43
பரிசுத்தமான அன்பு என்பது மனம் நெகிழ்ந்து உருகும் தூயவர்களின் கண்ணீரால் இவ்வுலகில் நிரூபிக்கப்படுகிறது. சத்தியமூர்த்தியின் கேள்விக்குத் தோட்டக்காரனும் புண்பட்ட மனத்தோடு தான் பதில் சொன்னான். "இந்த அழுகைக்கு எங்கே விடிவு பொறக்கப் போகுது? இதை நீங்களும் நானும் கேட்டு ஒண்ணும் ஆகப் போகிறதில்லீங்க. தெய்வம் இருக்குதே தெய்வம் அதுக்குக் காதுன்னு ஒண்ணு இருந்தா அது செவி சாய்ச்சு கேட்க வேண்டிய அழுகை இது! இந்த வயித்தெரிச்சலைக் கேட்காதீங்க... இது இன்னொரு கண்றாவிக் கதை..." என்று தொடங்கிக் குரலைத் தணித்துக் கொண்டு ஏதோ ஆவேசம் வந்தவனைப் போல் மேலும் மேலும் மனக் கொதிப்போடு பேசலானான் அந்தத் தோட்டக்காரன். "சாரோ! சாரு! உங்களைத்தானே? உங்களுக்கு ஏன் இல்லாத வம்பெல்லாம்? உலகத்திலே - இந்தப் பாழாப் போன உலகத்திலே இப்பிடி ரொம்ப நாளா ரொம்ப அநாதைங்க அழுதுகிட்டிருக்குதுங்க. சாமிக்குக் காதிருந்து கேட்டுக் கண் திறந்தால்தான் இவர்களுக்கு விடிவு உண்டு... 'மோகினி'ன்னு கிளியாட்டமா இந்த ஊர்லே ஒரு டான்ஸ்காரப் பொண்ணு இருக்குதே - அதான் சார் - அந்தப் பொண்ணோட அம்மாக்காரி கூடக் கொஞ்சம் நாளைக்கு முன்னே கார் விபத்துலே செத்து வச்சாளே... அந்தப் பொண்ண இங்கே கொண்டாந்து தங்க வச்சிருக்கார் எங்க ஜமீந்தார்... ரொம்ப நாசுக்காகச் சொல்லணுமானா ஜெயில் இருக்குதே ஜெயில், அதிலே கைதியை பிடிச்சு வச்ச மாதிரி வச்சிருக்காரு... அந்தப் பொண்ணுக்குத் துணையாயிருக்கணும்கிற பேரிலே ஒரு ஆயாக் கிழவியையும் காவலாப் போட்டிருக்காரு. உள்ளே எட்டிப் பாரு சார். எங்கியாவது இந்த அநியாயம் நடக்குமா? அந்தப் பொண்ணு தலைவிரி கோலமாகக் கீழே தரையிலே கிடக்கிற வீணையிலேயும் தம்புராவிலேயும் தலையை மோதிக்கிட்டுக் கதறிக் கதறி அழுவுது. ஆயாக் கிழவியோ ஜமீந்தாருக்குப் பயந்து கிளியைக் கூட்டிலே பிடிச்சி அடைச்ச மாதிரி அந்தப் பொண்ணை உள்ளார வச்சுக் கதவையே பூட்டிப்புட்டா. ரொம்ப தங்கமான பொண்ணு சார்... அசோக வனத்துலே சீதையைக் கொண்டாந்து வச்ச மாதிரி எங்க ஜமீந்தாரு இந்தப் பொண்ணை இங்கே கொண்டாந்து வச்சிருக்காரு..." என்று கூறிக் கொண்டே மாளிகையின் முன்புறம் பூட்டப்பட்ட அறையின் திறந்த ஜன்னலருகே சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்தான் தோட்டக்காரன். உயிருள்ள மங்கல வாத்தியமொன்று உயிரில்லாத மர வாத்தியங்களைத் தழுவியபடியே தாங்க முடியாத சோகத்தால் தளர்ந்து துவண்டு கிடப்பதைச் சத்தியமூர்த்தி அப்போது அந்த அறைக்குள் பார்த்தான். மோகினி தலைவிரி கோலமாகக் கிடந்தாள். அவளுடைய மூடிய கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவனுடைய வாத்தியம் - அவனுக்கு ஆத்ம சமர்ப்பணமான பரிசுத்த வாத்தியம் அங்கே சிறைபட்டு அழுது கொண்டிருப்பதை அவன் தன் கண்களாலேயே கண்டான். மனத்தை நெகிழச் செய்து தவிக்க வைக்கும் அந்தச் சோகக் காட்சியைப் பார்த்த பின் அவனுடைய கால்கள் அங்கிருந்து நகர மறுத்தன. 