11

     ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை.

     'கண்ணாயிரத்தைப் போல் கெட்டவர்கள் நன்றாக வாழ்வதற்கும் அப்பாவைப் போல் நல்லவர்கள் - எப்போதுமே மாறாத நல்லவர்கள் - இப்படி வாழமுடியாமற் போவதற்கும் சமூகக் காரணம் ஏதாவது இருக்க முடியுமா?' என்று சிந்தித்தபடியே வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. திருவள்ளுவரைப் போன்ற பேரறிஞர்களுக்கே இந்தச் சிந்தனை விடை காணமுடியாத புதிராகத்தான் இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது. இல்லையென்றால்,

     அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
     கேடும் நினைக்கப் படும்.

என்ற திருக்குறளை அவர் பாடியிருக்க முடியாது. கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் வாழ்க்கையை இரசித்து மகிழ்வதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டதாகக் குமரப்பன் சொல்கிறான். சற்றுமுன் தெருத் திருப்பத்தில் விடைபெற்றுக் கொண்டு செல்லும் போது கூடக் குமரப்பன் இதே வார்த்தைகளைத்தான் சொல்லிவிட்டுப் போகிறான். என்னால் கண்ணாயிரத்தைப் போல் தீய சக்திகளை இரசிக்க முடியவில்லை. இந்த விதமான தீய சக்திகள் என் இதயத்தையும் எண்ணங்களையும் குமுறச் செய்து விடுகின்றன; தீமைகளையும், பொய்களையும் எதிரே காணும் போது கைகள் துடித்து மனம் கொதிக்கிறேன் நான். இப்படி உணர்ச்சி வசப்படுவது குமரப்பனுக்குப் பிடிக்கவில்லை.

     ஆனால் இன்றையச் சமூக வாழ்வுக்குச் 'சிறுமை கண்டு பொங்குகிற' இந்த நியாய மனப்பான்மை அவசியம் வேண்டும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. எத்தனையோ நல்ல குணங்களை உடையவராகிய பூபதி அவர்கள், 'இளமை அதை உடையவனுக்கு ஒரு தகுதிக் குறைவு' என்று பொருள் படுகிறாற் போல் கூறியதைக் கூட என்னால் பொறுத்துக் கொண்டு பதில் பேசாமல் சும்மா இருக்க முடியவில்லை. வயிற்றைக் கழுவி வாழவும், பிழைக்கவும் வேண்டுமானால் குமுறவும் கொதிக்கவும் வேண்டிய பல இடங்களிலும் கூட உணர்ச்சியே இல்லாமல் மரத்துப் போய் இருந்துவிட வேண்டியது தான் போலும். பலர் அப்படித்தான் வாழ்கிறார்கள். 'துடிப்புடனும், கொதிப்புடனும் வாழ்கிற சிலரும் கூட நாளடைவில் மெல்ல மெல்ல மரத்துப் போய் விடுகிறார்களே' என்று எண்ணிய போது வாழ்க்கையே பெரிய ஏமாற்றமாகத் தோன்றியது அவனுக்கு. இவ்வாறு கலக்கமும் குழப்பமும் நிறைந்த மனத்தோடு மேலமாசிவீதியும் வடக்கு மாசிவீதியும் சந்திக்கிற திருப்பத்தில் அவன் சென்று கொண்டிருந்த போது கலவரமும் கூப்பாடுமாக அங்கே கூடியிருந்த ஒரு கூட்டத்தினால் கவரப்பட்டான். கீழே மரத்தடியைத் தேடி வந்து கோயில் கொண்டுவிட்ட ஒரு பிள்ளையாருக்கும் அந்த இடத்தில் நிறுத்தப்படுகிற பல ஜட்கா வண்டிகளுக்கும், ஆதரவாக அங்கே பெரிய ஆலமரம் ஒன்று உண்டு. மனிதர்கள் நெருங்கி வாழ்கிற பெரிய நகரங்களில் திடீர் என்று ஓரிடத்தில் கூட்டம் கூடுவதும் கலைவதும் சர்வ சாதாரணம். ஆனால் அன்று அங்கே அந்த முன்னிரவில் சத்தியமூர்த்தி சந்தித்த கூட்டம் அப்படிக் கூடிய கூட்டமில்லை. சிரிப்பையும், வேதனையையும் ஒருங்கே உண்டாக்கக் கூடியதொரு சம்பவத்தை முன்னிட்டுக் கூடிய கூட்டமாயிருந்தது அது. கூடியிருந்தவர்கள் அந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 'இப்படிக் கூட நடக்குமா?' என்று நினைத்து நினைத்து வியப்படையக் கூடியதாயிருந்தது அந்தச் சம்பவம்.

