1

     "நாடாயிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? மேடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ, அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே!"

     வாழ்க்கையின் எல்லாவிதமான அழகுகளும் இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றன என்பது போல் அந்த மலைச் சிகரங்கள் அத்தனை அழகாக இருந்தன. அழகாயிருக்கிற எல்லாவற்றையும் உங்களால் இரசிக்க முடியுமானால் மல்லிகைப் பந்தல் என்ற பெயரின் அழகைக் கூட நீங்கள் நன்றாக இரசித்து அனுபவிக்க முடியும்தான். சாயங்காலம் ஆறு ஆறரை மணி சுமாருக்குச் சூட்கேஸும் கையுமாக 'மல்லிகைப் பந்தல் ரோடு' இரயில் நிலையத்தில் இறங்கிய முதல் விநாடியிலிருந்து இந்த விநாடி வரை சத்தியமூர்த்தி அந்தப் பெயரின் அழகைத்தான் இரசித்துக் கொண்டிருந்தான்.

     மேலே மலைக்குப் போகிற கடைசிப் பஸ்ஸையும் கோட்டை விட்டு விட்டு இப்படி அந்தப் பெயரின் அழகையும் அந்த அழகின் தொலைதூரத்துச் சாட்சிகளாய்ச் சாயங்கால வானத்திலே மெல்லிய ஓவியக் கோடுகள் போல ஏறி இறங்கித் தெரியும் மலைகளையும் இரசிப்பதில் தனக்கென்ன இலாபம் என்று அவன் நினைக்கவில்லை. இன்னொன்றின் நலத்தைப் புரிந்து கொள்ள முயலும்போதோ, உணரும் போதோ சுயநலத்தை அளவுகோலாக வைத்து, இலாப நஷ்டம் பார்க்கும் வழக்கம் அவனிடம் என்றுமே இருந்ததில்லை.

     இலாபகரமாகவோ செழிப்பாகவோ வாழ்ந்தும் அவனுக்குப் பழக்கமில்லை. தன்னுடைய கஷ்டங்களைச் சகித்துக் கொண்டே பிறருடைய இலாபங்களுக்காக நிறையச் சந்தோஷப்பட்டிருக்கிறான் அவன். முள் படுக்கையின் மேல் கால் நீட்டிப் படுத்துக் கொண்டே முகம் மலரச் சிரிக்கும் சில அபூர்வ யோகிகளைப் போல் வாழ்க்கையின் கவலைகளைச் சுகமாக ஏற்றுக் கொண்டு வளர்வது அவனுக்குப் புதுமையில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் அப்படித்தான் வளர்ந்திருக்கிறான். இன்னும் நன்றாகச் சொல்லப் புகுந்தால் கல்லூரி நாட்களிலிருந்தே அவன் அப்படித்தான். அவனது படிப்பும் சிந்தனையும் வெறும் புத்தகங்களால் மட்டுமே வளர்ந்ததில்லை. அவற்றின் வளர்ச்சிக்கு வாழ்வில் அவன் அடைந்த கவலைகளும் கஷ்டங்களும் பெரும்பாலும் உதவி செய்திருக்கின்றன.

     மலையடிவாரத்து இரயில் நிலையமாகையினால் மெல்ல மெல்லக் குளிர் உறைக்கத் தொடங்கியிருந்தது. புகை படர்வது போல் கண்ணெதிரே தெரியும் தோற்றங்களைப் பனி மூடியிருந்தது. இரயில் சக்கரங்கள் உரசி உரசித் தேய்ந்த இருப்புப் பாதைகள் அந்த இருட்டிலும் வெள்ளிக் கோடுகளாய் நெடுந்தூரத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன. அந்த இடத்திலிருந்து அறுபது மைல் தொலைவு பயணம் செய்து மல்லிகைப் பந்தலுக்குப் போக வேண்டும். இரயிலிலிருந்து இறங்கியவுடன் சாயங்காலம் மேலே மலைக்குப் போகிற கடைசிப் பஸ்ஸிலேயே அவன் போயிருக்க வேண்டும். தற்செயலாய்ச் சந்திக்க நேர்ந்த நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்ததில் பஸ் தவறி விட்டது. இரயில் நிலையத்திலிருந்து வெளியேறிப் படி இறங்கினால் எதிரே பஸ் ஸ்டாண்டு தான். அவ்வளவு அருகில் இருந்தும் மிகச் சில விநாடிகளில் பஸ்ஸைத் தவற விட்டுவிட்டான் அவன். நண்பனைத் தவறவிட்டிருந்தால் பஸ் தவறியிருக்காது. பழகிய நண்பனைத் தவறவிட முடியாத காரணத்தால் பஸ் தவறிவிட்டது.

     "சத்யம்! எங்கே இந்தப் பக்கம் இப்படி அபூர்வமாக..." என்று கேட்டுக் கொண்டே முகத்தில் ஆச்சரியமும் மலர்ச்சியும் தோன்ற எதிரே வந்துவிட்ட நண்பனை எப்படிப் பார்க்காதது போல் போய்விட முடியும்? நண்பனோடு பேசி அனுப்பிவிட்டு இரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்று பார்த்தபோது, பஸ் போயிருந்தது. அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ பல நல்ல சந்தர்ப்பங்கள் இப்படிக் கடைசி விநாடியில் தான் தவறியிருக்கின்றன. இன்றைக்கு இந்தப் பயணமும் அப்படித்தான் தவறிப் போய்விட்டது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.