16
ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல் தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. "இப்போது நாமிருவரும் நிற்கிற கோலம் எப்படி இருக்கிறதென்று சொல்லட்டுமா?" என்று கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தியே அன்பின் நெகிழ்ச்சி மிகுதியினாலோ அல்லது வாய் குழறியோ 'சொல்லேன்' என்று ஏக வசனமாக ஒருமையில் பதில் சொல்லியது மோகினிக்குப் பிடித்திருந்தது. அவன் அப்படித் தன்னை அழைக்க வேண்டுமென்றுதான் அவள் விரும்பினாள். உரிமையை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்வதற்கு ஒருமைக்கும் கீழானதொரு சொல் இருக்குமானால் அந்தச் சொல்லாலும் சத்தியமூர்த்தி தன்னை அழைக்க வேண்டும் என்று தான் அவள் ஆசைப்பட்டாள்; ஏங்கினாள். அன்பைக் குறைத்துத் தன்னைத் தனியாகப் பிரித்து நிறுத்திக் கொள்ளும் அதிகப்படியான மரியாதையைவிட மரியாதையைக் குறைத்து அன்பால் பெருகி நெருங்கும் உரிமையையும், உறவையும் அவள் பெரிதும் விரும்பினாள். ஆனால் அதே சமயத்தில் சத்தியமூர்த்தி அவசரத்தினாலும் பதற்றத்தினாலும் அவளை அப்படி அழைத்ததற்காகத் தனக்குள் மனம் குழம்பிக் கொண்டிருந்தான். 'எல்லாவிதமான கட்டுப்பாட்டையும் மீறி, என் வாய் எப்படிக் குழறியது? நான் எப்படித் தடுமாறினேன்?' என்று எண்ணியபடி அவன் மனம் வருந்திக் கொண்டிருந்த போது தன்னுடைய வார்த்தைகளால் மோகினி அவனுடைய வருத்தத்தைத் தவிர்த்தாள். அவளுடைய அந்தப் பணிவும் விநயமும் அவனுடைய பரவசத்தை மிகுதியாக்கின. "நீங்கள் இப்படி வா, போ என்று உரிமையோடு ஒருமையில் அழைக்காமல், உயரத் தூக்கி வைத்து அநாவசியமாக மரியாதை கொடுத்து நேற்றுவரை என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தீர்கள். இன்றுதான் நான் சௌபாக்கியவதியானேன். 'சொல்லட்டுமா?' என்று நான் உங்களைக் கேட்டவுடன் 'சொல்லேன்' என்று ஒருமையில் பதில் வந்ததே உங்களிடமிருந்து - அந்த வார்த்தையை என் செவிகள் கேட்க நேர்ந்த நல்ல வேளையை நான் வாழ்த்துகிறேன். இனிமேல் இப்படியே அழையுங்கள். இப்படி அழைக்கப்படுவதில்தான் நான் மகிழ்ச்சியை உணர்கிறேன். அதோ எதிரில் உள்ள நிலைக்கண்ணாடி உங்களையும் என்னையும் சிறிதும் வஞ்சகமில்லாமல் மணமக்களைப் போல் பிரதிபலிக்கிறது பார்த்தீர்களா? இந்த மோதிரத்தை முதன் முதலாக இந்த வீட்டுக்குள் நீங்கள் நுழைந்த தினத்தன்றே உங்கள் விரலில் அணிவிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அப்போது இதில் இந்த நீலக்கல் உதிர்ந்திருந்தது. கல்லையும் பதித்து மோதிரத்துக்கு மெருகு கொடுத்து வாங்குவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இதற்காகத்தான் நீங்கள் ஊருக்குப் போவதற்குள் உங்களை மறுமுறையும் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்களோ உங்கள் கையில் உள்ள மோதிரத்தைக் கழற்றிப் பதிலுக்கு என் கையில் அணிவித்து விட்டீர்கள். என்னுடைய அம்மாவின் பெரியம்மா ஒருத்தி எனக்குப் பெரிய பாட்டி முறையாக வேண்டும், மதுரவல்லி என்று பெயர். அவள் தன்னுடைய பதினேழாவது வயதில் பக்கத்துச் சமஸ்தானத்துக்கு நவராத்திரியின் போது சதிராடப் போனவள் அங்கே