அத்தியாயம் - 18 - Chapter - 18 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 18

     இரவு நேரம்-      கங்கைகொண்ட சோழபுரத்தின் கிழக்கே, மதுராந்தக வடவாறு என்ற நதி ஓடிக் கொண்டிருந்தது. அது ஏறக்குறைய கங்காபுரிக் கோட்டையை ஒட்டிக் கிழக்குப்புறமாய் இருந்தது. அதன் கரையில் பெரிய அரசமரமும் அதற்குக் கீழே கருங்கல் மண்டபம் ஒன்றும் தென்பட்டது.

     அரசகுடும்பத்தினரும், பெரும் செல்வந்தர்களும் அங்கே வந்து தங்கி, கரைபுரண்டு ஓடும் வடவாற்றை அடிக்கடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில சமயம் பெரு மரங்களும் நானாவித புஷ்பங்களும் ஆற்றை மூடியபடி வரும் காட்சி, அவர்களின் கண்களுக்குப் பெருவிருந்தாய் அமையும். இந்த வேடிக்கையைப் பார்ப்பதற்கு வரும் கூட்டம் தங்கவே அந்த மண்டபம் அங்கே அமைக்கப்பட்டிருந்தது.

     தற்போது அதை நோக்கி மூன்று குதிரைகள் சென்று கொண்டிருந்தன. முதல் புரவியில் சோழ நாட்டு இளவரசர் அதிராசேந்திரனும், அடுத்து கொடும்பாளூர் நாட்டை ஆளும் குறுநில மன்னரான சயங்கொண்ட சோழ இருக்குவேளும், அவருக்குப் பக்கத்தில் வீரசோழ இளங்கோ வேளானும் இருந்தனர்.

     மூன்று குதிரைகளும் மண்டபத்தை அடைந்ததும் நிறுத்தப்பட்டன. முதலில் குதித்த வீரசோழ இளங்கோ வேளான் வயதில் மிகுந்த சயங்கொண்ட சோழ இருக்குவேள் குதிரையிலிருந்து இறங்குவதற்கு உதவி புரிந்தான். இளவரசன் அதிராசேந்திரன் புரவியிலிருந்து குதித்து மண்டபத்தை ஒருமுறை நோட்டம்விட்டான். மூன்று புரவிகளையும் அரசமரத்தில் பிணைத்துவிட்ட சேனாதிபதி வீரசோழன், மண்டபத்தை ஒருமுறை சுற்றி வந்து யாரும் இல்லையென்று முடிவு செய்து கொண்டான்.

     “நமக்கு முன்பே புறப்பட்டுவிட்டார்களே! இன்னும் வரவில்லையே?” என்று தூரத்தில் தெரிந்த கோட்டையைப் பார்த்தபடி கூறிய அதிராசேந்திரன் ‘நேரம் கடக்கிறதே!’ என்று நிலை கொள்ளாமல் தவித்தபடி அங்குமிங்கும் நடந்தான்.

     “கங்கைகொண்ட சோழேச்சுரம் போய்விட்டு வருவதாக என்னிடம் சொன்னார்கள். தலைமைப் பட்டர் அரசமகளிர் ஆயிற்றே என்று தடபுடலாய் வரவேற்பு கொடுத்திருப்பார்! அதில் மயங்கி இவர்களும் அங்கேயே...” என்று கொடும்பாளூர்க் குறுநில மன்னன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இவர்களை நோக்கிப் பல்லக்கு ஒன்று வந்து கொண்டிருந்தது.

     “வந்துவிட்டார்கள்!” என்றான் வீரசோழன், அதிராசேந்திரன் பத்து முழ தூரம் வரை முன்னால் நடந்து, பல்லக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த இராஜசுந்தரியையும், இளையராணியையும் பார்த்துச் சிறிது கோபமாகவே “என்ன இவ்வளவு நேரம்?” என்றான்.

     “கோயிலில் நேரமாகிவிட்டது” என்றாள் இளையராணி புன்னகையுடன்.

