹெத்தே சுவாமியை நானும் பார்த்துக் கும்பிட வருவேன் அப்பா” என்று குதித்து நடக்கிறான் குழந்தை.

     “நீ வேண்டாம் ஜோகி, ரங்கன் தான் வேண்டும். ரங்கன் எங்கே? ரங்கா?” கையை உதறிவிட்டு அவன் திரும்புகிறான்.

     கீழ்த் திசையில் அடர்ந்த காட்டுச் சோலைகளிடையே புகுந்து அந்த ஒளிக் கதிரோன் உலக பவனிக்குப் புறப்பட்டு விட்டான். மாதன், சுருட்டும் கையுமாக வெயிலில் வந்து குதித்துக் கொண்டிருந்தான்.

     முன் இரவின் இன்னிசை நினைவுக்கு வர, லிங்கையா புன்னகையுடன் எதிரே வந்தான்.

     “வா தம்பி, காவலுக்குப் போய் வருகிறாயா? ஆமாம் எருமை கால் ஒடிந்து போச்சாமே? அப்பப்பா! என்ன பெண் பிள்ளை தம்பி, வீட்டில் மொலு மொலு வென்று உயிரை எடுக்கிறாள்!” என்றான் கசப்புடன் அண்ணன்.

     இந்த வார்த்தைகளை உள்ளிருந்தே கேட்ட நஞ்சம்மை, அம்பாய் பாய்ந்து வந்தாள்.

     “நானா உயிரை எடுக்கிறேன்? இந்த வீட்டில் எந்தப் பெண்பிள்ளை இருப்பாள்? ஓர் உப்புக்குக் கூட உதவாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று அவர்கள் சிரிக்கிறார்கள். உதவாக்கரைப் பயல், நேற்றுப் போனவன் தலையே நீட்டவில்லை. குழந்தைக்கு வேறு காய்ச்சல். வீட்டில் ஒரு பண்டமில்லை. விளக்குக்கு எண்ணெய் இல்லை...”

     அவள் ஓயாமல் நீட்டியதற்கும் அண்ணன் சிரித்தான்.

     “மலையிலிருந்து விழும் அருவி கூட நிற்கும் தம்பி, இவள் வாய் நிற்காது. ரங்கன் பயல் எங்கே? நீ கண்டாயா?” என்றான்.

     “இரவு பரணியிலே படுத்திருந்தான். வீட்டுக்கு அழைத்து வந்து சோறு போட்டேன். அங்கேதான் தூங்குவான். விளையாட்டுப் பையன். பொறுப்பு வந்துவிட்டால் சரியாய்ப் போய்விடுவான். ஒரு நாள் பார்த்து, அவனுக்கு பால் கறக்கும் உரிமையைத் தரும் சடங்கைச் செய்து விட வேண்டும்” என்றான் லிங்கையா.

     உடனே அண்ணன் மனைவி பாய்ந்தாள்.

     “தம்பிக்காரர் கிண்டல் செய்கிறார், கேளுங்கள்! நேரே சிரிப்பதைக் காட்டிலும் சிரிக்காமல் சிரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே! எனக்கு நாவைப் பிடுங்கிக் கொள்ளத் தோன்றுகிறது. இந்த வீட்டுக்கு ஏன் வந்தோம் என்று இருக்கிறது. எருமை ஒன்றையும் பிள்ளை கீழே தள்ளித் தீர்த்து விட்டான். கையாலாகாத உங்களிடம் சடங்கு செய்யலாம் என்று சொல்கிறாரே!”

     “இப்படியெல்லாம் ஏன் தப்பாக நினைக்கிறீர்கள் அண்ணி? நாம் வெவ்வேறு வீடு தானே ஒழிய, வெவ்வேறு குடும்பம் அல்ல. இது வரையிலும் அப்படி நினைத்திருந்தாலும் இனியும் அப்படி நினைக்க வேண்டாம். என்னிடம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். நம்மிடம் இருக்கிறதென்று சொல்லுங்கள். ரங்கன் வேறு, ஜோகி வேறு அல்ல; நம் கொட்டிலில் மாடுகள் இல்லையா?” என்றான் லிங்கையா.

