52
ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத் தான் எத்தனை ஆயிரம் தடைகள்? இனிமேலாவது நல்ல காரியங்களைச் செய்து நல்லபடியாக வாழலாம் என்று நினைப்பதற்குப் பதில் இதுவரை செய்திருக்கிற தவறுகளையும், இனிமேல் செய்யப் போகிற தவறுகளையுமே நல்ல காரியங்களாக நிரூபித்துக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிற வறட்டுக் கௌரவத்தைச் சிலரால் விட்டு விட முடியாது. மஞ்சள்பட்டியார் இந்த விதத்தைச் சேர்ந்தவர். சத்தியமூர்த்தியின் தந்தையைக் கூப்பிட்டு அவனை அடக்கி வழிக்குக் கொண்டு வருமாறு சொல்லியதோடு நிற்காமல் அதற்கு முன்பே ஜமீந்தார் வேறு சில ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தம்முடைய சொந்தப் பத்திரிகையாகிய குத்துவிளக்கில் அந்த வாரம் மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டனம் செய்தும், மாணவர்களைச் சில ஆசிரியர்கள் தவறான வழியில் தூண்டுவதை ஒடுக்க வேண்டுமென்று கண்டித்தும் தலையங்கம் எழுதச் சொல்லியிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி விடுதியின் 'கூரை ஷெட்' நெருப்புப் பிடித்து எரிந்த காட்சியைப் புகைப்படமாகப் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுடைய அநுதாபத்தைத் தங்கள் பக்கமாகத் திருப்பிக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஜமீந்தாரும் கண்ணாயிரமும் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஜமீந்தாருடைய சொந்தப் பத்திரிகையாகக் கைக்கு வந்து கண்ணாயிரத்தின் நிர்வாகத்தில் அடங்கிய பின் குத்துவிளக்கில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. பொதுமக்களுடைய கவனத்தை மிக வேகமாகக் கவர வேண்டும் என்பதற்காக 'இரவில் நடந்த இருபது கொலைகள்' என்ற அதி பயங்கரத் துப்பறியும் தொடர் கதையை 'இரத்தக் காட்டேரி' என்னும் புனைப்பெயர் பூண்ட பேயாண்டி என்ற மர்மக் கதை மன்னர் எழுதி வந்தார். திரைப்படச் சிங்காரிகளின் தலை அலங்காரங்களைப் பற்றிய புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவரலாயின. புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மலையாள ஆசிரியர் ஆங்கிலத்தில் எழுதுகிற தலையங்கங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்து கொண்டிருந்தன. 'குத்துவிளக்கின்' ஊழல்களைப் பற்றியும், அதில் வருகிற தரக்குறைவான அம்சங்களைப் பற்றியும் அதே பத்திரிகையில் முன்பு வேலை பார்த்து வந்தவன் என்ற முறையில் குமரப்பனிடம் யாரோ நண்பர்கள் கேட்டபோது "நாமெல்லாம் இருந்து வேலை பார்த்து அதை இன்னும் அதிக காலம் நன்றாக வாழ வைத்துவிடக் கூடாது. இட் ஈஸ் மை விஷ் தட் இட் எண்ட்ஸ் இன் எ நேச்சுரல் டெத்' (அது இயற்கையாகவே சாகும்படி விட்டு விட வேண்டுமென்பதுதான் எனது ஆசை). துப்பறியும் கதைகளில் அதிகமாகச் செலவழிவது கொலை செய்யப்படுகிறவர்களின் இரத்தம். அதிகமாகச் செலவழியாதது அவற்றை எழுதுகிறவர்களின் மூளை. 