கவிஞர் ஒருவரைச் சந்தித்துக் காதல் கொண்டாள். ஆனால் அடுத்த நவராத்திரிக்கு அவள் அங்கு போய் விசாரித்த போது பேரழகராகிய அந்தக் கவி அகால மரணமடைந்து விட்டதை அறிந்து, 'இனி இந்தக் கால்கள் சலங்கை கட்டி ஆடப் போவதில்லை' என்று விரதமெடுத்துக் கொண்டு திரும்பினவள் சாகின்றவரை தன் கைகளால் வெறும் வாத்தியங்களைத் தீண்டியது தவிர மனிதர்களைத் தன் அருகிலும் வரவிடாமல் வாழ்ந்து செத்துப் போனாளாம். சாகின்றவரை அந்தப் பெரிய பாட்டியின் ஞாபகத்தில் அவள் முதல் முதலாகச் சந்தித்த கவிஞரைத் தவிர வேறு எவரும் மதிப்புப் பெறவோ வணங்கப் பெறவோ இல்லையாம். அந்தப் பாட்டியை நான் பார்த்ததில்லை. ஆனால் அவளுடைய பரிசுத்தத்தையும் தூய்மையையும் பற்றி இந்த வீட்டில் எனக்கு நினைவு தெரிந்தபின் கதை கதையாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். 'நீயும் அந்தச் சனியன் பிடித்தவள் போனதைப் போலத்தான் உனக்கும் பயன் இல்லாமல் இந்த வீட்டுக்கும் பயனில்லாமல் போகப் போகிறாய். ஒருவேளை அவளே வந்து பிறந்து தொலைத்திருக்கிறாளோ என்னவோ?' என்று கோபத்தில் அம்மா என்னை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள். அம்மா அப்படித் திட்டுவதைக் கேட்கும் போதெல்லாம் நான் பெருமைப்பட்டிருக்கிறேனே தவிர ஒரு சிறிதும் வருத்தப்பட்டதில்லை. சௌகரியங்களோடு வாழ்கிறவர்கள் அதற்காகக் கர்வப்படலாம். ஆனால் தூய்மையோடு வாழ்கிறவர்கள்தான் 'நாம் வாழ்கிறோம்' என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். நான் சௌகரியங்களுக்கு ஆசைப்படவில்லை. தூய்மையைக் காத்துக் கொள்ள மட்டும் ஆசைப்படுகிறேன். பலவிதமான சூழ்நிலைகளை உத்தேசித்து நான் வாழவே கூடாது. ஆனால் நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள் என்ற நல்ல ஞாபகத்தைப் போற்றுவதற்காவது இன்னும் சிறிது காலம் வாழவும் வேண்டும்."
"நிச்சயமாக வாழவேண்டும்! நீங்கள்... இல்லை... இல்லை... நீ... வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீட்டுக்குள் வாயிற்படியேறி வந்தேன் நான். இந்தப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது நான் மேலே ஏறிக் கொண்டிருக்கிறேனா அல்லது மேலே ஏறிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டே கீழே இறங்கிக் கொண்டிருக்கிறேனா என்று எனக்குள் பலமுறை தயங்கியிருக்கிறேன் நான். அப்படித் தயங்குவதும் நியாயம் தானே? உலகத்தில் இரண்டு விதமான அன்பு உண்டு. மழையைப் போல் எப்போதாவது பெய்து நின்று விடுகிற அன்பு. சூரியனைப் போல் நாள் தவறாமல் தோன்றுகிற அன்பு. மழையைப் போல் பெய்து பெய்து நின்றுவிடுகிற அன்பைத்தான் உன் தாய் உனக்கு உபதேசம் செய்திருக்கிறாள். உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டிருக்கிற அன்பும் அப்படிப்பட்டதுதான்..."
