10
நாம் எப்படி எங்கே வாழ விரும்புகிறோம் என்பதும் உலகம் நம்மை எங்கே எப்படி வாழ வேண்டுமென்று எதிர்பார்க்கிறது என்பதும் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் இரண்டு எல்லைகள். தனக்கு வந்திருக்கிற கடிதம் கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ தான் வந்திருக்க வேண்டுமென்று தன் தந்தை ஆவலோடு எதிர்பார்த்துத் தவிப்பது சத்தியமூர்த்திக்குத் தெரிந்தது. அப்பா மட்டுமல்ல. அம்மாவும் இப்படி எதிர்பார்த்துத்தான் தவிக்கிறாள். பிறரை எதிர்பார்த்துத் தவிக்க வைத்துவிட்டு வாழ்வதிலுள்ள வேதனையை அந்த விநாடியில் சத்தியமூர்த்தி மிக நன்றாக உணர்ந்தான். இதைக் காட்டிலும் அதிகமாக அவன் மனத்தை வேதனைப்படுத்தக் கூடிய வேறு செய்தி ஒன்றைத் தந்தை அப்போது அவனிடம் கூறினார். "முடிந்தால் இன்றைக்குச் சாயங்காலமாவது நாளைக்குக் காலையிலாவது கண்ணாயிரத்தைப் போய்ப் பார். நான் அவரிடம் நேற்றுப் பேசிக் கொண்டிருந்த போது உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தச் சுற்று வட்டாரத்தில் கண்ணாயிரம் மனம் வைத்தால் சாதிக்க முடியாத காரியமில்லை. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையைப் பற்றி உனக்கே நம்பிக்கையில்லை என்று தோன்றுகிறது. கண்ணாயிரம் யாரிடமாவது வேண்டியவர்கள் மூலம் சொல்லி உனக்கு ஒரு வேலை பார்த்துத் தர முடியும். ஞாபகத்தில் வைத்துக் கொள். கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு நமக்கு என்றைக்கும் வேண்டும்." யாருடைய சமூக வாழ்க்கையைப் பற்றி மிகவும் போலியானதென்றும் பொய்யானதென்றும் எண்ணியெண்ணி அவன் வருத்தப்பட்டிருக்கிறானோ அவரிடமே அவனைப் போய் நிற்கச் சொல்கிறார் தந்தை. பொய்யாகவும் வஞ்சகமாகவும் வாழ்ந்தாலும், பணமும், காரியங்களைச் சாதிக்கிற திறமையும் உள்ளவர்கள் சமூகத்தை எவ்வளவிற்கு மயக்கி விடுகிறார்கள் என்று எண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி. தன் தந்தையே கண்ணாயிரத்தைப் பெரிய மனிதராக மதிக்கும் அளவிற்குக் கண்ணாயிரம் மயக்கும் தன்மை உள்ளவராக இருக்கிறார் என்பதை அறிந்த போது வேதனையும் ஏமாற்றமும் அவனுக்கு ஒருங்கே ஏற்பட்டன. மீண்டும் அந்த வாக்கியங்களைத் தான் நினைத்தான் அவன். "நல்ல மனித வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காகவும் சேர்ந்தே போராட வேண்டியிருக்கிறது." நேர்மையான உணர்ச்சிகளில் ஆழ்ந்து வாழத் தெரியாமல் ஏனோ தானோ என்று மிதந்து கொண்டு வாழும் கண்ணாயிரத்தைப் போன்றவர்களைச் சத்தியமூர்த்தி வெறுத்தான். அவனுடைய தந்தையோ கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு என்றைக்கும் வேண்டும் என்கிறார். "என்ன? நான் சொல்லியது ஞாபகத்தில் இருக்கட்டும்! சாயங்காலம் கண்ணாயிரத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வா..." என்று மறுபடியும் அவன் தந்தை அவனை வற்புறுத்தினார். தன் கையிலிருந்த அந்தக் கடிதத்தை - அதைச் சூழ்ந்து கொண்டு மணக்கும் மல்லிகைப்பு மணத்தோடு சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் சத்தியமூர்த்தி. "கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் நான் கண்ணாயிரத்துக்கு முன்னால் போய்க் கையைக் கட்டிக் கொண்டு நிற்க மாட்டேன் அப்பா!" என்று சொல்லிவிடுவதற்கு நாக்குத் துடித்தது. தான் அப்படி எதிர்த்துப் பேசினால் வாழ்க்கையில் பல காரணங்களால் ஏற்கெனவே நொந்து போயிருக்கிற தந்தையின் மனம் இன்னும் வேதனை கொள்ளும் என்று தன்னை அடக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டான் சத்தியமூர்த்தி.