'பூபதியாவது விமான விபத்தில் ஒரேயடியாக இறந்து போய்விட்டார். இவளுக்கோ வாழ்க்கையே பெரிய விபத்தாக இருந்து ஒவ்வொரு நாளும் இவளைச் சிறிது சிறிதாகக் கொன்று கொண்டிருக்கிறது. விரும்பியபடி வாழ முடியாமல் போவதும், வாழ்வதில் விருப்பமில்லாதபடி ஏனோதானோ என்று இயங்குவதும் கூட ஒருவகைச் சாவுதான். மனத்தைக் கொன்று விட்டு உடம்பால் மட்டும் வாழ முடியுமானால் அந்த வாழ்க்கையே அப்படி வாழ்கிறவர்களுக்கு ஒரு சாவாக இருக்கும்!' என்று நினைத்தான் சத்தியமூர்த்தி.
"என்ன சார், அப்படிப் பார்க்கிறீங்க? இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?" என்று சத்தியமூர்த்தியைக் கேட்டான் தோட்டக்காரன்.
"தெரியும்! இந்தத் துர்ப்பாக்கியசாலியைத் தெரிந்த துர்ப்பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். சிறிது நேரத்திற்கு முன்னால் நீ கூறினாற்போல் கடவுளே கண் திறந்து இரக்கப்பட்டால் தான் இவளுக்கு விடிவு பிறக்கும் போல் இருக்கிறது. ஆனால் கடவுள் மிகப் பல நல்ல சமயங்களில் கொஞ்சமும் இரக்கமில்லாதவராயிருந்து விடுகிறார். சாதாரண மனிதர்களைப் போல் சில வேளைகளில் அவரும் நம்ப முடியாதவராகி விடுகிறார்" என்று கண்ணும் மனமும் கலங்கிய நிலையில் நாத் தழுதழுக்கச் சொன்னான் சத்தியமூர்த்தி. இதைக் கேட்டு விட்டுச் சிறிது நேரத்தில் தன் வேலையைக் கவனிப்பதற்காகத் தோட்டத்துப் பக்கமாகப் போய்விட்டான் அவன். அவர்களுடைய பேச்சுக் குரலினால் கவரப்பட்டுச் சோர்ந்தாற் போல் தளர்ந்து கண் மூடிக் கிடந்த மோகினி விழித்துக் கொண்டு விட்டாள். ஜன்னலுக்கு அப்பால் மோகினி சத்தியமூர்த்தியைப் பார்த்தாளோ இல்லையோ, அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. எழுந்து நின்று ஜன்னலின் கம்பிகளுக்கு நடுவே தெரிந்த அவனுடைய முகத்தை நன்றாகப் பார்த்தாள் அவள். புகை படிந்த ஓவியத்தைப் போல் அழுது அழுது ஒளி மங்கியிருந்த அவளுடைய சுந்தர முகத்தை அவனும் பார்த்தான். சோகமும் மௌனமுமே நகர்வது போல் நகர்ந்து வந்து ஜன்னலின் உட்புறம் அவனெதிரே நின்று பயபக்தியோடு கைகூப்பினாள். அவனிடமிருந்து நீங்கிப் போய் விலகிய வாழ்க்கையின் சுகங்களைப் போல் அந்த வீணை தரையில் தனியே கிடந்தது. பேச வார்த்தைகள் கிடைக்காமலோ கிடைத்த வார்த்தைகளைக் கொண்டு