10

     நாம் எப்படி எங்கே வாழ விரும்புகிறோம் என்பதும் உலகம் நம்மை எங்கே எப்படி வாழ வேண்டுமென்று எதிர்பார்க்கிறது என்பதும் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் இரண்டு எல்லைகள்.

     தனக்கு வந்திருக்கிற கடிதம் கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ தான் வந்திருக்க வேண்டுமென்று தன் தந்தை ஆவலோடு எதிர்பார்த்துத் தவிப்பது சத்தியமூர்த்திக்குத் தெரிந்தது. அப்பா மட்டுமல்ல. அம்மாவும் இப்படி எதிர்பார்த்துத்தான் தவிக்கிறாள். பிறரை எதிர்பார்த்துத் தவிக்க வைத்துவிட்டு வாழ்வதிலுள்ள வேதனையை அந்த விநாடியில் சத்தியமூர்த்தி மிக நன்றாக உணர்ந்தான். இதைக் காட்டிலும் அதிகமாக அவன் மனத்தை வேதனைப்படுத்தக் கூடிய வேறு செய்தி ஒன்றைத் தந்தை அப்போது அவனிடம் கூறினார்.

     "முடிந்தால் இன்றைக்குச் சாயங்காலமாவது நாளைக்குக் காலையிலாவது கண்ணாயிரத்தைப் போய்ப் பார். நான் அவரிடம் நேற்றுப் பேசிக் கொண்டிருந்த போது உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தச் சுற்று வட்டாரத்தில் கண்ணாயிரம் மனம் வைத்தால் சாதிக்க முடியாத காரியமில்லை. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையைப் பற்றி உனக்கே நம்பிக்கையில்லை என்று தோன்றுகிறது. கண்ணாயிரம் யாரிடமாவது வேண்டியவர்கள் மூலம் சொல்லி உனக்கு ஒரு வேலை பார்த்துத் தர முடியும். ஞாபகத்தில் வைத்துக் கொள். கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு நமக்கு என்றைக்கும் வேண்டும்."

     யாருடைய சமூக வாழ்க்கையைப் பற்றி மிகவும் போலியானதென்றும் பொய்யானதென்றும் எண்ணியெண்ணி அவன் வருத்தப்பட்டிருக்கிறானோ அவரிடமே அவனைப் போய் நிற்கச் சொல்கிறார் தந்தை. பொய்யாகவும் வஞ்சகமாகவும் வாழ்ந்தாலும், பணமும், காரியங்களைச் சாதிக்கிற திறமையும் உள்ளவர்கள் சமூகத்தை எவ்வளவிற்கு மயக்கி விடுகிறார்கள் என்று எண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி. தன் தந்தையே கண்ணாயிரத்தைப் பெரிய மனிதராக மதிக்கும் அளவிற்குக் கண்ணாயிரம் மயக்கும் தன்மை உள்ளவராக இருக்கிறார் என்பதை அறிந்த போது வேதனையும் ஏமாற்றமும் அவனுக்கு ஒருங்கே ஏற்பட்டன. மீண்டும் அந்த வாக்கியங்களைத் தான் நினைத்தான் அவன். "நல்ல மனித வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காகவும் சேர்ந்தே போராட வேண்டியிருக்கிறது."

     நேர்மையான உணர்ச்சிகளில் ஆழ்ந்து வாழத் தெரியாமல் ஏனோ தானோ என்று மிதந்து கொண்டு வாழும் கண்ணாயிரத்தைப் போன்றவர்களைச் சத்தியமூர்த்தி வெறுத்தான். அவனுடைய தந்தையோ கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு என்றைக்கும் வேண்டும் என்கிறார்.

     "என்ன? நான் சொல்லியது ஞாபகத்தில் இருக்கட்டும்! சாயங்காலம் கண்ணாயிரத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வா..." என்று மறுபடியும் அவன் தந்தை அவனை வற்புறுத்தினார். தன் கையிலிருந்த அந்தக் கடிதத்தை - அதைச் சூழ்ந்து கொண்டு மணக்கும் மல்லிகைப்பு மணத்தோடு சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் சத்தியமூர்த்தி. "கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் நான் கண்ணாயிரத்துக்கு முன்னால் போய்க் கையைக் கட்டிக் கொண்டு நிற்க மாட்டேன் அப்பா!" என்று சொல்லிவிடுவதற்கு நாக்குத் துடித்தது. தான் அப்படி எதிர்த்துப் பேசினால் வாழ்க்கையில் பல காரணங்களால் ஏற்கெனவே நொந்து போயிருக்கிற தந்தையின் மனம் இன்னும் வேதனை கொள்ளும் என்று தன்னை அடக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டான் சத்தியமூர்த்தி.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.