கண்ணாயிரம் என்னும் பொய்ம்மைக்கு முன்னால் போய் நிற்கிற துர்ப்பாக்கியம் தனக்கு நேராமலிருப்பதற்காகவாவது உடனே பூபதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் அவன். 'அன்பின் பரிபூரணமான தன்மையைக் கனிந்து நிற்கிறாற் போல ஓர் அழகிய சொல்லால் உங்களை அழைக்க விரும்பினேன்' - என்று பூபதியின் மகள் தனக்கு எழுதியிருந்ததை அப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. இன்னொருவரால் விரும்பப்படுகிறோம் என்றோ அன்பு செலுத்தப்படுகிறோம் என்றோ தெரியவரும் போது இயல்பாக உண்டாகிற உற்சாகம் அப்போது அவன் மனத்திலும் ஓரளவு ஏற்பட்டிருந்தது. சர்க்கஸில் ஓர் ஆளை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு முகத்தையும் உடலையும் தவிரச் சுற்றிலும் போய்ப் பதிந்து கொள்கிறாற் போல் நெருப்புடன் கூடிய கத்திகளை வீசி எறிவார்களோ, அப்படிச் சிந்தனைகளாலும் சூழ்நிலைகளாலும், துன்பங்களே தன்னைக் குறி வைத்து வீசப்பெறுவதாக உணர்ந்து தவிக்கும் வேளையில் நடுவே ஒரு பூச்செண்டும் வந்து விழுந்ததென இந்தக் கடிதம் மல்லிகைப் பந்தலிலிருந்து வந்திருப்பதாக அவன் எண்ணினான். நண்பகல் நேரத்தின் ஒடுங்கி ஓய்ந்த அமைதி வீட்டில் சூழ்ந்திருந்தது. அப்பா ஊஞ்சல் பலகையில் படுத்துத் தூங்கத் தொடங்கியிருந்தார். 'கல்யாணீ! கல்யாணீ!' என்று கிணற்றடியிலிருந்து ஏழெட்டு முறை இளைய பெண்ணைப் பெயர் சொல்லி அழைத்து அலுத்துப் போன அம்மா மூத்த பெண் ஆண்டாளைக் கூப்பிட்டு, "இந்தக் கல்யாணி எங்கே தான் இருக்கிறாள் என்று பார்த்துத் தொலையேன்" என்று கேட்டதையும் அதற்கு மறுமொழியாக அம்மாவிடம் ஆண்டாள். "கல்யாணியைக் கேட்கிறாயா அம்மா! அவள் இருக்கிற இடம் எனக்குத் தெரியும். வடுவூர் பரமசிவம் எழுதிய 'பரிமள விலாஸ் படுகொலை'யில் ஏழாவது அத்தியாயத்தில் இருக்கிறாளம்மா அவள். இருபது தடவை என்ன? எழுநூறு தடவை நீ தொண்டை கிழியக் கத்தினாலும் இப்போது அவள் காதில் விழாது..." என்று பதில் சொல்லியதையும் அத்தனை துயரமான மனநிலையிலும் இரசித்தான் சத்தியமூர்த்தி. 'இவ்வளவு வறுமையினிடையிலும் இந்த வீட்டில் சிரிப்பும் நகைச்சுவையும் கூட மீதம் இருக்கின்றனவே" என்று எண்ணி வியந்து கொண்டான். அவன் குடும்பத்தை எதிர்நோக்கியிருக்கிற துன்பங்களும் பொருளாதாரத் தொல்லைகளும் தெரிந்தால் கல்யாணியால் நிம்மதியாகத் துப்பறியும் நாவல் படிக்க முடியாது. ஆண்டாளால் சிறிது வேடிக்கையாகப் பேச முடியாது. பிள்ளையின் மலர்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வெள்ளிக்கிழமை சாயங்காலங்களில் தான் பேச்சியம்மன் கோவிலில் போடுகிற நெய் விளக்கும் திங்கள்கிழமை மாலை வேலைகளில் பழைய சொக்கநாதர் கோவிலைச் சுற்றுகிற சுற்றுகளுமே போதுமென்று நினைக்க மாட்டாள் அம்மா. அப்பா, அம்மா, தங்கைகள் எல்லாருமே தான் சம்பாதித்துப் போடத் தொடங்கிய பின்புதான் குடும்பத்துக்கு விடியப் போகிறதென்று காத்திருப்பது அவனுக்குத் தெரியும். நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்ட அந்த வீட்டுக்கு உழைக்க வேண்டுமென்று தான் ஒரு தீர்மானமான முடிவு செய்து கொண்ட மனநிலையோடு பூபதி அவர்களுக்குக் கடிதம் எழுத உட்கார்ந்தான் அவன்.