"நான் புரிந்து கொண்டிருக்கிற அன்பு அப்படிப்பட்டது இல்லை. சத்தியமானது. என்னையே நான் அர்ப்பணித்திருப்பது." "இருக்கலாம், மோகினீ! ஆனால் ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல்தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருப்பதை நீயும் நானும் இன்றும் நாளையும் என்றும் கேட்கலாம்." "..." மோகினியிடமிருந்து அவனுக்கு மறுமொழியில்லை. பதில் சொல்லாமல் மெல்ல விசும்பி அழத் தொடங்கியிருந்தாள் அவள். சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் அற்புதமான முருகன் படம். ஒரு மூலையில் மௌனமாய் வைத்தது வைத்தபடியே கிடக்கும் வாத்தியங்கள் - இவற்றையெல்லாம் மாறி மாறிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த அழுகையைத் தாங்காமல் அருகில் நெருங்கித் தயங்கி நடுங்கும் கையால் அவள் தோளைத் தொட்டுக் கூறினான் அவன். "இதோ! என்னை நிமிர்ந்து பார், மோகினீ! உன்னை அழ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த வாக்கியங்களை நான் கூறவில்லை. உன்னுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் தான் இன்று இரண்டாவது முறையாகவும் இந்த வீட்டுக்கு நான் வந்தேன். உன்னுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் தான் இந்த மோதிரத்தை அணிந்து கொண்டேன். உன்னுடைய அன்புக்கு மரியாதை செய்ய வேண்டுமென்றுதான் பதிலுக்கு என் கை மோதிரத்தை உனக்கு அணிவித்தேன். நீ எனக்குச் சிரித்த முகத்தோடு விடை கொடுக்க வேண்டும்." அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். மறுபடியும் அவள் திரும்பி வந்த போது கையில் ஒரு சிறிய குங்குமச் சிமிழோடு வந்தாள். தன் கையினாலேயே அவன் நெற்றியில் திலகமிட்டாள். "போய் வாருங்கள், என்னை மறந்து விடாதீர்கள். உங்கள் ஞாபகத்தில் தங்கி வாழ்வதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு ஒன்றும் இல்லை" என்று நாத்தழுதழுக்கக் கூறிக் கண் கலங்கக் கைகூப்பினாள் மோகினி. பிரிய மனமில்லாமல் அவளைப் பிரிந்தான் அவன். மேலே நடந்து போக முடியாமல் தயங்கி நிற்கும்படி செய்து விடுகிற அன்பு யாருடையதாக இருந்தாலும் அந்த அன்புக்கு நெகிழ்ந்தும் நெகிழாமலும் அதிலிருந்து விலகி நடக்கத்தான் வேண்டியிருக்கிறது. தான் அந்தச் சந்திலிருந்து திரும்பி மறைகிற வரை அவள் வீட்டு வாயிற்படியிலேயே நின்று பார்த்துக் கொண்டிருப்பதை இரண்டொரு முறை பின் பக்கமாகத் திரும்பிப் பார்த்தபோது அவன் கண்டான். வேகமாகக் கைவீசி நடந்தபோது புது மெருகும் நீலக் கல்லுமாக மின்னியது அந்த மோதிரம். "இதென்னடா புது மோதிரம்?" என்று குமரப்பன் கேட்டால் என்ன மறுமொழி கூறுவது? வீட்டுக்குப் போய் நின்றால் அம்மாவோ தங்கையோ கூட அந்தக் கேள்வியை அவனிடம் கேட்கமுடியும். யார் யாரிடம் எப்படிப் பதில் சொல்வது என்று அவன் இப்போதே சிந்திக்கத் தொடங்கினான். ஏற்கெனவே கையிலிருந்த பழைய பொன் மோதிரத்தைக் கடையில் கொடுத்துவிட்டுத் தானே மேலும் கொஞ்சம் ரூபாய் கொடுத்து இதை மாற்றிக் கொண்டு விட்டதாகச் சொல்லிக் கொள்ளலாமென்று அவனுக்குத் தோன்றியது. யாருக்கும் கெடுதல் செய்யாத இந்தப் பொய்யை எண்ணுவதற்கும் பேசுவதற்கும் கூட அவன் கூசினான். 