     தம்பியின் பேச்சில் அண்ணன் உருகிப் போனான். அவன் தன் பலவீனத்தை அறிவான். ஆனால் அதை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமின்றியே அவன் பலவீனத்துக்கு அடிமையாகி விட்டான்.

     “தம்பீ...!” என்று உணர்ச்சியுடன் தம்பியின் கைகளைப் பற்றினான். அவன் கைகள் நடுங்கின. அந்தக் கரடுமுரடான முகத்தில் அவன் கண்டத்திலிருந்து வரும் இசை போல் கண்ணீர் உருகியது.

     நஞ்சம்மை இதுவும் நிசமாக இருக்குமோ என்று அதிசயித்து நின்றாள்.

     “கூலி வைத்தேனும் எல்லாப் பூமியையும் திருப்புவோம். அண்ணி, நீங்கள் இனிமேல் வீட்டுத் தொல்லையை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நம் வீடு வந்து எடுத்துப் போங்கள்; இல்லையேல் சொல்லி அனுப்புங்கள்!” லிங்கையா இவ்விதம் மொழிந்துவிட்டுத் தன் வீட்டுக்குள் சென்றான். பரபரப்புடன் காலைப் பணிகளில் ஈடுபடலானான்.

     காலைப் பணிகளை முடித்து விட்டு அவன் மறுபடி வெளியே கிளம்புமுன் மாதி அவனிடம் வந்தாள். ரங்கனைப் பற்றிப் பேசத்தான்.

     “அவர்கள் பையனை இங்கே வைத்துக் கொள்வது சரி; நஞ்சக்கா பேசுவது நன்றாக இல்லை. அவர்கள் பையனை நாம் அபகரித்துக் கொள்கிறோமாம். தண்ணீருக்குப் போன இடத்தில் சத்தம் போடுகிறாள். ஒரு குளம் வறட்சி என்றால் இன்னொரு குளத்துத் தண்ணீரை ஊற்ற முடியுமா? நமக்கு என்ன?”

     ஜோகியின் தந்தை, மனைவியை நிமிர்ந்து விழித்துப் பார்த்தான். அவள் அந்தப் பார்வைக்கு அடங்குபவளாக இல்லை.

     “பெரியவரே பார்த்து முன்பே அவர்களை வேறாகப் பிரித்திருக்கிறார். இப்போது நீங்கள் ஏன் மாற்ற வேண்டும்; அவர்கள் பூமியில் நீங்கள் பாடுபடவும் வேண்டாம்; அவர்கள் பிள்ளையைச் சொந்தமாக நம் வீட்டில் வைத்துக் கொள்ளவும் வேண்டாம்.”

     “மாதி!” என்றான் லிங்கையா; “நீ என்ன என்றுமில்லாமல் பேசிக் கொண்டு போகிறாய்? அண்ணியின் பேச்சுக்கு நீ ஏன் வகை வைக்கிறாய்? அண்ணி அந்த வீட்டில் நெடுநாள் இருப்பாள் என்று எண்ணுகிறாயா நீ?”

     லிங்கையாவுக்கு வேதனை மண்டிக் குரலில் படிந்தது.

     “ஒருநாள் அண்ணி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி விடுதலை வாங்கிப் போய் விடுவாள் என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது மாதி!”

     “நாமே பாடுபட்டு எத்தனை நாள் அந்தக் குடும்பத்துக்கு உழைக்க?”

