4
நாம் தேடிக் கண்டுபிடிக்க முடியாத அல்லது விரும்பாத பல இடங்களில் வாழ்க்கையின் மிக மென்மையான குணங்கள் அமைந்திருந்து அவை பிறருக்குத் தெரியாமலே போய் விடுகிற சமுதாய நஷ்டத்தை என்னென்பது? தூபகலசத்திலிருந்து சுருள் சுருளாக மேலெழும் இளம் புகை அலைகளைப் போல் மேகங்கள் சரிந்து சேரும் மலைகளினிடையே பஸ்ஸில் பயணம் செய்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. பள்ளத்தாக்கை விட்டு மலைமேல் ஏறிவிட்ட பஸ்ஸிலிருந்து திரையை விலக்கிக் கிழே பின்னால் திரும்பிப் பார்த்தபோது, 'இந்த அரிய பொருளைக் கொண்டு வந்து வைப்பதற்கு ஏற்ற இடம் இதுதான்' என்று அந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்து வைத்தாற் போன்று அருமையாய் மல்லிகைப்பந்தல் ஊர் மழையில் மங்கித் தெரிவதைச் சத்தியமூர்த்தி கண்டான். வடிவமாகப் பின் தங்கிவிட்டாலும் எண்ணமாக மனத்தில் நிலைத்து விடுகிற சில அழகிய ஞாபகங்களைப் போல் மல்லிகைப் பந்தல் என்ற அழகு சத்தியமூர்த்தியின் கண்களிலிருந்து மறைந்து கருத்தில் தெரியத் தொடங்கியது. அந்த ஊரிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து செல்லும் போது தான் மறுபடியும் அங்கு வந்துவிட வேண்டுமென்ற ஞாபகம் அவனுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்வின் நிலையான பாசங்கள் எல்லாம் அவற்றை விட்டுப் பிரிந்து செல்லும் போதே அவற்றின் நெருக்கமும் உறவும் புலப்படும்படி இருக்கும். தன் மனத்துக்கு மல்லிகைப் பந்தல் என்ற மலைநாட்டு நகரத்தின் மேல் எவ்வளவு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அங்கிருந்து பிரிந்து செல்லும் போதுதான் சத்தியமூர்த்தியால உணர முடிந்தது. மனத்தில் நிலைக்கும் படியான நிரந்தரமான சந்திப்புகள் எல்லாம் மகிழ்ச்சியில் தொடங்கி ஏக்கத்தில் முடிவதை அநுபவத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறான் அவன். பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்த போது மல்லிகைப் பந்தலில் அந்தச் சில மணி நேரங்களுக்குள் நடந்தவற்றை அவன் ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினான். அப்படித் தொடங்கிய நினைப்பு வளர்ந்து பெருகி மிக நளினமானதொரு பகுதியில் வந்து நிறைந்தது. மல்லிகைப் பந்தலில் இருந்து புறப்படுவதற்கு முன் பாரதி சுட்டிக் காட்டிய ஈரச் செம்மண் நிலமும் அதைச் சுட்டிக் காண்பித்த போது புதிய உணர்வோடு தெரிந்த முகமும் சத்தியமூர்த்தியின் நினைவில் சுற்றிச் சுற்றி வந்தன. வாய் திறந்து சொற்களால் பேச முடிவதை விட அதிகமான நயமும் பொருளும் தந்து பேசுவதைப்போல் ஒலித்த அவள் கைகளின் வளை ஒலி இன்னும் அவன் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. கம்மென்று நறுமணம் பரப்பி நாசியையும் இதயத்தையும் நிறைத்த அந்த மல்லிகைப் பூக்களின் வாசனையை இன்னும் அவனால் மறக்க முடியவில்லை. அவனுக்கு இருபுறமும் பஸ்ஸில் உட்கார்ந்தவர்கள் யாரோ தேயிலைத் தோட்டத்துக் கங்காணிகள் போல் தோன்றினார்கள். 'சதக் சதக்' என்று வெட்டப்படும் கொலைச் செய்திகளும் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய பரபரப்பூட்டக் கூடிய விவரங்களும் அடங்கிய தினப்பத்திரிகை ஒன்றைப் படித்து ஒரு கங்காணி இன்னொரு கங்காணிக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அந்தச் செய்தித்தாளின் பக்கங்களில் நடந்திருந்த கொலைகளை விட அதைப் படித்துக் கொண்டிருந்தவன் செய்கிற கொலைக்காக மிகுந்த வேதனைப்பட்டான் சத்தியமூர்த்தி. திரு.வி.க.வும் திலகரும் பத்திரிகை நடத்திய நாட்டில் மெய்யை மெழுகிக் காகிதம் விற்பார் சிலரும், பொய்யை மெழுகிக் காகிதம் விற்பார் சிலருமாகப் புனிதமானதொரு பணியைச் சர்வசாதாரணமாக வியாபாரமாக நடத்துகிறவர்கள் பெருகியிருப்பதை எண்ணியபோது மிகவும் வருந்தினான் அவன்.