'தான் இப்படிப் பொய் சொல்லவேண்டிய நிலையை உண்டாக்கியவள் அவள் தானே' என்ற முறையில் மோகினியின் மேல் கோபமும் வந்தது அவனுக்கு. வீதியோரமாக நடந்து போய்க் கொண்டிருந்தவன் ஏதோ ஒரு பெரிய கடையில் முன்புறமாக இருந்த கண்ணாடியில் திரும்பும்போது தற்செயலாகத் தெரிந்து பிரதிபலித்த தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டான். கையில் நீலக்கல் மோதிரம் நெற்றியில் குங்குமத் திலகமுமாக ஆளே திடீரென்று புது மாப்பிள்ளையாக மாறிவிட்டாற்போலத் தோன்றியது. ஒரு கணம் அந்தத் திலகத்தை அழித்து விடுவதற்காக அவன் கை மேலே உயர்ந்தது. ஆனால் அப்படி அழிப்பதற்கும் மனம் துணியவில்லை. அதை அழிப்பதால் மனப்பூர்வமாகவும் அந்தரங்க சுத்தியோடும் செய்யப்பட்ட ஒரு மரியாதையை அவமதிப்பதாக உணர்ந்து மேலே எழுந்த கை தானாகவே தாழ்ந்தது. பெண்ணின் அன்பு என்பது மனிதனுடைய இதயத்தை மிக மென்மையாகத் துளைப்படுத்தும் உறுத்தாத விலங்குகளில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். சுழற்றவும் முடியாமல் கட்டிக் கொள்ளவும் முடியாமல் தவிக்க விடுகிற அந்த விலங்கு தன்னையும் இப்போது பிணித்திருப்பதைச் சத்தியமூர்த்தி நன்றாக உணர்ந்தான். 'நானும் கட்டுண்டேன்' 'நானும் கட்டுண்டேன்' என்பதை நிரந்தரமாக ஞாபகப்படுத்துவதைப் போல் அந்த மோதிரம் அவன் கையில் மின்னிக் கொண்டிருந்தது. 'இப்படி ஒரு சந்திப்பும் உறவும் என் வாழ்வில் தானா ஏற்பட்டிருக்கிறது?' என்பதை நினைத்து ஒரு கணம் தயங்கிப் பெருமூச்சு விட்ட பின், 'என் வாழ்வில்தான் ஏற்பட்டிருக்கிறது' என்பதை அவன் அந்தரங்கமாக ஒப்புக் கொண்டே ஆகவேண்டியிருந்தது. அன்று மாலை அவனும் குமரப்பனும் திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய்விட்டு வந்தார்கள். மறுநாள் மாலை மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுமுன் சத்தியமூர்த்தியை இரயில் நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லி விடைபெற்றான் குமரப்பன். ஊருக்குப் புறப்படுகிற நாள் மிகவும் தொலைவில் இருப்பது போல் தோன்றிவிட்டுக் கடைசியில் அருகில் வந்து 'நான் மிகவும் அருகில் தான் இருக்கிறேன்' என்று நெருங்கி நின்றாயிற்று. அன்று இரவு நெடுநேரம் வரை அப்பாவும், அம்மவும் அவனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். வேலையைத் தேடி வெளியூர் போகிற பிள்ளையைப் பெற்றோர் வழியனுப்புகிற போது வழக்கமாய்த் திரும்பத் திரும்பப் பேசுகிறவற்றையெல்லாம் அவர்களும் அவனிடம் பேசினார்கள். பயணத்துக்கான பரபரப்பில் மறுநாள் பொழுது விடிந்ததும் தெரியவில்லை; பொழுது சாய்ந்ததும் தெரியவில்லை. 'நல்ல சகுனம் ஆகிறதா என்று பார்த்துக் கொண்டு படியிறங்கு' என்று கூறிய அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தயாராக தெருவில் கொணர்ந்து நிறுத்தியிருந்த குதிரை வண்டியை நோக்கி நடந்தான் சத்தியமூர்த்தி. வண்டியில் பயணத்துக்கான சாமான்களையெல்லாம் ஏற்றி வைத்தாயிற்று. அப்பாவும் ஏறி உட்கார்ந்து கொண்டு விட்டார். அம்மாவும், தங்கைகளும் வாயிற்படியில் வந்து நின்று கொண்டு அவனுக்கு விடை கொடுத்தார்கள். குதிரை வண்டி தெருத் திரும்புகிறவரை மனம் ஏதோ பெரிய சுமையைத் தாங்க முடியாமல் கனப்பது போலிருந்தது. அதற்குள் தந்தை ஏதோ சொல்லத் தொடங்கினார். இரயில் நிலையம் வருகிறவரை சத்தியமூர்த்தி அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தான். குமரப்பனும் வேறு சில நண்பர்களும் இரயில் நிலையத்துக்கு வழியனுப்ப் வந்திருந்தார்கள். இரயில் புறப்படுகிறவரை