     “என்ன செய்வது? காக்கைதான் கூடு கட்டும். குயில் கூட்டு கட்டுவதில்லை. குயில் கூடு கட்டுவதில்லை என்று காக்கை ஒரு குயில் குஞ்சைக் கூட வளர்க்காமல் விடுவதில்லை. மாதி, தொதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மண்ணில் பாடுபடாதவர்கள். அவர்கள் மலையில் நாம் வந்து குடியிருக்கிறோமே என்ற காரணத்துக்காக, நாம் இன்னும் அறுவடைக்கு அறுவடை அவர்களுக்குத் தானியம் கொடுக்கிறோம். சட்டியும் பானையும் அரிவாளும் கொட்டும் ஈட்டியும் செய்து நமக்குத் தந்து, நம் வாழ்வுக்கும் சாவுக்கும் வந்து மேளமும் தாளமும் பாட்டும் அளிக்கும் கோத்தருக்கு நாம் தானியம் கொடுக்கிறோம். காட்டுக் குறும்பரிடம், மந்திரம் மாயம் என்று பயந்து கொண்டு அவர்கள் கேட்பதெல்லாம் கொடுக்கிறோம். மனையில் வாழும் மற்றவரிடமெல்லாம் சகோதர முறை கொண்டு வாழ்கையில், அண்ணன் என்ன தீங்கு செய்தான். அவன் குடும்பத்தைப் பட்டினிப் போட? இந்த வீட்டில் முதலில் பிறந்த அண்ணன் ஐயனுக்குச் சமானம். அவனை நான் பட்டினி போடுவதா? சொல்லு மாதி?”

     மாதி வாயடைத்து நின்றாள்.

     “சரி, சுடு தண்ணீர் போட்டு வை, நான் மணியக்காரர் வீடு வரையில் போய் வருகிறேன்”என்று லிங்கையா பணித்து விட்டு வெளியேறினான்.

     அந்தச் சாரியில் மறு கோடி வீடுதான் கிருஷ்ணனின் தாத்தா கரிய மல்லரின் வீடு. ஊருக்குப் பெரியவர். அவருக்கு வாரிசாக மகன் இல்லை. இரு மனைவிகள் கட்டியும் மூவரும் பெண்மக்களே; மூவரும் மணமாகி கணவர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். இளையவளை, அடுத்த மணிக்கல் ஹட்டியில் தான் மணம் செய்து கொடுத்தார். அவளுடைய மகனான கிருஷ்ணன் தான் தாத்தாவின் அருமைப் பேரனாக, சர்ஜ் கோட்டும் தொப்பியும் அணிந்து, கீழ்மலை மிஷன் பள்ளிக் கூடத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தான். ஊரில் ஒரு தவறும் முற்றிச் சச்சரவு உண்டாகாதபடி, ஓர் அணைப் போல் இருந்து வந்த அதிகாரி அவர். அவருடைய அணையில், அந்த மரகத மலையும், மணிக்கல் ஹட்டியும், அடுத்துச் சுற்றியுள்ள சின்னக் கொம்பை, கீழ்மலை முதலான குடியிருப்புகளும் அடங்கி, அவர் வாக்குக்கு மதிப்பும் செல்வாக்கும் வைத்திருந்தன. சுற்றியுள்ள அந்த ஐந்தாறு குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும் பொதுவான கோயில்கள், பொதுவான விழாக்கள் உண்டு. விதைக்கவும், விதைத்த பலனை அநுபவிக்கவும், விழாக்களுக்கு நாள் நிச்சயிக்கவும் கூட்டம் போட்டுத் தீர்மானங்கள் செய்து கொள்வார்கள்.

     கரியமல்லரை ஜோகியின் தந்தை காணவந்த போது, அவர் வாசல் வராந்தாவில், தொரியன் கயிற்றுக் கட்டிலுக்குக் கயிறு போடப் பார்த்துக் கொண்டிருந்தார்.

     லிங்கையாவைக் கண்டதுமே அவர், “நல்லாயிருக்கிறாயா? வா! எருமை விழுந்து காலொடிந்தது எப்படி இருக்கிறது?” என்று விசாரித்த வண்ணம் புறமனைக்குள் வரவேற்றார்.

     “அப்படியேதான் இருக்கிறது. நான் உங்களிடம் ஒரு முக்கியமான சேதி சொல்ல ஆலோசிக்க வந்தேன்” என்றான் லிங்கையா.

     “அப்படியா? நானுங்கூட ஒரு முக்கிய காரியமாக உனக்குச் சொல்லியனுப்ப நினைத்திருந்தேன். உட்கார்.”

