அத்தியாயம் - 37 - Chapter - 37 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 37

     சில இடங்களில் மார்புவரை ஆழம் இருக்க, காலைக் குத்திய மீன்களுக்காக மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்ததை நீரில் நான்குபுறமும் வாரி இறைத்தான் அம்மையப்பன். மீன்கள் நான்கு பக்கமும் சிதறி ஓடின. இப்போது நடப்பதற்குச் சிரமமில்லாமல் இருந்தது.

     ஆந்தை அலற, ஓநாய்கள் பயங்கரமாய் ஓலமிட, எங்கிருந்தோ யானைகளின் பிளிறல்களும் அதைத் தொடர்ந்தன.

     அதற்கு இடையே ‘உய்... உய்’ என்று கடற்காற்றின் சீறல்கள் அவனை அச்சுறுத்தும் வகையில் இருந்தன.

     தட்டுத் தடுமாறி தீவையடைந்து கரையில் கால்வைக்க இடம்தேடி அதன் மூலம் வழுக்கித் தரையில் விழுந்த அம்மையப்பன் மீண்டும் சமாளித்து எழுந்து நின்றான்.

     காவி உடையெல்லாம் மண். அதனால் குறுவாளையும், துணிமூட்டையையும், பொன் முடிப்பையும், மற்றும் இதர பொருள்களையும் தரையில் வைத்து, இடுப்பிலிருந்த காவி உடையை அவிழ்த்து அதிலிருந்த மண்ணை உதறி மீண்டும் அணிந்து கொண்டான்.

     சண்டையிட வேண்டிய தருணம் வந்தால், இடுப்புத் துணி அவிழாமல் இருப்பதற்காக நன்கு முடிச்சிட்டுக் கட்டிக் கொண்டு தீவை நோக்கினான்.

     காற்றினால் மரங்கள் அசையும் அசைவைத் தவிர வேறு ஒன்றும் அவன் செவிகளில் விழவில்லை.

     எதிரே பனைமரங்கள். முள்வேலன். இப்படி அடர்த்தியாய்ப் பேய்க் கணங்கள் போல் நின்று கொண்டிருந்தன.

     உள்ளிருந்து யாரோ சிரிப்பது போன்ற ஒலி.

     மறுபடியும் இது தொடர... அந்தத் தீவை மூடியிருந்த இருட்டு அதற்குத் துணை செய்வது போன்று அம்மையப்பனைப் பயமுறுத்தியது.

     இதற்கெல்லாம் அவன் அசைபவனல்ல. ‘சிவாய நம!’ என சொல்லிக் கொண்டான். கொஞ்ச நஞ்சமிருந்த மனச் சலனமும் இப்போது அவனைவிட்டு அகன்றுவிட்டது.

     சிக்கி முக்கி கற்களை உரசிப் பார்த்தான். ‘குபுக்’ என்று பொறி பறந்தது. அந்த இமைப்போது வெளிச்சத்தில் ஆள் செல்லக் கூடிய ஒற்றையடிப் பாதை ஒன்றும் தெரிந்தது.

     இங்கும் அங்குமாக மரங்களின் கிளைகள் வீட்டுக் கூரை போல் அந்தப் பகுதியையே மறைத்துக் கொண்டிருந்தன.

     காட்டு அணில்களும், முயல்களும் ‘கீச் கீச்‘ என்று சப்தித்து புதருக்குள் மறைந்து கொண்டன.

     அந்த ஒற்றையடிப் பாதைதான் போகும் வழி என்று அவனுக்குப் புரிந்தது.

     ஏதாவது வெளிச்சம் இருந்தால்தான் அதில் போக முடியும் என்று உணர்ந்து, காய்ந்த சுள்ளிகளை ஒன்றாக்கி அதைப் பற்ற வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.

     அதற்காக அங்குமிங்கும் சென்று அவன் பார்க்கும் போது யாரோ பின்னால் நடந்து வருவது போல அவன் செவிகளில் விழுந்தன.

     திரும்பிப் பார்த்தான். கறுப்பாக ஒரு உருவம்; கண்ணை இடுக்கி, இருளில் யார் என்று பார்ப்பதற்கும் சடக்கென்று மறைந்து கொள்வதற்கும் சரியாயிருந்தது.

     “சிவாய நம!” என்று உரக்கக் கூறினான்.

