ஐந்தாம் பாகம் 5. மண் பாசமும் மகன் பாசமும் மாலை ஐந்தரை மணிக்கு, ‘கான்டீன்’ வாசலில் நஞ்சன் ராமனை எதிர்நோக்கி நின்றிருந்தான். ‘அவர் என்ன செய்தியைச் சொல்வார்! படிப்புக்காக வாங்கின கடனைப் பற்றியே பேசுவார். மகளைக் கட்டுவதைப் பற்றி அவர் அத்தகையதொரு நெருக்கடியான சந்தர்ப்பத்திலா பேசுவார்? கடன் அவன் எதிர்பார்த்தது தானே? சாவகாசமாகத் தனித்துப் பேச என்ன இருக்கிறது? ஒருவேளை, அவன் தேவகியை மணக்கும் விஷயத்தில் ஆவலும் விருப்பமும் காட்டவில்லை என்பதை அறிவாரோ?’ சில்லென்று குளிர்ந்த காற்று வந்தது. ராமன் படியில் இறங்கி வேகமாக வந்தான். “காபி குடித்தாயிற்றா?” “இல்லை அத்தான்.” இருவருமாக உள்ளே சென்று காபி குடித்தார்கள். “வீட்டுக்குப் போகலாமா அத்தான்?” என்றான் நஞ்சன். “வேண்டாம், வண்டி நிற்கிறது. அணைப்பக்கம் கொண்டு போக வேண்டும். வா பேசிக் கொண்டே போகலாம்” என்றான் ராமன்.
“மாமன் எப்படி இருக்கிறார்?” என்றான் ராமன் எடுத்த எடுப்பில். “மண், மண் என்று அவருக்குச் சித்தம் உருகிவிடும் போல் இருக்கிறது. எனக்கு வேதனையாக இருக்கிறது. எங்கேயாவது எப்பாடுபட்டாவது ஓர் ஏக்கர் நிலம் அவருக்கென்று வாங்கினால் தான், அவர் பூமியில் சாலை வேலை நடக்கலாம்.” “மாமி?” “அவுங்க, ஐயனை விட மோசமாய் இருக்கிறாங்க. விவரம் சொன்னால் புரிந்து கொள்ள வேண்டாமா? கல்லைப் பிளக்கலாம்; மலையைக் கரைக்கலாம்; அவர்கள் மனசை மாற்ற முடியாது போல் இருக்கிறது. அது இருக்கட்டும், என்னிடம் சாவகாசமாகப் பேச வந்த விஷயம் புரியவில்லையே!” “மாமனுக்கு நாங்கள் என்றைக்கும் கடமைப்பட்டவர்கள். மாமிக்கு என்னிடம் எப்போதும் தனியாக பிரியம் உண்டு. அவர்களைக் கேட்காமல், நல்லதென்று நினைத்து, நான் ஒரு செயல் செய்துவிட்டேன். நஞ்சா, வீட்டில் இவ்வளவு பேர் இருக்கையில், என் வருவாயில் உனக்கு எப்படிப் பணம் அனுப்ப முடிந்ததென்று என்றைக்கேனும் நினைத்துப் பார்த்ததுண்டா?” “எனக்கு அதை அறியக் கூட வயசாகவில்லையா அத்தான்? நான் இப்போது கூட அதையே நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் எங்கே கடன் வாங்கியிருந்தாலும், எவ்வளவு வாங்கியிருந்தாலும், நான் இனி அடைத்து விடுவேன். அதைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டாம்.” “நான் கடனாக வாங்கவில்லை. நஞ்சா, நாள்பட்ட காய்ச்சல் தீர, எவரேனும் மருந்து கொடுத்தால் வேண்டாமென்று சொல்வது சரியா? அந்த வருஷம் மழையில்லாமல் நட்ட கிழங்கெல்லாம் மண்ணாகி, நஷ்டம் வந்ததும், மாமி மனம் உடைந்து ஓய்ந்ததும், மாமன் பித்துப் பிடித்தவர் போல் ஆனதும், நீ வீட்டுக்கே வராமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்ததும் நினைவு இருக்கிறதா?” நஞ்சன் ஏதும் பேசவில்லை. “எங்கள் குடும்பம் வாழ வழி செய்தார். நான் அவர் கஷ்டம் பார்ப்பது சரியல்ல என்று நினைத்தேன்; மாமிக்கு வாக்குக் கொடுத்தேன். ஆனால், பெரிய மாமன் அகலக் கால் வைத்துக் குப்புற விழுந்து விட்டார்; நான் என்ன செய்வேன்! கடன் கிடைக்குமோ என்று எங்கெல்லாமோ விசாரித்தேன். கிழங்கு மண்டிக் கவுண்டரைத்தான் நம்பி அலைந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாள்...” ராமனுக்கு தொண்டை கரகரத்தது. நஞ்சன் அவன் கொண்டையூசி