நண்பர்கள் ஒவ்வொருவரோடும் பேசுவதற்குத்தான் சரியாயிருந்தது. சத்தியமூர்த்தியின் நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டதனால் தந்தை இரயில் நிலையத்திற்குள் வந்தபின் அவனோடு அதிகம் பேசவில்லை. இரயில் நகர்ந்ததும், 'போய்ச் சேர்ந்த விவரத்துக்குக் கடிதம் எழுது' என்று அவர் கூறியதற்கு 'ஆகட்டும்' என்று தலையசைத்தான் அவன். பிளாட்பாரத்தை விட்டு இரயில் விரைந்து செல்லத் தொடங்கியபோது தந்தை தளர்ந்த நடையோடு திரும்பிச் சென்று கொண்டிருப்பதை அவன் ஓடும் இரயிலிலிருந்தே பார்த்தான். நல்ல வேளையாக அன்று இரவு அவன் மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் தங்க வேண்டிய அவசியம் நேரவில்லை. மேலே மலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கடைசி பஸ்ஸில் அவனுக்கு இடம் கிடைத்துவிட்டது. மறுநாள் கல்லூரி திறக்கப் போகிற நாளாகையால் பஸ்ஸில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவனைப் போல் புதிதாக மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை ஒப்புக் கொள்வதற்குச் செல்லும் இரண்டொரு விரிவுரையாளர்களும் ஏற்கெனவே அங்கு வேலை பார்க்கிற விரிவுரையாளர்களில் லீவுக்கு ஊர் போய்விட்டு மீண்டும் திரும்புகிற சிலரும் பஸ்ஸில் உடன் பயணம் செய்தார்கள். விடுமுறைக்காலம் என்ற சுதந்திரம் முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்புகிற மாணவ இளைஞர்களின் பேச்சும் சிரிப்புமாகப் பஸ்ஸில் ஓர் ஆரவாரம் இடையறாமல் இருந்தது. அதே கல்லூரியில் தாவர இயல் (பாடனி) விரிவுரையாளராக வேலை ஏற்றுக் கொள்ள வரும் இளைஞர் ஒருவரும் பொருளாதார விரிவுரையாளராக வேலை ஏற்றுக் கொண்டு இரண்டு மூன்றாண்டுகளாக வேலை பார்த்து வரும் நடுத்த வயதினர் ஒருவரும் பஸ்ஸில் சத்தியமூர்த்திக்கு அருகே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தற்செயலாக பயணத்தின் போது ஒருவரையொருவர் விசாரித்ததில் அது தெரிந்தது. "இந்த உத்தியோகத்தில் ஒரு சுகமும் இல்லை. ஏதோ வேறு வழி இல்லாத காரணத்தால் கல்லூரி ஆசிரியராக வந்து மாட்டிக் கொண்டு விட்டேன். ஏதாவது ஒரு கம்பெனியில் சின்ன உத்தியோகம் பார்த்துக் கொண்டு போயிருந்தால் கூட இதற்குள் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கும்" என்று பொருளாதார விரிவுரையாளர் சத்தியமூர்த்தியிடம் அலுத்துக் கொண்டார். வாழ்க்கையே பணத்தைக் கொள்ளையடித்துக் குவிப்பதற்காக அளிக்கப்படுகிற ஒரு சந்தர்ப்பம் என்று அவர் நினைப்பதாகப் பட்டது சத்தியமூர்த்திக்கு. ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறையின் இலட்சியத்தில் மனப்பிடிப்பு இல்லாதவர்கள் ஒட்டிக் கொண்டு வேதனைப் படுவதைப் போல் நாட்டுக்கு மொத்தமான துன்பம் வேறு இருக்க முடியாது என்று நினைத்தான் அவன். சொந்தக் கசப்பை வெளியிடுவதற்கு மட்டும் தான் வாய் திறந்து பேச வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காகவே பிறரோடு உரையாடுகிறவர்களைச் சத்தியமூர்த்தியால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அந்தப் பொருளாதார விரிவுரையாளரோடு பேசுவதைத் தவிர்ப்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தபடியே தூங்குவது போல பாவனை செய்யலானான் அவன். பின் பக்கத்திலிருந்து மாணவர்களின் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. 