பகல் மூன்றரை மணிக்கு அந்தக் கடிதத்தை எழுதத் தொடங்கியவன், நாலரை மணி வரை - சரியாக ஒரு மணி நேரம் எழுதியிருக்கிறான். கடிதம் வரிக்கு வரி, வாக்கியத்துக்கு வாக்கியம் யாருக்கு எழுதப்பட்டதோ அவருடைய மனத்தைக் கவ்வுகிறாற் போல் வாய்த்திருந்தது. பூபதி அவர்களின் மனத்தில் அந்தக் கடிதம் தன்னைப் பற்றி நிச்சயமாக ஒரு நல்ல முடிவுக்கு வரத் துணை செய்யும் என்ற முழு நம்பிக்கையோடுதான் சத்தியமூர்த்தி அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்ப்பதற்குப் புறப்பட்டான். அதை எழுதி முடித்த போது அவன் மனம் குழப்பமின்றி நிம்மதியாயிருந்தது. ஆனாலும் ஒன்றை நினைக்கும் போது அவன் மனம் திரும்பத் திரும்பக் குமுறத்தான் செய்தது. 'பதவியையும் செல்வத்தையும் செல்வாக்கையும் தேடுவதற்குத் தகுதியும் நேர்மையான திறமையும் மட்டுமே இன்றைய வாழ்க்கையில் போதுமானவையாக இருப்பதில்லை. சிந்திப்பதற்குத் தேவையான திறமை வேறாக இருக்கிறது. வாழ்வதற்குத் தேவையான திறமை வேறாக இருக்கிறது. என்னைப் போல் எம்.ஏ. முதல் வகுப்புத் தேர்ச்சியும் வாழ்க்கையைப் பற்றிய நல்ல இலட்சியங்களும் உள்ளவர்கள் ஓர் உத்தியோகத்துக்காக, வயிற்றை நிரப்பிக் கொள்ள வழி செய்யும் ஒரு வெறும் உத்தியோகத்துக்காக இப்படி நாயாக அலைகிறோம். கண்ணாயிரத்தைப் போல் அறிவையும் முதலீடு செய்யாமல், பணத்தையும் முதலீடு செய்யாமல், வெறும் சாமர்த்தியத்தையும், சூழ்ச்சியையுமே முதலீடு செய்து வாழ்க்கையில் மேலும் மேலும் வென்று கொண்டு போகிறவர்களும் இதே உலகில் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சாமர்த்தியம் அப்பாவைப் போன்ற நல்லவர்களைக் கூட மயக்கிக் கவர்ந்து விடுகிறதே!' என்று மனம் புழுங்கியபடி தபாலாபீஸின் கல் கட்டிடத்திற்குள் நுழைந்து கடிதத்தை தபாலில் சேர்த்துவிட்டு அவன் வெளியேறிய போது, "இந்த ஊரில் தான் இருக்கிறாயா சத்தியம்? பார்த்து வெகு நாட்களாயிற்றே?" என்று குமரப்பன் எதிர் கொண்டான். தனக்கு மிகவும் நெருங்கிய தோழனாகக் கல்லூரி நாட்களிலிருந்தே பழகியிருக்கும் அந்த நண்பனை மனத்தின் தவிப்பு நிறைந்த இந்த வேளையில் சந்தித்தது சத்தியமூர்த்திக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது. குமரப்பனுடைய கைத்திறன் விந்தையானது. எந்தச் சித்திரக் கலாசாலையிலும் கற்காமலே அவன் கைகள் இழுக்கும் கோடுகளிலே சிரிப்பும் அழுகையும், சீற்றமும் வேட்கையும் தெரியும்படி விதம் விதமான மனித உருவங்கள் பிறந்தன. பொழுது போக்காகவும் விளையாட்டாகவும் தொடங்கிய இந்தக் கலை, கல்லூரி நாட்களிலேயே அவனைச் சிறந்த வல்லுநனாக்கியிருந்தது. நகைச்சுவைச் சித்திரங்களையும் கேலிச் சித்திரங்களையும் அவனுடைய சுறுசுறுப்பான கைகள் நொடிப்பொழுதில் பக்குவமாக வரைந்து முடித்தன. அவன் கரங்கள் காகிதத்தில் வேகமாகவும், சாமர்த்தியமாகவும் விளையாடின. சத்தியமூர்த்தியோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஏதோ ஒரு பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட் ஆகப் போய் விட்டான் குமரப்பன். அந்த வேலையும் அவனாகத் தேடிப் போய் அடைந்ததல்ல. தானாகவே அவனைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது அந்த வேலை. கல்லூரி பொருட்காட்சியில் அவன் வரைந்து வைத்திருந்த சுவையான