வளைவில் வண்டியைத் திருப்புவதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். நஞ்சனுக்கு உண்மை துலங்கியது. “அவர் தாம் இத்தனை வருஷச் செலவையும் கொடுத்தாரா?” “ஆமாம். என்னை அழைத்து இரகசியமாக, என்னிடம் தாம் உதவி செய்வதாகவும் எவரிடமும் கூற வேண்டாமென்றும் கூறினார். அந்த நிமிஷமே இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைத் தந்தார், நஞ்சா. அவர் உண்மையிலே மலை போல் உயர்ந்த மனிதர். ஜோகி மாமன் வீட்டுக்கு வராதே என்று வெருட்டினார்; இன்னொரு மாமன் ஆள் கூலி பேசி அடிக்கச் சொன்னார். அநியாயம் செய்தவர் நாம். அநியாயக்காரருக்கு நன்மை நினைக்க வேண்டுமென்றால் அவர் மனசை எப்படி உயர்த்திச் சொல்வது?” “அம்மையிடங் கூட நீங்கள் சொல்லவில்லையா அத்தான்?” “தப்பான எண்ணம் விழுந்து, அந்தப் பார்வையுடன் அவர்கள் பேசும் போது எப்படி வெளியிடுவேன் நான்? அது எப்படியெல்லாம் ஆகியிருக்குமோ? ஜோகி மாமனுக்குத் தெரிந்தே படிப்பே வேண்டாம் என்று தடுத்துவிட்டால்? நான் சொல்லவில்லை.” நஞ்சன் அப்போது அவர் பஸ் நிறுத்தத்தில் கண்டு பேசியதைத் தெரிவித்தான். “தேவர் கருணையினால் உனக்கு அதிருஷ்டம் கூடி வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. என்னை மறுபடி நேற்று முன் தினம் கூப்பிட்டு அனுப்பினார். அரண்மனை போல் வீடு. நான் இதுவரை உள்ளே வீட்டில் தெரிந்து சென்றதில்லை. அத்தையையும் நேற்றே கண்டேன். இத்தனை நாட்கள் செய்த உதவிக்குப் பிரதிபோல ஒன்று கேட்டார். இல்லை; அவர் உதவி என்றும், பிரதி என்றும் கேட்கவில்லை. உனக்கு இன்னும் பெரிய செல்வத்தைத் தருகிறேன் என்றார். முறைப்படி தலைமுறையாகப் பகைக்கு இரை போடக்கூடாது. அது அழிய வேண்டும் என்று கேட்டார். அவர் மகளுடைய மகளை உனக்கு...” ராமன் முடிக்காமலே மறுபடியும் வண்டியைத் திருப்புவதில் ஈடுபட்டிருந்தான். இது நினைவுதானா? கூடை மலர்களை அத்தான் ராமன் அவன் மீது கவிழ்த்தாரா? தேவகியுடன் திருமணம் என்று அம்மை புகன்ற போது, தலைநீட்டத் தைரியமில்லாத உணர்வு, குபீரென்று எழும்பி அவனைப் பூரிக்கச் செய்தது. திட்டமிட்டு அவனை ஆளாக்கியவர், திட்டமிட்டுத்தான் அந்தச் சுந்தரியையும் அதே பஸ்ஸில் வரச் செய்தாரோ? அத்தனை நாகரிகத்தில் முழுகியவர், வயசு வந்த அவரிடம் கேட்காமலே மணப் பேச்சுப் பேசுவாரோ? அப்படியானால் அவள், அந்த அழகி அவனை மணக்க இசைந்திருக்கிறாள்; மணக்க இசைந்திருக்கிறாள்! நஞ்சனுக்கு அந்த மகிழ்வைத் தாங்க முடியாது போல் இருந்தது. அவனைத் திரும்பி ஒரு கணம் பாராமல் நோக்கிய ராமனுக்கு மனசில் வாட்டம் உண்டாயிற்று. படிப்பு! படிப்போடு, நஞ்சன் ஒரு நாளும் அழுக்குச் சட்டையுடன் ஆடும் மாடும் மேய்க்கப் போகவில்லை. நகத்தில் அழுக்கு ஒட்டாமல் அவனைத் தனியாக வளர்த்தவள் அவன் மாமி. தேவகியை, நஞ்சன் நிச்சயமாக விரும்பவே இல்லை. ஆனால்... கிருஷ்ண கௌடர் மலையிலும் உயர்ந்தவர்! அவர் முயற்சி பலிக்கட்டும். அவர் வாக்குப்படி, தேவகியை அவர் தம்பி மகனுக்கே கேட்டாலும் கேட்பார். நஞ்சன் தன் உள்ளத்தை மறைத்துக் கொண்டு பேசினான்; “எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது அத்தான். நிலம் போயிற்றென்று ஐயன் இடிந்து போயிருக்கிறார். பகையாளி பணம் தந்து படித்தேன். இன்னும் அவர் பெண்ணை எனக்குத் தர முன் வருகிறார்கள். பெண் கேட்கப் போங்கள் என்று