     பொதுவாக, பயிரைக் குறித்து விளைவைக் குறித்து, அறுவடையைக் குறித்து அவர்கள் மேலெழுந்தவாரியாகப் பேசிக் கொண்டிருக்கையில், கிருஷ்ணனின் தாய் வந்து லிங்கையாவைக் குசலம் விசாரித்தாள். பருக மோர் கொண்டு வந்து வைத்து உபசரித்தாள்.

     “அண்ணன் மணிக்கல் ஹட்டிப் பக்கம் வருவதே இல்லை!” என்று குற்றம் சாட்டினாள்.

     “வந்து மாசக் கணக்கில் உட்காருவேன். விருந்தாக்கிப் போடவேண்டும்” என்றான் ஜோகியின் தந்தை நகைத்த வண்ணம்.

     “வருஷக் கணக்கில் வந்து உட்கார்ந்தாலும் தங்கை சளைக்க மாட்டாள்” என்று பதிலுக்கு அவள் நகைத்தாள்.

     லிங்கையா, பெரியவரைப் பார்த்தவண்ணம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தொடங்கினான்.

     ஏறக்குறைய அவன் வாயெடுக்கும் முன், கரியமல்லரே! “நானே முக்கியமாகௌன்னைப் பார்க்க இருந்தேன், தம்பி. நம்மையன் கோயில் நெருப்பைக் காக்க, அந்தக் கீழ்மலைப் பையன் வந்து ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன. அவன் இனிக் கல்யாணம் கட்டிக் கொண்டு வீட்டுக் கொடியைக் காக்க வேண்டும் என்று அவன் மாமன் நேற்று என்னிடம் வந்து அபிப்பிராயப்பட்டான். அடுத்தபடியாக ஐயன் நெருப்பைக் காக்க ஒரு பையன் வரவேண்டுமே! சீலமுள்ளவனாய், பொய் சூது அறியாதவனாய், இறைவர்க்குரிய காணிக்கைகளைத் தனக்கே சொந்தமென்று எண்ணும் பேராசை இல்லாதவனாக, நினைத்த போது உண்ணும் பெருந்தீனிக்காரனாக இல்லாதவனாக நல்ல பையனைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! உன் பையன் ஒரு குறிஞ்சி ஆகவில்லை?” என்று கூறி நிறுத்தினார்.

     ஜோகியின் தந்தை, கண்ட கனவையும், தன் யோசனையையும் அவற்றை வெளியிடுமுன், பெரியவர் வாயிலே வந்த செய்தியையும் எண்ணி எண்ணி உள மகிழ்ந்தான். எத்தகைய சுப சூசகங்கள்!

     ஆனால் ரங்கனுக்குப் பதிலாக பெரியவரும் ஜோகியையே குறிப்பிட்டுக் கேட்டதுதான் மலரிடையே ஒரு சிறு முள்ளென உறுத்தியது அவனுக்கு. “இல்லையே! ரங்கனுக்குத்தான் சரியான பிராயம். நானும் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்” என்று லிங்கையா கனவை விவரிக்கையில், இடையிடையே கரியமல்லர் தம்மை மறந்து தலையை ஆட்டினார். கண்கள் கசிய, கீழ்த்திசை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார்.

     லிங்கையா, கனவில் கண்ட ஐயனையும் ஜோதியையும் விவரித்ததுடன், கையில் பிடித்துச் சென்ற பாலகன் ஜோகி என்பதை மாற்றி, ரங்கன் என்று கூறினான்.

     கரியமல்லர் கண்களை மூடியவராய் அமர்ந்திருந்தார்.