     “இளவரசே, நான் சொன்னது சரியாகிவிட்டதல்லவா?” என்ற கொடும்பாளூரார், தன் அருகில் வந்த இரு மங்கையர்களையும் பார்த்து, “சீக்கிரம் நாம் கோட்டைக்குத் திரும்பிவிட வேண்டும்! இல்லையென்றால் உள்ளே இருப்பவர்கள் நாம் ஏதோ பெரிய கோட்டையைப் பிடிப்பதற்காக இங்கே சதி செய்வதாக நினைத்துக் கொள்வார்கள்!” என்றார்.

     “நீங்கள் சொல்வதும் சரிதான்!” என்று ஆமோதித்த இராஜசுந்தரி, அவர் அருகில் அமர்ந்தாள். பல்லக்குத் தூக்கி வந்தவர்கள் கொஞ்சம் தள்ளி நின்று, யாராவது வருகிறார்களா என்று கண்காணிக்கத் தொடங்கினர்.

     இளையராணி அதிராசேந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, சேனாதிபதி வீரசோழன் மீண்டும் ஒருமுறை மண்டபத்தின் உள்ளே சென்று வெளியே வந்து பிறகு சுற்றுப்புறமெங்கும் நடந்து யாரும் இல்லையென உறுதிப்பட்டதும், அவர்களுக்கு எதிரே வந்து நின்று கொண்டான்.

     “முந்தின இரவு நாம் சோழ நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிப் பேச, இளவரசரின் அறையில் கூடினோம். துரதிர்ஷ்டமாக துணைத்தளபதி ஏதோ மர்ம உருவத்தைப் பார்த்துவிட்டதாக அமர்களம் பண்ணிவிட்டார். அதனால் அரண்மனைக்குள் எந்தச் சுவரில் எந்தக் காது இருக்குமோ என்ற பயத்தில் இங்கே நாம் கூடியிருக்கின்றோம்! இப்போது நாம் எடுக்கப் போகும் முடிவு மிக முக்கியமானது. அதனால் எந்தவித விருப்புவெறுப்பின்றி நன்கு யோசித்து நாம் முடிவு எடுக்க வேண்டும்!” என்ற சயங்கொண்ட சோழ இருக்குவேள் தன் நரைத்த மீசையைத் தடவியபடி அனைவரையும் கவனிக்கலானார்.

     அப்பொழுது காற்று பலமாக வீசியதால் அரசமரத்திலிருந்து காய்ந்த இலைகள் இவர்கள் மேல் உதிர்ந்தன.

     “எந்தக் கிளை?” என்று அனைவரும் பதட்டத்துடன் பார்க்க, இராஜசுந்தரி சுட்டிய கிளை காற்றினால் அசைந்து சிறிது விலகி, மறைந்து திரும்பவும் பழைய நிலைக்கு வந்தது.

     “வெறும் வெற்றுக் கிளையாய் அல்லவா இருக்கிறது” என்ற அதிராசேந்திரன், “முந்தின இரவு அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியால் இராஜசுந்தரி மிகவும் பாதித்துப் போயிருக்கிறாள்” என்றான்.

     “இல்லை அண்ணா! நான் கிளையில் நிச்சயம் ஓர் உருவத்தைப் பார்த்தேன்” என்றாள் அழுத்தத்துடன்.

     சயக்கொண்ட சோழ இருக்குவேள் அதைக் கேட்டுப் பெருங் குரலில் சிரிக்கலானார். “நல்ல வேடிக்கைதான் இது. நேரம் கடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

     “எதற்கும் பார்த்துவிட்டு வருகின்றேன்” என்று வீரசோழன் மரத்தில் ஏற முயன்றான். முடியவில்லை. ஏணி போன்ற அமைப்பில்லாமல் அம்மரத்தில் ஏற முடியாது என்பதை உணர்ந்து மரத்தின் மேல் பகுதியை நன்கு உற்றுப் பார்த்துவிட்டு, “அப்படி ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை!” என்றான்.

     “இல்லை, நான்...” என்று கூற வந்த இராஜசுந்தரியை, கொடும்பாளூரார் இடைமறித்து, “ஏதாவது காற்றுக்கறுப்பாய் இருக்கலாம். நம் ஆலோசனையைத் தொடங்கலாமே!” என்றார்.

