10. மனை புகுந்தாள் - இரண்டாம் பாகம் - குறிஞ்சித் தேன் - Kurinji Then - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



இரண்டாம் பாகம்

10. மனை புகுந்தாள்

     குறும்பன் அளித்த வேர், தந்தையின் காய்ச்சலுக்குக் குணமளித்ததே! தந்தையின் முறைக்காய்ச்சல் அந்த வேரில் வீரியம் குன்றி, அவருடைய மெலிந்த உடலைப் பிணைத்த பிடியினின்றும் தளர்ந்து வருவது கண்ட அவன், பாரு, தன் இனியவனுடன் கூடி வாழவே பந்தயம் அநுகூலமாகும் என்றல்லவோ தெம்புடன் இருந்தான்? அது பொய்யாகி விட்டதே!

     ரங்கனாலும் பந்தய விதிப்படி கல்லைத் தூக்கி கொண்டு நடந்து பஞ்சாயத்தார் முன்பு வர முடியவில்லை. கிருஷ்ணன் நிமிர்ந்த போது, கல் நழுவி விழ சாய்ந்து விட்டான். ரங்கன் முக்கி முனகி, கல்லைப் பூமியில் படாமல் தூக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றான். அவ்வளவே. பந்தயத்தில் அவன் கெலித்ததாகத் தீர்ப்பாகி விட்டது.

     பாவிக் குறும்பன் இப்படிப் பழி செய்தானே? அந்த அன்புப் பூங்காவிலே மலையன்றோ விழுந்து விட்டது. கிருஷ்ணனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. பாருவைத்தான் அவன் எப்படிப் பார்ப்பான்? துன்பங்களில் தோய்ந்த சிந்தனையில் சுழன்று சுழன்று வந்த அவனுக்கு, அப்போதுதான் உண்மை தெற்றென விளங்கினாற் போன்று இருந்தது.

     அசட்டுத்தனந்தான். காய்ச்சலுக்குக் குறும்பன் தந்த வேர், கசப்பு மூலிகை. அவர்கள் அன்றுவரை அறிந்திராத அந்த மூலிகை இரத்தத்தில் கலந்து நோவைச் சிக்கென அறுத்தது. மந்திரமும் மாயமும் எண்ணி வாங்கும் வேர் மூலிகையாகுமா? அந்த ஞானம் ஏன் அவனுக்கு அப்போதே வரவில்லை! முன் சென்று தைரியமாக பந்தயம் வேண்டாமென்று, பாருவுக்காக அவன் விலகியிருக்கலாமே!

     சுற்றியுள்ள கோலாகலத்திலும் வேடிக்கையிலும் கலந்து கொள்ள மனமின்றி, ஜோகி தனியே கொட்டிலின் பக்கம் சென்றான். மாதிக்கு, மகன் தோல்வியடைந்தது கண்டதுமே மற்றவர் வெற்றி காணப் பொறுக்கவில்லை. விளைநிலத்தை நோக்கிக் கிளம்பிவிட்டாள்.

     எதிர் வீட்டில் ரங்கம்மை பாருவுடன் வந்தவர்களில் பெரும்பாலோரைச் சேர்த்துக் கொண்டு விருந்துச் சோறு சமைப்பதில் மும்முரமாக முனைந்திருந்தாள்.

     கைத்தடியை ஊன்றிக் கொண்டு ஜோகியைத் தேடும் விழிகளை உடையவராய் லிங்கையா வந்தார். வீட்டின் புறமனையில் பாருவையும் ஒன்றிரண்டு ஊர்ப் பெண்மணிகளையும் தவிர யாரும் இல்லை. கொட்டிலுக்கு நடந்தார்.

     அவர் நினைப்புச் சரியே, சோகம் கப்பிய முகத்தினனாய், ஜோகி அங்கு இருக்கக் கண்டார்.

     மங்கை ஒருத்திக்காக மனசை இடிய விடுவதா? அவர், மெல்ல அவன் முகத்தை நிமிர்த்தினார். “ஜோகி!”

     “என்ன அப்பா?”

     “வருத்தமா ஜோகி?”

     “எதற்கு?” என்றான் மகன்.

     “உன் முகமே சொல்லுகிறதே! ரங்கன் தானே முதல் முறைக்காரன்?” என்று தந்தை சிரித்தார் மெள்ள.

     “ம்... அப்பா முறைக்காரனாக இருந்தாலும், இது பாவம்... நிறுத்தி விட வேண்டும்” என்றான் ஜோகி இதழ்கள் துடிக்க.