     கூடியிருந்த கூட்டத்தின் நடுவே கிழிந்த சேலையும் பயந்து கலவரமடைந்த முகத் தோற்றமுமாக இளம் வயதுப் பிச்சைக்காரப் பெண் ஒருத்தி கூசிப் போய்க் கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு மிக அருகே தரையில் ஒரு புது மண் பானை சில்லுச் சில்லாக உடைந்து கிடந்தது. அந்த ஆலமரத்தடியைக் கடந்து நாலைந்து முறை நடந்து போகிற எவருடைய பார்வையிலிருந்தும் அந்தப் பிச்சைக்காரப் பெண் தப்பியிருக்க மாட்டாள். சத்தியமூர்த்தியே அவளை அந்த இடத்தில் பலமுறை பார்த்திருக்கிறான். "ஐயா பிள்ளைத்தாச்சிக்கு உபகாரம் பண்ணிக் காப்பாத்துங்க ஐயா... உங்க தலைமுறைக்கு நீங்க நல்லா இருப்பீங்க" என்று கனத்து முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் தாய்மை கனிந்த வயிற்றோடு அவள் அந்தத் திருப்பத்தில் வெயிலென்றும், மழையென்றும் பாராமல் பிச்சைக்கு நிற்பதைப் பார்த்துச் சத்தியமூர்த்தி பரிதாபப்பட்டிருக்கிறான். 'வயிறும் பிள்ளையுமாகக் கர்ப்பிணியாயிருக்கிற இவளைப் போன்ற அநாதைகளுக்கு வயிறு காயும் இந்த வேளையில் இதே தெருவில் பாயசமும் வடையும் சமைத்துச் சாப்பிடுகிறவர்களும் இருப்பார்களே? சமுதாய வாழ்க்கையில் உள்ள சுகதுக்கங்களில் எத்தனை முரண்பாடுகள்? இந்த நாட்டில் இப்படி அநாதைகள் நம்மிடையில் இருக்கிறவரையில் பாயசம் வைத்துப் பண்டிகைகள் கொண்டாடுவதற்குக் கூச வேண்டும். இவர்களுக்குத் தலைசாய்க்க இடமில்லாதவரை மற்றவர்கள் கட்டிலும் மெத்தையும் இட்டுப் படுப்பது பாவம்' என்று இத்தகைய பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போதெல்லாம் மனம் வேதனைப்பட்டிருக்கிறான் அவன். ஆனால் இன்று அவனே இந்த ஆலமரத்தடியில் கேள்விப்பட்ட உண்மை - பார்த்த உண்மை முற்றிலும் புதியதாயிருந்தது. கண்களில் ஏழ்மையின் ஏக்கம் தெரிய வழிமேல் நின்று கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம், "பிள்ளைத் தாய்ச்சிக்கு உபகாரம் பண்ணிக் காப்பாத்துங்க ஐயா..." என்று கதறிக் கொண்டிருந்த அந்தப் பெண், வயிற்றில் மண்பானையை வைத்துக் கட்டிக் கொண்டு பிறரை மனம் இரங்கச் செய்வதற்காக நடித்திருக்கிறாள். அவளுடைய போதாத காலமோ அல்லது உண்மை வெளிப்பட்டுத் தெரிய வேண்டிய காலமோ கிழிந்து நைந்து இற்றுப் போன பழைய சேலை தாங்காமல் பானை கீழே விழுந்து உடைந்து அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. இப்படி ஒரு காட்சியைச் சினிமாவிலோ, நாடகத்திலோ பார்த்திருந்தால் அந்த நடிப்புத் திறமையை மக்கள் புகழ்ந்திருப்பார்கள். வாழ்க்கையில் கண்ணெதிரே வயிற்றுக் கொடுமை தாங்காமல் ஓர் ஏழைப் பெண் இப்படி நடித்ததையும் மன்னிக்கலாம் தான். ஆனால் மன்னிப்பதற்கு அங்கு யாரும் தயாராயில்லை.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.