     இராஜசுந்தரியின் முகத்திலிருந்த பதட்டம் இன்னும் மறையவில்லை. அரை மனதுடனே இவர்களைப் பார்ப்பதும், பிறகு மரத்தின் உச்சியை நோக்குவதுமாய் இருந்தாள். இதைக் கவனித்த இருக்குவேள்,

     “அந்தக் காற்றுக் கறுப்பெல்லாம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அதற்காக நீ கவலைப்பட வேண்டாம்! நான் இருக்கின்றேன்!” என்று தொண்டையைக் கனைத்துவிட்டுப் பேசலானார்.

     “நாட்டின் எதிர் காலம் நமக்கு முக்கியம். பெரிய வெற்றி ஈட்டிவிட்டதாக அலட்டிக் கொள்ளும் இராசேந்திரனை அரசு கட்டிலில் அமர்த்த சக்கரவர்த்தி அளவில் சதி நடக்கிறது! இந்த நேரத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் நமக்கு எதிராய்ச் செயல்படும் எதிராளியின் கை ஓங்கிவிடும். அரசர் இப்போது குழந்தை நிலையில் இருக்கின்றார். அவரை நம் பக்கம் கொண்டு வருவது நம்மிடம்தான் இருக்கிறது. அதை விடுத்து, அவர் பேரில் நாம் குறை சொல்வது அவ்வளவு நல்லதல்ல” என்றார்.

     “கொடும்பாளூர் மன்னர் சொல்வதை நான் ஆதரிக்கின்றேன்!” என்றான் இளவரசன்.

     ‘இந்தத் தந்தைப் பாசத்தில் ஒன்றும் குறைவில்லை. இதற்கு மேல் அரசர் இவருக்குப் பெரிய பொறுப்புக் கொடுத்தாலும், கையில் பிடிக்க ஆயிரம் ஆட்கள்தான் வேண்டும்’ என்று சோழ இளவரசன் அதிராசேந்திரனை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் அவரின் மனைவி இளையராணி.

     “ஆதரிப்பது இருக்கட்டும், முதலில் இவரின் தம்பிக்கு இளவரசுப் பட்டம் கட்டும் விஷயத்தில் மன்னரைச் சம்மதிக்க வைக்கட்டும்!” என்றாள் இராஜசுந்தரி சிறிது காட்டமாக.

     “நல்ல யோசனை. இராஜசுந்தரி சிறு பெண்ணாயிருந்தாலும் புத்திசாலித்தனமாகவே பேசுகிறாள்” என்று சாளுக்கிய அரசியைப் புகழ்ந்தார் சயங்கொண்ட சோழ இருக்குவேள்.

     அதைக் கேட்ட அதிராசேந்திரன் முகத்தில் மௌனம் நிலவியது. அதைக் கலைக்கும் முறையில் இராஜசுந்தரிதான் பேசினாள்.

     “காஞ்சியில் அரசப்பிரதிநிதியாகயிருக்கும் தம்பி மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுவதே நமது முதல் முயற்சி. சக்கரவர்த்தியை இதுபற்றி இளவரசர் கேட்காவிட்டாலும், நானே நேரில் போய்க் கேட்டேன். ஆனால் கிழ...” என்று தவறி அவள் வாயிலிருந்து வந்த அந்தத் தகாத வார்த்தையைக் கேட்ட கொடும்பாளூர்க் குறுநில மன்னரும், அதிராசேந்திரனும் சிறிது கோபமாகவே அவளை முறைக்க, அப்படியே அவ்வார்த்தையை அடக்கிக் கொண்டு, “அரசர் இசையவில்லை!” என்றாள்.

     “அதற்கு என்ன காரணம் சொன்னார் மாமன்னர்?” - சயங்கொண்ட சோழ இருக்குவேளின் கேள்வி.

     “என்ன காரணம் சொன்னார்... மதுராந்தகனுக்குப் போர் அனுபவம் இல்லையாம். திறமை கிடையாதாம்!” என்றாள் முனிவுடனே.

     “அப்படியா செய்தி!” என்று முகத்தைத் தடவிப் கொண்ட குறுநில மன்னர், “சக்கரவர்த்தியின் மனதை அந்த அளவிற்கு மாற்றிவிட்டார்கள்! அவ்விதம் மாற்றுவதற்கு யார் காரணமாக இருப்பார்கள்?” என்றார் இராஜசுந்தரியிடம்.