     அவர் திடுக்கிட்டார். “தேவர் அருளால் நிகழ்ந்திருப்பது மகனே. ஒரு நல்ல பெண் அந்தக் குடும்பத்துக்கு வரவேண்டும் என்று நினைத்தேன். பையனும் குடும்ப பொறுப்பு இல்லாமல் மண் ஒட்டாமல் போய்விடக் கூடாது என்று வேண்டினேன். அந்தக் குடும்பம் ஒன்றுக்கும் உதவாத செம்மண் பூமி போல் சீரழியக் கூடாதே என்று கவலைப்பட்டேன். இரிய உடையாரின் அருள், நல்ல பெண், பாரு வருகிறாள். மனசிலே பொறாமையுணர்வுக்கு இடம் கொடுக்கலாமா ஜோகி?” அவர் விரல்கள், அவன் தலைமுடிக்குள் இதமாகப் புரண்டன.

     “நீங்கள் உண்மையை அறியவில்லை. அப்பா! நான் பொறாமைப்படவில்லை. இரிய உடையாரின் கருணையால் கல்லும் முள்ளும் களைந்து பயன்படுத்திவிட்ட நிலம் போல் நான் மனசை வைத்துக் கொள்ள எப்போதும் முயலுகிறேன். ஆனால் நீங்கள் இரண்டு ஒத்த உள்ளங்களைப் பிரித்து விட்டீர்கள். கிருஷ்ணனையும் அவளையும் பிரித்து விட்டீர்கள். யானை தேர்ந்து மாலையிட்டவன் அரசுரிமைக்கு உரியவன் பெண் ஒப்பினால் மணாளன் என்ற நம் வழக்கு மொழியைத் திருப்பி, ‘கல்லைப் புரட்டியவன் கன்னிக்கு உரியவன்’ என்றாக்கியது பெரும் தவறு. மனமொப்பாமல் நம் வீட்டில் பிரிவு ஏற்படவில்லையா? மறுபடியும் அவர் மகனுக்கே ஒப்பாத பெண்ணை இணைக்கிறீர்களே!” பையனின் விழிகளில் ஒளிர்ந்த ஒளியைப் பார்த்த தந்தைக்கு உடல் முழுவதும் சிலிர்ப்போடியது.

     உண்மை! ஆனால், ஆனால்!

     பாரு சிறுமியாக நின்ற நாள் முதலாக அவர் அவளைப் பார்த்திருக்கிறார். அவளிடம் சுயநலமும், சிறுமைக் குணங்களும் இருக்குமென்று அவர் நினைக்கவில்லை. அவள் ரங்கனின் தாயை நினைவுக்குக் கொண்டு வரும் அழகி; ஆனால் ஜோகியின் அன்னையைப் போன்ற அமைதி, அடக்கம் முதலிய அருங்குணப் பண்புகளைக் கொண்டவள். கட்டிய கணவனுக்கு உதவியாக இருந்து, தோழியாகப் பழகி அவனுடைய விளைநிலத்தைச் செம்மைப்படுத்தி குழந்தைகளைப் பெற்றுத் தந்து, தன்னைக் குடும்பத்துக்கு ஈயும் பெண்ணாக அவள் இருப்பாள் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். இக்காரணங்களினாலேயே, அவள் ஜோகிக்கு மனைவியாவதை விட, ரங்கனுக்கு மனைவியாவதே இசைவு என்று விரும்பியிருக்கிறார். வளமற்ற பூமியிலே, நல்ல வித்தையன்றோ இடவேண்டும்? அவன் கோணல் வழியிலே செல்ல முடியாதபடி, அவனை மண்ணோடு இணைய வைக்கும் மாண்பு அவளுக்கே உண்டு என்றெல்லாம் அவர் எண்ணியிருக்கிறாரே!

     “அப்பா, கிருஷ்ணனும் அவளும் ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு நேசிப்பவர், பிரிப்பது தகாத செயல்” என்றான் ஜோகி உணர்ச்சி துடிதுடிக்க.

     “இருக்கலாம் ஜோகி. தன் அன்பையும் ஆசையையும் தியாகம் செய்து, கலங்காமல் வாழ்வை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல பெண்ணையே ரங்கன் மணக்க வேண்டுமென்று நான் எண்ணுகிறேன்” என்ன நெஞ்சுரம்!

     “அப்பா!” என்று ஜோகி அலறுவது போல் கத்தினான்.

     “கேள், மகனே, பொறுமையாகக் கேள். கல்யாணம் என்பது எதற்கு? நாம் கூடி வாழ்ந்த புமி திருத்தி விளைவிக்க வேண்டும். நிறையக் குழந்தைகள் நம் முற்றங்களில் விளையாட வேண்டும். கன்று காலிகள் பெருக வேண்டும். ஆணும் பெண்ணும் வாழ்வில் இதற்காகத்தான் பங்கு கொள்ள வேண்டும்!”