'வற்றல் குழம்பு' என்று கௌரவப் பெயர் சூட்டப்பெற்ற ஒரு பேராசிரியரைப் பற்றி அதே பெயரை உபயோகித்து அந்த மாணவர்கள் பரம உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சத்தியமூர்த்திக்கு மாணவர்களின் அந்த அரட்டையைக் கேட்கக் கேட்கச் சிரிப்பு ஒரு பக்கமும் வேதனை ஒரு பக்கமுமாக இருந்தது. போராட்டங்களும், சாதனைகளும் நிறைந்த தன்னுடைய கல்லூரி நாட்களை நினைத்துக் கொண்டான் அவன். 'துடிதுடிப்பு நிறைந்தவர்களாக இருப்பதும் இப்படி வம்பு பேசுவதும் இல்லாத மாணவர்களை உலகம் முழுவதும் தேடினாலும் காணமுடியாது. ஆனால் ஆசிரியர்கள் அறிவின் கம்பீரமும், தோற்றத்தின் கம்பீரமும் உள்ளவர்களாக இருந்தால் மாணவர்களை ஓரளவு கட்டுப்பாட்டோடு ஆளலாம்' என்று அவன் மனம் சிந்தித்தது. மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் போய்ப் பஸ் நிற்கிறவரை 'வற்றல் குழம்பை'யும் 'கீரை வடை'யையும் பற்றியே வெகு உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தார்கள் அந்த மாணவர்கள். அந்தப் பெயர்களெல்லாம் அப்பாவி ஆசிரியர்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயர்கள் என்று சிறிது நேரம் தொடர்ந்து அவர்களுடைய பேச்சைச் செவி மடுத்ததிலிருந்து சத்தியமூர்த்தி அனுமானம் செய்து கொண்டு அறிந்தான். அந்த மாணவர்களின் வம்பையும் வாயரட்டையையும் கேட்டுப் பக்கத்திலிருந்த தாவர இயல் விரிவுரையாளர் மருள்வதையும் அவன் கவனித்தான். மஞ்சு படிந்து மங்கிய கட்டிடங்களையும் மலைச் சூழ்நிலையில் கண்ணுக்குக் குளுமையாக அடங்கித் திரியும் மின் விளக்குகளுமாக இரவில் அந்த நகரம் மிக அழகாக இருந்தது. ஊரின் நடுமையாக இருந்த ஏரியில் மின் விளக்குகள் ஆடி அசைந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தன. வட்ட வடிவமாக இருந்த அந்த ஏரியைச் சுற்றிலும் சாலையில் வரிசையாக அமைந்திருந்த மின் விளக்குகள் அந்தரத்திலிருந்து நழுவி விழும் ஒரு மாபெரும் ஒளியாபரணத்தைப் போல் தோன்றியது. சில்லென்று மலைக்குளிர் உடம்பில் உறைத்தது. பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்ற போது ஊரே உறங்கிப் போயிருப்பது போல அத்தனை அமைதியாக இருந்தது. உடன் பயணம் செய்த தாவர இயல் விரிவுரையாளருக்கு யாரோ தெரிந்தவர்கள் வீடு இருந்ததால் அங்கே தங்குவதற்குப் போய்விட்டார் அவர். பொருளாதார விரிவுரையாளரும் அவசரமாக இறங்கிப் போய்விட்டார். பஸ் கண்டக்டர் இறக்கி வைத்த சத்தியமூர்த்தியின் பெட்டிகளும் சாமான்களும் தரையில் இருந்தன. எங்கே போய்த் தங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வருவதாக நச்சரித்துக் கொண்டு இரண்டு மூன்று கூலிக்காரச் சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து நின்றார்கள். நிற்கவே முடியாமல் குளிர்ந்த மலைக் காற்றுச் சுழித்துச் சுழித்து வீசிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பூபதியின் வீட்டை தேடிக் கொண்டு தங்கப் போவது அநாகரிகமாக இருக்குமென்று தயங்கினான் அவன். கல்லூரிக்குப் போகலாமென்றால் 