நான் விரட்டலாமா?” “பொறு, உனக்கு விருப்பந்தானே? நான் செய்தது தப்பா? நான் மனசோடு காப்பாற்றி வந்த இரகசியத்தை விண்டு விட்டேன். நீ நன்றாக, சுகமாக இருக்க வேண்டும், நஞ்சா!” “உங்கள் அன்புக்கும் துணிவுக்கும் நான் எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை அத்தான்.” சங்கடமும் சந்தோஷமும் வேதனையும் மகிழ்வும் உள்ளத்தில் அலைமோத, நஞ்சனுக்கு மேலே பேச்சு எழவில்லை. அவன் மூக்குமலை ஏறி வீடு வருகையில், பொழுது இருட்டி, வானத்துத் தாரகைகளுக்குச் சமமாக மேட்டிலும் பள்ளத்திலும் ஆயிரக்கணக்கான விளக்குகள் பூத்து விட்டன. வீடு சூனியக்களை கொண்டாடி அழுது வழியும் என்று அவன் எதிர்பார்த்தபடி இல்லை. கலகலத்த பேச்சுக் குரல் அவன் செவிகளில் படியேறு முன்னே விழுந்தது தந்தைக்கு உரியதல்ல. கலகலத்த குரல் என்று மகிழ்ச்சிக்கு உரிய ஒலியும் அல்ல, நெஞ்சு எரியும் பெரிய தந்தையின் குரல்! “ஆமாம், மணிக்கல்லட்டி போயிருந்தேன். இதை விடுவதில்லை. ஆமாம், நம் வயிற்றில் மண்ணடித்து விட்டு, எவருக்கோ அள்ளிக் கொடுப்பது துரோகம் இல்லையா? ஒண்ட வந்தவன், அண்ட வந்தவன், நம்மை ஆண்டியாக்கிச் சுரண்டுகிறார்கள். நியாயமா? நஞ்சா, சொல்கிறேன். நீ இந்த அணைத்திட்டத்தில் வேலை செய்யக் கூடாது! ஆமாம்!” தூக்கிவாரிப் போட்டது நஞ்சனுக்கு. பேசாமல் உடுப்பு மாற்றிக் கொள்ளச் சென்றான். ஜோகி அண்ணன் முகத்தைப் பார்த்தார். பாரு, அவருக்கு மேலான நம்பிக்கையுடன் கணவனை நோக்கினாள். “அத்தனை பேரும் சேர்ந்து எதிர்த்தால் யார் என்ன செய்ய முடியும்? இங்கே நிலம் போனவர் அத்தனை பேரையும் நான் ஒன்று திரட்டி எதிர்ப்பேன். இந்த ரங்கன் முன் நின்றால் பின் வாங்க மாட்டான். ஜோகி, உனக்குத் தெரியுமா? வெள்ளைக்காரன் ஊரை விட்டு எப்படிப் போனான்? அத்தனை பேரும் எதிர்த்துச் சத்தியாக்கிரகம் செய்தார்கள்? அதை நாமும் செய்வோம். இந்த மலை நம்முடையது; பூமி போய் இந்த விளக்குகள் நமக்கு வேண்டாம், சூழ்ச்சி!” “இன்னொன்று பார்த்தாயா? இங்கே ஆயிரம் ஆயிரமாய்ச் சம்பளம் வாங்குபவர்கள் நம்மவர் அல்லர், அந்நியர்கள். எனக்குப் பற்றி எரிகிறது. ஜோகி மண்டுகிறது. நிலத்துக்கு உரிய கிரயத்தையேனும் முன்பு தந்தார்களா?” நஞ்சன் ஆத்திரத்துடன் சீறிக் கொண்டு வந்தான். “பெரியப்பா! விஷயம் தெரியாமல் ஏன் பேசுகிறீர்கள்? நம்மவர்களுக்கு அப்படி வாங்கத் தகுந்த திறமை இருக்கிறதா? இப்போதுதான் படிக்கிறார்கள்! பல தொழிற் கலைகள் பயில்கிறார்கள்; இனி அவ்வித மேன்மைகளுக்கு உரியவர்கள் ஆவார்கள். நியாயமானதைக் கேளுங்கள்; வரும். நியாயமல்லாத வழியில் போக ஏனப்பா நினைக்கிறீர்கள்? உங்கள் நிலத்துக்கு உரிய கிரயம் எங்கும் போகாது? பிற நாடுகளில் எல்லாம் இயற்கையின் சக்திகளை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா, பெரியப்பா? நாம் மட்டும் இந்த மண்ணிலேயே அழுந்திக் கிடப்பதா? முன்னேற வேண்டாமா? இங்கு அணை கட்டி எடுக்கப் போகும் மின்சாரம் எத்தனை எத்தனை தொழிற்சாலைகளுக்கு உயிரளிக்கப் போகிறது, தெரியுமா? இனிப் பிறக்கும் எத்தனை மக்களுக்கு உணவளிக்கப் போகிறது தெரியுமா? நீங்கள் மனம் மாறத்தான் வேண்டும். கிராமங்கள் வேறு, பட்டணங்கள் வேறு என்பதில்லை. நம் ஹட்டிகளிலெல்லாம் எல்லாவித வசதிகளும் வரும்; வர