     ஜோகி வாயடைத்து நின்றான். அவர் தொடர்ந்தார். “கிருஷ்ணன் படித்தவன். பசையும் ஒட்டுதலும் நீங்காத குடும்பத்தில் பிறந்தவன். அவன் தன்னைத் திருப்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வருபவளாக இருந்தாலும் குடும்பத்தில் ஒட்ட வைத்துக் கொள்ளும் வசதிகள் அங்கு உண்டு. இங்கே, நிறைவை வேண்டி வருபவளாக இருந்தால் தான் பிரிவு உண்டாகும். பாரு இந்தக் குடும்பத்துக்கு நிறைவை அளிப்பாள்; ரங்கனின் வாழ்வைச் செம்மை செய்ய அவளைப் போன்ற பெண்ணே தேவை. கேட்டாயா ஜோகி? உன் பெரியப்பன் வாழ்விலேயே ஒட்டவில்லை. அவர் எதற்கும் கவலைப்படுவதில்லை. கிடைக்கும் இன்பத்தை அனுபவித்து விட்டுத் தம்மை மறந்து பாடிக் கொண்டிருக்கிறார். அவரைப் போன்ற மனிதர் எவரையும் நான் பார்க்கவில்லை. ஆனால், ரங்கன் அவரைப் போல இல்லை. மண்ணோடு இசைந்து சுதுவாது அறியாது வாழும் வாழ்வை விட்டு விலகி விட்டானென்று அஞ்சுகிறேன். மகனே, அதனால் தான் அவன் பந்தயத்தில் கெலிக்க வேண்டும் என்று வாழ்த்தினேன், ஜோகி.”

     ஜோகி அந்நேரம் வரையிலும் இளம் உள்ளத்திலே ஒரு பெண்ணுக்காக குமிழியிடும் ஆசைகளையும் கனவுகளையும் பிரதானமாக எண்ணியிருந்தான். அப்போதுதான் அந்த இளமை ஆசைகளுக்கப்பால் ஒரு பேருண்மை பொதிந்து கிடக்கிறது. வாழ்க்கை இன்பம் அநுபவிப்பதற்கு மட்டும் அன்று. முயற்சியின்றித் தானாகக் கிட்டுவது இன்பம். மண்ணை வெட்டும் போதும், விதையைத் தெளிக்கும் போதும், அது முளைவிட்டுச் செழித்துக் கதிர் சாயும் போதும், அருவியில் முழுகும் போதும், மாடுகள் கறக்கையில் பால் பொங்கி வரும் போதும் இன்பம் நினைத்தா செய்யப்படுகின்றன? இல்லை, நன்மைக்காகச் செய்யும் செயல்களாக அவை பழக்கத்தில் ஊறிவிட்டன. அப்போது இன்பம் வருகிறது. அதுபோலவே ஒரு பெண்ணைக் கொண்டு வந்து, இருவரும் சுயநலமின்றிக் குடும்பத்துக்காக, ஹட்டிக்காக, உலகுக்காகக் கூடி வாழ்கையிலே இன்பம் கிட்டும் போலும்.

     அவனுடைய ஐயன் எவ்வளவு அழகாகக் கூறினார். அவனுடைய அம்மை அந்தக் குடும்பத்தில் கண்டதென்ன? ஆனால் அவள் அன்பும் தியாகமும் அல்லவோ உருவாக வந்தவள்? எத்தனை கஷ்டங்கள் வந்தும் அவள் குடும்ப பந்தத்திலிருந்து விலகாதது ஏன்?

     “நான் சிறுவனாகச் சொல்லிவிட்டேன், அப்பா. பாருவின் முகம் பார்த்து வருந்தியதால் படபடப்பாகக் கூறிவிட்டேன்” என்றான்.

     “இந்த வயசில் அப்படித்தான் சலனம் உண்டாகும். வென்று விடு மகனே!” என்றார் தந்தை.

     இருவருமாக வீடு நோக்கி வந்தனர்.

     புறமனையில் பாரு மட்டுமே இருந்தாள். அவர்களைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆத்திரம் கண்ணீர்த் துளிகளாகப் பீறி வந்தது.

     “பாரு, இதோ பார்; பாரம்மா!” லிங்கையா அன்பும் ஆதரவும் கனியும் குரலுடன் அவள் தலையைத் திருப்பினார்.

     மலைகள் சரிந்து கடல்கள் பொங்குவது போன்ற உணர்ச்சிகளை அடக்குபவள் போல் கண்ணீரைச் சமாளித்துக் கொண்டு அவள் பார்த்தாள்.

     “வருத்தப்படுகிறாயா பாரு?”

     முகம் தாழ்ந்தாள். கண்ணீர் சிந்தியது.