கேலிச் சித்திரங்கள் சிலவற்றைக் கண்டு வியந்த அந்தப் பத்திரிகையாசிரியர் அவனிடம் அமைந்திருந்த இந்த நுணுக்கமான திறமையைக் கண்டுபிடித்து அவனைத் தேர்ந்தெடுத்தார். குமரப்பன் வெறும் தொழில் நோக்குடனோ பணத்துக்கு ஆசைப்பட்டுத் தவிக்கும் மனநிலையுடனோ கார்ட்டூனிஸ்ட் ஆகவில்லை. இயற்கையாகவே அவனுடைய கண்களும், மனமும் இந்த உலகத்தையும் இதன் நிகழ்ச்சிகளையும் குறும்புத்தனமான சுறுசுறுப்போடு பார்க்கும் தன்மை வாய்ந்தவை. புத்திக் கூர்மையும் அவனுக்கு அதிகம். "பூகோள நூலின்படி உருண்டை வடிவமான இந்த உலகம் சுற்றிக் கொண்டிருப்பதாக ஒரு காட்சியை வரைந்துவிட்டு அதைப் பார்த்துக் கொண்டு நிற்கும் போதே அதைப் பார்த்த படைப்புக் கடவுளின் தலை சுற்றுவதாகவும் ஒரு கார்ட்டூன் எழுதித் தேவர்கள் எல்லாம் படிக்கிற பத்திரிகை ஏதாவது ஒன்று இருந்தால் அதற்கு அனுப்பிப் பிரசுரம் செய்யச் சொல்ல வேண்டும்டா சத்தியம்?" என்று அடிக்கடி சொல்வான் குமரப்பன். இப்படி ஏதாவது குறும்புத்தனமாகச் சொல்லாமல் சும்மா இருக்க முடியாது அவனால். "மனிதருடைய நெஞ்சம் சதாகாலமும் பணம் காசு பற்றித்தான் எண்ணித் தவித்துக் கொண்டிருக்கும் என்று நெஞ்சின் மேல் பணப்பைக்கு இடம் விட்டுச் சட்டை தைக்கத் தொடங்கிய முதல் தையல்காரன் தெரிந்து கொண்டிருக்கிறான் பார்த்தாயா?" என்று இப்படி ஏதாவது ஆழமான குறும்புத்தனமுள்ள வாக்கியத்தை முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் இருந்தாற் போலிருந்து திடீரென்று சொல்வான் அவன். குமரப்பனோடு பழகுவதே ஒரு சுவாரஸ்யமான அனுபவம். அவனைச் சந்தித்துப் பேசத் தொடங்கினால் அந்தச் சந்திப்பையும் பேச்சையும் முடிக்க வேண்டுமென்று தோன்றாது. இந்த உலகமே தன்னுடைய கேலிக்கும் அலட்சியத்துக்கும் குறும்புப் பேச்சுக்குமாக - மிகவும் சுதந்திரமாய் விமரிசனம் செய்வதற்கென்றே படைக்கப்பட்டிருப்பது போலப் பாவித்துக் கொண்டு பேசும் கலைத்திமிர் குமரப்பனிடம் உண்டு. இந்தக் கலைத்திமிரும் கூட விரும்பத்தக்க விதத்தில் இருக்குமே ஒழிய வெறுக்கத்தக்க விதத்தில் இருக்காது. எப்போதும் போலக் குமரப்பனைப் பார்த்ததும் அவனுடைய விசித்திரமான குணங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தன. "என்னடா இது? ஏதோ சந்திக்கக்கூடாத ஆளை எதிரே சந்தித்து விட்டாற் போல் அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டாய்? தபாலாபீசுக்கே நேரில் தேடி வந்து சிரத்தையாகப் பெட்டியில் போட வேண்டிய ஏதோ ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு இந்த வெய்யிலில் நீயே வந்திருக்கிறாய்...!" என்று சிரிப்பும் குத்தலுமாகப் பேச்சை ஆரம்பித்தான் குமரப்பன். "அதெல்லாம் ஒன்றுமில்லை குமரப்பன்! திடீரென்று உன்னை எதிரே பார்த்ததும் ஒரு பெரிய சர்வகலாசாலையையே நேருக்கு நேர் சந்தித்தாற் போலாகிவிட்டது. கடிதத்தைத் தபாலில் சேர்த்து விட்டு அப்படியே இரயில்வே மேற்பாலம் வழியாக எங்காவது உலாவப் போகலாமென்று வந்தேன். நல்ல நேரத்தில்தான் நீயும் வந்து சேர்ந்திருக்கிறாய்" என்று சத்தியமூர்த்தி பதில் சொல்லிக் கொண்டு வந்த போது பாதியிலேயே அவன் பேச்சைத் தடுத்து நிறுத்திவிட்டு, "அதுசரி நீ என்னை ஒரு சர்வகலாசாலையோடு ஒப்பிடுவதை ஒரே ஒரு காரணத்துக்காக நான் மறுக்கிறேன். நான் தெரிந்து கொண்டிருக்கிற பல விஷயங்களை உலகத்தின் எந்தச் சர்வகலாசாலையிலும் சொல்லிக் கொடுப்பதற்குத் தயாராயிருக்க