வேண்டும். நாம் எத்தனை அடிகளோ முன் சென்றிருக்கிறோம். நீங்கள் எண்ணிப் பாருங்கள். உங்கள் காலத்தில் மரகதமலை ஹட்டியிலிருந்து நகரத்துக்குப் போக நல்ல தார்ப் பாதை உண்டா? உங்கள் பெண்களும் பையன்களும் நல்ல கல்வி பயில நல்ல பள்ளிக்கூடம் உண்டா? ஏன் தேயிலை போட்டு மண் வளம் கொண்டு பொருளாதார வசதிகள் பெருக்க, வெளி உலகத் தொடர்பு இல்லாமல் முடிந்ததா. பெரியப்பா, நீங்களே சொல்லியிருக்கிறீர்கள், பன்னிரண்டாம் வயசிலே ஒத்தைக்கு ஓடினதாக. இன்றைய ஹட்டியை ஒப்பிடுங்கள். ஏன்? நான் ஒத்தைக்கு நடந்து சென்று படித்தேன். அஸ்தமித்தால் கீழ் மலையிலிருந்து இங்கே வர முடியுமா? இப்போது ஒளி வெள்ளமாய் விளக்குகள், மூலைக்கு மூலை ரேடியோ, கண்காட்சிகள், எல்லாம் நன்றாக இல்லையா? முன்னேறியவர்களைக் கண்டு நாம் பொறாமைப் படுவதில் ஒன்றும் பயன் இல்லை. அவர்கள் எப்படி முன்னுக்கு வந்தார்கள் என்பதை அறிந்து நேரமாய் வாழ வேண்டும். நீங்கள் மக்களின் நன்மைக்காக, இனிவரும் உலகுக்காக, உங்கள் மண் பாசத்தைக் கொஞ்சம் தியாகம் செய்யத்தான் வேண்டும்.” கிருஷ்ண கௌடரை மனத்தில் நினைத்துக் கொண்டு அவன் அவர்கள் மனத்தைக் கரைக்க, தன் சக்தியையெல்லாம் பிரயோகிப்பது போல் பேசினானே? ஓர் இம்மியளவேனும் பயன் இருந்ததா? மெழுகுவர்த்தி ஜ்வாலையானால் கையை வீசி அணைத்து விடலாம்; காலமெல்லாம் கனிந்து ஒளிரும் பொறாமைத் தீயன்றோ ரங்கனின் நெஞ்சத்திலே குடியிருந்தது? ஜோகிக்கோ, உயிரோடு வளர்ந்த மண் பாசம். இரண்டும் அந்தக் கை வீச்சுக்கு இன்னும் கனிந்து ஒளிர்ந்தனவே தவிர அவியவில்லை. ரங்கன் இடி இடியென்று சிரித்தான்; “நேற்று முளைத்த பயல், இவன் நமக்கு புத்தி சொல்ல வருகிறான் பார்த்தாயா? முன்னேறியவனைக் கண்டு நாம் பொறாமைப்படுகிறோமாம். தம்பி, இவன் யார் பக்கம் சேர்ந்து கொண்டு துரோக எண்ணத்துடன் பேசுகிறான் என்று உனக்குத் தெரியுமா? சொன்னால் நீ தப்பாக நினைப்பாய், பாருவின் மனம் சங்கடப்படும் என்று நான் பேசாமல் இருந்தேன். இந்தப் பயல், அன்றைக்குக் கூனூரில், பஸ் நிற்கும் இடத்தில், நம் குடும்ப வைரியுடன் குலாவினானா இல்லையா, கேள்.” நஞ்சனின் பெரிய தந்தையின் விழிகள் வஞ்சகம் கனிந்த பழங்களென ஒளிர்ந்தன. ஆ! ஜோகிக்கு என்ன நேர்ந்ததென்று புரியவில்லை. சிலையானார் அவர். இளவட்டம் ரோசத்துடன் எழும்பியது. “பார்த்தாயா, பார்த்தாயா தம்பி? டேய் துரோகிப் பயலே! உன்னை வளர்த்தவளை ஆள் வைத்து அடிக்கச் செய்தான்! உங்கள் குடும்பத்துக்கு நாசத்தைக் கொண்டு வந்தான்!” என்று கத்தினார் பெரியப்பா. “பச்சைக் கண்ணாடி போட்டுக் கொண்டால், பச்சையாகவே எல்லாம் தெரியும். தெரியுமா பெரியப்பா?” குத்தப்பட்ட ஆணவம் குத்தப்பட்ட நாகம் போல் சீறியது; “டேய்? என்னடா சொன்னாய்?” ரங்கன் பாய்ந்து எழுந்த போது பாரு அலறினாள்; “வேண்டாம், வேண்டாம் நஞ்சா!” “ஷ், உள்ளதைச் சொன்னால் ரோசம் வருகிறதோ? உங்களால் தான் எங்கள் குடும்பம் சீர்ப்படாமல் போயிற்று. பகையை வளர்த்தவர் நீங்கள்!” என்றான் நஞ்சன் அடங்காமல். “நஞ்சா! பெரியப்பன், மரியாதை தவறாதே!” ஜோகி நெஞ்சை முட்டிய உணர்வை விழுங்கிக் கொண்டார். நஞ்சன் அறிந்து மொழிந்தானோ அறியாமல் புகன்றானோ, ஆனால் அதில் உண்மையும் உண்டே! “மரியாதை தெரியாதவரிடம், மரியாதை