பேச முடியாத அளவற்ற வேதனையினாலோ அவளையே இமையாமல் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றான் சத்தியமூர்த்தி. அவள் அவனுடைய கம்பீரமான முகத்திலும் கண்களிலும் ஒளிர்ந்த தூய்மையைக் கௌரவிப்பது போல் அவனை நிமிர்ந்து பார்க்க நாணித் தலைகுனிந்தாள். "கடைசியில் நான் இந்த நரகத்துக்கே வந்து விட்டேன். சொல்லாமல் கொள்ளாமல் ஆஸ்பத்திரியிலிருந்து திடீரென்று 'டிஸ்சார்ஜ்' செய்து என்னை இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டார்கள். பழைய வீட்டுக்கும் இனிமேல் போக முடியாது. அங்கேயிருந்த சாமான்களையெல்லாம் ஒழித்துக் கொண்டு வந்தாயிற்று" என்று குமுறிக் கொண்டு வருகிற அழுகைக்கு நடுவே ஒலி தளர்ந்து நலிந்த சொற்களால் பேசினாள் அவள். "அந்த வீடும் ஜமீந்தாருடையது தானாமே?" என்று அப்போது அவளைக் கேட்டு விடுவதற்காக நாவின் நுனிவரை வந்துவிட்ட ஒரு கேள்வியைக் கேட்காமல் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு விட்டான் அவன். மோகினியின் தாய் முத்தழகம்மாள் எந்த எந்த விதத்திலோ மஞ்சள்பட்டி ஜமீன் குடும்பத்துக்கு ஆட்பட்டு வீடு வாசல், உணவு உடை எல்லாம் ஜமீந்தாரிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தால் அதற்குப் பேதை மோகினி என்ன செய்வாள்? 'மோகினி அவளுடைய நாட்டியக் கலையில் மட்டுமே ஞானி! மற்றவற்றில் எல்லாம் அவள் வெறும் பேதை. பேதைகளை அதிகம் புண்படுத்துவது பாவம்' என்று எண்ணியது அவன் உள்ளம். அவளே மேலும் அவனிடம் பேசினாள்: "நேற்று என் மேல் உங்களுக்குக் கோபம் போல் இருக்கிறது. ஜமீந்தாரும் மற்றவர்களும் காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த போது நீங்கள் என்னிடம் சொல்லி கொள்ளாமலே அங்கிருந்து போய் விட்டீர்கள்" - சத்தியமூர்த்தி இப்போது அவளுக்குப் பதில் கூறலானான்: "உன் மேல் கோபப்பட்டு என்ன பயன்? நீ ஒரு பேதை! உன்னைச் சந்திக்காமலிருந்தால் நானும் என்னுடைய வாழ்க்கையில் ஓர் அழகிய பேதையின் அவலங்களை நினைத்து இப்படிக் கண் கலங்க நேர்ந்திருக்காது." "அப்படிச் சொல்லாதீர்கள்! உங்களைச் சந்திக்காமலிருந்தால் நான் வாழவே நேர்ந்திருக்காது." "வாழ்வதும் சாவதும் நம் கையில் இல்லை மோகினி! பூபதி சிறப்பாகப் பேரோடும் புகழோடும் வாழ்வதற்குத் தான் பத்மஸ்ரீ விருது வாங்கப் பறந்து போனார். பாவம் ஒரேயடியாக உலகத்தை விட்டே போய்விட்டார். அவர் சாக வேண்டும் என்று நினைக்கவேயில்லை. ஆனால் வாழ முடியாமல் போய்விட்டது." "செய்தி தெரிந்த போது எனக்கு ரொம்பப் பாவமாயிருந்தது. அவருடைய பெண் இங்கே கதறி அழுத குரல் கேட்டுக் காலையில் நான் பயந்தே