மாட்டார்கள்" எனச் சொல்லிச் சிரித்தான் குமரப்பன். அவனுடைய அந்தக் கர்வத்தைப் பார்த்துச் சத்தியமூர்த்தியாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே எதிரில் சந்திக்கிற ஒவ்வொருவரது பார்வையையும், முகத்தையும், நடையையும் கூட விமர்சனம் செய்து சிரித்துப் பேசிக் கொண்டே நடப்பான் குமரப்பன். எதையாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற குறும்புத்தனமான ஆர்வத்தோடு அவன் கண்கள் சதா அலைந்து கொண்டிருக்கும். அப்போது அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த பாதையில் எதிர்ப்பக்கமிருந்து 'ஆன் டெஸ்ட்' என்று போர்டு மாட்டியபடி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. "லாரி - கார்களுக்குப் போடுகிற மாதிரி சில ஆட்களுக்கும் இந்த 'போர்டு' மாட்ட வேண்டுமடா சத்தியம்! சரியாக வாழ்வதற்குப் பழகாமல் தாறுமாறாக வாழ்கிற சிலருடைய வாழ்க்கையும் 'ஆன் டெஸ்ட்' ஆகத்தான் இருக்கும். முழுப்பக்குவமும் பெறாமல் வாழ்வதற்கும், பிறரிடம் பழகுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிற சில மனிதர்கள் கூட மார்பில் 'எல்' போர்டு மாட்டிக் கொள்ள வேண்டும். 'போர்டாக' மாட்டிக்கொள்ள முடியாவிட்டால் சட்டைப் பித்தானிலாவது எனாமலில் 'எல்' பதித்துக் கொள்ளலாம்" என்று அரட்டையைத் தொடங்கினான் குமரப்பன். "குத்துவிளக்கு எப்படி இருக்கிறது குமரப்பன்?" என்று அவன் வேலை பார்க்கிற பத்திரிகையைப் பற்றி விசாரிக்கலானான் சத்தியமூர்த்தி. "ஆஹா! கேட்க வேண்டுமா? சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. அச்சு இயந்திரங்களும் மனிதர்களும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் போன வாரம் தான் பெர்லினிலிருந்து திரும்பினார். இந்த வாரம் ஜப்பானுக்குப் போவார் போலிருக்கிறது. இதுவரை வாரம் ஒன்றிற்கு மொத்தம் - நாலு பக்கம் எட்டுக் கார்ட்டூன்கள் போட்டுக் கொண்டிருந்தேன். கார்ட்டூன்கள் மிகவும் நன்றாக இருப்பதால் அடுத்த வாரத்திலிருந்து ஆறு பக்கத்துக்கு பன்னிரண்டு கார்ட்டூன்கள் போட வேண்டும் என்று ஏற்பாடாகியிருக்கிறது. எங்கள் பத்திரிகைக்கு என்னடா குறை? போதும் போதும் என்று சொன்னாலும் கேட்காதபடி கண்ணாயிரம் விளம்பரங்களைத் தேடிக் கொண்டு வந்து குவிக்கிறர். விளம்பரங்கள் பணத்தைத் தேடிக் கொண்டு வந்து குவிக்கின்றன. பணம் சௌகரியங்களைத் தேடிக் கொண்டு வந்து குவிக்கிறது." "இவ்வளவு தானா? இன்னும் ஏதாவது உண்டா?" "உண்டு! தாராளமாக உண்டு. விற்பனையைப் பெருக்குவதற்காக ராசி பலன் போடலாமென்று ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. சினிமா நட்சத்திரங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக வந்தால் நல்லதென்று ஏஜண்டுகள் ஆசைப்படுகிறார்கள். துவையல் அரைப்பதைப் பற்றி வாரம் ஒரு பக்கம் வந்தால் பெண்களுக்குத் திருப்தியாயிருக்குமாம்." "போதும்! போதும்... நான் ஏதோ ஒரு வார்த்தைக்குக் கேட்டால் நீ என்னென்னவோ வம்பு வளர்த்துக் கொண்டு போகிறாயே? உன் குறும்புப் பேச்செல்லாம் என்றைக்குத் தான் ஒடுங்கப் போகிறதோ?" இதைக் கேட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னான். "இந்தக் குறும்புத்தனம் தான் என்னுடைய தொழிலுக்கு மூலதனம் அப்பனே! இதை விட்டுவிட்டு அப்புறம் நான் எங்கே போவது?" "பால் டபோரி என்று ஓர் மேற்கு நாட்டு ஆசிரியன் முட்டாள்தனத்தையே ஒரு கலையாக (தி ஆர்ட் ஆஃப் ஃபாலி) வருணித்துப் புத்தகம் எழுதியிருக்கிறான், தெரியுமா குமரப்பன்?" "ஒரு தடவை மட்டுமல்ல; இரண்டு மூன்று தடவை அந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேனடா சத்தியம். 