     அந்த மலைப் பிராந்தியத்தில் முதல் முதலாக வந்து ஊன்றிய முன்னோரான ஹெத்தப்பரின் நினைவுக் கோயில் அது. அந்தப் பக்கத்து மலைக்காரர் அனைவரும் அவருடைய வழி வந்தவர்கள் என்பது நம்பிக்கை. இளமையின் விகாரம் தோய்ந்த எண்ணம் முளைக்காத பாலப் பருவத்துப் பையனே, அந்தக் கோயிலின் நெருப்பைக் காக்கும் புனிதமான பணிக்கு உகந்தவனாவான். அந்த நெருப்பே, அந்தக் கோயிலுக்குடைய தெய்வம். ஊரார் காணிக்கையாக அளிக்கும் எருமைகளும், தானியங்களும் தீயைக் காக்கும் பையனுக்கு உரியவைதாம் என்றாலும், அவன் எந்தவிதமான ஆடம்பர சுகபோகங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. வீடு சுற்றம் யாவும் மறந்து, அந்தப் புனித நெருப்பைப் போற்றும் பணி ஒன்றே அவனுடையது. ஒரு நாளைக்கு ஒரு முறையே அவன் உண்ணலாம். கட்டில் மெத்தை முதலிய சுகங்களை அவன் மேனி நுகரக் கூடாது. தன் ஒரு வேளை உணவையும் அவன் தானே பொங்கிக் கொள்ள வேண்டும். அந்தக் கோயிலையும், தெய்வ மைதானத்தையும் தவிர, அவன் வேறு எந்த இடத்துக்கும் முன் அறிவிப்பின்றிச் செல்லலாகாது. பருவ மங்கையர், அந்தக் கோயிலின் எல்லைக்குள் எக்காரணத்தை முன்னிட்டும் வரமாட்டார்கள். அப்படி வந்து விட்டாலும், ஐயனின் நெருப்பைக் காப்பவன், அவர்களிடம் உரையாடக் கூடாது. இத்தகைய ஒழுக்கங்களுடன் ஒரு சிறுவனைத் தேர்வது எளிதாமோ?

     மௌனத்தைக் கலைத்தவராய் கரியமல்லர், “கோயிலுக்கு முன் இன்று மாலை பஞ்சாயத்துக் கூடுவோம். எல்லோருக்கும் செய்தி அனுப்புகிறேன்” என்றார்.

     “ஐயனே மொழிந்த அருள் வாக்காக எனக்குத் தோன்றுகிறது” என்றான் லிங்கையா.

     “கலந்து ஆலோசிப்போம், கனவென்று சொல்லும் போது எவரும் அதை மறுக்க மாட்டார்கள்.”

     “பையன் இன்னும் பால் கறக்கும் உரிமை பெறவில்லை. அடுத்த சோமவாரம் அதையும் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறோம். பெரியவர்களாய் நீங்கள் ஆசி கூறி நடத்தி வைக்க வேண்டும்.”

     “செய்யலாம். எல்லாம் இரிய உடைய ஈசுவரனின் செயல். அண்ணன் வீடில் இருக்கிறானா லிங்கா?”

     “நான் அவரிடங்கூடக் கனவைச் சொல்லவில்லை. ஐயனின் பணி பையனுக்குக் கிடைக்கும் பாக்கியம் அல்லவா? அண்ணன் என்ன மறுக்கப் போகிறாரா? வீடு இரண்டாக இருந்தாலும் வெவ்வேறாகத் தோன்றினாலும் அண்ணனும் நானும் ஒன்றுதான்.”

     “அது எனக்குத் தெரியாதா? நீ கிடைக்காத தம்பி.”

     “நான் வரட்டுமா? மாலையில் பார்க்கலாமா?”

     “ஆகட்டும். நீயும் பையனைக் கேட்டு, அண்ணனையும் வீட்டில் கேட்டுச் சொல். பிறகு எல்லாம் ஏற்பாடு செய்து விடலாம்” எற்னு கூறி, கரியமல்லர் அவனை உடன் வந்து வாசலில் வழியனுப்பினார்.

     லிங்கையா அப்படியே வீடு திரும்பவில்லை. எருமையைப் பார்த்து வரச் சரிவின் பக்கம் நடந்தான்.