     “எல்லாம் அந்தப் பிரமாதிராசரும், பட்டத்தரசி உலகமுழுதுடையாளுந்தான். பெற்ற மகனுக்கு எதிராய் அன்னையே செயல்படுவது, சோழ அரசில் தவிர வேறு எங்கும் இருக்க முடியாது!” என்றாள் அழுத்தமாக.

     சிந்தனையில் ஆழ்ந்த கொடும்பாளூரார், “இதற்கு நாம் முடிவுகட்டியே ஆக வேண்டும். அரசர் உயிர் வாழப் போவது நாள் கணக்கில்தான்! இப்படிச் சொல்வதற்கு சோழ இளவரசர் என்னை மன்னிக்க வேண்டும்” என்று அதிராசேந்திரன் பக்கம் திரும்பியபடி, “அதற்குள்ளே நாம் மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் அந்த இடத்தைக் கீழைச்சாளுக்கிய இளவரசன் பிடித்துக் கொள்வான்” என்றார்.

     “நீங்கள் சொல்வதை நான் முழு மனதுடன் ஆதரிக்கின்றேன்” என்றாள் இராஜசுந்தரி சிறிது உரக்கவே.

     “இதற்கெல்லாம் ஏற்பாடாக சோழநாட்டுக் குறுநில மன்னர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். நம்பிக்கையான ஆட்களை அவர்களிடம் தூதாக அனுப்ப வேண்டும்” என்று ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினர்.

     “வீரசோழன் இருக்கின்றான். நம்பிக்கையில் அவனுக்கு ஈடு இணை கிடையாது” என்றான் அதிராசேந்திரன்.

     “ஒருவன் போதாதே! பலர் வேண்டுமே?”

     “இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் என் கணவர் குந்தள நாட்டுச் சக்கரவர்த்தி இங்கிருந்தால் நன்றாக இருக்கும்!” என்று குறுக்கிட்டுச் சொன்னாள் இராஜசுந்தரி.

     “இதுவும் எனக்கு நல்லதாகப்படுகிறது” என்று இளையராணி ஆமோதித்தாள்.

     “குந்தள நாட்டிற்கு ஆளை அனுப்பி, அவர் வருவதற்குள் இங்கே மாமன்னர் உயிர் இருக்குமோ?” என்ற சயங்கொண்ட சோழ இருக்குவேள், “துரிதமாகச் செய்தியை எல்லோருக்கும் அனுப்பக் கொடும்பாளூரிலிருந்து ஆட்களை வரவழைத்தால் என்ன?” என்றார்.

     அதை இராஜசுந்தரி விரும்பவில்லை என்பதை, வாட்ட முற்ற அவள் முகம் தெளிவாய்க் காட்டியது.

     இதைக் கவனித்த இளையராணி, அதிராசேந்திரனைக் குறிப்பினால் இதுபற்றி உணர்த்தி, “குந்தள நாட்டுச் சக்கரவர்த்தி வருவதுதான் நல்லது. ஏனென்றால் அரசரும் இன்றோ நாளையோ என்றிருக்கின்றார். அந்தச் சமயத்தில் பக்கத்தில் அவரின் மருமகப்பிள்ளை இருப்பது தேவையான ஒன்று” என்றாள்.

     இளவரசன் அதை ஆமோதித்து, அதற்கு வீரசோழனை அனுப்புவதாக ஒப்புக் கொண்டான்.

     இந்நேரத்தில் கொடும்பாளூர்ப் படைகள் கோட்டையில் இருந்தால், நம் சொற்படி அதிராசேந்திரனை ஆட்டுவிக்கலாம் என்று கனவு கண்டிருந்த கொடும்பாளூராரின் எண்ணம் அப்பொழுது எடுபடாமல் போய்விடவே, மனம் சலன முற்று மௌனமானார்.

     அதைக் கவனித்த சோழ இளவரசன், “குறுநில மன்னர்களுக்கெல்லாம் ஆட்களை அனுப்ப, கொடும்பாளூர் ஒற்றர்களைப் பயன்படுத்துவோம்!” என்றான்.

