5
உலகத்துக்கு அழகாகத் தோன்றுகிற பலர் உள்ளத்தால் வெந்து அழிந்து கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை. அவர்களுடைய அழகு ஒரு தடையாக இருந்து அந்தரங்கத்தில் அவர்கள் படுகிற கவலைகளைப் பிறர் காண முடியாமல் மறைத்து விடுகிறது. 'அந்த நிலையில் தான் என்ன செய்வது?' என்பதை சத்தியமூர்த்தி இன்னும் ஒரு கணம் சிந்தித்திருந்தானானால் அவள் வைகையாற்றில் பாய்ந்திருப்பாள். சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருப்பதை விடச் செயல்பட்டுக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தையும், அவசியத்தையும் உணர்ந்தவனாக கீழே தாவி இறங்கி கைக்கு இசைவாக இருந்த அவள் வலது கையைப் பற்றிப் பின்னுக்கு இழுத்தான் சத்தியமூர்த்தி. அவன் அவசரமாகப் பாய்ந்து பற்றிய வேகத்தில் அந்தப் பூப்போன்ற கையை அழகு செய்து கொண்டிருந்த கண்ணாடி வளையல்களில் சில நொறுங்கின. பூக்களின் மென்மையை விட அதிகமான மென்மையும் சந்தனத்தின் குளிர்ச்சியை விட அதிகமான குளிர்ச்சியும் பொருந்திய அந்தக் கையில் உடைந்த வளைச் சில்லுகள் அழுத்தப்பெற்ற இடங்களில் கோடு கீறினாற் போலக் குருதி கொப்பளித்தது. வாழ்க்கையின் எல்லாவிதமான தொல்லைகளிலிருந்தும் விடுபட்டுப் போவதற்குத் துணிந்துவிட்ட அந்தப் பெண் கடைசி விநாடியில் தன் துணிவையும் விருப்பத்தையும் பாழாக்கிவிட்ட அவனைத் திரும்பி நிமிர்ந்து பார்த்தாள். பிரத்யட்ச உலகில் ஓர் அபூர்வமாய்க் கவிகளின் கனவுகளிலே மிதக்கும் எல்லாவிதமான எழில்களும் ஒன்று சேர்ந்து இல்லாப் பேரழகைப் போன்ற அவளுடைய அந்தக் கண்களில் நீர் மல்கிற்று. புயல்காற்றில் அறுந்து விழுவதற்கு இருந்த பூக்கொடி தற்செயலாய்ப் பக்கத்துக் கிளையில் படரவிட்டிருந்த ஏதோ ஒரு சிறிய நுனியின் பிணைப்பால் தப்பி இருப்பதைப் போல் அவள் அவன் பிடியில் இருந்தாள். உலகத்திலுள்ள நறுமணங்களில் மனத்தை மயக்கும் சக்திவாய்ந்த மணங்கள் எவை எவை எல்லாம் உண்டோ அவை அவை எல்லாம் ஒன்றாகி மணப்பது போல் மணங்களின் உருவமாகத் தன் பிடியில் சிக்கி நிற்கும் அவள் காதருகே குனிந்து சொன்னான் சத்தியமூர்த்தி. "நல்ல வேளையாக நீங்கள் காப்பாற்றப்பட்டு விட்டீர்கள்! இனி இப்படி நினைப்பு உங்களுக்கு வரக்கூடாது." "வாழ விரும்பாத அபலைகளையும் அநாதைகளையும் வலிந்து காப்பாற்றுகிறவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை" என்று வெறுப்போடு பதில் சொல்லிய போது எந்தவிதமான ஆசைகளின் சாயலும் இல்லாமல் வறட்சியாகச் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பைப் பார்த்த மறுகணமே அதன் உடனிகழ்ச்சியாகத் 'தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள்' என்று கவியரசர் பாரதி ஞானரதத்தில் எங்கோ எழுதியிருக்கும் ஓர் அழகிய வாக்கியம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. வெறுப்பிலும் நிராசையிலும் தோய்ந்து மரணவாயிலுக்கு அருகே அடியெடுத்து வைத்துவிட்டுத் திரும்புகிற போதே இவள் சிரிப்பு இவ்வளவு அழகாயிருக்குமானால் தானே சிரிக்க விரும்பி இவள் சிரிப்பது இன்னும் எவ்வளவு அழகாயிருக்கும் என்று கற்பனை செய்ய முயன்றான் சத்தியமூர்த்தி. இதற்குள் இரயில் வைகைப் பாலத்தைக் கடந்து பொன்னகரம் என்ற உழைப்பாளிகளின் சுவர்க்கத்தையும், பிரம்மாண்டமான பஞ்சாலைக் கட்டிடங்களையும் ஊடுருவிக் கொண்டு மதுரை நகருக்குள் செல்லத் தொடங்கியிருந்தது. "ஊர் வந்துவிட்டது. இரயிலிலிருந்து இறங்கும்போது இனி எப்போதும் இப்படி அசட்டுக் காரியம் செய்யலாகாது என்ற திடமான நம்பிக்கையோடு மதுரை மண்ணில் இறங்கி நடக்க வேண்டும் நீங்கள்" என்றான் சத்தியமூர்த்தி. "என்னைப் போன்றவர்கள் வாழ்வதும் வாழ நினைப்பதும் தான் அசட்டுக் காரியம். சாவுதான் எனக்குப் புகழிடம். சாமர்த்தியசாலிகளும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும் வாழவேண்டிய உலகம் இது. பேதைகளும் அப்பாவிகளும் என் போன்ற அபலைகளும் வாழ்வதற்கு இங்கு இடமில்லை."
"நம்பிக்கைகளை அடைய வேண்டிய வயதில் இப்படி விரக்திகளை நினைக்கவோ பேசவோ கூடாது."
"என்ன செய்யலாம்? என் நிலையில் இதைத் தவிர வேறு எதையும் பேச வலிமையற்றவளாயிருக்கிறேன் நான்." இந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக இன்னும் ஏதேதோ சொல்ல வேண்டும் என்று நினைத்தான் சத்தியமூர்த்தி. ஆனால் அதற்குள் இரயில் பிளாட்பாரத்தில் புகுந்து நின்றுவிட்டது. அந்தப் பெண்ணின் தாயும் விழித்துக் கொண்டு விட்டாள். கூட்டமோ, பரபரப்போ இல்லாமல் பிளாட்பாரம் அழுது வடிந்தது. அந்த இரண்டுக்கெட்ட நேரத்தில் கவனிப்பாரற்று நுழையும் சாதாரணமான பிரயாணிகள் இரயிலின் பக்கமாய்ப் போர்ட்டர்கள் கூட அதிகமாக வந்து எட்டிப் பார்க்கவில்லை. "ஊர் வந்து விட்டாற் போல் இருக்கிறதே?..." என்று அந்த அம்மாள் தூக்கம் கலைந்த விழிப்பும், ஊர் வந்த விழிப்பும் போட்டிபோட இரட்டை விழிப்புடனே எழுந்த போது அவளிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து அந்தக் கடுமையான முகத்தைப் பார்த்த பின் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் தயங்கினான் சத்தியமூர்த்தி. அந்த அம்மாள் முகத்தைப் பார்த்தால் அப்போது அவளிடம் தான் ஒன்றும் பேசாமல் விடைபெற்றுக் கொண்டு போய் விடுவதே நல்லது என்று தோன்றியது அவனுக்கு. "உங்கள் பெண்ணிடம் நீங்கள் இன்னும் அதிகமான பாசத்தோடும், கருணையோடும் நடந்து கொள்ள வேண்டும் அம்மா! இப்படிக் கொடுமையாகவும் பரிவு இல்லாமலும் நடந்து கொள்வீர்களானால் என்றாவது ஒருநாள் உங்கள் பெண்ணை நீங்களே உயிரோடு பார்க்க முடியாமல் போய்விடும்..." என்று தொடங்கிக் கண்டிப்பாகவும் அந்த நேரத்தில் அதற்காகவே எடுத்துக் கொண்டாற் போன்ற ஒரு விதமான உரிமையுடனும் பேச எண்ணியிருந்தும் பேசப்பட வேண்டியவளுடைய முகத்தைப் பார்த்ததும் அவன் அதைச் செய்ய இயலாமல் போயிற்று. கண்ணீர் பெருகும் விழிகளால் சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகிவிட்ட அவனையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பச்சையும் சிவப்புமாக நிறங்கள் கோடுகோடாகச் சிதறிக் கிடப்பது போல் உடைந்த வளைச் சில்லுகள் காலில் இடறின. போகும் போது இருவரில் யாரிடம் சொல்லி கொள்வதென்று ஒரு கணம் சிந்தித்த பின் இருவருக்கும் பொதுவாக 'வருகிறேன்' என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. அந்த ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லியிருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது. ஆனால் 'வருகிறேன்' என்ற அந்த ஒரு வார்த்தைக்குப் பதிலும் சொல்ல முடியாமல், பதில் சொல்லாமலும் இருக்க முடியாமல் கண்ணில் பெருகும் நீரே தன் அந்தரங்கத்துக்குச் சாட்சியாக மெல்லத் தலையை அசைந்து விடை கொடுத்தாளே, அந்த ஒருத்திக்காக அதைச் செய்தது சரிதான் என்ற திருப்தியோடு பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தான் சத்தியமூர்த்தி. இரயில் சந்திப்புகளுக்கு வரவேற்பு கிடையாது, விடைபெறுதலும் கிடையாது - இருக்கவும் கூடாது. ஆனால் சில சந்திப்புகள் மனத்தில் பதிந்து கொள்கின்றனவே! அப்படிப் பதிவாகிய சந்திப்புக்கள் நம்மையும் அறியாமலே நாம் ஏதோ ஓர் உறவைக் கற்பித்துக் கொள்ளும்படி செய்துவிடுகின்றன. தன்னைப் பொறுத்தவரை தானும் இன்று அப்படி யார் மேலேயோ ஏதோ ஓர் உறவைக் கற்பித்துக் கொண்டு விட்டதைச் சத்தியமூர்த்தி உணர்ந்தான். அவன் பிளாட்பாரத்தில் இறங்கிச் சிறிது தொலைவு தான் நடந்திருப்பான். அதற்குள் இவன் முற்றிலும் எதிர்பாராத கேள்வியோடு எதிர்பாராத மனிதர் ஒருவர் அவனைச் சந்தித்தார். அந்தக் கேள்வியைக் கேட்ட விதமும் கேட்டுவிட்டு அவர் அவனைப் பார்த்த பார்வையும் சிரித்த சிரிப்பும் சத்தியமூர்த்தியை என்னவோ செய்தன! "என்னடா சத்தியம்? இவர்களை உனக்கு எவ்வளவு நாட்களாகத் தெரியும்? ரொம்ப நாட்களாகப் பழக்கம் போலிருக்கிறது...?" "இவர்களை என்றால் எவர்களை?" "அதுதான் ரயிலில் உன் கூட வந்தார்களே, அவர்களைத் தான் சொல்கிறேன். இரயில் பிளாட்பாரத்தில் நுழையும்போதே உன்னை நான் பார்த்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேராகச் சொல்லி வைத்தாற் போல் உங்கள் வண்டி வந்தது... அது சரி... பாதி ராத்திரிக்கு மேல் இப்படி எங்கேயிருந்து பயணம் புறப்பட்டு வருகிறாய் இவர்களோடு?" இதைக் கேட்டு சத்தியமூர்த்திக்குச் சினமும் திகைப்பும் மாறிமாறி ஏற்பட்டன. அந்த மனிதரை எரித்து விடுவது போல் பார்த்தான் அவன். 'மூன் லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸீஸ்' என்று சொன்னால் அதன் உரிமையாளர் கண்ணாயிரத்தை எல்லோருமே தயங்காமல் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு நாலாவது வீட்டிலோ ஐந்தாவது வீட்டிலோ குடியிருந்தார் அவர். வெற்றிலை பாக்கை மென்று அசை போடுவதற்கும் அடுத்தபடி வம்புகளையும் வதந்திகளையும் அசை போடுவதில் மன்னன். சத்தியமூர்த்தி சாதாரண நாட்களில் இந்த மனிதரைத் தெருவில் எங்காவது சந்திப்பதற்கு நேர்ந்தால் கூட "பக்கத்தில் வராதே - விலகிப் போய்விடு..." என்ற பாவனையில் நீளமாக ஒரு கும்பிடு போட்டு அனுப்பிய பின்பே நிம்மதியாக மூச்சு விடுவான். திருவாளர் கண்ணாயிரம் 'பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கி' வாழ்கிறவர். நெப்போலியனுடைய அகராதியில் 'முடியாது' என்ற வார்த்தை இல்லாதது போலத் திருவாளர் கண்ணாயிரம் அவர்களுடைய அகராதியில் பல நல்ல வார்த்தைகளுக்கு இடமே இல்லை. நியாயம், தர்மம், ஈவு, இரக்கம்... இப்படி எத்தனையோ வார்த்தைகள் அவருடைய அகராதியில் இருக்க முடியாது. இந்த வகையில் நெப்போலியனை விடப் பெரியவர் அவர். கர்ணன் பிறக்கும் போதே காதில் மகர குண்டலங்களோடு பிறந்த மாதிரி அற்பத்தனத்தையும், வஞ்சத்தையுமே பிறவி அணிகலன்களாகக் கொண்டு பிறந்தவர் கண்ணாயிரம். அவர் இந்த உலகில் பிறக்கும் போதே மேற்படி 'கல்யாண (?) குணங்களும்' அவரோடு உடன் பிறந்து விட்டன. இதெல்லாம் சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரிந்திருந்த காரணத்தினால் தான் திருவாளர் கண்ணாயிரத்தையும் அவருடைய அற்பத்தனத்தையும் அந்த அகாலத்தில் இரயில் நிலையத்துப் பிளாட்பாரத்தில் சந்தித்த போது அவன் மிகவும் வருந்தினான். பாமரர்களும், சராசரி மனிதர்களும் இந்த உலகத்துக்குத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற பெரிய தியாகம் தங்களைவிடப் பாமரர்களாகவும், சராசரியானவர்களாகவும் இருக்கிறவர்களைப் பிரமுகர்களாக இருக்கும்படி அனுமதித்து அவர்களைத் தொடர்ந்து மன்னித்துக் கொண்டிருப்பதுதான். மீனாட்சிப் பட்டணத்துப் பெருமக்களால் இப்படி நிரந்தரமாக மன்னிக்கப்பட்டுவிட்ட பிரமுகர்தான் திருவாளர் கண்ணாயிரம். 'மூன் லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸீஸ்' என்ற மாபெரும் விளம்பர ஏற்பாட்டுக் கம்பெனி ஒரு சிறிய மூன்றே முக்காலடி அறைக்குள் இரு நாற்காலிகளிலும் ஒரு மேஜையிலும் அடங்கிப் போய்விட்டாலும் அந்தப் பேரை வைத்துக் கண்ணாயிரம் பிரமாதப்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்காக நல்லவர்கள் பயப்பட்டார்கள்; விட்டுக் கொடுத்தார்கள் - பொல்லாதவர்கள் துணையிருந்தார்கள், ஒத்துழைத்தார்கள். பிரமுகராக வாழ்வதற்கு இந்த இரண்டு வசதிகளை விட வேறு என்ன வேண்டும்? ஆகவே அவர் சகலவிதமான ஆதரவும் உள்ள நகரப் பிரமுகர்களில் ஒருவராக இருந்தார். "என்னப்பா, திருட்டு விழி விழிக்கிறாய்? என்னிடம் பதில் சொல்வதற்கு என்ன கூச்சம்? சும்மா... சொல் அப்பனே?" என்று மீண்டும் கண்ணாயிரம் சத்தியமூர்த்தியை மடக்கிக் கேள்வி கேட்கவே அவன் ஆத்திரமடைந்தான். "திருவாளர் கண்ணாயிரம் அவர்களே! இரயில்வேக்காரர்கள் இந்த இரயிலை நான் பயணம் செய்வதற்காக மட்டும் விட்டிருந்தால் என்னோடு கூட யாரும் ஏறிக் கொண்டு வரவிடாமல் நானே தடுத்திருப்பேன். அது முடியாமல் போனதற்காகத் தயை கூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள்..." என்று சொல்லிவிட்டுக் கண்ணாயிரத்தைக் கடந்து வேகமாக விலகி முன்னால் நடந்தான் சத்தியமூர்த்தி. "கோபித்துக் கொள்ளாதே, அப்பனே! நாட்டியக்காரி மோகினியை உனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. அதனால் தான் கேட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார் கண்ணாயிரம். இந்த வார்த்தைகளை அவர் சொல்லி முடிப்பதற்குள் சத்தியமூர்த்தி முன்னால் சிறிது தொலைவு நடந்து போயிருந்தாலும் 'நாட்டியக்காரி மோகினி' என்ற சொற்கள் அவனுக்குத் தெளிவாகக் கேட்டிருந்தன. அந்தப் பெயர் அவனால் காப்பாற்றப் பட்டவளுடையதாயிருந்தால் அதைவிடப் பொருத்தமான வேறு பெயரை அவளுக்கு வைத்திருக்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு. உலகத்துக்கு அழகாகத் தோன்றுகிற பலர் உள்ளத்தால் வெந்து அழிந்து கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை. அவர்களுடைய அழகு ஒரு தடையாக இருந்து அந்தரங்கத்தில் அவர்கள் படுகிற கவலைகளைப் பிறர் காணமுடியாமல் மறைத்து விடுகிறது. ஒரு சீராய் முத்துக்கோவைப் போல் மின்னிய அந்தக் கட்டழகுப் பல் வரிசையையும் சிரிப்பையும் ஞாபகத்தில் கொண்டு வர முயன்று தோற்றான் சத்தியமூர்த்தி. தாங்கள் எந்தக் கலைகளை நம்பி வாழமுடியுமோ, அந்தக் கலைகளாலும் முழுமையாகக் காப்பாற்றப்படாமல், மனிதர்களாலும் தூய்மையாகக் காப்பாற்றப்படாமல் இரண்டுங்கெட்ட நிலைக்கு வந்து விட்ட இத்தகைய கலைக் குடும்பங்களைப் பற்றி நினைத்தான் சத்தியமூர்த்தி. அப்படி நினைத்தபோது எந்தக் காலத்திலும் நிச்சயமான தீர்மானத்துடன் பரிகாரம் காண முடியாதபடி சில பிரச்சினைகளை இந்த நாட்டில் நிரந்தரமாகவே அரைகுறையாய் இருந்து வருவதை அவனால் உணர முடிந்தது. இரயில் நிலையத்துக்கு வெளியே வந்ததும் வலது பக்கம் ஓரமாக நிறுத்தியிருந்த ரிக்ஷாக்காரர்கள் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். விடிவதற்கு இன்னும் சில நாழிகை நேரமே இருந்தது. அந்த அமைதியான நேரத்தில் மதுரையின் வீதிகளில் நடப்பதே ஓர் இன்பகரமான அநுபவமாயிருக்கும். ரிக்ஷாக்காரர்களிடமிருந்து விடுபட்டு சூட்கேஸும் கையுமாக நடந்தான் அவன். பயனை எதிர்பாராமல் பழைய காலத்து மனிதர்கள் செய்து வைத்துவிட்டுப் போகும் பல தருமங்களுக்கு ஒரு ஞாபகம் போல் எதிரே மங்கம்மாள் சத்திரம் தெரிந்தது. தருமம், தானம் போன்ற பல பெரிய காரியங்கள் இந்த நூற்றாண்டில் ஒரு நல்ல ஞாபகம் என்ற அளவிலாவது நிலைத்திருக்கின்றன என்று எண்ணியபோது அந்த எண்ணத்தை அடுத்து கண்ணாயிரம் சேர்ந்து ஞாபகத்துக்கு வரவே சத்தியமூர்த்தி தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். வீடு நெருங்க நெருங்கத் தன்னை எதிர்கொள்ளப் போகிற தந்தைக்குத் தான் சொல்லியாக வேண்டிய மறுமொழியைப் பற்றிச் சிந்திக்கலானான் அவன். 'வெளியூருக்குப் போய்விட்டு திரும்புகிறேன். வீட்டில் இரண்டு தங்கைகளும், வயதான பெற்றோரும் இருக்கிறார்களே; அவர்களுக்காக நான் என்ன வாங்கிக் கொண்டு போகிறேன்?' என்று எண்ணியபோது தான் வெறும் கையோடு ஊர் திரும்புவதை அவன் தானாகவே உணர்ந்து வருந்த வேண்டியிருந்தது. எப்போதுமே அவன் அப்படித்தான்! அநுபவபூர்வமாக உலகத்துக்கேற்ப வாழும் சில பழக்கங்கள் அவனிடம் படியாமலே போய்விட்டது. அப்பாவும் அம்மாவும் பல முறை அவனிடமுள்ள இந்தக் குறையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கல்லூரி நாட்களில் அவன் விடுமுறைக்கு ஊர் திரும்பும்போது, "ஊரிலிருந்து வீடு தேடி வருகிறவனுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று தோன்றாதா? உலகத்து வழக்கமே பிடிபடாத பிள்ளையாக இருக்கிறாயே அப்பா!" என்று அம்மா வழக்கமாகக் குறைப்பட்டுக் கொள்வது உண்டு. இன்றும் அப்படிக் குறைபட்டுக் கொள்வதற்கேற்ற சூழ்நிலையில் தான் வீடு திரும்புவது அவனுக்கே புரிந்தது. 'பசையைப் போல் அநுபவத்தில் ஒட்டிக் கொண்டு விடவேண்டிய சிலவிதமான வாழ்க்கை ஆர்வங்கள் என்னிடம் இல்லை. உறவினர்களைக் கண்டால் நான் அதிகமாகக் கலந்து பேசிப் பழகுவதில்லை என்று அப்பா குறைபடுகிறார். தங்கைகளுக்கு அடிக்கடி ஏதாவது வாங்கிக் கொடுத்து வெளிப்படையான பிரியத்தை என்னால் காண்பிக்க முடியவில்லையே என்று அம்மா என்மேல் வருத்தப்படுகிறாள். 'தெருவில் சந்தித்தால் நின்று பேசிக் கலகலப்பாகப் பழகத் தெரிவதில்லை. முரட்டு ஆளாக இருக்கிறான்' என்று கண்ணாயிரத்தைப் போல் உள்ளவர்கள் என்னைப்பற்றிக் குறை சொல்கிறார்கள். மொத்தத்தில் பலர் எதிர்பார்க்கிற சில குணங்கள் என்னிடம் இல்லை. இதில் மாறுதல் விளைய வேண்டியது என்னிடமா, மற்றவர்களிடமா என்பதுதான் முடிவாகத் தீர்மானமாக வேண்டிய காரியம்.' 'நீங்கள் உங்களைக் காட்டிலும் வயது மூத்தவர்களிடம் இன்னும் நிதானமாகவும் விநயமாகவும் பேசுவதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்' என்று வேறொரு விதமாக அவனிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி. அதையும் இப்போது நினைத்தான் அவன். எல்லாவற்றையும் மொத்தமான அபிப்பிராயத் தொகுப்பாக ஒன்று சேர்த்துப் பார்த்தால் எப்படி எப்படியோ மாறவேண்டுமென்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் என்ன விளைவை எதிர்பார்த்து அப்படி மாற வேண்டும் என்றுதான் புரியவில்லை. பிறருடைய சௌகரியங்களை உத்தேசித்துத் தானே தன்னை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் கோழையாக வாழப் பழகவில்லை அவன். பிறரை மாற்றுகிற தீரர்களில் ஒருவனாக வாழ ஆசைப்படுகிறவனின் ஆரம்பம் இப்படித்தான் இருக்க முடியும் என்பது போல இருந்தன அவனுடைய அநுபவங்கள். அவன் படித்திருந்த புத்தகங்களும் பழகியிருந்த நல்லவர்களும் ஒவ்வொரு துறையிலும் இங்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது போல திடமான அபிப்பிராயங்களை ஆழமாக எண்ணித் தீர்மானம் செய்ய அவனுக்குக் கற்பித்திருந்தாலும் சராசரி உலகில் பல இடங்களில் அவன் தயங்கி நிற்க நேர்ந்தது. பிறர் தன்னை எப்படி எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தான் வாழமுடியாமலிருப்பது தனக்கு ஒரு குறையானால் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தக் குறை ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீருமென்று சத்தியமூர்த்தி நினைத்தான். 'ஏனென்றால் அடுத்தவன் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற தன்மை இல்லாத அப்பட்டமான தியாகிகள் உலகில் எந்த மூலையிலும் இல்லை. அன்பின் மிகுதியாலும் அப்படி எதிர்பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். வெறுப்பின் மிகுதியாலும் அப்படி எதிர்பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி எதிர்பார்ப்பதுதான் வாழ்க்கை போலிருக்கிறது' என்று இப்படிப் பலவிதமான சிந்தனைகளின் வேகத்தோடு நடந்து சென்றதில் நடையே தெரியவில்லை. எதிரே வருகிற சந்தில் திரும்பி அடுத்த வீதிக்குள் சிறிது தொலைவு நடந்தால் வீடுதான். எங்கோ கோவிலில் திருவனந்தல் வழிபாட்டுக்கு முன்பாக வைகறையில் வாசிக்கப்படும் மேளமும் நாதஸ்வரமும் அதிகாலையின் இனிய ஞாபகமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. சில வீடுகளில் அப்போதே வாசல் தெளிக்கத் தொடங்கியிருந்தார்கள். கிழக்கு வெளுக்க இன்னும் சிறிது நேரமே இருந்தது. வாயில் படியேறிக் கதவைத் தட்டினான் சத்தியமூர்த்தி. இருமிக் கொண்டே அப்பா எழுந்து வந்து கதவைத் திறந்தார். "சாயங்கால இரயிலேயே உன்னை எதிர்பார்த்தேன்" என்றார் அப்பா. "முடியவில்லை! முதல் நாள் மல்லிகைப் பந்தலுக்குப் போகிற பஸ் தவறிவிட்டது. மறுநாள் இண்டர்வ்யூவுக்குத் தாமதமாகி விட்டது" என்று சொல்லிக் கொண்டே சூட்கேஸுடன் உள்ளே நுழைந்து கூடத்துப் பெஞ்சில் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி. அப்பா ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கொண்டார். கிணற்றடியிலிருந்து வந்த அம்மா "இராத்திரி இரயிலில் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு எதற்காக வருகிறாய்? சாயங்கால வண்டியிலேயே வந்திருக்கலாமே?" என்று விசாரித்துக் கொண்டே வந்து அவனுக்கு எதிர்ப்புறம் ஆவலோடு நின்று கொண்டாள். கூடத்தை மெழுகுவதற்கு வாளி நிறைய நீரோடு வந்த ஆண்டாள் அண்ணனின் வரவினால் ஏற்பட்ட ஆர்வத்தைக் காட்டும் முகத்தோடும் அப்பாவுக்கு அருகே வந்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றாள். படுக்கையிலிருந்து அப்போதுதான் கண்ணைக் கசக்கிக் கொண்டே பாதித் தூக்கமும் பாதி விழிப்புமாக எழுந்திருந்து வந்த கல்யாணியும் இன்னொரு பக்கமாக நின்று கொண்டாள். 'இண்டர்வ்யூ'வின் முடிவு என்ன ஆயிற்று என்பதை அவனாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களைப் போல் எல்லாரும் ஆவலடங்கிய நிலையில் மௌனமாயிருந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் இப்படி ஒரு காட்சியை அல்லது நிகழ்ச்சியைச் சத்தியமூர்த்தியும் எதிர்பார்த்திருந்தான். எல்லாருடைய கண்களின் பார்வையும் தன் முகத்தையே நோக்கியிருப்பது அவனுக்குப் புரிந்தது. ஒரு கணம் எல்லா வேதனைகளையும் மறந்தவனாக நன்றாய் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலவும் தோன்றியது. அடுத்த கணம் அப்படிச் செய்வதால் 'குடும்பப் பொறுப்புத் தெரியாத பிள்ளை' என்று கெட்ட பெயரைத் தாங்க நேரிடுமோ என்ற தயக்கமும் ஏற்பட்டது. "என்ன ஆண்டாள் உன் வலது கண் வீங்கினாற் போல் தெரிகிறதே? உள்ளே ஏதாவது வெடித்திருக்கிறதா?" என்று அப்போது அந்த நிலையில் அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டு விசாரிக்கத் தேவையில்லாத ஒன்றைத் தங்கையிடம் விசாரித்தான் சத்தியமூர்த்தி. "ஒன்றுமில்லையே அண்ணா!" என்று ஆண்டாள் சிரித்தாள். அப்புறமும் சிறிது நேரம் அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க அவன் ஒன்றும் சொல்லாமலே நேரம் மௌனத்தில் கழிந்தது. அப்பா பொறுமையிழந்தார். "நீ போன காரியம் என்ன ஆயிற்று?" "இண்டர்வ்யூ ஆயிற்று. முடிவு ஒன்றும் சொல்லவில்லை. விவரம் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்." "இண்டர்வ்யூவின் போது நீ சரியாக நடந்து கொண்டாயோ இல்லையோ?" - தந்தையின் இந்தக் கேள்விக்குச் சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லவில்லை. கடந்த சில மாதங்களில் தொடர்ந்து நாலைந்து இண்டர்வ்யூவுக்குப் போய்விட்டு ஒரு விளைவும் இல்லாமல், திரும்பி வந்ததிலிருந்து அப்பாவுக்கு தன் மேல் இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும். போகிற இடங்களில் தான் அகம்பாவத்துடனோ, அலட்சியமாகவோ நடந்து கொள்வதனால் தான் வேலைகள் கிடைக்காமல் தட்டிப் போய்க் கொண்டிருக்கின்றனவோ என்று அவர் சந்தேகப்படுவதைக் கண்டு அவனுக்கு அவர் மேல் கோபமோ, மனத்தாங்கலோ உண்டாகவில்லை. அவரைப் போல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு நைந்தவர்கள் அப்படித்தான் நினைக்க முடியும் என்பதை உணர்ந்து பொறுமையாயிருந்தான் அவன். "நான் அப்போதே படித்துப் படித்துச் சொன்னேன். நீ கேட்டால்தானே? தமிழ் ஆனர்ஸைத் தவிர வேறு எந்தப் பிரிவில் சேர்ந்திருந்தாலும் இதற்குள் நல்ல உத்தியோகத்தைத் தேடிக் கொண்டு போயிருக்கலாம். இந்த வீட்டு நிலைமை நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. மாடியிலும் கீழே முன்பக்கத்து அறையிலுமாக ஒண்டுக் குடித்தனம் இருக்கிற இரண்டு பேருமாக நூறு ரூபாய் வாடகை தருகிறார்கள். இந்தத் தள்ளாத வயதிலும் நான் 'டியூஷன்' சொல்லிக் கொடுப்பதற்கு அலைந்து நூறு ரூபாய்க்குத் தேற்றுகிறேன். மாடியில் மழைக்கு ஒழுகுகிறது. இப்போது இருக்கிறவர் காலி செய்துவிட்டால் மறுபடியும் காலியாகிவிடும். மாடியில் கொஞ்சம் இடித்துக் கட்டினாலொழியத் தொடர்ந்து யாரையும் குடியிருப்புக்கு வைக்க முடியாது. எல்லாவற்றுக்கும் பணம் வேணும்டா; பணம். சும்மா வறட்டு இலட்சியம் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை. திருமணத்துக்கு நிற்கிற இந்தப் பெண்களையும் வீட்டுக் கவலைகளையும் நினைத்து இராப்பகலாக நான் தூக்கமின்றி மாய்வது உனக்குத் தெரியுமோ? எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கப் போகிறாய் நீ?" அப்பா இப்படி ஆத்திரப்பட்டுப் பேசியதையும் சத்தியமூர்த்தி பொறுமையாகக் கேட்டுக் கொண்டான். நினைப்புக்களாலும், பாவனைகளாலும் ஒரு தலைமுறைக்கு முந்திய மனப்பான்மை கொண்டவர் அவர். அவரிடம் எதிர்த்துப் பேச விரும்பவில்லை அவன். பதில் பேசாமல் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு வருவதற்காகப் பின்பக்கம் எழுந்து சென்றான். அவனுடன் கூடவே பின்புறம் நடந்து வந்த தங்கை ஆண்டாள், "அப்பா பேசியதை ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே அண்ணா. ஏதோ கவலையில் ஆத்திரமாகச் சொல்லிவிட்டார்..." என்று ஆறுதலாகக் கூறிய வார்த்தைகளுக்கும் அவன் மறுமொழி கூறவில்லை; அப்போது தன் மேலேயே வெறுப்பாக இருந்தது அவனுக்கு. முகம் கழுவிக் கொண்டு வாசல் பக்கம் வந்தால் மாடியில் குடியிருக்கிற பத்திரிகை நிருபர் பரமசிவம் கீழே இறங்கி வருகிறபோது எதிர்ப்பட்டார். "என்ன மிஸ்டர் சத்தியமூர்த்தி? மல்லிகைப் பந்தலில் 'இண்டர்வ்யூ' என்ன ஆயிற்று? முதல் வகுப்பில் தேறியிருக்கிறீர்கள். போட்டி ஒன்றும் இருக்காது... தானே கிடைத்து விடும்..." என்று பரமசிவமும் அதே பேச்சை ஆரம்பித்தார். எந்தப் பேச்சை எதிராளி நம்மிடம் பேசாமலிருந்தால் மனம் நிம்மதியாயிருக்குமென்று சில சமயங்களில் நமக்குத் தோன்றுகிறதோ அந்தப் பேச்சைத்தான் அந்தச் சமயங்களில் திரும்பத் திரும்ப நாம் கேட்கும்படி நேரிடுவது வழக்கம். ஒரு மனிதனுடைய பிரச்சினைகளை - சுகமோ துக்கமோ அவனைச் சுற்றியிருக்கிற எல்லாரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கவனித்துக் கொண்டிருப்பதையும் அதன் விளைவுகளையும் அதற்கு ஆளானவனே வெறுப்போடு பார்க்கும் சந்தர்ப்பங்களும் வருகின்றன. அப்போது மற்றவர்கள் அதை மறுப்பதில்லை. அப்போது மற்றவர்களின் கேள்வியே அழையா விருந்தாக வாய்த்துத் தொல்லைத் தருவதுண்டு. இதை நினைக்கும் போது மனத்துக்குள் சிரிக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. நினைப்புக்களில் அந்தரங்கமாக இருப்பவற்றைத் தவிர வேறு எவற்றாலும் மனிதன் இரகசியமாக வாழ முடியாது போலிருக்கிறதே என்று நினைத்த போது பரமசிவத்துக்கும், பரமசிவத்தைத் தவிர இன்னும் தன்னை எதிரே பார்த்து மல்லிககப் பந்தல் இண்டர்வ்யூவைப் பற்றித் தன்னிடம் விசாரிக்கப் போகிற ஒவ்வொருவருக்கும் தான் எதற்காகவோ பயந்து வாழ வேண்டும் போல் பிரமையாயிருந்தது அவனுக்கு. ஏதோ பதில் பேசிப் பரமசிவத்துக்கு விடை கொடுத்து அனுப்பினான். அவரை மாடிக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குள்ளே போவதற்காகத் திரும்பியவன், "மிஸ்டர் சத்தியமூர்த்தி இருக்கிறாரா?" என்று கீழே தெருவிலிருந்து அட்டகாசமாக ஒலித்த குரலைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். திருவாளர் கண்ணாயிரத்தின் குரல் அல்லவா அது? 'அவர் எதற்காக இப்போது இங்கே தன்னைத் தேடி வந்தார்?' என்று சந்தேகத்தோடு தெருக்கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கி வந்த சத்தியமூர்த்திக்குத் தெருவில் இன்னும் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. தெருவில் நின்றிருந்த கண்ணாயிரத்தின் காரிலிருந்து அந்தப் பெண் கீழே இறங்கி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கண்ணாயிரம் அப்போது அவளைத் தன் வீட்டுக்கு எதற்காக அழைத்து வந்தார் என்று புரியாமல் சத்தியமூர்த்தி திகைத்துக் கொண்டிருந்தபோது அவள் தன் நறுமணங்கள் புடைசூழ அவனுக்கு மிக அருகே வந்து தயங்கி நின்றாள். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|