தவறத்தான் நேரிடுகிறது. உங்கள் பார்வைக் கோளாறு; மனத்தின் கோளாறு. நீங்களாக இருந்தால் பகைவன் பிச்சை எடுத்தால் கண்டு களிப்பீர்கள். ஐம்பதும் நூறுமாய் அவிழ்த்துக் கொடுத்துப் பகைவன் மகனைப் படிக்க வைப்பீர்களா? பகைவன் துவேஷக் கொடியேற்றி நிற்கையில், செல்வத்தில் உயர்வாய் வளர்த்த உங்கள் அருமை மகளை, அந்தப் பகைவன் மகனுக்கு மணமுடிக்க முன் வருவீர்களா?” ஒரு நிமிஷம் அங்கு அண்ட சராசரமே அசைவற்று நின்றாற் போன்ற அமைதி நிலவியது. அந்த ஒரு நிமிஷப் பயங்கர அமைதியை, ரங்கனின் வெறிச் சிரிப்புத்தான் குலைத்தது. “ஓகே! இளவட்டம் துள்ளுவதற்குக் காரணம் இப்போது தான் புரிகிறது, தம்பி! அவன் சூழ்ச்சி செய்து, இந்தப் பயலை கைவசப்படுத்திய சதியைக் கேள்!” என்று ஆத்திரத்துடன் கத்தினான். உண்மையை எப்படியோ நஞ்சன் வெளிப்படுத்தி விட்டான். வெறும் வாயை மெல்லுபவரான பெரியப்பாவுக்கு, இனிப் பேசக் கேட்க வேண்டுமா? “நம்மிடையே இருந்த சகல சொத்துக்களும் தொலைய அவன் சதி செய்தான். இப்போது மகனையும் பறித்துக் கொள்கிறான். பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து, அவன் நம்மைக் கௌரவமாய் மேன்மைப்படுத்தவா வருகிறான்?” மறுபடியும் அந்த வெறிச் சிரிப்பு. பாருவுக்கு அவன் சொல் ஒவ்வொன்றும் நெஞ்சில் பழுக்கக் காய்ச்சிய மழுவாயுதத்தின் அழுத்தத்துடன் உண்மையைப் பதித்தது. “வெள்ளைக்காரர்களைப் போல் பழகிய துரை மகள், இங்கு உனக்குக் காபி வைத்துத் தருவாளா? மாவு ஆட்டுவாளா? எருமைக்குத் தண்ணீர் காட்டுவாளா? இந்த வீட்டில் கார் ஏது? இந்த ஹட்டியில் நினைத்தபடி வெளியே செல்ல, சினிமாவும் உல்லாசமும் ஏது? உன் பையனை அங்கே வைத்துக் கொள்வார்கள். காரில் வேலைக்கு அனுப்புவார்கள். உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? நேற்று மாமன் மகன் சித்தன், படித்துவிட்டு என்ன செய்தான்? ஏன் கிருஷ்ண கௌடர் மகள் கோத்தகிரியார் வீட்டுக்கா போனாள்? டாக்டர் அர்ஜுனன் தானே கிருஷ்ண கௌடர் வீட்டுக்கு வந்தான்? ஆனந்தகிரிப் பங்களாப் பெண்கள் ஹட்டிக்கு வரமாட்டார்கள்; மருமகன்மார்தான் பெண்களைத் தேடிப் போகவேண்டும்.” “போதும், போதும்” என்று குலுங்கினாள் பாரு. அவளுடைய ஆசை மாளிகையில் ஒவ்வொரு புறத்திலும் அவள் கணவனின் வார்த்தைகள் பாய்ந்து தகர்த்தன. “நிறுத்துங்கள் நான் ஒன்றும் அப்படிப்பட்ட பையன் அல்லன்” என்று அவனுடைய நஞ்சன் பாய்ந்து முன் வருவான். சற்று முன் கிருஷ்ணனைப் பற்றி அவர்கள் பேசியதைப் பொறுக்காமல் ஆவேசத்துடன் பாய்ந்து வந்தாற் போல் வருவான். அவளுடைய உடலின் ஒவ்வொரு நாடியின் துடிப்பும் அவன் உள்ளத்திலிருந்து ஆவேசம் பாய்ந்து உதடுகளின் துடிப்புடன் வெளியாவதை எதிர்பார்த்துக் குவிந்தது. இல்லை, அவன் பேசவில்லை. நஞ்சன் பேசவே இல்லை. “நஞ்சா, ஏன் நிலையாக நிற்கிறாய்? நான் மாட்டேன் என்று சொல்லடா! உனக்காக உயிர் வாழும் அம்மையடா, பாரு!” “என்றைக்கேனும் உனக்கு மகனைப் பார்க்க வேண்டுமானால் வேட்டை நாய் கட்டிய வாசலில் தவம் கிடக்க வேண்டும். காரில் பையன் வந்து இறங்கி அலட்சியமாக நடந்து செல்வதைக் கண்டு வரவேண்டும். உன் அழுக்கு முண்டும் வட்டுமாக, அவர்கள் பங்களாவுக்குள் செல்வதையே அகௌரவமாக நினைப்பார்கள். ‘உங்கள் அம்மையை ஏன் இப்படிச் சும்மா வரச் சொல்கிறீர்கள்? பெற்றவளா இவள்? மாசம் பத்து