'இந்த வேளையில் அங்கு யார் இருக்கப் போகிறார்கள்?' என்று நினைத்து அந்த எண்ணத்தையும் கைவிட்டான். ஏரிக்கரையில் 'லேக் வியூ லாட்ஜ்' என்று ஒரு பெரிய விடுதி இருப்பதாகச் சொல்லி அங்கே போய்த் தங்கிக் கொள்ளலாமென்று கூலிக்காரப் பையன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். என்ன செய்வதென்று அவன் தயங்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகப் பூபதியின் மகள் பாரதியே காரில் வந்து இறங்கினாள். அவளுடைய வரவும் வணக்கமும் ஒரே உற்சாகமாக இருந்தன. "நாளைக் காலையில் கல்லூரி திறக்க இருப்பதால் நீங்கள் இன்றிரவு கடைசி பஸ்ஸுக்கு எப்படியும் வந்துவிடுவீர்கள் என்று நானாக நினைத்துக் கொண்டு தேடி வந்தேன் சார். நான் நினைத்தது சரியாகப் போயிற்று. அப்பா ஊரில் இல்லை. எஸ்டேட்டுக்குப் போயிருக்கிறார். புதிதாக வருகிற ஆசிரியர்களை வரவேற்றுத் தங்குவதற்கு இடம் கூட ஏற்பாடு செய்யாமல் பிரின்ஸ்பலும் ஹெட்கிளார்க்கும் என்னதான் வெட்டி முறிக்கிறார்களோ பாவம்! நீங்களானால் பஸ்ஸிலிருந்து இறங்கி இந்தக் குளிரில் திண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். வாருங்கள், உங்களைக் கல்லூரியில் கொண்டு போய் விடுகிறேன். கல்லூரி வாட்ச்மேனை எழுப்பி ஆசிரியர்கள் ஓய்வு கொள்ளும் அறையில் இன்றிரவு தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யலாம்" என்று அவள் கூறியபோது சத்தியமூர்த்தியின் நிலை தர்மசங்கடமாக இருந்தது. ஆர்வமும் அன்பும் நெகிழ்கிற குரலில் அவள் வேண்டிக் கொள்வதை அவனால் மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் தயக்கமும் இருந்தது. அமைதியான அந்த இரவு நேரத்தில் அவள் வந்தது, நின்றது, அவசரப்படுத்தியது எல்லாம் வியப்புக்குரியனவாயிருந்தன. குளிருக்கு அடக்கமாக கிளிப்பச்சை நிறத்துக்கு ஓர் அழகிய கம்பளிச் சட்டை (ஸ்வெட்டர்) அணிந்திருந்தாள் அவள். இடையிலிருந்த வாடா மல்லிகை நிற வாயில் புடவைக்கும், அந்தப் பச்சைச் சட்டைக்கும் இயைபாக அவள் தோன்றிய தோற்றத்தில் ஏதோ ஓர் அழகு பிறந்து அவனைக் கவர்ந்தது. "ஏன் இப்படித் தயங்குகிறீர்கள்? நீங்கள் இந்தப் பஸ்ஸில் தான் வருவீர்கள். உங்களை அவசியம் சந்திக்க வேண்டும் என்று தவித்துக் கொண்டு பரபரப்போடு ஓடி வந்திருக்கிறேன் நான். நீங்களோ பாராமுகமாகத் தயங்கி நிற்கிறீர்கள்?" என்று அவள் செல்லமாகக் கோபித்துக் கொள்கிற குரலில் அவனைக் கேட்டபோது தனது மௌனமும் தயக்கமும் அந்தப் பேதைப் பெண்ணின் மனத்தைப் புண்படுத்துகின்றன என்பது அவனுக்குப் புரிந்தது. "தயக்கம் ஒன்றும் இல்லை! சட்டப்படி நாளைக் காலையிலிருந்து தான் நான் மல்லிகைப்பந்தல் கல்லூரியின் விரிவுரையாளன். இன்றே நான் தங்குவதற்கு இடமும் வசதிகளும் தேடித்தர வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ நான் உதவியை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? என் சொந்த ஏற்பட்டில் நானே தங்கிக் கொள்வதுதான் முறை! இல்லையா?