'இரவில் நடந்த இருபது கொலைகள்' என்ற தலைப்பை அதிபயங்கரமாகப் போட்டு விட்டுத் தூக்கம் வராமல் வேதனைப்பட்ட கதாநாயகன் கட்டிலுக்கடியில் இருந்த இருபது மூட்டைப் பூச்சிகளையும் நசுக்கிக் கொன்றதாக முடிப்பதிலும், 'எரிந்த பங்களா' என்று தலைப்பை எழுதிவிட்டுக் கடைசியில், 'நேற்றுவரை இருண்டு போயிருந்த அந்தப் பங்களாவில் இன்று விளக்கு எரிந்தது' என்பதாக முடிப்பதும் கூட உண்டு. அதெல்லாம் என்ன செய்வதென்று தெரியாதவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே ஏதோ செய்து வருகிற காரியங்கள். நாம் ஏன் அவற்றையெல்லாம் பற்றிக் காலைப்பட வேண்டும்?" என்று குமரப்பன் அலட்சியமாக மறுமொழி கூறியிருந்தான். அதே குத்துவிளக்கில்தான் இப்போது மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டித்தும், ஜமீந்தாருடைய நிர்வாகத் திறமையைப் புகழ்ந்தும், தலையங்கங்கள் வெளிவந்திருந்தது. குத்துவிளக்கின் இந்த அடாத செயலை எதிர்த்துத் தங்கள் அதிருப்தியைக் காட்டுவதற்காக மல்லிகைப் பந்தல் கல்லூரி மாணவர்கள் அந்த வாரம் கட்டுக்கட்டாக அந்தப் பத்திரிகைப் பிரதிகளை விலைக்கு வாங்கிப் பொது இடங்களில் நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். "நல்லாக் கொளுத்தட்டும்! நமக்கென்ன வந்திச்சு? உள்ளூர் ஏஜெண்டை இன்னும் நாலு கட்டுப் பார்சல் வரவழைச்சுக் கொளுத்துறவங்களுக்கு விற்கச் சொல்லு" என்று ஜமீந்தார் இதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல் கண்ணாயிரத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலை நிறுத்தத்துக்கு அநியாயமான முறையில் மாணவர்களைத் தூண்டியவன் சத்தியமூர்த்திதான் என்பதற்கு ஒரு 'ரிக்கார்டு' வேண்டுமென்பதற்காகக் குத்துவிளக்கில் அந்தத் தலையங்கம் வரச் செய்திருந்தார் ஜமீந்தார்.
அந்த வாரத்துக் 'குத்துவிளக்கு' இதழ் வெளியாகி நெருப்புக்கிரையான பின்னும் நம்பிக்கை போய்விடாதபடி அதற்கு மறுதினம் மோகினியை அழைத்துக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த சத்தியமூர்த்தியின் தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி மகனை ஒடுக்கி விடலாம் என்ற யோசனையைக் கண்ணாயிரம் ஜமீந்தாரிடம் சமயம் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த யோசனையை மறுக்க முடியாமல் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் சத்தியமூர்த்தியின் தந்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. காலஞ்சென்ற பூபதியின் மகள் என்ற உரிமையோடு பாரதி கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றி இனி எதுவும் விசாரிக்க வாய்ப்பில்லாதபடி அவளை மோகினியிடம் நாட்டியம் படித்துக் கொள்ளச் சொல்லித் தந்திரமாக ஒதுக்கிவிட்டிருந்தார் ஜமீந்தார். மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்த மறுதினம் காலையில் ஜமீந்தார் அவளையும் பாரதியையும் வற்புறுத்தி நாட்டிய டியூஷனைத் தொடங்கி வைத்துவிட்டார். மோகினிக்கும் நாட்டியம் கற்பிப்பதற்கேற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. பாரதிக்கும் நாட்டியம் கற்றுக் கொள்வதற்கான ஏற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. இரண்டு பேரும் ஜமீந்தாருடைய கூப்பாட்டுக்குப் பயந்து கற்பிப்பது போலவும் கற்றுக் கொள்வது போலவும் நடிக்க வேண்டியிருந்தது. அடவு, விளம்பரகாலம், மத்தியகாலம், துரிதகாலம், திஷ்ர ஜதி, சதுரஸ்ர ஜதி, கண்ட ஜதி, மிஸ்ர ஜதி, சங்கீர்ண ஜதி, என்று சில வார்த்தைகள் காதில் விழுகிற வரை உடன் உட்கார்ந்திருந்து மருண்டு விட்டு அப்புறம் ஜமீந்தார் அங்கிருந்து எழுந்து போய்விட்டார். சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டு விட்ட துன்பங்களாலும், தந்தையை இழந்த சோகம் மாறாத மனநிலையாலும் பாரதி தளர்ந்திருந்தாளே ஒழிய உண்மையில் மோகினியைப் போல் பரத