     திரும்பவும் அவ்வுருவம் புதரிலிருந்து வெளிப்படுவது போன்று தோன்றியது.

     நெருப்புண்டாக்கும் அந்தக் கற்களை எடுத்து உரசினான்.

     அதிலிருந்து பறந்த தீப்பொறியில் கறுப்பாய் ஒன்று சந்தேகமில்லாமல் அவன் கண்களுக்குப் புலணாகியது. குறுவாளை எடுத்துக் கொண்டான். ஆனால் வெளிப்பட்ட அந்த உருவம் அதற்குள் எப்படி மறைந்து போய்விடும்?

     முன்பு கேட்ட அந்தச் சிரிப்பு திரும்பவும் கேட்கத் தொடங்கியது.

     அதைத் தொடர்ந்து சுழன்று சுழன்று காற்று வீசியது. மரத்தின் கீழிருந்த காய்ந்த சருகுகள் சலசலவெனச் சப்தித்தபடி பறந்து சென்றன.

     திரும்பவும் தட்தட் என்று காலடி ஓசை. ஒரு முடிவுக்கு வந்த அம்மையப்பன், தன் பக்கத்திலிருந்த மரத்தின் கிளையை வெட்டினான். தழைகளைக் கழித்து நீண்ட கொம்பாக்கி வளைத்துப் பார்த்தான்.

     அவ்வளவு சீக்கிரம் அது முறிந்துவிடும் கம்பல்ல என்று தெரிந்தது.

     கீழிருந்த சருகுகளை ஒன்றாய்க் குவித்து சிக்கிமுக்கி கற்களை உரசும் போது அந்தக் கறுப்பு உருவம் புதரிலிருந்து வெளிப்பட்டு இவனை நோக்கி ஓடி வந்தது.

     உருவம் இவனை அடைவதற்குள் நெருப்புண்டான தீப்பொறி மேல் சருகுகளை வைத்துவிட்டான். அது புகைந்து எரிவதற்குள் உருவம் அம்மையப்பனை நெருங்கிவிட்டது. கையிலிருந்த கோலால் அதன் இடுப்புப் பகுதியில் சுழற்றி அடிக்க ‘ஹாவ்’ என்று கத்தியபடி, தள்ளி விழுந்தது.

     அது எழுவதற்குள் புகைந்து கொண்டிருந்த சருகுகளின் மீது காய்ந்த இலைகளைப் போட்டுவிட்டதால் ‘குபுக்’ என்று பெருந் தீ ஏற்பட்டது.

     கொழுந்துவிட்டு எரிந்த அந்த வெளிச்சத்தில் அவனைப் பயமுறுத்திய கறுப்பு உருவம் ஒரு காட்டுக் கரடியாயிருந்தது.

     “ஓ! நீதானா?” என்று கொம்பைப் பலமாய்ப் பிடித்து அதைத் தாக்க ஆயத்தமானான்.

     ஆனால் நெருப்பைக் கண்டுவிட்ட அது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று மரங்களுக்கிடையே ஓடி மறைந்தது.

     காய்ந்த சுள்ளிகளை ஒன்று சேர்த்து மரப்பட்டையால் கட்டி அதைப் பற்ற வைத்துக் கொண்டான்.

     நீளமாயிருந்த பல சுள்ளிகளை அடுக்கி இன்னொன்றைத் தயார்படுத்தி வைத்துக் கொண்டான்.

     இடுப்பில் இருந்த பொன்முடிப்பையும் மீன்களுக்குப் போடும் உணவையும் புதருக்கு அடியில் அடையாளம் வைத்து மறைத்துவிட்டு, குறுவாளை இடையில் செருகிக் கொண்டு, கக்கத்தில் சுள்ளிக்கட்டையை வைத்து, ஒரு கையில் எரியும் கட்டையுடனும், இன்னொரு கையில் கம்புடனும் அந்த வழியே நடக்கலானான்.

     முன்பு கேட்ட சிரிப்பொலி கிளம்ப...

     தொடர்ந்து ஆந்தை பயங்கரமாய் அலறியது.

     “சை!” என்று கோபத்துடன் குரல் வந்த பக்கம் திருப்பிக் கத்தினான்.

     அவனுக்குத் தெரியும் சிரிக்கும் உருவம் யார் என்று! அதனால் மனதில் எந்தவிதச் சலனமின்றி தீவை சீக்கிரம் கடந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வேகமாய் நடக்கலானான்.