     இளையராணியும் அதற்குச் சம்மதப்பட, இராஜசுந்தரியும் வேறு வழியின்றி “சரி” என்று ஒப்புக் கொண்டாள்.

     இன்றைய இரவே குந்தள நாட்டிற்கு வீரசோழனை அனுப்புவதென்றும், இன்னும் இரு தினங்களில், கொடும்பாளூரிலிருந்து ஒற்றர்களை வரவழைத்து அவர்கள் மூலம் குறுநில மன்னர்களின் ஆதரவைப் பெற முயற்சிப்பதென்றும் முடிவு எடுக்கப்பட்டது.

     காஞ்சியில் அரசப்பிரதிநிதியாயுள்ள மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட எந்த வழியில் அரசரை நிர்ப்பந்தப்படுத்துவது என்பதில் பலவித கருத்துக்கள் தோன்றினாலும், கடைசியில் அதிராசேந்திரனை அதற்காக மாமன்னரிடம் அனுப்பி ஒப்புதல் பெற முயற்சிப்பது என்று முடிவு எடுத்து, நேரம் ஆகிவிட்டதால் கோட்டைக்குத் திரும்ப அனைவரும் எழுந்து கொண்டனர்.

     அந்த இடத்திலேயே அதிராசேந்திரனின் முத்திரை மோதிரமும் பொன் முடிப்பும் பெற்றுக் கொண்டு ஆறாம் விக்கிரமாதித்தனை அழைத்து வர வீரசோழன் குந்தள நாட்டை நோக்கிப் புரவியில் பயணம் தொடங்க ஆயத்தமானான்.

     கங்காபுரியின் கோட்டை நோக்கி, அனைவரும் புறப்பட்டுப் போனதும், பெருங்காற்றால் அரசமரத்தின் கிளைகள் அசைந்து ஓய, ஒரு கிளையிலிருந்து கயிறு ஒன்று ‘தடக்’ என்று தரையில் வந்து விழுந்தது. அடுத்த நொடியே கயிற்றின் மூலம் ஓர் உருவம் ‘மடமட’வென்று தரையில் இறங்கியது.

     அது இறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம், “ஐயனாரே! கீழே இறங்கி வா” என்று குரல் கொடுக்க, உடும்பு என்ற சிறு விலங்கு மெல்ல கிளையிலிருந்து இறங்கி அடி மரத்தை அடைந்து, உருவத்தைப் பார்த்து, தன் இரட்டை நாக்கை நீட்டி நீட்டி, மறுபடியும் வாய்க்குள் இழுத்துக் கொண்டது.

     உடும்பின் கழுத்துக்குச் சற்றுத் தள்ளி கயிற்றின் முடிச்சை அவிழ்த்துச் சுருட்டித் தோளில் மாட்டிக்கொண்டு உடும்பையும் இன்னொரு தோளில் வைத்தபடி, “கோட்டையிலே குத்து வெட்டு” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தது உருவம்.

     அந்த உருவம்...? நமக்கு ஏற்கனவே பழக்கமான தென்னன்தான்.

     மதுராந்தக வடவாற்றை ஒட்டி அவன் நடந்தவாறு, “கோட்டையிலே குத்து வெட்டு” என்று மீண்டும் சொல்லி வாய் மூடுவதற்குள், தென்னன் முதுகில் கூரிய கத்தி அழுந்தியது. “அசையாதே நில்” என்ற வார்த்தையினைக் கேட்டுச் சிலையாய் நின்றான் பதறியபடி.

     அடுத்த சில நொடிகளில், அவன் மூக்கின் பக்கம் வந்த மருந்தின் இலையை நுகர்ந்ததால் மயக்கமடைந்து கீழே விழ, அப்படியே அவனைத் தாங்கி தரையில் ஒருக்களித்துப் படுக்க வைத்தது, வெள்ளை முக்காடு போட்ட உருவம். இந்தக் குழப்பத்தில் தோளில் ஒட்டிக் கொண்டிருந்த உடும்பு தரையிறங்கி புதருக்குள் ஓடி மறைந்து கொண்டது.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247