     அவன் பகலில் வீடு திரும்புவதற்குள், பெண்டிர் வாயிலாக, செய்தி காட்டுத் தீ எனப் பரவி விட்டது. மாதிக்கு இது எதிர்பாராத செய்தியாக இருந்தது. ஒருவிதத்தில் அவளுக்குத் திருப்தியே. ஐந்தாறு ஆண்டுகள் அப்படி ஒரு ஒழுங்கில் இருந்தால், பையன் நல்லவனாகத் தலையெடுப்பான். காணிக்கைகளிலிருந்து, ஏதோ ஒரு பகுதியேனும் அவனுக்கென்று கிடைக்கும். வேலை வெட்டி செய்யாமல் சாப்பிட விரும்பும் குடும்பத்தினருக்கு இது ஒரு நல்ல வாய்ப்புத்தானே?

     ரங்கன் உண்டைவில்லும் கையுமாக, அருவிக்கரைப் புதர்களில் நின்று விளையாடிக் கொண்டிருக்கையில், ஜோகியும் பெள்ளியும் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டவராகப் பரபரத்து ஓடி வந்தார்கள்; உரைத்தார்கள். கை அப்படியே நிலைத்தது. கண்களையே அவன் கொட்டவில்லை.

     “என்னையா? ஹெத்தப்பா கோயிலுக்கா?”

     “ஆமாம்; அப்பனுக்கு நேற்று இரவு இரியர் கனவில் வந்து சொன்னாராம். திங்கட்கிழமை, எருமை கறக்க ‘ஹொணே’ எடுத்து உன்னிடம் கொடுக்கப் போகிறார்கள்” என்றான் ஜோகி.

     அதிர்ந்தவனாக நின்ற ரங்கன், “நான் மாட்டேன்” என்றான் சட்டென்று.

     “அதெப்படி? ஐயன் கனவில் நீதானே வேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம்?” என்றான் ஜோகி.

     “ஹம், பொய்; நான் மாட்டேன்” என்றான் ரங்கன்.

     “நேற்று நீ கோயிலில் இரியர் இல்லை என்று சொன்னாய். எருமை விழுந்து காலை உடைத்துக் கொண்டது. இப்போது கனவில் ஐயனே வந்து சொல்லி இருக்கையில் நீ மாட்டேனென்று எப்படிச் சொல்வாய்?” என்றான் பெள்ளி.

     “நான் மாட்டேனென்றால் என்ன செய்வாராம்?” என்றான் ரங்கன்.

     “அபசாரம் கேடு விளையும்” என்று பெள்ளி பயமுறுத்தினான்.

     ரங்கன் செய்வதறியாமல் நின்றான்.

     அவனுக்கு யார் மீதென்று சொல்ல முடியாமல் கோபம் பொங்கி எழுந்தது; கோயிற்பணியின் கட்டுப்பாடுகளை அவன் ஓரளவு அறிவான். ஒரே முறை அவன் சமைத்து உண்ண வேண்டும். அதுவுங் கூடச் சட்டியை ஒரே ஒரு தரந்தான் கவிழ்க்க வேண்டும். எவ்வளவு விழுகிறதோ இலையில் அதையே உண்ண வேண்டும். கோயிலின் எல்லையைத் தாண்டி செல்லும் சுதந்தரம் கிடையாது.

     அவனுள் இந்த நினைவுகள் எழும்பியதும் கிலி படர்ந்து விட்டது. சிற்றப்பா சூழ்ச்சியா செய்துவிட்டார்? அன்பாக உள்ளவர் போல் பேசியதெல்லாம் நடிப்பா? சுற்றியுள்ள கிராமங்களை எல்லாம் விட்டு, எத்தனையோ பையன்களை விட்டு, அவனைத் தேர்ந்தெடுத்தது அநியாயம்.

     எத்தனை ஆண்டுகளோ! சிறை, சிறை வாழ்வு, மாட்டேனென்று சொல்லக் கூடாதா?

     வெளிக்கு அவன், ‘இரியரும் இல்லை, ஒன்றும் இல்லை’ என்று வீம்புக்குச் சொன்னாலும், அடி மனசில் அச்சப் படபடப்புத் துடித்தது. எருமைக்குக் கேடு வந்தது கிடக்கட்டும்; முதல் நாள் அவன் அப்படிச் சொன்னதால் தான் இரிய உடையார் சிற்றப்பனின் கனவில் வந்து அவனையே கேட்டு, அவனுக்குத் தண்டனை கொடுக்கிறாரோ!