     ஏறக்குறைய இரவு தொடங்கி முதல் சாமம் கழியும் சமயத்தில், தீவின் மறுகரையை அவன் அடைந்தான். இருட்டைப் பார்த்து அவன் கண்கள் பழகிப் போனதால் எதிரே சிறிய தீவு ஐந்நூறு முழ தூரத்தில் இருப்பது தெரிந்தது.

     இரண்டும் ஒரே தீவாகத்தான் இருந்திருக்க வேண்டும். கடல் கொந்தளிப்பால் உள்ளே புகுந்த கடல் நீர், இரண்டையும் தனித்தனியாகப் பிரித்திருக்கிறது என்று யூகித்த அம்மையப்பன், படகோட்டி சொன்ன நாவல் மரத்தைத் தேடலானான்.

     அதற்குள் கையிலிருந்த இரண்டாவது சுள்ளிக்கட்டு எரிந்து முடியும் தருவாயிலிருந்தது. நெருப்பு அணைவதற்குள் நாவல் மரத்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற பதட்டத்துடன் அங்குமிங்கும் அலையும் போது...

     அவன் அருகிலேயே சிரிப்புச் சப்தம் கேட்டது.

     ‘இங்கே சிரிக்கும் அணில்கள் நிறைய இருக்க வேண்டும்’ என்று மனதிற்குள் கூறிக் கொண்ட அம்மையப்பன் சருகுகளைத் திரட்டுவதற்காக வடக்குப் பக்கமாகச் சென்றான்.

     கறுப்பு உருண்டைகளாக நாவற் பழங்கள் சிதறி நிறையத் தரையில் கிடக்க...

     அம்மையப்பன் மேலே நிமிர்ந்து பார்த்தான்; அணையப் போகும் தருணத்தில் இருந்த சுள்ளிக்கட்டை வெளிச்சத்தில் வடக்கும் தெற்குமாக ஒரு கிளை சூலாயுதம் போல பிரிந்து காற்றில் இப்படியும் அப்படியும் அழகாக அசைந்து கொண்டிருந்தது.

     “கண்டுபிடித்துவிட்டேன்” என்று உற்சாகத்துடனே கூறிய அம்மையப்பன், ‘கரடியை விரட்டக் கம்பு வெட்டியது நல்லதாகப் போயிற்று!’ என்று அதன் நேர் எதிரே எச்சரிக்கையுடன் கடலைக் கடக்கத் தயாரானான்.

     ஆழம் முழங்காலுக்கு மேல் இருந்தது. ஆனால் பக்கத்தில் பத்து ஆள் அளவிற்குப் பெரும் மணற் பள்ளங்கள் அமைந்திருந்தன. அதில் ஆளை விழுங்கக் கூடிய நீர்ச் சுழிப்புகள் பல இருந்தன. அதனால்தான் படகோட்டி நம்மை எச்சரிக்கை செய்திருக்கிறான் என்று நினைத்து மிகக் கவனத்துடன் காலை வைத்துக் கடலைக் கடக்கலானான்.

     கடல் நீரின் ஓட்டம் அதிகமாயிருந்தது. அம்மையப்பன் முழங்காலைப் பறித்து, கடலுக்குள் அவனை இழுத்துக் கொண்டு போவது மாதிரி நீரின் வேகம் பலத்துக் காணப்பட்டது. கையிலிருந்த கம்பால் முன்பக்கம் பள்ளம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த பிறகு காலை வைத்து நடந்தான்.

     தீவை அடைவதற்குள் நடுச்சாமம் வந்துவிட்டது. தட்டுத் தடுமாறி கரையேறினான்.

     “யாரடா அவன்?” என்று குரல் கேட்க, சட்டென்று தரையில் ஊர்ந்தபடி அருகிலிருந்த புதருக்குள் மறைந்து கொண்டான் அம்மையப்பன்.

     கையில் தீப்பந்தத்துடன், உருவிய வாளோடு கரிய நிறத்துடன் இருந்த வீரன் ஒருவன், அம்மையப்பன் ஒளிந்திருந்த புதரை நோக்கி வந்தான்.

     ‘ஆரம்பமே சரியில்லாமல் இருக்கிறது. வருபவனுடன் சண்டை போடுவதைத் தவிர வேறு வழியில்லையா?’ என்று சுற்று முற்றும் பார்த்தான்.