நாட்டியக் கலையில் வசீகரமான தேர்ச்சியுள்ள ஒருத்தியிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்கே அந்தரங்கமாக உண்டு. ஜமீந்தார் எழுந்திருந்து போனப் பின்போ பாரதியின் ஆசை வேறு விதமாகத் திரும்பியது. "அக்கா நீங்க ஆடுங்க... நான் பார்க்கிறேன்" என்று சொல்லித் 'தாயே யசோதா' என்ற தோடி ராகக் கீர்த்தனத்துக்கும், 'நாதர் முடிமேல்' என்ற புன்னாக வராளிப் பாட்டிற்கும் மோகினியை ஆடச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தாள் பாரதி.
ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த வானவில்லைப் போலவும், பூமியில் உள்ள பலநிற மலர்களாலும் தொடுத்த பூமாலையைப் போலவும் மோகினி சுழன்று சுழன்று ஆடிய ஆட்டத்தைக் கண்டு பாரதி அபூர்வமான சொப்பனங்கள் நிறைந்த ஒரு புதிய உலகத்திற்கே போய்விட்டுத் திரும்பி வந்ததைப் போன்ற உணர்வை அடைந்திருந்தாள். மோகினி ஆடி முடித்த பின்பு அந்த இடத்தைச் சுற்றிலும் அழகின் நவரச நயங்களும் பாவனைகளும் வந்து காத்துக் கட்டுண்டு கிடப்பன போல் ஒரு சூழ்நிலை உருவாகியிருந்தது. வியப்பு மிகுதியினால் உணர்ச்சி வசப்பட்ட பாரதி, "அக்கா! இந்த விநாடியில் நீங்கள் தெய்வமாகக் காட்சியளிக்கிறீர்கள்! இப்படியே உங்களை நிற்கச் செய்து கைகூப்பித் தொழ வேண்டும் போல இருக்கிறது" என்றாள். இந்த வார்த்தையைக் கேட்ட மோகினியோ கண்கலங்க நின்று கொண்டிருந்தாள். "எனக்குள்ளே சுயமாக நிறைந்திருந்த கலையுணர்வு செத்துப் போய் பலநாட்களாகி விட்டதம்மா! இன்னும் நான் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றால் என்னுள் யாரோ ஒருவருடைய நல்ல ஞாபகம் மீதமிருந்து ஆட்டிக் கொண்டிருக்கிறதென்று தான் சொல்ல வேண்டும்" என்றாள் மோகினி. அவள் இருந்த நிலையைப் பார்த்து அவளிடம் மேலே எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் பாரதி. அப்படி அமைதியாக உட்கார்ந்திருந்தவளுடைய கவனத்தைப் பங்களாவின் முன்பக்கம் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த வேறொரு நிகழ்ச்சி கவர்ந்தது. 'போர்டிகோ'வில் காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாருமாக - மதுரையிலிருந்து மோகினியை அழைத்துக் கொண்டு முன் தினம் மாலையில் மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை எங்கோ புறப்பட வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். "நான் அவனைப் போய்ப் பார்க்கிறதுக்குக் கார் எதுக்குங்க...? நடந்தே போய்ப் பார்த்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லிப்பிட்டு வந்திடறேன்" என்று அந்தக் கிழவர் காரில் ஏற மறுத்ததையும் - காரில் தான் போக வேண்டுமென்று வற்புறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் அந்தக் கிழவரைப் பிடித்து உள்ளே தள்ளாத குறையாகக் காரில் ஏற்றிவிட்டுத் தாங்களும் பக்கத்துக்கொருவராக ஏறி உட்கார்ந்து கொண்டு எங்கோ அவசரமாகப் புறப்பட்டுப் போவதையும் பாரதி அப்போது கவனித்தாள். முந்திய நாள் மாலையில் இதே கிழவரிடம் ஜமீந்தார் ஏதோ சொல்லிப் பயமுறுத்திக் கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாள் அவள். அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவர் யாரிடம் எதைச் சொல்லி எப்படிக் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்தைத் தடுக்க முடியும் என்பதுதான் அவளுக்குப் பெரிய