போனேன்" என்று மோகினி கூறிய போது, "நீதான் ஜமீந்தாருக்கே பயப்படுகிறவளாயிற்றே? வெறும் அழுகுரலைக் கேட்டு ஏன் பயப்பட மாட்டாய்?" என்று சத்தியமூர்த்தி நடுவில் குறுக்கிட்டு அவளைக் கேட்டான். இதைக் கேட்டு அவள் முகம் மேலும் வாட்டமடைந்தது. இந்தச் சொற்களால் அவளுடைய மென்மையான இதயம் தாக்கப்பட்டு விட்டது. "இப்போது நீங்கள் கூறியதற்கு என்ன அர்த்தம்?" "நீ கெட்டவர்களைக் கண்டு பயப்படுகிறாய் என்று அர்த்தம்." "கொடிய புலிகளைப் பார்த்துப் பலமில்லாத மான்கள் நடுங்குவது தவறா?" "நடுங்கலாம். ஆனால் கோழையாயிருக்கக் கூடாது. கோழைகள் எதையும் தீர்மானமாக விரும்புவதற்கும் வெறுப்பதற்கும் கூடத் தகுதியற்றவர்கள். அவர்களால் எப்படித் தைரியமாகக் காதலிக்க முடியும்?" "நான் உங்களை விரும்பித் தொழுவதற்குத் தைரியமில்லாமல் தொழவில்லை. நீங்கள் ஆஸ்பத்திரிக்குள் என்னைத் தேடிக் கொண்டு வருவது பிடிக்காமல் தான் ஜமீந்தார் அவசரம் அவசரமாக என்னை இங்கே கொண்டு வந்து தள்ளினார். அதனால் என் இதயத்தில் தளர்ச்சி வந்து உங்களைத் தொழுகிற தொழுகையை நான் இன்னும் நிறுத்தவிடவில்லையே?" "அப்படியானால் மனம் ஒப்பி இந்த நரகத்துக்கு நீ ஏன் வந்தாய்?" "சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டு போக நீங்கள் இன்னும் அருகில் நெருங்கி வரவில்லை. நீங்கள் இல்லாத போது, பாவிகள் என்னைப் பயமுறுத்தி, மிரட்டி இங்கே கொண்டு வந்து தள்ளியிருக்கிறார்கள். நான் விரும்பியா இந்த நரகத்துக்கு வந்தேன்? எனக்கு உங்களைத் தவிர வேறு உலகம் இல்லை. இந்த நிமிஷமே - வெளியே பூட்டியிருக்கிற இந்தக் கௌரவமான சிறைக் கதவைத் திறந்து விட்டு உங்கள் வலது கரத்தை முன்னால் நீட்டி என்னைக் கைப்பற்றி அழைத்துச் செல்லுங்கள். நான் உங்கள் வழியில் நடந்து வரத் தயார். ஆனால் என்னை அழைத்துப் போகிற உங்களுக்கு நானே அதன் பிறகு ஒரு பெரிய தளையாகிவிடுவேன். ஜமீந்தாருடைய ஆட்கள் உங்களைக் கருவறுக்க வேண்டுமென்று துரத்திக் கொண்டு புறப்படுவார்கள். வசந்தசேனையும், மாதவியும் வாழ்ந்த காவிய காலத்தில் நாம் வாழவில்லை. ஆனால் அதே உயரிய ஆசை எனக்கும் உங்களுக்கும் இருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கிற உலகில் எல்லாத் துன்பமும் உண்டு. இன்றைய உலகத்திலோ என்னுடைய பழிகள் - நான் பிறந்த இடத்தின் பழிகள் - எல்லாம் விட்டுவிடாமல் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. என் கலையை உலகம் அங்கீகரிக்கும். பிறப்பை அங்கீகரிக்குமா, அன்பரே?" "வழிபாட்டுக்கு உரிய தாமரைப் பூக்கள் சேற்றில் தான் பூக்கின்றன. வாசனை