     அதற்குள் பின்னால் வந்த இன்னொரு வீரன், “என்னப்பா இருட்டில் போகிறாய்? அங்கே கூட்டம் ஏற்பாடு செய்ய தலைவர் உன்னைக் கூப்பிடுகிறார்!” என்றான்.

     “ஒரு ஆள் கரையேறினாற் போன்று தெரிந்தது!” என்றான் முதல் வீரன்.

     “ஆளா... இருக்காதுப்பா. சமீபத்தில் காட்டுக்கரடி ஒன்று தீவில் உலவிக் கொண்டிருந்தது. அதுவாயிருக்கும்!” என்றான்.

     “இல்லையப்பா! யாரோ ஒரு ஆள் தட்டுத் தடுமாறி கரையேறியதை என் கண்களால் பார்த்தேன்” என்றான் உறுதியான குரலில்.

     “அப்படியா?” என்று இருவரும் புதரை நெருங்க... இனி மறைந்திருப்பது விவேகமான காரியமல்ல என்று எண்ணி, கையிலிருந்த கோலினால் முதலில் வந்தவன் நெற்றிப் பொட்டைத் தாக்கினான். அவன் “அம்மா” என்று மயங்கி அலறி விழ, இன்னொருவன் தன் கையிலிருந்த ஈட்டியை அம்மையப்பன் மீது வீசினான்.

     மார்பை நோக்கி வந்த அதைத் தடுத்துக் கம்பினால் தட்டிக் கீழே தள்ளினான். “தீவிற்குள் வேற்று மனிதன்” என்று உரக்கக் கூவியபடி அந்த மனிதன் ஓடத் தலைப்பட்டான்.

     அவனைத் தப்பிக்கவிட்டால் நம் தலைக்குத்தான் ஆபத்து என்று உணர்ந்து, கையிலிருந்த கம்பைச் சுழற்றி மிக்க வேகத்துடன் அவன் பின்னங்கால்களை நோக்கி வீசினான். ஓடிய வீரனின் கால்களுக் கிடையில் அக்கம்பு சிக்கியது. நிலைதடுமாறித் தரையில் சாய்ந்தான்.

     பின்னால் துரத்திக் கொண்டு சென்ற அம்மையப்பன், குறுவாளை அவன் மார்பில் பாய்ச்சினான்.

     “அம்மா!” என்ற ஓசை அத்தீவே அதிரும்படிக் கேட்டது. இனி அந்த இடத்தில் இருப்பது தனக்குத் தீங்கைத் தரும் என்று உணர்ந்து, கம்புடன் சரசரவென வேறு பக்கம் நடையைக் கட்டினான் அம்மையப்பன்.

     இரு அசோக மரங்களுக் கிடையில், தழையால் வேயப்பட்ட அந்தச் சிறு குடிலுக்கு முன்பாக இரண்டு தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன.

     அந்த ஒளியில்...

     குடிலுக்கு முன்பாக, சுமார் பத்துப்பேர் அமர்ந்திருந்தனர். அவர்களோடு தென்னனும் தூமகேதுவும் இருந்தனர். அவர்களுக்கு எதிரேயிருந்த உயரமான இடத்தில் இருபத்தைத்து அகவை நிரம்பிய இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

     அவனைப் பார்த்தால் அரசகுலத்தைச் சேர்ந்தவன் போன்று தெரிந்தது. இடையில் ஒரு வாளும், கையில் பொன் கங்கணமும் அணிந்திருந்தான்.

     அவனை அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ‘இளவரசன்’ என்று அழைத்தார்கள்.

     ஆம். அவன் பாண்டிய மரபைச் சேர்ந்தவன்! பெயர் மாறவர்மன். இவன் தந்தை சடையவர்ம சீவல்லபன் தான் இழந்த பாண்டிய நாட்டைப் பெறுவதற்காக, சோழர்களுடன் போராடியபடி, மறைந்து வாழ்ந்து, ஆட்சியைப் பிடிக்கத் தக்க தருணத்தை எதிர் நோக்கியிருந்தார்.

     ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிதறிக் கிடக்கும் பாண்டிய அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே கூடி, அடுத்து என்ன செய்வதென்று விவாதித்து, பழையபடி மதுரையிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் சென்று ஒளிந்து கொள்வார்கள்.

     அதுபோன்று அன்றும் அவர்கள் வழக்கம் போல் கூடியிருந்தனர்.

     கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் பாண்டிய மன்னன் சடையவர்ம சீவல்லபன் இலங்கை அரசனிடம் உதவிபெற வேண்டி ஈழம் சென்றுவிட்டதால், அவன் மகனான மாறவர்மன் தற்போது கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, ‘வேற்று மனிதர் யாராவது இருக்கின்றார்களா?’ என்று அனைவரையும் ஒரு தரம் பார்த்தான்.

     அந்த இளவயது முகம் பலவித உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டது போன்று சிறிது சிவந்து காணப்பட்டது. தொண்டையைக் கனைத்துப் பேசத் துவங்கினான்:

     “மதுரைக் கோட்டையில் இன்னும் புலிக்கொடி பறந்து கொண்டிருக்கிறது. பாண்டிய வம்சத்தைச் சேர்த்த நமக்கு இது ஒரு பெரிய அவமானம். பேடிகளே, நீங்கள் ஆண் பிள்ளைகள் அல்ல என்பது போல் அது காற்றில் நம்மைப் பார்த்து நையாண்டி செய்தபடி பறந்து கொண்டிருக்கிறது. சிங்கங்கள் அமர்ந்த சிம்மாசனத்தில் இன்று சிறு நரிகள் வாசம் செய்கின்றன. இவற்றையெல்லாம் அங்கிருந்து ஓட்டி, குலதெய்வமான மதுரை மீனாட்சியின் ஆசியை எப்போது பெறப் போகின்றோம்? அதை நினைக்கும் போது என் நெஞ்சம் கொதிக்கின்றது! மதுராநகரில் வாழும் மக்கள் நம்மவர்களின் ஆட்சியை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த ஏக்கத்தைச் சோழ நரிகளுக்கு எதிராய் திருப்பிவிட முடியாத திறமையற்றவர்களாக இருக்கின்றோம். அவர்களிடையே பரவியிருக்கும் நம் ஒற்றர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றார்களா? இதற்காக தூமகேதுவிடம் வெளிப்படையாக என் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தான் பாண்டிய இளவரசனான மாறவர்மன்.

     தூமகேது எழுந்து கைகட்டி நின்றான்.

     “இளவரசே! புதிதாக வந்திருக்கும் சோழப் பிரதிநிதியான இராசேந்திரன் மிகக் கெடுபிடியாக இருக்கின்றான். நகரில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டிருக்கிறது! நமக்குப் பழக்கமான அரசாங்க வீரர்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டான். அத்துடன்...” என்று சொல்லிக் கொண்டு வந்த அவனை பாண்டிய இளவரசன் இடைமறித்து,

     “இந்தக் கோழைச் சமாதானத்தை நான் விரும்பவில்லை. பகைவர்கள் என்றால் நமக்குத் தொல்லை கொடுப்பவர்கள்தான்! அதையெல்லாம் சமாளித்து அவர்களை வெற்றி காண்பதில்தான் நம் திறமையே இருக்கின்றது!” என்றான்.

     “ஒப்புக் கொள்கிறேன்!” என்று முகவாட்டத்தோடு உட்கார்ந்து கொண்டான் தூமகேது.

     “கங்கைகொண்ட சோழபுரத்திலும் ஏக குழப்பம். அடுத்து ஆட்சிக்கு வருவது யார் என்பதில் அவர்களுக்குள்ளே பலமான கருத்து வேறுபாடுகள். அதன் விளைவாய், சோழ சைனியத்திலும் போட்டி கிளம்பிவிட்டதாக நமக்குத் தகவல்கள் வந்திருக்கின்றன. வலங்கை இடங்கை என்று சோழப்படைக்குள்ளே இரு பிரிவாகப் பிரிந்து இடங்கைப் பிரிவினர் அதிராசேந்திரன் அரசுகட்டில் ஏறுவதை எதிர்ப்பதாகச் சோழநாட்டில் பரவலாகப் பேசிக் கொள்கின்றனராம். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நமக்கெல்லாம் அதிரசம் கிடைத்தது போன்ற நிலை. இதை எந்த அளவிற்குச் சாதகமாக நாம் பயன்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு நமக்கு வெற்றி!” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே வீரன் ஒருவன் பரக்கப் பரக்கக் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தான்.

     “என்ன? என்ன?”வென்று அனைவரும் கேட்க, “நம் வீரர்களில் ஒருவன் கொலை செய்யப்பட்டுவிட்டான். இன்னொருவனுக்குப் பேச்சு மூச்சில்லை” என்றான்.

