உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் 8. குறும்பன் தந்த வேர் குறும்பப் பூசாரியை, அவன் குடியிருப்புக்குச் செல்லும் முன்னரே வழியில் சந்தித்து விட்டான் ஜோகி. “அப்பாடா! ஐயன் கோயிலை விட்டு இன்றைக்குத் தானே வந்தீர்கள்? வாருங்கள் வாருங்கள்” என்று அவன் ஜோகியை வரவேற்றான். “உங்களைப் பார்க்கலாமென்று தான் வருகிறேன்” என்று ஜோகி, அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்தான். “சொல்லியனுப்பினால் நான் வரமாட்டேனா? என்ன விசேஷம்?” “பரவாயில்லை; நீங்களும் உட்காருங்கள். ஐயனின் காய்ச்சலுக்குப் பரிகாரம் நாடியே வந்தேன். கிட்டத்தட்ட ஒரு குறிஞ்சியாகிறதே!” என்றான் ஜோகி. “அது முறைக் காய்ச்சல்.” “ஆமாம், உடம்பெல்லாம் மஞ்சளாகிப் போச்சு. ஒரு கவளம் சோறு சாப்பிடுவதில்லை. ஏதேதோ மருந்துகள் அம்மையும் வைத்துக் கொடுக்கிறாள். ஐயன் யாருக்குக் கெடுதல் செய்தார்? தமக்குத் தீங்கு செய்பவர்களுக்கு கூட அவர் தீங்கு நினைக்காதவராயிற்றே! அவர் ருசித்து உண்ணாமலிருக்க உடல் எப்படித் தாங்கும்? இதோ பாருங்கள் நான் வேண்டிக் கொள்கிறேன். ஏவலோ, வினையோ, உங்களுக்கு ஐந்து ‘கூடு’ தினையும் சாமையும் தருகிறேன். அவர் நோயைப் போக்கி விடுங்கள். அவர் இனியும் வலுவிழந்து எத்தனை நாட்கள் இருப்பார்?” என்றான் ஜோகி. “ஐயோ! நீங்கள் என்ன, இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? ஜடசாமிக் கொப்ப நான் சொல்கிறேன். எங்களில் யாரும் அதெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. அவர் மேல் வினை செய்ய எங்களுக்குப் பைத்தியமா? அப்படியெல்லாம் நினைக்காதீர்கள்.” “அப்படியானால் இந்த உருக்கும் காய்ச்சல் போவதெப்படி?” “அம்மை சொன்னார்களென்று அப்போதே உங்கள் சுகத்துக்குத் தனியாகப் பூசைகள் போட்டோம். முறைக் காய்ச்சல்; அப்படித்தான் இருக்கும்.” “அதென்னவோ, அந்த முறைக்காய்ச்சலுக்கு உங்களிடம் வழி இருக்கிறது. உங்களுக்கு இந்தக் காய்ச்சல் வந்தால் ஏதோ மருந்து செய்யும் முறை தெரியுமாமே; அதையாவது சொல்லுங்கள்.” பூசாரி குழைந்தான். ஜோகி ஊகமறிந்து வெள்ளிப் பணம் கொடுத்தான். “இருங்கள்; வருகிறேன்” என்று கூறி அவன் கானகத்தில் புகுந்து சென்றான். மந்திரத்திலும் தந்திரத்திலும் நம்பிக்கை வைக்காத இளைஞர் சகாப்தம் அப்போது தோன்றியிருக்கவில்லையே! ஜோகியின் உள்ளத்தில் பல எண்ணங்கள் அலையோடின. நினைத்ததை நிறைவேற்றும் மந்திரமும் தந்திரமும் உடையவர்கள் காட்டுக் குறும்பர்கள் என்பது எத்தனை காலமாக நம்பப்பட்டு வருகிறது? விதைப்பிலும், விளைவின் பலனை எடுப்பதிலும் அவர்களுக்கு முதல் மரியாதையை, அவனுடைய முன்னோர் தெரியாமலா வழங்கியிருப்பர்? அவர்கள் முட்டாள்களா? எனவே, குறும்பரிடம் ஓரளவு சக்தி இருப்பது உண்மையாகவே இருக்க வேண்டும். இதைப் பரீட்சித்தால் என்ன? பளிச்சென்று அவன் தீர்மானம் உருவாகத் தொடங்கியது. பூசாரி சற்றைக்கெல்லாம் துணியில் எதையோ மறைத்துக் கொண்டு வந்தான். ஏதோ வேர்கள் அவை. சிறு கட்டாகக் கட்டிக் கொண்டு வந்தான். பச்சையாகத் தான் பிடுங்கியிருந்தான். ஆனால் அதை இனம் சொல்லுவானா? “என்ன வேர் இது?” “அதெல்லாம் கேட்காதீர்கள். மந்திரித்துக் கொண்டு வந்தேன். இதைத் தினம் தினம் கஷாயம் வைத்துக் கொடுங்கள். நாளடைவில் காய்ச்சல் நின்றுவிடும்.” ஜோகி