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்ட போது அவள் முகம் வாடிவிட்டது. "நான் ஏதோ தெருவில் போகிறவள் உங்களை அழைத்து உபசாரம் செய்ய வரவில்லை. நீங்கள் எந்தக் கல்லூரியில் வேலை பார்க்க வருகிறீர்களோ அந்தக் கல்லூரி நிர்வாகியின் மகள் என்ற முறையில் வந்து உங்களைக் கூப்பிட்டால் வருவீர்களோ இல்லையோ...?" என்று அவள் கேட்டபோது அவனால் மறுமொழி கூற முடியவில்லை. அவளுடைய பிடிவாதத்துக்கு முன் அவன் தோற்றான். கூலிக்காரச் சிறுவன் ஒருவனை ஏவி அவனுடைய பெட்டி முதலியவற்றைக் காரில் எடுத்து வைக்கச் செய்தாள் அவள். அவனைக் கல்லூரியில் கொண்டு போய்விட்டு வாட்ச்மேனை எழுப்பித் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்த பின்புதான் அவள் வீடு திரும்பினாள். அரைமணி நேரம் கழித்து வாட்ச்மேன் பிளாஸ்க்குடனும் ஒரு சீப்பு மலைப் பழத்துடனும் சத்தியமூர்த்தியைத் தேடி வந்து சேர்ந்தான். "பிளாஸ்கிலே பால் இருக்கு! எடுத்துக்குவீங்களாம்..." என்று அவற்றைச் சத்தியமூர்த்திக்கு அருகே கொண்டு வந்து வைத்த போதும் அந்த அன்பு தன்னைத் துன்பப்படுத்துவதாகவே அவன் உணர்ந்தான். நான்கு மலைப் பழத்தையும் பாலையும் அவன் எடுத்துக் கொள்வதைத் தானே எதிரேயிருந்து பார்த்த பின்புதான் 'வாட்ச்மேன்' அங்கிருந்து போனான். மறுநாள் காலையில் விடிந்தும் விடியாததுமாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த ஹெட்கிளார்க்கையும் பிரின்ஸிபாலையும் சத்தியமூர்த்தி சந்திக்க நேர்ந்தது. அவர்களோடு பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே தான் அங்கு தங்கியிருப்பதோ தொடர்ந்து தங்குவதோ அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொண்டு விட முடிந்தது. பூபதியின் மகள் தன்னை அங்கே அழைத்து வந்து தங்கச் செய்ததை வாட்ச்மேன் அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டுமென்றும் அவனுக்குத் தோன்றியது. இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த போது பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் இடையே கல்லூரி முதல்வரிடம் ஒரே ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. மேவாய்க்குக் கீழே சின்னஞ்சிறு தேன்கூடு கட்ட ஆரம்பித்திருப்பதுபோல் புல்கானின் தாடி வளர்க்கத் தொடங்கியிருந்தார் கல்லூரி முதல்வர். அவருடைய முகத்தை முன்னிலும் விகாரமாகக் காண்பிப்பதில் இந்தப் புதிய தாடி மிக மிக ஒத்துழைத்துக் கொண்டிருந்தது. "மிஸ்டர் சத்தியமூர்த்தி... லேக் அவென்யூவில் நிறைய மாடி ரூம்கள் கிடைக்கும். நான் வேண்டுமானால் நம் ஹெட்கிளார்க்கிடம் சொல்லி உங்களுக்கு ஒரு ரூம் பார்க்கச் சொல்லட்டுமா?" என்று அவன் அங்கிருப்பது தமக்குப் பிடிக்காததை மிகவும் நாசூக்காகக் கூறியிருந்தார் கல்லூரி முதல்வர். "உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் சார். இன்றைக்குச் சாயங்காலத்துக்குள் நானே ஒரு ரூம் பார்த்துக் கொண்டு போய்விடுவேன்" என்று அவர் கேட்காத கேள்விக்கும் சேர்த்து அவருக்குப் பதில் சொன்னான் அவன். அந்தப் பதிலைக் கூறிவிட்டுத் தனக்குள் சிந்திக்கத் தொடங்கிய சத்தியமூர்த்தி, 'இனி ஒவ்வொரு நாளும் இந்தத் திமிங்கலத்தோடு நாம் போராடி வெல்ல வேண்டியிருக்கும்' என்ற எதிர்கால நிகழ்ச்சியை இன்றே நினைவு கூர்ந்தான். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|