'பைத்தியக்காரத்தனம், நவநாகரிகம், முட்டாள்தனம், இந்த மூன்று அம்சங்களுக்குள்ளேயே மனித வர்க்கத்தின் முழுச் சரித்திரத்தையும் நான் சொல்லி முடித்து விடுவேன்' - என்று அந்தப் புத்தகத்தைப் 'பால் டபோரி' ஆரம்பித்திருப்பான்." "எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் 'பால் டபோரி' அந்தப் புத்தகத்தில் மனித வாழ்க்கையை எந்தக் கோணத்திலிருந்து பார்த்திருக்கிறானோ அதே கோணத்திலிருந்து மட்டும்தான் நீயும் நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறாய் குமரப்பன்?" "மகிழ்ச்சியோடு ஒப்புக் கொள்கிறேனடா, சத்தியம். எனக்கு வாழ்க்கையை அந்தக் கோணத்திலிருந்து தான் பார்க்கத் தெரியும். கண்ணாயிரத்தைப் போல் மற்றவர்களை முட்டாள்களாக்கிக் கொண்டு வாழ்கிற போலிப் புத்திசாலிகள் உள்ள உலகத்தில் வாழ்க்கையை நீயும் நானும் வேறு விதமான கோணத்திலிருந்து பார்த்துப் பயனில்லை அப்பனே, பயனில்லை." "எனக்கு உத்தியோகம் தேடிக் கொள்வதற்காக நான் இன்று மாலைக்குள் கண்ணாயிரத்தைப் போய்ச் சந்திக்க வேண்டுமென்று என் தந்தையே சொல்லியிருக்கிறார் குமரப்பன்! நான் என்னடாவென்றால் என் தந்தையின் கட்டளையையும், கண்ணாயிரத்தையும், உத்தியோகத்தையும், அறவே மறந்து விட்டு உன்னோடு உலாவப் புறப்பட்டிருக்கிறேன். இந்தக் கண்ணாயிரம் மாதிரி மனிதர்களைத் தேடிக் கொண்டு போய் எதிரே நிற்க வேண்டுமென்று நினைக்கும் போதே எனக்கென்னவோ மிகவும் அருவருப்பாக இருக்கிறது, குமரப்பன்..." "நீ இவர்களைப் போன்றவர்களைப் பார்த்து அருவருப்புத் தான் அடைகிறாய்! நானும் 'பால் டபோரி'யும் இவர்களைப் போன்றவர்களையும் பார்த்து இரசிக்கிறோம். உனக்கும் எனக்குமுள்ள வேறுபாடு இதுதான் சத்தியம்!" அப்பால் இரயில் நிலையத்துக்கும் - இப்பால் பஸ் நிலையத்துக்கும் நடுவே அமைந்திருந்த அந்த மேற்பாலத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள். வழக்கமாக மாலை வேளைகளில் அந்த இடத்தில் பாய்ந்து வீசும் காற்று இன்றும் சுகமாக வீசிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலிருந்து பார்த்தால் வழக்கமாகத் தெரிகிற நகரின் பெரிய கட்டிடங்களும் கோபுரங்களும் இன்று ஏதோ ஒரு விதமான புதுமாறுதலோடு அழகாகத் தெரிவன போலிருந்தன. சென்னைக்குச் செல்வதற்காக ஒவ்வொன்றாகத் தெற்கேயிருந்து வரப்போகும் எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான கூட்டமும், கலகலப்பும் அப்போதே மதுரை நிலையத்தைத் திருவிழாக் கோலம் கொள்ளச் செய்திருந்தன. இரயில் நிலையத்தின் பல நிற விளக்கு ஒளிகளும், என்ஜின்கள் அங்குமிங்குமாகப் போய் வரும் ஓசைகளும், மற்றொரு பக்கம் தெற்கே தென்னை மரங்களும் வயல்களும், குடிசைகளும் அவற்றினூடே யாரோ வகுத்த கடினமான நியதிகளைப் போல் ஆரம்பமாகித் தெற்கே போகப் போக வேறு வேறு திசைகளில் விலகும் இரயில் தண்டவாளங்களுமாக அந்த இடம் அந்த வேளையில் தனிப்பட்டதோர் அழகுடனே காட்சியளித்துக் கொண்டிருந்தது. பாலத்தின் மேற்குப் புறத்து இறக்கத்தின் கனமான இரும்பு வேலியில் சாய்ந்தபடி