மர்மமாக இருந்தது. எவ்வளவு சிந்தித்தாலும் எதையும் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி மோகினிக்கு ஏதேனும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்த நிலையில் இதைப் பற்றி அவளிடம் கேட்கத் தயங்கிக் கொண்டே கேட்டாள் பாரதி. "அக்கா! இந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவர் யார்? இத்தனை வயதானவரை ஜமீந்தார் மாமா ஏன் இப்படி வேலைக்காரர்களை ஏவுவது போல் ஏவிச் சிரமப்படுத்தறாங்க?" "எனக்கு எதுவுமே தெரியாதம்மா? மதுரையில் மஞ்சள்பட்டி பங்களாவில் கணக்குப் பிள்ளையாக இருக்கிறாற் போல் இருக்கு. என்னிடம் அவர் அதிகம் பேசறதேயில்லை. மதுரையில் காரில் சாமான்களையும் என்னையும் ஏற்றிவிட்டு முன் ஸீட்டில் டிரைவருக்குப் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டவர் இங்கே வந்து சேருகிற வரையில் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட என்னோடு பேசவில்லை. யாரோ பாவம்! அப்பாவி! என்னைப் போலவே இந்தப் பாவிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறார்..." என்றாள் மோகினி. கண்ணாயிரத்தையும், ஜமீந்தாரையும் மோகினி உள்ளூற வெறுக்கிறாள் என்பதைப் பாரதி முன்பே குறிப்பாகப் புரிந்து கொண்டிருந்ததனால், இதைக் கேட்டு அவள் அதிகம் வியப்படையவில்லை. இந்தப் புதிரைப் புரிந்து கொள்ள அவளுக்கு ஒரே ஒரு நம்பிக்கை மீதமிருந்தது. டிரைவர் முத்தையாதான் காரை ஓட்டிக் கொண்டு போயிருக்கிறான். திரும்பி வந்ததும் அவனைத் தனியே கூப்பிட்டு விசாரித்தால் அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை அவர்கள் எங்கே அழைத்துக் கொண்டு போனார்கள்? என்ன செய்வதற்காக அழைத்துக் கொண்டு போனார்கள்? என்ற விவரமெல்லாம் தெரிந்து விடும். 'கார் திரும்பி வருகிற வரை பொறுத்திருப்போம்' என்று பொறுமையோடு இருந்தாள் அவள். அப்படியிருந்த போது அதுவரை தானாக வலுவில் அதிகம் பேசாமல் இருந்த மோகினியே பாரதியிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினாள். "ஏனம்மா பாரதீ? உங்க அப்பாவுக்கு அப்புறம் இந்தக் காலேஜ் நிர்வாகத்தை எல்லாம் யார் கவனிக்கிறாங்க...? அவரைப் போலப் பெருந்தன்மையா இனிமேல் இன்னொருத்தர் கவனிக்க முடியுமா?" "இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள் அக்கா? நீங்க 'நியூஸ்பேப்பரே' பார்க்கிறதில்லையா? அப்பாவுக்கு அப்புறம் ஜமீந்தார் மாமா காலேஜ் நிர்வாகக் கமிட்டித் தலைவராக வந்திருக்காரு. அதோடு காலேஜிலே 'ஸ்டிரைக்'கும் வந்திருக்கு...! எதுவுமே உங்களுக்குத் தெரியாதா?" என்று பாரதி கூறிய செய்தியைக் கேட்டதும் மோகினிக்குத் 'திக்'கென்றது. அவளுடைய உள்ளுணர்வு பயந்து நடுங்கியது. 'என்னைக் காப்பாற்றிக் கைப்பற்றி ஆட்கொண்ட தெய்வம் விரிவுரையாளராக வேலை பார்க்கிற இந்தக் கல்லூரிக்கும் ஜமீந்தார் தலைவராக வந்து விட்டாரே! இனி என் அன்பருக்கு என்னென்ன தொல்லைகளெல்லாம் வருமோ?' என்றெண்ணி மனம் கலங்கினாள் அவள். அவளை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்த கணக்குப் பிள்ளைக் கிழவரும் "டிரங்கால் வந்தது! ஜமீந்தார் ஐயா உங்களைக் காரிலே மல்லிகைப் பந்தலுக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காரு. நாளைக் காலையிலே புறப்படணும்" என்று மட்டும் தான் கூறியிருந்தாரே ஒழியக் கல்லூரி நிர்வாகியாக ஜமீந்தார் வந்திருப்பதையோ, வேலை