இருபது வேண்டுமானால் கொடுங்கள்’ என்று அவள் சொன்னால் இவன் கேட்பான்.” “ஐயோ!” என்று பாரு அலறினாள் அப்போது. தாயுள்ளத்தில் கொடூரமாகப் படர்ந்திருக்கும் அந்தப் பாசத்தின் வலிமையை அவன் எப்படி அறிவான்? நஞ்சன் எங்ஙனம் அறிவான்? “இன்னும் என்ன என்ன பேச வேண்டுமோ, பேசுங்களேன்? ஏன் நிறுத்தி விட்டீர்கள்?” என்றான். “ஏண்டா? உள்ளதைச் சொன்னால் ரோசம் வருகிறதா?” “ரோசமா? நீங்கள் உண்மையில் எங்களுக்கு நன்மை நினைக்கிறீர்களா? உங்கள் பொறாமை, நான் முன்னுக்கு வருவதையும் காணப் பொறுக்கவில்லை. நான் வேலையை விட வேண்டும்; நல்ல இடத்துப் பெண் வந்தால் கல்யாணம் கூடாது. பத்து ரூபாய்க் காசுக்கு என்னைப் பழியாய் நடக்க வைத்தவர் நீங்கள்! பலரும் அறிய, எங்கள் வறுமையைக் கண்டு நகைத்தவர், நீங்கள்! பகைக்கு மட்டும் ஒற்றுமை கொண்டாடி, எங்களை நாசம் செய்தீர்கள்!” அத்தனை வார்த்தைகளில் ஒரு சொல்லேனும் அவளுடைய சிதையும் உள்ளத்துக்கு நம்பிக்கைத் தர எழக்கூடாதா? “நஞ்சா!” என்று மின்னல் ஒலி வெட்டியது. கல்லாய், மரமாய் இருந்த ஜோகியின் நாவினின்றும் புறப்பட்ட ஒலி; நஞ்சன் அதிர்ந்தாற் போல் தந்தையை நோக்கினான். “நீ இங்கேயே எதிர்க்கட்சி ஆடுகிறாயாடா? இதற்கா படித்தாய்? போடா போ!” நஞ்சன் வெளிமனையில் வந்து வீழ்ந்தான். அவனுடைய கண் முன், பெற்றோரின் அறியாமையே மாளாத இருளாய்க் கவிந்து மறைந்தாற் போல் இருந்தது. வெறும் அறியாமை அல்ல; தந்தையின் உயரிய பண்புகளைக் கூட விழுங்கி விட்ட குருட்டுப் பாசத்துடன் துணை கொண்ட மடமை இருட்டு. ஆயிரம் பதினாயிரம் கிலோ வாட் சக்தி மின்சாரம் ஒளிர்ந்தால் கூட அந்த மடமை இருட்டைக் கரைக்க முடியாது. அந்த அறியாமை இன்னும் என்னவெல்லாம் தீமைகளை விளைவிக்கப் போகிறதோ? நிலத்துக்காகச் சத்தியாக்கிரகம் செய்வதாமே? அதை நினைக்கையிலேயே அவமானம் அவனுள் ஊசியாய்ப் பிடுங்கியது. தந்தையின் மனத்தை எப்படியேனும் மாற்றலாம் என்றால் கூட இடமே காண வழியில்லாதபடி, பெரியப்பா சேர்ந்து விட்டாரே! இளமை வேகம் கொந்தளிக்கும் அவன் மனத்தில், அவன் விஜயாவை மணப்பதனால், அம்மையை அது எப்படிப் பாதிக்கக் கூடும் என்பதையெல்லாம் விளக்கும் வகையில் பெரிய தந்தை பேசிய பேச்சுக்கள் உறைக்கவில்லை. விஜயாவை மணந்தால், காலனி வீடுகளில் ஒன்று இவன் இல்லமாகத் திகழும். அலுத்து ஓய்ந்து, பேரிரைச்சல்களிலிருந்து விடுபட்டு அவன் வீட்டின் இனிய பொழுதை நோக்கித் திரும்புகையிலே, அவள் அவனை எதிர்நோக்கி நிற்பாள். அந்த முகத்தைக் காண்கையிலேயே அவனுடைய அலுப்பும் சோர்வும் பஞ்சாய்ப் பறந்து போய்விடும். அந்தியிலே, அந்த வளைந்த பாதைகளில் அவளுடன் நடந்து செல்வது எத்தனை இன்பமாக இருக்கும்! குமரியாறு விழும் காட்சியை அவளோடு காலமெல்லாம் சேர்ந்து கண்டு கொண்டிருக்கலாமே! புயலடித்த அந்தச் சூழ்நிலையில், அவன் உள்ளத்துக்கு இத்தகைய எண்ணங்களே ஆறுதல் அளிக்கக் கூடியனவாக இருந்தன. மூக்குமலை ஹட்டிக்கு மின்விசை வந்தாயிற்று. ஆனால் அவர்கள் வீட்டுக்கு அது இன்னும் வரவில்லை. இருளிலேயே மனம் போன எண்ணங்களிலே குருடாக அவன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான், அண்ணனும் தம்பியும் உண்டார்களா, உறங்கினார்களா, வெளியேறினார்களா என்று கூட அவன் கவனிக்க விரும்பவில்லை. அலுமினியம் கிண்ணத்திலே