வேரைப் பத்திரமாக ஆடைக்குள் மறைத்துக் கொண்டான். பிறகு யோசனையுடன் ஆரம்பித்தான். “உங்கள் காதில் பட்டிருக்குமோ என்னவோ? அடுத்த பத்து நாளில் இங்கு ஒரு பலப்போட்டி நடக்கப் போகிறது, தெரியுமா? மரகதமலை ஹெத்தப்பா கோயில் முன் உள்ள உருண்டைக் கல்லை எடுப்பதிலே பந்தயம்” என்று நிறுத்தினான். ஜோகி விஷயத்தை விவரிக்கு முன் பூசாரி ஊகித்து விட்டான். “ஆமாம், இப்போதுதான் காலையிலே கேள்விப்பட்டேன். நம் மணிக்கல்லட்டிப் பெண்ணைக் கட்டப் போட்டி என்று சொன்னார்கள். நீங்கள் கூட... சொல்லுங்கள்.” “உங்களிடம் இன்னும் ஒரு கோரிக்கை வேண்டி நான் நிற்கிறேன்” என்கிறான் ஜோகி. போட்டியில் நிற்பவன் எதை வேண்டுவான்? போட்டியில் வென்று காத்திருக்கும் கன்னியை அடைய வேண்டும் என்று தானே வேண்டுவான்? “அதற்கென்ன, நான் உங்களுக்கென்று மந்திரித்த வேரொன்று தருகிறேன். அதைக் கட்டிக் கொள்ளுங்கள் கல் உருண்டை காற்றுக்குடம் போல் கையில் வரும். ஜடசாமி துணையுண்டு” என்றான் குறும்பன். ஜோகியின் சங்கடம் அதிகமாயிற்று. தனக்கு இல்லை என்று கூறினால் அவன் என்ன நினைப்பானோ? கிருஷ்ணனே வெல்லும்படி பிரார்த்தனை செய்யச் சொல்லலாமா? “நீங்கள்... நான் என்ன சொல்கிறேனென்றால், பெண் யாரை விரும்புகிறாளோ...” அவன் முடிக்கு முன் குறும்பன் குறுக்கிட்டு, “அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். பெண் தானாக உங்களை நாடி வருவாள். பூவிருக்கும் இடம் தேடி வரும் தேனீப்போல் உங்கள் பக்கம் மனசு திரும்பும்” என்றான். “நான் அப்படி ஆசைப்படவில்லை. உங்களிடம் இதுதான் வேண்டுகிறேன். பாரு யாரை இஷ்டப் படுகிறதோ மனப்பூர்வமாக, அந்த ஆண்மகனுக்கே அந்தக் கல் எடுக்க வரும்படி நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும். ஒருவனை விரும்பி, ஒருவன் வலிமை வென்றால் கஷ்டம் அல்லவா?” என்றான் ஜோகி. குறும்பப் பூசாரி ஒரு கணம் அதிசயித்தான். இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா? “ஏன் பேசாமல் நிற்கிறீர்கள்?” “இல்லை; நீங்கள் இஷ்டப்பட்டால், நான் ஒரு வேர் மந்திரித்துத் தருகிறேன். அதைப் பெண் கையில் வைத்திருந்தால், மனசுக்கேற்ற மாப்பிள்ளை வருவான்.” “இப்போது தருகிறீர்களா? நீங்கள் நாளை ஹட்டிப் பக்கம் வந்தால் அதற்கும் ஒரு வெள்ளி தருகிறேன்.” “இப்போதா? அதெப்படி முடியும்?” “பின் நாளை வருகிறேன். விஷயம் ஒருவருக்கும் தெரிய வேண்டாம்” என்று ஜோகி விடை பெற்றுக் கொண்டான். அவன் வீட்டுக்குத் திரும்புகையிலே பிறை நிலவு வானில் பவனி வந்து கொண்டிருந்தது. மடியுடுத்து, மாடுகள் கறந்து பிரார்த்தனை முடித்துவிட்டு, அவனாகவே அடுப்படியில் அமர்ந்து கஷாயம் தயாரித்துத் தந்தைக்குக் கொண்டு வந்தான். “நம் பூமியைப் பார்த்தாயா ஜோகி? வலப்பக்கம் செம்மண்ணடித்துச் சீரழிந்து போய்விட்டதல்லவா?” என்றார் தந்தை. “கறுப்ப் மண்ணாக மாற்றி விடலாம், அப்பா. நீங்கள் நோயிலிருந்து மீள்வது ஒன்றே இப்போது என் குறி” என்றான் மகன். மறுநாள் சற்று முன்னதாகவே மகன் கோயிலிருந்து கொண்டு வந்த தானியத்தை அளந்து ஒரு சிறிய சுமை கட்டிக் கொண்டு வெளியே கிளம்பியதைக் கண்ட மாதி, “மணிக்கல்லட்டி போகிறாயா மகனே?” என்று கேட்டாள். “இல்லையம்மா, குறும்பர் குடியிருப்புக்குப் போகிறேன். இன்னொரு