நிறுத்தம் பற்றியோ, மல்லிகைப் பந்தல் அரண்மனையிலேயே இனிமேல் குடியேற வேண்டுமென்பதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. "நிஜமாகவே உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா அக்கா?" என்று மறுபடியும் வியப்பு மேலிட்டு வினாவிய பாரதிக்கு மோகினி கூறிய பதிலில் ஆற்றாமையும் துயரமுமே நிறைந்திருந்தன. "எனக்கென்னம்மா தெரிகிறது? மதுரையில் ஜெயில் கைதி மாதிரி அடைந்து கிடந்தேன். இனிமேல் இங்கே அடைந்து கிடக்கணும்...!" "இந்த ஜமீந்தார் மாமா ரொம்ப மோசம்! உங்களுக்குக் கூட அவர் இதெல்லாம் தெரிவிக்கிறதில்லையா?... வரட்டும் சொல்கிறேன்..." என்று பதில் சொல்லத் தொடங்கிய பாரதி, 'உங்களுக்குக் கூட' என்ற வார்த்தையை ஏதோ ஒரு தொடர்பை நினைவூட்டுவது போன்ற அர்த்தத்துடன் பேசியதைக் கேட்டு மோகினி உள்ளூர மனம் கொதித்தாள். ஆனால் அதை வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தவித்தாள். மோகினி ஜமீந்தாரை வெறுத்தாலும் அவள் அவருடையவள்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு பேசி வந்தாள் பாரதி. மோகினியோ அந்தப் பேச்சினால் மனம் புழுங்கிச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உள்ளேயே வெந்து துடித்தாள். அப்பப்பா! ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத்தான் எத்தனை ஆயிரம் தடைகள்! மோகினியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் பாரதி மேலும் மேலும் பேசிக் கொண்டே இருந்தாள். அவள் பேச்சு மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றித் திரும்பியது. "இங்கே ஓர் இளம் விரிவுரையாளர் உதவி வார்டனாக இருக்கிறார். அவர் ரொம்ப நல்லவர். மாணவ மாணவிகளுக்கு எல்லாம் அவர் மேல் உயிர். அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்று பிரின்ஸிபலும் ஜமீந்தார் மாமாவும் சதி செய்யறாங்க... அதனாலேதான் 'ஸ்டிரைக்கே' வந்து சேர்ந்தது" என்று அந்த இளம் ஆசிரியரின் பெயர், பதவி ஒன்றையுமே தெரிவிக்காமல் பொதுவாகவே பேசிக் கொண்டு போனப் பாரதி அப்போது தன்னையறியாமலே தன் பேச்சினால் மோகினியின் ஆவலைத் துடிதுடிக்கச் செய்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை அடக்க முடியாமல் தான் மோகினி கல்லூரி நிர்வாகத்தைப் பற்றிய பேச்சையே பாரதியிடம் வலுவில் தொடங்கியிருந்தாள். வெளிப்படையாகச் "சத்தியமூர்த்தி என்ற ஆசிரியர் உங்கள் கல்லூரியில் இருக்கிறாரா?" என்று நேரடியாய் விசாரிக்க முடியாமல் பயமும் கூச்சமும் தடுத்த காரணத்தால் அவள் அப்படிச் செய்யவில்லை. 'மேலும் சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டுமே விசாரித்தால் பாரதிக்கு அதன் காரணமாகத் தன் மேல் என்ன சந்தேகம் மூளுமோ' என்ற தயக்கமும் மோகினிக்கு இருந்தது. அவள் வெளிப்படையாக எதைக் குறிப்பிட்டும் விசாரிக்காத காரணத்தால் பாரதி கல்லூரியைப் பற்றியும், மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியும் பொதுவாகவே கூறிக் கொண்டிருந்தாள். அவள் அப்படிப் பொதுவாகக் கூறிய போதிலும் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக இருந்த இளம் ஆசிரியரைப் பற்றி அவள் தெரிவித்த குறிப்புகளைக் கூர்ந்து கேட்ட மோகினி, 'அந்த விரிவுரையாளர் சத்தியமூர்த்தியாக இருப்பாரோ?' என்ற அநுமானத்தாலேயே மனம் பதறினாள். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|