சோறு; தட்டிலே இனிப்புத் தோசை. இனிப்புத் தோசை என்றால் அவளுடைய மகனுக்கு உயிரான பண்டம். அலுவல் ஸ்தலத்திலிருந்து, கற்பொடி படிந்த உடுப்புடன் சோர்ந்து வரும் மகனுக்குக் கொடுக்க, பாரு மாலையிலேயே அதைத் தயாரித்து வைத்திருந்தாள். “நஞ்சா!” என்று அவள் அழைத்த அன்பு ஒலி எந்த உலகத்திலிருந்தோ அவனுக்குக் கேட்டது. கண் விழித்துப் பாராமலே அவனுக்கு அந்த அன்பின் ஒலிக்கு உரிய உருவம் அறியாமையின் உருவமாகக் காட்சியளித்தது. அது துலக்கினால் கரையாதா? விலக்கினால் நீங்காதா? விலக்கவே வேண்டாம் என்று பிடித்துக் கொள்வார்களா? “நீ சாப்பிடவில்லையே நஞ்சா; உனக்காக இனிப்புத் தோசை செய்தேன் நஞ்சா.” பையன் திரும்பியே பார்க்கவில்லை. “எனக்கு ஒன்றுமே வேண்டாம் அம்மா!” மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானா? வரப்போகும் அந்தக் கட்டழகி, அம்மையை வெறுக்க இப்போதே சொல்லிக் கொடுத்து விட்டாளா? அவர் உயிரோடு ஒட்டிய உயிரைப் பிரித்துச் செல்ல, இப்போதே முயற்சிகளைச் செய்யத் தொடங்கி விட்டாளா? நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு, பாரு, “நஞ்சா!” என்றாள் கல்லும் கனிந்து உருகும் குரலில். நஞ்சன் மறுமொழி தரவில்லை. ‘இளமையும் படிப்பும் வரப்போகும் பெண் சொல்லைக் கேட்கும்’ என்று சொன்ன கிழவர், எங்கிருந்தோ குரூரச் சிரிப்பு சிரிப்பது போல் அவளுக்குப் பிரமை உண்டாயிற்று. தன் வாழ்வின் தோல்விகள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், எல்லாவற்றுக்கும் ஈடாக, அவள் பற்றிக் கொண்டிருக்கும் ஒரே பற்று; அவன். அவனை எப்படி அவள் நழுவ விடுவாள்? “நஞ்சா என் சொல்லைக் கேட்க மாட்டாயா? நான் அம்மை அல்லவா, நஞ்சா?” குருட்டுப் பிடிவாதமும் கண்ணீரும் அவனுக்கு அப்போது எரிச்சலைத்தான் தரக்கூடியனவையாக இருந்தன. “நீங்கள் இன்னும் என்ன சொல்வது? என்னை நீங்கள் படிக்கவும் வைத்திருக்க வேண்டாம். இப்படி அவமானங்களுக்கு உள்ளாக்கவும் வேண்டாம். உலகம் ஒப்பிச் செய்யும் ஒரு முயற்சியில் நாம் குறுக்கிடுவது நியாயமா? நீங்கள் விதை விதைத்து, உண்ணத் தானியம் விளைவிக்கையிலே எலி புகுந்தால் ஒரு பொருட்டாகவா நினைப்பீர்கள்? எலியைக் கொன்று பயிரைக் காத்து விளைவு எடுப்பீர்கள். அதுபோல் ஓர் எலியின் நிலையில், இந்த அணைத்திட்டத்தில் குறுக்கிடலாம் என்று பொறாமைக்காகப் பெரியப்பா சொல்கிறார். நீங்கள் கேட்கிறீர்கள் அப்படித்தானே? உங்களால் எனக்குத்தான் அவமானம் போதுமா?” அவனுடைய கடுமை, அவளை எப்படி வருத்தியது என்பதை அவனால் உணரவே முடியாது. “நிலம் போனால் போகட்டும் நஞ்சா, உன்னிடம் நான் ஒன்று கேட்பேன் எனக்குச் சத்தியமாக, ஒரு வாக்குக் கொடு.” “என்ன?” அந்தத் தாய் தழுதழுக்கும் குரலில் வேண்டினாள்; “உன்னைக் கிரிஜை பெற்ற பிள்ளை என்று நான் நினைக்கவில்லை. ஜோகியண்ணன் மகன் என்று எண்ணவில்லை. என் உயிரின் உயிராக உணர்ந்து, ஒவ்வொரு நாளும் நீ பெரியவனாவதை நல்லபடி வாழ்வதை நினைத்துக் கனவு கண்டிருக்கிறேன். பெற்ற அம்மை ஒருத்தி அப்படிச் சாதாரணமாகக் கனவு காணலாம். நான் உன்னை உயிராக நினைத்திருக்கிறேன்; உனக்காக உயிர் வாழ்ந்திருக்கிறேன். என்னை - என்னை யாருக்காகவும் நீ வெறுக்க மாட்டாயே, நஞ்சா?” “இதெல்லாம் என்ன அம்மா பைத்தியக்காரத்தனமான பேச்சு? நீங்கள் கொஞ்சம் உலக