     “அசட்டுப் பெண்ணே, ஏன் வருத்தப்படுகிறாய்? இதோ பாரம்மா, பெண் அடுப்புத் தீப்போல, குடும்பத்தை நல்லவிதமாக உருவாக்கும் சக்தி; அவள் புகையலாமா? பாலைக் கூடக் குடிக்காமல் வீட்டுக்காகத் தியாகம் செய்யும் சக்தி ஒளிர, இந்த வீட்டுக்கு நீ வருகிறாயம்மா. மங்களத்துக்கு உரியவளாக, சீர்குலைந்து வரும் ஒரு குடும்பச் செல்வத்தை நிரப்ப, நீ வருகிறாயம்மா. சின்ன எண்ணங்களை விட்டுவிடு. பெரிய பொறுப்பு உன்னைத் தேடி வந்துவிட்டது. அன்பின்றித் தேய்ந்த ஓர் உள்ளத்துக்கு ஆக்கமளித்து, நல்ல குடும்பமாக ஒளிர, ஒளிகூட்ட வருகிறாயம்மா, குழந்தை!”

     “மாமா!” என்று தன்னையும் அறியாமல் அவர் கால்களில் பணிந்தாள் பாரு.

     ஓர் ஆவணி நன்னாளில், அவள் ரங்கனின் இல்லத்தை ஒளிரச் செய்யும் வைபவம் நிகழ்ந்தது. கோத்தர் இசை முழங்க புத்தாடை அணிந்த ரங்கன், ஜோகி, தந்தை, சிறிய தந்தை முதலியவருடன் பரிசுப் பொருள்களையும் இருநூறு ரூபாய் வெள்ளிப் பணத்தையும் சீரெடுத்து, மணிக்கல்லட்டி சென்று பெண்ணை அழைத்து வந்தான்.

     செம்மண் தீட்டிப் புதுப்பித்த மனைவாயிலிலேயே மணப்பெண் வந்து நின்றதும், மாதி வீட்டின் முதியவள், மாமி என்ற ஸ்தானத்தில் நின்று, “குடத்திலிருந்து ஒழுகும் நீர் போல் வழி வழி வரும் இந்தக் குடும்ப வளர்ச்சியை ஏற்றுக் கொள்வாயாக!” என்று அவளிடம் ஒப்பிப்பதே போல், நீரைக் குடத்தினின்றும் மணப் பெண்ணின் கைகளில் மும்முறை வார்த்தாள். நீர் அவள் கைகளை நனைத்துக் கால்களில் விழுந்து ஓடிய பிறகு தட்டிலிருந்து, பொற்கம்பியில் கோக்கப் பெற்ற மணிமாலையை எடுத்துப் பாருவின் கழுத்தில் போட்டு, அவளை உள்ளே வரவேற்றாள்.

     புறமனையில் கம்பள விரிப்பில் புது வட்டில் வைத்து, அண்ணன் மனைவியை ரங்கம்மை அழைத்து உட்கார வைத்தாள். புதுப்பாலுடன் சாமைச் சோற்றை மாதி வட்டித்தாள். பாருவுக்குப் பாலன்னம் இறங்கவில்லை.

     பெண்கள் குழுமிக் கேலி செய்தார்கள். ஒருத்தி ரங்கனை முன்பாக அழைத்து வந்து, “எடுத்துக் கொடு, ரங்கண்ணா” என்றாள்.

     முகம் சிவக்க பாலும் சோறும் நாவில் பட வைத்த பாரு எழுந்ததும் ரங்கம்மை கைக்கு நீர் வார்த்தாள்.

     பின்னர்க் கோத்தர் இசை முழக்கினார். புதுக்குடம் பொற்குடம் போல் சித்திர வேலைப்பாடுகளும் மஞ்சளும் சந்தனமுமாக விளங்கியது.

     ரங்கி குடத்தை எடுத்து அண்ணன் மனைவியிடம் கொடுக்க, கன்னிப் பெண்களும் சுமங்கலிகளும் புடைசூழ மணப்பெண் அருவி நீரெடுக்கச் சென்றாள்.

     மங்கள இசையோடு அருவி நீர் எடுத்துக் கொண்டு அந்த வீட்டினில் மீண்டும் நுழைகையிலே, பாருவுக்கு மாமனின், சொற்களே நினைவில் பளிச்சிட்டன. ‘இந்த வீடு எனக்கு! இந்த வீட்டின் பொறுப்பு எனக்கு!’ என்று அவள் உள்ளத்திலும் உடலிலும் நிறைந்து நின்ற பெண்மை என்னும் ஆற்றல் பெருமையுடன் நிமிர்ந்தது. சின்னத்தனமான அற்ப உணர்வுகளுக்கே அப்போது அவளுள் இடமில்லை.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247