     துயரமும் ஏமாற்றமும் கோபமும் அவன் கண்களில் நீரை வருவித்தன. ஆத்திரத்துடன் குத்துச் செடிகளை ஒடித்தெறிந்தான். அழகாகப் பூத்திருந்த மஞ்சள் வாடாமல்லிகை மலர்களைக் கிள்ளி அருவியில் போட்டான். இருளானாலும் பரவாயில்லை என்று முதல் நாள் தப்பி ஓட முயன்றவன் போயிருக்கலாகாதா? காப்பு வேறு கையில் இருந்தது. பொல்லாத வேளை, பரணில் வந்து தான் படுத்தானே! வேறு எவரேனும் காவல் இருந்திருக்கக் கூடாதா? காப்பு, சிற்றப்பன் கையில் சிக்கிவிட்டது. இனி அதுபோல் தப்பிச் செல்லும் சந்தர்ப்பம் வருமா? கையில் ஒரு வெள்ளிப் பணங்கூட இல்லாமல் ஒத்தைக்கு ஓடி விடலாமா? எப்படிச் செல்வது?

     ஜோகி அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். யோசனை செய்தவன் போல், “உன்னையே பிடித்ததானால் தான் இரிய உடையார் உன்னைத் தேர்ந்திருக்கிறார். ஐயன் நெருப்பைக் காத்தால் தானியமெல்லாம் வரும், பூமி கொத்தாமலே விளையும். உன்னிடமே ஈசுவரனார் கனவில் வந்து பேசுவார்” என்றான்.

     ரங்கன் அன்று முழுவதும் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தான். அப்போது மாட்டேன் என்று அவன் மறுத்தால் அத்தனை பேரும் ஒரு முகமாக அவனிடம் எதிர்ப்புக் காட்டுவார்கள். அவன் தப்பி ஓடுவதே அசாத்தியமாக ஆனாலும் ஆகிவிடும். பால் கறக்கும் சடங்குக்குக் கூட்டமாக எல்லாரும் வருவார்கள். பால்மனையில் தான் சிற்றப்பா வெள்ளிப் பணங்களை மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அவன் அறிவான். அன்று எப்படியேனும் சில வெள்ளிப் பணங்களை எடுத்துக் கொண்டு ஓடி விடலாம்.

     மறுநாள் மாலையில், சுற்றுப்புறக் குடியிருப்பின் பிரதிநிதிகளான தலைவர்களும் பெரியவர்களும் கோயில் மைதானத்தில் கூடினார்கள். கோயிலின் முன்னுள்ள மரத்தடியில் மேடையில் தலைவராகக் கரியமல்லர் வீற்றிருந்தார். அப்போது ரங்கன் நீராடி, சுத்தமான உள்ளாடையும் மேலாடையும் தரித்து, தந்தை ஒரு புறமும், சிறிய தந்தை ஒரு புறமுமாக அமர்ந்திருக்க, நடுவில் இருந்தான்.

     கரியமல்லர் எழுந்து விஷயத்தை உரைத்தார்; “ஐந்து ஊர்களின் பிரதிநிதிகளாய் வந்திருக்கும் பெரியவர்களே, இரிய உடையார் முன் வணங்கி, இன்று கூட்டத்தைக் கூட்டியிருப்பதற்குக் காரணத்தை விளக்குகிறேன். ஐயன் கோயிலில் புனித நெருப்பைக் காக்க அமர்ந்த பையன் தேவனுக்கு, வரும் மாசம் இருபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அவன் குலமும் குடும்பமும் வளர, அவன் இதுவரை காத்து வந்த இறைபணியை விட்டு, அவனுக்கென்று உள்ள கடமையை மேற்கொள்ள வேண்டும்; இல்லையா?”

     “ஆமாம், ஆமாம்” என்று நாற்புறங்களிலிருந்து ஒலிகள் இணைந்தன.

