16

     ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல் தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

     "இப்போது நாமிருவரும் நிற்கிற கோலம் எப்படி இருக்கிறதென்று சொல்லட்டுமா?" என்று கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தியே அன்பின் நெகிழ்ச்சி மிகுதியினாலோ அல்லது வாய் குழறியோ 'சொல்லேன்' என்று ஏக வசனமாக ஒருமையில் பதில் சொல்லியது மோகினிக்குப் பிடித்திருந்தது. அவன் அப்படித் தன்னை அழைக்க வேண்டுமென்றுதான் அவள் விரும்பினாள். உரிமையை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்வதற்கு ஒருமைக்கும் கீழானதொரு சொல் இருக்குமானால் அந்தச் சொல்லாலும் சத்தியமூர்த்தி தன்னை அழைக்க வேண்டும் என்று தான் அவள் ஆசைப்பட்டாள்; ஏங்கினாள். அன்பைக் குறைத்துத் தன்னைத் தனியாகப் பிரித்து நிறுத்திக் கொள்ளும் அதிகப்படியான மரியாதையைவிட மரியாதையைக் குறைத்து அன்பால் பெருகி நெருங்கும் உரிமையையும், உறவையும் அவள் பெரிதும் விரும்பினாள். ஆனால் அதே சமயத்தில் சத்தியமூர்த்தி அவசரத்தினாலும் பதற்றத்தினாலும் அவளை அப்படி அழைத்ததற்காகத் தனக்குள் மனம் குழம்பிக் கொண்டிருந்தான். 'எல்லாவிதமான கட்டுப்பாட்டையும் மீறி, என் வாய் எப்படிக் குழறியது? நான் எப்படித் தடுமாறினேன்?' என்று எண்ணியபடி அவன் மனம் வருந்திக் கொண்டிருந்த போது தன்னுடைய வார்த்தைகளால் மோகினி அவனுடைய வருத்தத்தைத் தவிர்த்தாள். அவளுடைய அந்தப் பணிவும் விநயமும் அவனுடைய பரவசத்தை மிகுதியாக்கின.

     "நீங்கள் இப்படி வா, போ என்று உரிமையோடு ஒருமையில் அழைக்காமல், உயரத் தூக்கி வைத்து அநாவசியமாக மரியாதை கொடுத்து நேற்றுவரை என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தீர்கள். இன்றுதான் நான் சௌபாக்கியவதியானேன். 'சொல்லட்டுமா?' என்று நான் உங்களைக் கேட்டவுடன் 'சொல்லேன்' என்று ஒருமையில் பதில் வந்ததே உங்களிடமிருந்து - அந்த வார்த்தையை என் செவிகள் கேட்க நேர்ந்த நல்ல வேளையை நான் வாழ்த்துகிறேன். இனிமேல் இப்படியே அழையுங்கள். இப்படி அழைக்கப்படுவதில்தான் நான் மகிழ்ச்சியை உணர்கிறேன். அதோ எதிரில் உள்ள நிலைக்கண்ணாடி உங்களையும் என்னையும் சிறிதும் வஞ்சகமில்லாமல் மணமக்களைப் போல் பிரதிபலிக்கிறது பார்த்தீர்களா? இந்த மோதிரத்தை முதன் முதலாக இந்த வீட்டுக்குள் நீங்கள் நுழைந்த தினத்தன்றே உங்கள் விரலில் அணிவிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அப்போது இதில் இந்த நீலக்கல் உதிர்ந்திருந்தது. கல்லையும் பதித்து மோதிரத்துக்கு மெருகு கொடுத்து வாங்குவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இதற்காகத்தான் நீங்கள் ஊருக்குப் போவதற்குள் உங்களை மறுமுறையும் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்களோ உங்கள் கையில் உள்ள மோதிரத்தைக் கழற்றிப் பதிலுக்கு என் கையில் அணிவித்து விட்டீர்கள். என்னுடைய அம்மாவின் பெரியம்மா ஒருத்தி எனக்குப் பெரிய பாட்டி முறையாக வேண்டும், மதுரவல்லி என்று பெயர். அவள் தன்னுடைய பதினேழாவது வயதில் பக்கத்துச் சமஸ்தானத்துக்கு நவராத்திரியின் போது சதிராடப் போனவள் அங்கே கவிஞர் ஒருவரைச் சந்தித்துக் காதல் கொண்டாள். ஆனால் அடுத்த நவராத்திரிக்கு அவள் அங்கு போய் விசாரித்த போது பேரழகராகிய அந்தக் கவி அகால மரணமடைந்து விட்டதை அறிந்து, 'இனி இந்தக் கால்கள் சலங்கை கட்டி ஆடப் போவதில்லை' என்று விரதமெடுத்துக் கொண்டு திரும்பினவள் சாகின்றவரை தன் கைகளால் வெறும் வாத்தியங்களைத் தீண்டியது தவிர மனிதர்களைத் தன் அருகிலும் வரவிடாமல் வாழ்ந்து செத்துப் போனாளாம். சாகின்றவரை அந்தப் பெரிய பாட்டியின் ஞாபகத்தில் அவள் முதல் முதலாகச் சந்தித்த கவிஞரைத் தவிர வேறு எவரும் மதிப்புப் பெறவோ வணங்கப் பெறவோ இல்லையாம். அந்தப் பாட்டியை நான் பார்த்ததில்லை. ஆனால் அவளுடைய பரிசுத்தத்தையும் தூய்மையையும் பற்றி இந்த வீட்டில் எனக்கு நினைவு தெரிந்தபின் கதை கதையாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். 'நீயும் அந்தச் சனியன் பிடித்தவள் போனதைப் போலத்தான் உனக்கும் பயன் இல்லாமல் இந்த வீட்டுக்கும் பயனில்லாமல் போகப் போகிறாய். ஒருவேளை அவளே வந்து பிறந்து தொலைத்திருக்கிறாளோ என்னவோ?' என்று கோபத்தில் அம்மா என்னை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள். அம்மா அப்படித் திட்டுவதைக் கேட்கும் போதெல்லாம் நான் பெருமைப்பட்டிருக்கிறேனே தவிர ஒரு சிறிதும் வருத்தப்பட்டதில்லை. சௌகரியங்களோடு வாழ்கிறவர்கள் அதற்காகக் கர்வப்படலாம். ஆனால் தூய்மையோடு வாழ்கிறவர்கள்தான் 'நாம் வாழ்கிறோம்' என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். நான் சௌகரியங்களுக்கு ஆசைப்படவில்லை. தூய்மையைக் காத்துக் கொள்ள மட்டும் ஆசைப்படுகிறேன். பலவிதமான சூழ்நிலைகளை உத்தேசித்து நான் வாழவே கூடாது. ஆனால் நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள் என்ற நல்ல ஞாபகத்தைப் போற்றுவதற்காவது இன்னும் சிறிது காலம் வாழவும் வேண்டும்."

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.