     மாறவர்மன் வாளை உருவிக் கொண்டான். அனைவரும் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் வீரனைப் பின் பற்றி ஓடினர்.

     அசோக மரத்தின் பக்கவாட்டில் சென்ற கிளையில் ஒளிந்தபடி இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மையப்பன் எச்சரிக்கையோடு இன்னும் சிறிது உயரச் சென்று கிளையோடு கிளையாக மறைந்து கொண்டான்.

     தரை... புதர்... செடி... கொடிகளின் பக்கம் எல்லாவற்றிலும் கொன்றவனைத் தேடி ஓய்ந்து போன அவர்கள், ‘யார் கொன்றிருப்பார்கள்? ஒருவேளை நமக்குள்ளே யாராவது முன் பகையை வைத்துக் கொன்றிருப்பார்களா?’ என்று குழம்பத் தொடங்கினர்.

     அவர்கள் அம்மாதிரி ஒரு முடிவுக்கு வருவதற்கும் காரணம் இல்லாமலில்லை. சமுத்திரத்திலிருந்து வெகு தொலைவிலிருக்கும் இந்தச் சிறிய தீவுக்குள் அன்னியர் எவரும் அவ்வளவு சீக்கிரம் வருவதற்கு வழியில்லாத காரணத்தால், அந்தவித ஒரு முடிவுக்கு அவர்கள் வரவேண்டியிருந்தது.

     சிலர் கரடியின் மீதும், இன்னும் சிலர் பேயின் மீதும் கூடப் பழியைப் போட்டனர்.

     மாறவர்மன் மட்டும் ‘சோழர்களின் வேலையாக இருக்குமோ?’ என்ற கேள்வியுடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

     மறு நாள் நண்பகல் சென்று மாலை நெருங்கியது. பேசிக் கொண்டபடி படகோட்டி கட்டுமரத்துடன் அங்கே போய்ப் பார்க்கலாம் என்று வலையுடன் அந்த இடத்திற்குச் சென்று காத்திருந்தான்.

     வழக்கத்திற்குமாறாய் கடல்காற்று அதிக வேகத்துடன் வீசிக் கொண்டிருந்தது.

     எவ்வளவு நேரம் ஆகுமோ என சுற்றுமுற்றும் பார்த்தபடி, மீன்களையாவது பிடிக்கலாம் என்று நீரோட்டமான பகுதிக்குச் செல்ல கட்டுமரத்தைத் திருப்பினான்.

     அச்சமயம்...

     அம்மையப்பன் இடுப்பளவு ஆழத்தில் வந்தவாறு “படகோட்டி! எங்கே போகிறாய்? நில்!” என்றான் உரத் குரலில்.

     காற்று படகோட்டியின் பக்கம் வீசியதால் அம்மையப்பன் கூப்பிட்டது அவன் செவிகளில் தெளிவாய் விழுந்தது. சடக்கென்று திரும்பிப் பார்த்தான்.

     ‘சிவாய நம!’ என்று உச்சரித்தபடி, சிவபக்தன் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

     ‘அட! இந்தச் சாமியார் கெட்டிக்கார ஆள்தான் போலிருக்கிறது! அந்த எமகாதகப் பயல்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எப்படியோ தப்பித்து வந்துவிட்டாரே!’ என்று வியப்புடன் கட்டுமரத்தை அவன் பக்கம் ஓட்டினான்.

     “படகோட்டியாய் இருந்தாலும் சொன்னபடி வந்துவிட்டாய்! கரைக்குப் போனதும் உனக்கு சில வெகுமதி தரப் போகின்றேன்!” என்று கட்டுமரத்தில் அமர்ந்த சிவபக்தன், “சீக்கிரம் கரைக்குச் செலுத்தப்பா. அவர்கள் நம்மைப் பார்த்துவிடப் போகின்றார்கள்!” என்று அவசரப்பட்டான்.

     வேகமாய்த் துடுப்பு வலித்த படகோட்டி, “உண்மையிலேயே நீங்க கெட்டிக்கார சாமிதான்!” என்றான்.

     அதை ஆமோதிப்பது போல கடலும் தன் அலைக்கரங்களால் அவனைத் தழுவ முயற்சிப்பது போல், கடல் நீரைக் கட்டுமரத்திற்குள் வாரி இறைத்தது.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247