     “இறைவரின் நெருப்பைக் காக்கும் பணி சாமானியமானது அல்ல. வாக்கும் மனமும் தூயவையாய், கோயில் எல்லையைப் புனிதமாக்கிக் கொண்டிருக்கும் இப்பணிக்கு, இதுவரையில் இருந்த தேவன், ஒருவிதமான அப்பழுக்குக்கும் இடமில்லாமல் பணி செய்து, நம் கிராமங்களும் பெற்றோரும் பெருமைப்படும்படி நிறைவேற்றி விட்டான். இது போல் அடுத்த பையனை எப்படித் தேர்ந்தெடுப்போம் என்று நமக்கெல்லாம் கவலையாக இருந்து வந்தது. ஆனால், குழந்தைகளாகிய நம்மை, நம்முடைய ஐயன் சோதனை செய்யவில்லை. நேற்றிரவு வழியைக் காட்டிவிட்டார். அவரே பையனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். மரகத மலையில், சிவச் செல்வரான தருமலிங்கரை அறியாதவர் உண்டோ?”

     “இல்லை” என்ற ஒலி எழுந்தது.

     “உண்மையான சிவ பக்தர் அவர். நம்முடைய முந்நூறு பாவங்களில் ஒன்றையும் மனசால் நினையாமல் அரன் திருவடி அடைந்தவர். அவருடைய வழியில் வந்த பையனை, மூத்த குடியின் மூத்த புதல்வனை, ஐயன் தமக்குத் தேர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆணைக்கு மறுப்புக் கூற நாம் யார்?”

     “பையன் புனிதப் பணிக்கு வேண்டிய எல்லாவித அம்சங்களையும் கொண்டவனாக இருக்கிறான். ஒரு குறிஞ்சியும் ஓராண்டும் கடந்தவன். நம் மாதண்ணனின் இனிய இசை கேட்டுப் பரவசமடையாதவர் உண்டோ இம்மலையில்? சிற்றப்பன் லிங்கையா தொட்டது பொன்னாகும் கையை உடையவன். நல்ல நிலத்தில் விளைந்த இந்த மணியைப் பற்றி இனி நான் சொல்லவும் வேண்டுமா? இறையவரே தேர்ந்தது, அந்தக் குடும்பத்தின் சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டு அல்லவா?”

     “சந்தேகமில்லாமல், சந்தேகமில்லாமல்!”

     “ரங்கா இப்படி வந்து பெரியவர்களை வணங்கு.”

     ரங்கன் வணங்கிய போது, “புனித நெருப்பு என்றும் ஒளிரட்டும், சிறுவன் சீலம் விளங்கப் பணிபுரிந்து ஊர்களுக்கெல்லாம் சுபிட்சத்தை அளிக்கட்டும்” என்று பெரியவர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.

     “வழக்கம் போல், தினத்துக்கு வீட்டுக்கொரு பிடியாக வரும் தானியமும், கோயிலுக்கென்று விடப்பட்ட எருமைகளின் பாலும், இவன் பணிக்கு ஒரு காணிக்கையாக இருக்கட்டும். இதை ஒப்புக் கொண்டு, பையனின் தந்தை முன் வந்து, இந்தச் செய்தியை உறுதிப்படுத்தட்டும்!” கம்பீரமான குரலில் கரியமல்லர் இப்படிக் கூறி முடித்த போது ரங்கனின் தந்தை எழுந்து வந்தான்.

     சிறிது நேரம் பிரமை பிடித்தவன் போல் கண்கல் பளபளக்க நின்றான்.

     ஹர ஹர சிவ சிவ பஸவேசா
     ஹர ஹர சிவ சிவ பரமேசா

     என்று அவன் கண்டத்திலிருந்து எழும்பிய இன்னொலி, அந்த மலைக்காற்றின் அலைகளூடே பரவி, அந்தச் சூழ்நிலையையே புனிதத்தில் முழுக்கியது. கூடியிருந்தவரை, திங்களும் கங்கையும் தரித்த எம்பிரானின் நினைவில் ஒன்றச் செய்தது.

     அண்ணனுக்கு வாழ்வே இசையாக விளங்கும் மேன்மையை உன்னி உன்னித் தம்பி கண்ணீர் சொரிந்தான்.