மிக்க சந்தன மரம் மண்ணில் தான் முளைக்கிறது! பிறப்பு எல்லா உயிர்க்கும் ஒன்று. சிறப்புத்தான் வேறுவேறாக வந்து வாய்க்க முடியும்!" "பயத்தையும் நிராதரவையும் தவிர என்னைப் போன்ற பேதையின் வாழ்வில் வேறென்ன சிறப்பு இருக்க முடியும்...?" "அப்படிச் சொல்லாதே! நீயே ஒரு சிறப்புத்தான். நீ பேதையாயிருக்கிறாய் என்பது உனக்கு இன்னும் ஒரு சிறப்பு. பேதைகள் சுலபமாக மனத்தைப் பறி கொடுக்கிறார்கள். புத்தியும் தந்திரமும் உள்ளவர்களால் இன்னொருவருடைய மனத்தைப் பறித்துக் கொள்ள முடியுமே தவிர இன்னொருவருடைய மனத்துக்கு விட்டுக் கொடுக்க முடியாது." "நான் யாரிடம் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறேனோ அவர் என் மோதிரத்தைத் தான் அணிந்து கொண்டு தன் மோதிரத்தை எனக்கு அணிவித்துத் தெய்வீகமாகவும் அந்தரங்கமாகவும் என்னை மணந்து கொண்டிருக்கிறார். அப்படி மணந்து கொண்ட விநாடியிலிருந்து மனத்தினாலும் பாவனைகளினாலும் நான் அவருடைய மனைவியாகவே இருந்து வருகிறேன். உலகத்துக்குத் தெரிந்து வாழ முடிந்தாலும் உள்ளத்தினாலும் உணர்ந்து வாழ முடிந்தாலும் நான் அவருக்காகத்தான் வாழ்வேன்! 'நீண்ட நாட்களுக்கு முன் ஒரு சமயம் கோவிலில் என்னைச் சந்தித்த போது, வயிறு நிரம்ப வேண்டுமானால் யார் சொல்கிறபடியாவது கேட்டுத்தான் ஆகவேண்டும். கேட்கவும் ஒப்புக் கொள்ளவும் கசப்பாயிருந்தாலும் இதுதான் வாழ்க்கையைப் பற்றிய உண்மை' என்று என்னிடம் கோபமாகச் சொல்லியிருக்கிறீர்கள் நீங்கள். வயிற்றை நிரப்பிக் கொண்டு எங்கேயாவது வாழ வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. உங்களைத் தவிர இன்னொருவர் இந்தக் கையைத் தொடுகிற போது என்னுடைய உடம்பில் உயிர் இருக்காது. இது வெறும் வார்த்தையில்லை. உங்கள் ஆணையாகச் சத்தியம்..." என்று கூறி ஜன்னல் வழியே கையை நீட்டி அவனுடைய வலது கையைத் தன் கையோடு சேர்த்துக் கொண்டு அந்தச் சத்தியத்தை நிரந்தரமாக்குவது போல நிச்சயித்தாள் மோகினி. அப்போது சத்தியமூர்த்தி அவளைக் கேட்டான்: "எப்படியும் நீ இந்த நரகத்தில் உன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு மோகினீ! ஆனால் உன்னை இப்படி இந்த அறையில் தள்ளி அடைத்துப் பூட்டிச் சிறை வைக்கிற அளவு நீ யாருக்கு என்ன கொடுமை செய்தாய்? ஏன் இப்படிப் பாவங்களைக் கூசாமல் செய்கிறார்கள்?" "அறையைப் பூட்டாமல் திறந்திருந்தாலும் எனக்கு இது சிறைக்கூடமாகத்தான் இருக்கும்! மனத்திற்குப் பிடிக்காத இடத்தில் கால்கள் நிற்பதே சிறைதான். நான் தப்பி ஓடிப் போய்த் தற்கொலை பண்ணிக் கொண்டு விடக் கூடாதே! அதற்காகத்தான் ஜமீந்தார் எனக்கு