இரயில் நிலையத்துக்கு எதிர்ப்பக்கம் பார்த்தவாறே சத்தியமூர்த்தியும் குமரப்பனும் பேசிக் கொண்டிருந்தார்கள். விரிவுரையாளர் பதவிக்காக மல்லிகைப் பந்தலுக்குத் தான் போய்விட்டு வந்ததையும், மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததையும் நெருங்கிய நண்பன் என்ற முறையில் குமரப்பனிடம் கூறினான் சத்தியமூர்த்தி. மல்லிகைப் பந்தல் ஊரையும், கல்லூரியையும் தனக்குப் பிடித்திருக்கிறது என்பதையும் சத்தியமூர்த்தி தன் நண்பனிடம் கூறினான். "கல்லூரி விரிவுரையாளராகத்தான் வேலை பார்க்க வேண்டும் என்று நீ நினைக்கிற பட்சத்தில் அதை உள்ளூரிலுள்ள கல்லூரிகளில் ஏதாவதொன்றில் தேடிக் கொள்வேன். செலவு சிக்கனமாக இருக்க முடியும் என்பதற்காகவே இந்த யோசனையை உனக்கு நான் சொல்கிறேன். மல்லிகைப் பந்தலைப் போல் வாழ்க்கைச் செலவுகளும், வாழ்க்கைத் தரமும் உயர்ந்த மலைநாட்டு நகரமொன்றில் வேலை பார்க்கச் சென்றால் அங்கே நீ தங்கிக் கொள்வதற்கும், சாப்பிடுவதற்குமே உன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதி செலவாகி விடும். ஊரில் இங்கு உன்னை நம்பிக் காத்திருக்கும் பெற்றோர்களுக்கு நீ அதிகமாக ஒன்றும் அனுப்ப முடியாமல் போனாலும் போகலாம். உன் வீட்டு நிலைமை எனக்கு தெரியுமாதலால் இதை நான் உன்னிடம் சொல்ல வேண்டியதாயிற்று. மற்றக் கல்லூரிகளை விட மல்லிகைப் பந்தல் கல்லூரியில் சம்பள விகிதங்கள் நிச்சயமாக அதிகமாக இருக்கும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். இருந்தாலும் நீ வெளியூரிலும், உன் வீட்டில் மற்றவர்கள் இங்குமாக வசிப்பதனால் இரட்டைச் செலவுதான் ஆகும்! செலவையோ, வருமானத்தையோ, காரணமாக முன் நிறுத்திச் சொல்லுகிற யோசனைகளை நீ விரும்ப மாட்டாய் என்று நான் அறிவேன். ஆனாலும் இதைச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு சத்தியம்!" என்றான் குமரப்பன். "உள்ளூரிலுள்ள கல்லூரிகளையெல்லாம் பற்றி என்னுடைய அபிப்பிராயம் என்னவென்று உனக்குத்தான் தெரியுமே குமரப்பன்? வாழ்க்கையிலுள்ள பெரிய வேதனை இந்த இடம் தான். நாம் எப்படி எங்கே வாழ விரும்புகிறோம் என்பதும் உலகம் எங்கே எப்படி வாழ வேண்டுமென்று நம்மை எதிர்பார்க்கிறது என்பதும் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் இரண்டு எல்லைகள்." "இப்படிச் சொல்வதால் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொள்ளாதே சத்தியம்! உன்னுடைய குடும்பத்தின் வசதிக் குறைவுகளை நினைத்தே நான் இந்த யோசனையைச் சொன்னேன். நீ மல்லிகைப் பந்தல் கல்லூரிக்குப் போவதைப் பற்றி எனக்கு எந்தவிதமான ம்றுப்புமில்லை. நானும் அப்படி ஒரு நல்ல கல்லூரியில் நீ பணிபுரிவதைத் தான் எதிர்பார்க்கிறேன். வரவேற்கிறேன். அதே சமயத்தில் நடைமுறை உலகிலுள்ள துன்பங்களையும் நீ மறந்து போய்விடக்கூடாது. மனிதனுடைய உயர்ந்த இலட்சியம் என்பது சில மலைகளின் பசுமையைப் போலத் தொலைவிலிருந்து பார்ப்பதற்குக் கவர்ச்சியாய்த் தோன்றி அருகில் நெருங்கியதும் ஒன்றுமில்லாததாய்ப் போய்விடுகிறது. உன்னைப் போன்ற சிந்தனை வளமோ, படிப்பின் ஆழமோ எனக்கு இல்லை. ஆனாலும் உலக அனுபவத்தை முன் வைத்து நான் சில யோசனைகளை உனக்குச் சொல்லுகிறேன். அவற்றை நீ அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை" என்று குமரப்பன் சொல்லியபோது அவனுடைய குரலில் எந்த விதமான செயற்கை