ஒப்ப நடவுங்கள் என்று சொன்னால், வெறுப்பதாக எண்ணமா?” “நிசமாக என்னை நீ வெறுக்கவில்லையே?” “உங்களை எதற்காக நான் வெறுக்கிறேன்?” “அம்மை, உன்னிடம் ஒரே ஒரு வாக்குறுதி கேட்கிறாள். பிறவி எடுத்து அவள் ஒன்றே ஒன்றைத்தான் பற்றி நிற்கிறாள். அந்த வாக்குறுதியைத் தருவாயா நஞ்சா?” “கிருஷ்ண கௌடர் குடும்பப் பெண்ணே நமக்கு வேண்டாம். தேவகியை உனக்குப் பிடிக்காமல் போனால் வேறு நல்ல பெண் எங்கிருந்தேனும் நான் தேடி வருகிறேன்.” நஞ்சனின் விழிகள் நிலைத்தன. அவன் பேச்சற்றவனானான். துடிக்கும் இதயத்துடன் பாரு, “சரியென்று சொல்லடா மகனே” என்றாள். “ஏனம்மா! பகை தீராமலே நீளட்டும் என்கிறீர்களா? ஒன்றும் அறியாத அந்தப் பெண் உங்களுக்கு என்ன தீங்கு செய்தாள்?” “அவளிடம் எனக்கு ஒரு வர்மமும் இல்லை. நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா?” “வர்மம் இல்லை என்றால், ஏனம்மா வாக்குறுதி? நான் அங்கேயே போய்விடுவேன் என்று அஞ்சுகிறீர்களா அம்மா? அப்படிப் போக, என் வேலை இடம் கொடுக்குமா? டாக்டர் மருமகன் வீட்டோடு தொழில் செய்தால், நானும் அப்படிப் போவேனா? என்ன அம்மா அசட்டுத்தனம் உங்களுக்கு?” “வேண்டாம் நஞ்சா, அந்தக் குடும்பத்துடன் சம்பந்தப் பேச்சு. இரண்டு தலைமுறைகளிலும் தட்டிய விஷயம். நல்லது நடக்கவில்லை. போதும், நமக்குப் பகையும் வேண்டாம், உறவும் வேண்டாம்.” “என்னை நன்றி கொன்றவனாக்குகிறீர்களே?” “உன் படிப்புச் செலவை, நாம் கேட்காமல், நமக்குத் தெரியாமல், ராமனைக் கொண்டு எதற்காக கிருஷ்ண கௌடர் கொடுக்க வேண்டும்? அதுவே தப்பான எண்ணம் அல்லவா?” “ஈசுவரா! நல்லதெல்லாம் உங்கள் கண்ணுக்கு நாசமாகத் தெரிகிறதே! இதை எங்கே போய்ச் சொல்ல?” “போகட்டும், பூமியைச் சர்க்கார் எடுத்துக் கொண்டால், பதிலுக்குப் பணம் வராதா? கிருஷ்ண கௌடர் கடனுக்குக் கட்டி விடுவோம். அந்தப் பெண் வேண்டாம்.” “ம்!” பெருமூச்சு உள்ள எரிச்சலைச் சுமந்து வந்தது. “ஒப்புக் கொண்டாயா நஞ்சா?” “சரி அம்மா.” “எழுந்திருந்து தோசையைச் சாப்பிடு, நஞ்சா.” “எனக்கு ஒன்றும் வேண்டாம். என்னைச் சும்மா விடுங்கள் அம்மா. அதுவே போதும்.” “என் மனதை வருத்துவதில் உனக்கு ஏனடா நஞ்சா இத்தனை சந்தோஷம்?” “நான் உங்களை வருத்தினேனா? அதுதான் சரி என்றேனே! எனக்கு மட்டும் மனசென்று ஒன்று இல்லையா, அம்மா?” அவன் குரலிலிருந்த ஒரு பொறி பாருவின் உள்ளத்தில் சுடராய்த் தெறித்தது. திடுக்கிட்டவள் போல், “நஞ்சா, நீ... நீ அவளைப் பார்த்திருக்கிறாயா? பேசியிருக்கிறாயா?” என்றாள். “அம்மா, என்னை நிம்மதியாக விடமாட்டீர்களா? இதோ, ஒரு வாய் தோசை போதும் எனக்கு போங்கள்” என்றான் அவள் மைந்தன். வேண்டா வெறுப்பாக, அவளை விரட்டுவதற்காக ஒரு தோசைத் துண்டைச் சுவைத்து விழுங்கினான். பாரு என்ன செய்வாள்? தலைக்கு மேல் வளர்ந்து, அவள் மைந்தன், சட்டெனப் பெரியவன் ஆகிவிட்டான். அந்த நினைவிலேயே அம்மையாகிய அவள் வேற்றாள் ஆகிவிட்டாள். எத்தனை நாளைப் பழக்கமோ? அன்று ஒரு நீல நாடாவைக் காட்டினானே! மனமாகிய கடல் ஓயாமல் அலைந்து விழுந்தது. அண்ணனும் தம்பியும் வெளியே சென்று வந்து ஒருபுறம் உறங்கினார்கள். பின் கட்டில், அடுப்படியில் பாரு உறங்கவில்லை; நஞ்சனும் உறங்கவில்லை. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |