5

     உலகத்துக்கு அழகாகத் தோன்றுகிற பலர் உள்ளத்தால் வெந்து அழிந்து கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை. அவர்களுடைய அழகு ஒரு தடையாக இருந்து அந்தரங்கத்தில் அவர்கள் படுகிற கவலைகளைப் பிறர் காண முடியாமல் மறைத்து விடுகிறது.

     'அந்த நிலையில் தான் என்ன செய்வது?' என்பதை சத்தியமூர்த்தி இன்னும் ஒரு கணம் சிந்தித்திருந்தானானால் அவள் வைகையாற்றில் பாய்ந்திருப்பாள். சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருப்பதை விடச் செயல்பட்டுக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தையும், அவசியத்தையும் உணர்ந்தவனாக கீழே தாவி இறங்கி கைக்கு இசைவாக இருந்த அவள் வலது கையைப் பற்றிப் பின்னுக்கு இழுத்தான் சத்தியமூர்த்தி. அவன் அவசரமாகப் பாய்ந்து பற்றிய வேகத்தில் அந்தப் பூப்போன்ற கையை அழகு செய்து கொண்டிருந்த கண்ணாடி வளையல்களில் சில நொறுங்கின. பூக்களின் மென்மையை விட அதிகமான மென்மையும் சந்தனத்தின் குளிர்ச்சியை விட அதிகமான குளிர்ச்சியும் பொருந்திய அந்தக் கையில் உடைந்த வளைச் சில்லுகள் அழுத்தப்பெற்ற இடங்களில் கோடு கீறினாற் போலக் குருதி கொப்பளித்தது.

     வாழ்க்கையின் எல்லாவிதமான தொல்லைகளிலிருந்தும் விடுபட்டுப் போவதற்குத் துணிந்துவிட்ட அந்தப் பெண் கடைசி விநாடியில் தன் துணிவையும் விருப்பத்தையும் பாழாக்கிவிட்ட அவனைத் திரும்பி நிமிர்ந்து பார்த்தாள். பிரத்யட்ச உலகில் ஓர் அபூர்வமாய்க் கவிகளின் கனவுகளிலே மிதக்கும் எல்லாவிதமான எழில்களும் ஒன்று சேர்ந்து இல்லாப் பேரழகைப் போன்ற அவளுடைய அந்தக் கண்களில் நீர் மல்கிற்று. புயல்காற்றில் அறுந்து விழுவதற்கு இருந்த பூக்கொடி தற்செயலாய்ப் பக்கத்துக் கிளையில் படரவிட்டிருந்த ஏதோ ஒரு சிறிய நுனியின் பிணைப்பால் தப்பி இருப்பதைப் போல் அவள் அவன் பிடியில் இருந்தாள். உலகத்திலுள்ள நறுமணங்களில் மனத்தை மயக்கும் சக்திவாய்ந்த மணங்கள் எவை எவை எல்லாம் உண்டோ அவை அவை எல்லாம் ஒன்றாகி மணப்பது போல் மணங்களின் உருவமாகத் தன் பிடியில் சிக்கி நிற்கும் அவள் காதருகே குனிந்து சொன்னான் சத்தியமூர்த்தி.

     "நல்ல வேளையாக நீங்கள் காப்பாற்றப்பட்டு விட்டீர்கள்! இனி இப்படி நினைப்பு உங்களுக்கு வரக்கூடாது."

     "வாழ விரும்பாத அபலைகளையும் அநாதைகளையும் வலிந்து காப்பாற்றுகிறவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை" என்று வெறுப்போடு பதில் சொல்லிய போது எந்தவிதமான ஆசைகளின் சாயலும் இல்லாமல் வறட்சியாகச் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பைப் பார்த்த மறுகணமே அதன் உடனிகழ்ச்சியாகத் 'தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள்' என்று கவியரசர் பாரதி ஞானரதத்தில் எங்கோ எழுதியிருக்கும் ஓர் அழகிய வாக்கியம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. வெறுப்பிலும் நிராசையிலும் தோய்ந்து மரணவாயிலுக்கு அருகே அடியெடுத்து வைத்துவிட்டுத் திரும்புகிற போதே இவள் சிரிப்பு இவ்வளவு அழகாயிருக்குமானால் தானே சிரிக்க விரும்பி இவள் சிரிப்பது இன்னும் எவ்வளவு அழகாயிருக்கும் என்று கற்பனை செய்ய முயன்றான் சத்தியமூர்த்தி.

     இதற்குள் இரயில் வைகைப் பாலத்தைக் கடந்து பொன்னகரம் என்ற உழைப்பாளிகளின் சுவர்க்கத்தையும், பிரம்மாண்டமான பஞ்சாலைக் கட்டிடங்களையும் ஊடுருவிக் கொண்டு மதுரை நகருக்குள் செல்லத் தொடங்கியிருந்தது.

     "ஊர் வந்துவிட்டது. இரயிலிலிருந்து இறங்கும்போது இனி எப்போதும் இப்படி அசட்டுக் காரியம் செய்யலாகாது என்ற திடமான நம்பிக்கையோடு மதுரை மண்ணில் இறங்கி நடக்க வேண்டும் நீங்கள்" என்றான் சத்தியமூர்த்தி.

     "என்னைப் போன்றவர்கள் வாழ்வதும் வாழ நினைப்பதும் தான் அசட்டுக் காரியம். சாவுதான் எனக்குப் புகழிடம். சாமர்த்தியசாலிகளும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும் வாழவேண்டிய உலகம் இது. பேதைகளும் அப்பாவிகளும் என் போன்ற அபலைகளும் வாழ்வதற்கு இங்கு இடமில்லை."

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.