குறும்பும் இல்லை. உண்மையான அனுதாபமும் இரக்கமுமே அந்தக் குரலில் ஒலித்தன. இதன் பின்பும் அதே இடத்தில் நின்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கல்லூரி நாட்களில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைப் பற்றி, உள்ளூர் அரசியல் நிலவரம் பற்றி, நிகழ்காலத் தமிழ் இலக்கியத்தின் நிலைபற்றி, விவாதமும் பேச்சுமாக நேரம் போவது தெரியாமல் வளர்ந்தது உரையாடல். இரயில் நிலையத்து மேற்பாலத்திலிருந்து புறப்பட்டுக் குமரப்பனும், சத்தியமூர்த்தியும் டவுன் ஹால் ரோடு வழியாகத் திரும்பிக் கொண்டிருந்த போது எதிரே கண்ணாயிரத்தின் கார் எங்கோ வேகமாகப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தது. கண்ணாயிரமும், கண்ணாயிரத்தின் காரும், அந்தக் கார் நிறைய வேறு யாராவது மனிதர்களும் போய்க் கொண்டிருந்தால் சத்தியமூர்த்தியோ குமரப்பனோ அப்போது கவலைப்பட்டிருக்கப் போவதில்லை. கண்ணாயிரத்தின் கார் மதுரை மாநகரத்தில் உள்ள மிகமிகப் புராதனமான பொருள்களில் ஒன்று. நான்கு டயர்களின் நடுவிலும் குச்சி குச்சியாகக் கம்பிகள் சிலிர்த்துக் கொண்டு பார்ப்பதற்குக் காச நோயாளி போல் காட்சியளிக்கும். அந்தக் காரை இலட்சம் கார்களுக்கு நடுவிலும் தனியாகக் கண்டுபிடித்துவிடலாம். வேறு சௌகரியமான கார் வைத்துக் கொள்ள வசதியோ, வளமோ இல்லாததால் கண்ணாயிரம் இதை வைத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லிவிடுவதற்கு இல்லை. அவருக்கு ஒரு பிரமை உண்டு. இந்தக் காருக்கும் தமக்கும் ஏதோ ஓர் இராசி இருப்பதாகவும் இதில் புறப்பட்டுப் போனால்தான் தம்முடைய காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்று நம்பி இந்தப் பழைய காரிலேயே பணத்தைக் கொட்டிச் செலவு செய்து புதுப்புது வசதிகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். இந்த விதமான திருக்கோலத்தோடு கண்ணாயிரத்தின் கார் டவுன் ஹால் சாலையில் அவர்களுக்கு எதிரே வந்த போது அதைப் பார்க்க வேண்டும் என்ற முயற்சியில்லாமல் தானாகவே அவர்கள் கண்களில் தனக்கேயுரிய முக்கியத்துவத்தோடு அது தென்பட்டு வைத்தது. கண்ணாயிரம் தான் காரை ஓட்டிக்கொண்டு சென்றார். அவருக்கருகே முன்ஸீட்டில் தன் தந்தை அமர்ந்திருந்ததைக் கண்டுதான் சத்தியமூர்த்தி அப்போது வியப்படைந்தான். "கண்ணாயிரத்தோடு முன்னால் உட்கார்ந்து போகிறவர் உன் தந்தை மாதிரி இல்லை? நீ அந்தக் காரைக் கவனித்தாயா, சத்தியம்?" என்று குமரப்பன் வேறு அவனைக் கேட்டு விட்டான். "பார்த்தேன், அப்பா மாதிரித்தான் இருக்கிறது" என்று அந்த உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாத வேதனையோடு ஏற்றுக் கொண்டு நலிந்த குரலில் குமரப்பனுக்கு மறுமொழி கூறினான் சத்தியமூர்த்தி. 'என்ன காரியத்துக்காக அப்போது கண்ணாயிரத்தோடு அப்பா புறப்பட்டுப் போகிறார்?' என்று சிந்தித்தது அவன் மனம். 'தன்னைக் கலந்து கொள்ளாமல் கண்ணாயிரத்தின் மூலம் தன்னுடைய வேலைக்குத் தந்தை தாறுமாறாக ஏதேனும் ஏற்பாடு செய்துவிடப் போகிறாரா' என்று எண்ணியபோது அவன் மிகவும் மனம் கலங்கினான். மேலமாசி வீதியில் குமரப்பனுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டுத் தனியே தன் வீட்டை நோக்கி நடந்த போதும் இதே கலக்கம் தான் அவனுள் வளர்ந்து கொண்டிருந்தது. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|