கால் ரூபாய் இருந்தாலும் தாருங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொண்டான். தானியங்களையும் பணத்தையும் முதல் நாள் சந்தித்த இடத்திலேயே குறும்பப் பூசாரியைச் சந்தித்துக் கொடுத்ததும் அவன் இரண்டங்குல நீளமுள்ள ஒரு வேலைத் தந்தான். ஜோகி அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, அதை பத்திரமாக வைத்துக் கொண்டு மணிக்கல்லட்டிப் பாதையில் நடக்கலானான். நீர் வீழ்ச்சியின் அருகில், முதல் நாள் அவன் கண்ட இடத்திலேயே, ஜோகியின் நெஞ்சம் குலுங்கினாற் போல் இருந்தது. முதல் நாள் அவன் அவள் முகத்தைக் காணவில்லை! தனியே பாரு... கிருஷ்ணன் மரகதமலைக்கு வந்துவிட, இவள் ஏன் நிற்கிறாள்? யாருக்குக் காத்து நிற்கிறாள்? அவன் வாழ்வைப் பற்றிய கனவுகள் நனவாகும் சந்திப்பாக இருக்க வேண்டிய சந்திப்பு. எத்தனையோ நாட்களுக்குப் பின், மூடிய திரைக்கப்பால் துடிதுடித்து நிற்கும் நெஞ்சங்களின் மலர்ச்சிக்கு வாய்ப்பான சந்திப்பு அது. கிளர்ந்து பொங்கும் உள்ளத்தைக் கல்லாக்கிக் கொள்ள வேண்டிய தனிமைச் சந்திப்பு. விறகு சேகரிக்கும் சாக்கில் வீட்டை விட்டுக் கிளம்பி அங்கே அவனுக்காகக் காத்திருக்கிறாளோ? தோழிகளை விட்டுப் பிரிந்து அந்நேரத்தில் தனியே அவள் அங்கு நிற்கக் காரணமென்ன? ஒருவேளை எட்டியிருந்தே கண்டுவிட்டாளோ அவனை அவள்? அவன் வருகிறான் என்று அறிந்த பின், அவள் விறகு சேர்த்துக் கட்டுவது போல் வெகு நேரம் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். ஜோகி அங்கேயே நின்றான். எத்தனையோ ஆண்டுகளாகக் காணாதிருந்த முறைக்காரன்; காதலனின் எதிரி. அவள் அவனிடம் என்ன சொல்ல விரும்புகிறாள்? வியந்து நோக்கிவிட்டுக் கனிவுடன் எதற்கு நோக்குகிறாள்? ஒரு விநாடிதான். பிறகு அந்தக் கருவண்டு விழிகளுக்கு அவனை நிமிர்ந்து நோக்கவும் துணிவில்லை. பாரு! ஜோகி குரல் கரகரக்க, ‘மினிகே’ இலையில் சுற்றி வைத்திருந்த அந்தப் பொக்கிஷத்தை எடுத்தான். “நீ இதை வாங்கிக் கழுத்திலோ, இடுப்பிலோ அணிந்து கொள். உன் மனசுக்கேற்ற மணாளன் வருவான், பாரு.” தொண்டை தழுதழுக்க அவன் மொழிகள் அவள் செவிகளில் விழுந்ததும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். கிருஷ்ணனைப் போல் செல்வச் செழிப்பில் பளபளக்கும் முகமில்லை; பூரித்த கன்னங்களில்லை. ஆனால் இந்த முகத்திலுள்ள ஒளிபோல் அவள் இதுவரையில் எவரிடமும் கண்டதில்லையே? திடுமென்று வந்து அவளைத் திக்குமுக்காடச் செய்யும் இந்த ஒளியுடன் என்ன பேசுகிறான்? அவள் வியந்து நிற்கையிலே, ஜோதி சலனமற்ற குரலில், “இதை குறும்பரிடம் கேட்டுப் பிரத்தியேகமாக வாங்கி வந்தேன். பாரு நீ என் தங்கை. என் அம்மைக்காக நான் போட்டியில் ஈடுபட்டாலும், என் வலுவை நழுவ விடுவேன். உன் மனம் எவரிடம் இருக்கிறதென்பதை அறிவேன். இதை வாங்கிக் கொள். உன் அன்பனே போட்டியில் வெல்லுவான்.” அவள் கயல்விழிகள் கசிய, இரு கைகளையும் நீட்டி அதைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். நெஞ்சுக்கனம் ஆவியாக மாறி அடி வயிற்றுக்குள் இறங்கி விட்டாற் போல் இருந்தது. ஜோகி அதுவரை கண்டறியா வண்ணம் லேசான உள்ளமும் உவகையும் கூடியவனாய், மரகத மலையை நோக்கி நடந்தான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|