இத்தனை பாதுகாப்புப் பண்ணி வைத்திருக்கிறார். நான் செத்துப் போகவும் எனக்குச் சுதந்திரம் இல்லை." "கவலைப்படாதே! என்றாவது ஒரு நாள் நீ உன் மனம் விரும்புகிறபடி கௌரவமான வாழ்வை அடைய முடியும். தெய்வம் உன்னை வாழவைக்கும்! உன் தூய நம்பிக்கைகள் என்றாவது வெற்றிபெறும்." "என் தெய்வம் நீங்கள் தான்! எப்போதும் இந்தக் கால்கள் உங்கள் பின்னால் நீங்கள் போகிற வழியில் நடந்துவரத் தயாராகத் துடித்துக் கொண்டிருக்கின்றன. என்னுடைய அழகும் கலைத்திறனும் எனக்குப் பெரிய பகைகள். நான் நினைக்கிறபடி வாழக் கொடுத்து வைக்கவில்லை. பிறந்ததிலிருந்து அழுகைதான் என்னுடைய சௌபாக்கியம்! என்னுடைய வாழ்வு ஓர் உறுதியில்லாத கனவாயிருக்கிறது. நீங்கள் என்னை வாழ வைப்பீர்கள். ஆனால் அப்படி முன் வருகிற உங்களை உலகமும் மற்றவர்களும் வாழ விட மாட்டார்கள்." "ஜமீந்தார் உன்னிடம் என்னவிதமான வாழ்வை எதிர்பார்க்கிறார்?" "இந்தக் கேள்வியே மகாபாவம். இதற்குப் பதில் சொல்கிற பாவத்தை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை." "கேள்வி கேட்காமல் நான் எப்படி எதைத் தெரிந்து கொள்ள முடியும், மோகினீ! ஆனால் நீயோ கேள்வி கேட்பதே பாவம் என்று சீறுகிறாய்!" "சீறாமல் பின் என்ன செய்வேன்? பந்தல் போட்டு, சுற்றமும் உறவும் அழைத்து மேளதாளத்தோடு மாலை மாற்றிக் கொண்டால் தான் கலியாணமா? ஆண்டாள் அரங்கநாதரைப் பாவித்தது போல் உங்களை மணந்து, உங்கள் மனைவியாகவே என்னைப் பாவித்துக் கொண்டிருக்கிறேன் நான். உங்கள் மனைவியிடமே 'நீ யாரோடு வாழ விரும்புகிறாய்' என்று நீங்கள் கேட்பது பெரிய பாவமில்லையா?" அவளுடைய இந்தச் சொற்கள் அவனைப் புல்லரிக்கச் செய்தன. 'இந்தப் பேதையின் இதயத்தில்தான் எவ்வளவு உறுதியான அங்கீகாரம் நிரம்பியிருக்கிறது. 'நான் உங்கள் மனைவி' என்று சொல்லிக் கொள்வதிலேயே இவளுக்கு வாழ்க்கையைப் பற்றிய சகல விதமான திருப்திகளும் கிடைத்து விடுவதாகப் பாவனை புரிய முடியுமானால் இது எவ்வளவு உயர்ந்த காதலாக இருக்க முடியும்? பரிசுத்தமான அன்பு என்பது மனம் நெகிழ்ந்து உருகும் தூயவர்களின் கண்ணீரால் இவ்வுலகில் நிரூபிக்கப்படுகிறது என்று சொல்வது இவளை பொறுத்தவரை எவ்வளவு பொருத்தமான வாக்கியம்?' என்று எண்ணி அவளுடைய தோற்றத்தையே ஒரு வியப்பாகக் கருதி கவனித்தான் சத்தியமூர்த்தி. அவன் வாசிப்பதற்காகவே அவனெதிரே காத்து நிற்கும் நிர்மல வாத்தியமாய் - அப்போது நின்று கொண்டிருந்தாள் அவள். வாழ்வில் இரண்டு நன்மைகளின் நடுவே நிற்கும் சாமானியமான பல தடைகளைப் போல் அவனுக்கும் அவளுக்கும் நடுவே ஜன்னல் கம்பிகள் இருந்தன. "உன்னுடைய மங்கல நினைவுகள் வீண் போகாது மோகினீ!" என்று உணர்ச்சிப் பெருக்கோடு தொடங்கி அவன் அவளிடம் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் போது, "நீங்கள் எனக்கு ஓர் வாக்குறுதி செய்து கொடுக்க முடியுமானால் நான் அதிர்ஷ்டசாலியாக இருப்பேன்" என்று பிச்சை கேட்பது போன்ற குரலில் அவனிடம் ஒரு வேண்டுகோளைத் தொடங்கினாள் அவள். அந்த வேண்டுகோளைக் கேட்டு அவன் கண்ணீர் சிந்தினான். அவன் மனம் நெகிழ்ந்து உருகியது. "இதென்ன அம்ங்கலமான வேண்டுகோள்?" என்று அதைக் கேட்டு அவள் மேல் சீற்றங்கொண்டு அவன் கோபித்தான். ஆனால் அவளோ பிடிவாதமாக அந்த வேண்டுகோளையே வற்புறுத்தினாள். "உன்னுடைய வாழ்வின் திருப்தி இந்த மிக எளிமையான தேவைகளிலிருந்தே உனக்குக் கிடைத்து விட முடியுமா மோகினீ?" என்று அவன் எதிர்த்து வினாவிய போது அவளும் பதில் சொல்ல முடியாமல் பெரிதாக அழுது விட்டாள். ஆனால் அந்த அழுகையும் சில விநாடிகளில் நின்றது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் அவள் அவனைப் பார்த்த போது அந்தப் பேதையின் முகம் கலக்கமில்லாத பேரமைதியோடிருந்தது. அவளுடைய வேண்டுகோளைக் கேட்டுச் சத்தியமூர்த்தி கண் கலங்கிய அதே வேளையில் வாழ்க்கையின் சகலவிதமான திருப்திகளையும் அடைந்து இதய பூர்வமாக அவற்றை அங்கீகரித்துக் கொண்டு விட்டாற் போலச் சலனமற்றிருந்தாள் அவள். மனத்தின் திருப்தியும் தியாகமும் தெரிகிற தூய பார்வையால் அவளுடைய கண்களின் அழகு அப்போது பெருகியிருந்தது. கண்களில் உள்ள மோகன மயக்கத்தாலும் கவர்ச்சியாலும் பெண்களுக்கு 'மதிராட்சி' என்று சில கவிகள் பெயர் சூட்டிப் புனைந்துரைத்திருப்பதை நினைத்தான் சத்தியமூர்த்தி. திராட்சை மதுவைப் போல் கண்கள் என்று பாடியவன் உணர்ச்சிமிக்க கவியாயிருக்க வேண்டும். மேல் வானத்து நீல முற்றத்தில் சில வேளைகளில் மிதக்கும் ரோஸ் மேகங்களைப் போல் சிவந்த அந்த முகமும், அந்த முகத்துக்குரியவளின் செம்மை பூவிரிக்கும் உள்ளங்கைகளும் செம்மை அரும்பிப் பளபளக்கும் இதழ்களுமாகப் பார்வையே பேசுவதாய் நின்றாள் அவள். அந்தக் கண்கள் அவனிடமிருந்து எதையோ கேட்டன. எதற்கோ ஏங்கின. சிரிக்க விரும்பாத சூழ்நிலையில் பழகிப் பழகிச் சோகமே நிரந்தர உணர்ச்சியாகிவிட்டாலும் அவளுடைய அந்த உதடுகளில் சிரிப்பு மறைவாய், உறங்கிக் கொண்டிருந்தது. புறப்படாத மோனமாக ஒரு புன்னகை அங்கே தயங்கி நின்றது. அவள் சற்று முன் அவனிடம் வாக்குறுதியும் வேண்டுகோளும் கேட்டிருந்த கோமளமான மெல்லிய குரல் இன்னும் அவன் செவிகளில் ராகமாய், அநுராகமாய் இனிமை கவிந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|