அன்று மாலையில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஊர் திரும்பும் இரயிலுக்காக அவன் மல்லிகைப் பந்தல் ரோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போது நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. ஒன்பதரை மணிக்கோ, பத்து மணிக்கோ எல்லா நிலையங்களிலும் நின்று நின்று போகிற பிரயாணிகள் வண்டி ஒன்று உண்டு. அதில் புறப்பட்டால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் எப்போதாவது மதுரை போய்ச் சேரலாம். புறப்படுகிற நேரமும் உறுதியில்லாமல், போய்ச் சேருகிற நேரமும் உறுதியில்லாமல், இந்தத் தேசத்துச் சராசரி மனிதர்களின் வாழ்க்கை இலட்சியத்தைப் போல் நிச்சயமில்லாத இரயில் அது. அதை எதிர்பார்த்து அந்தக் குளிரிலும் இருட்டிலும் அங்கே காத்திருந்த பலரோடு இப்போது சத்தியமூர்த்தியும் சேர்ந்து கொண்டான். தனியே எதிர்பார்த்துக் காத்திராமல் பலரோடு சேர்ந்து அந்தப் பலரில் ஒருவனாக ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இரண்டு விதமான சுவாரஸ்யங்கள் உண்டு. தன்னுடைய ஆவல் ஒன்று, தன்னைப் போன்ற பலருடைய மொத்தமான ஆவல் மற்றொன்று. தன்னுடைய ஆவலைத் தானே உணர்ந்து கொண்டு, மற்றவர்களுடைய ஆவலைப் புரிந்து அனுபவிப்பதில் சுவாரஸ்யம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?
முதல் நாள் மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்டு இன்று அங்கிருந்து திரும்பும் இந்த இரண்டு நாட்களுக்குள்ளேயே நீண்டகாலமாகத் தான் அலைந்து பயணம் செய்தே தன் நாட்களையெல்லாம் கழித்து விட்டது போல ஒரு பிரமை எப்படித் தனக்கு ஏற்பட்டதென்று சத்தியமூர்த்திக்கே புரியவில்லை. பயணம் செய்துவிட்டுத் திரும்பும் ஒவ்வொரு முறையும் இந்த அநுபவத்தை அவன் அடைந்திருக்கிறான். வேலை கிடைத்து மல்லிகைப் பந்தலுக்கே வந்துவிட்டால் போவதும் வருவதுமாக இப்படிப் பலமுறை அந்த இரயில் நிலையத்தில் தான் காத்திருக்க நேரிடும் என்ற நினைப்பும் ஏற்பட்டது அவனுக்கு. அதே சமயத்தில் கல்லூரி அதிபர் பூபதி அந்த வேலையைத் தனக்குத் தருவாரா என்ற சிறிய சந்தேகமும் வந்தது. கடைசியாக அவர் தன்னிடம் பேசிய பேச்சிலிருந்தும், தனக்கு விடை கொடுக்கும் போது மனம்விட்டு எதுவும் பேசாமல் அழுத்தமாக விடை கொடுத்ததிலிருந்தும், தன் பருவத்தின் இளமையை எண்ணி அவர் தயங்குகிறாரா என்று தோன்றியது சத்தியமூர்த்திக்கு. வீட்டை விட்டு ஊரைவிட்டு வெளியேறி வந்ததனால் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பிரச்சினைகளும், வீட்டுக் கவலைகளும் மனத்தின் அடி மூலையில் முறிந்த முள்ளைப் போல் உடனடியாக வலியில்லாமல் தங்கிப் போயிருப்பதை அவன் உணர்ந்தான். 'எந்தவிதமான சௌகரியங்களும் இல்லாத மத்தியதரக் குடும்பத்தில் இரண்டு தங்கைகளுக்கு மூத்தவனாகப் பிறந்துவிடுகிற ஆண்பிள்ளை தன் பொறுப்புகளையும் தான் வாழவேண்டிய வழியையும் வாழ்வில் மிக விரைவில் தீர்மானம் செய்கிறவனாக இருக்க வேண்டும். பின்னால் யாரோ கன வேகமாகத் துரத்திக் கொண்டிருப்பது போல் ஓடி ஓடி முயன்று வாழ வேண்டும் அவன். இப்படிப்பட்ட குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்து விடுகிறவனுக்கு ஒவ்வொரு நாளும் அவன் கைகளை எதிர்பார்த்து நிற்கிற பல தேவைகளும், வறுமைகளும் காத்திருக்கும். இதை எண்ணியபோது, தான் படித்திருந்த திருக்குறள் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது சத்தியமூர்த்திக்கு.
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு? வறுமையால் நாள் தவறாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிற ஒருவன் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் விடிகிற போது, "நேற்று என்னைக் கொன்று வாட்டினாற் போன்ற வறுமை இன்றும் வருமோ?" என்று கவலையோடு விடிவதாகப் பாவித்துக் கேட்பதாய் இந்தக் குறளைப் பாடியிருக்கிறார் வள்ளுவர். நாளைக்குப் பொழுது விடிகிற போது தன்னுடைய இதயத்திலும் இப்படி ஒரு கேள்வி பூதாகரமாக எழும் என்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்துதான் இருந்தது. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்ட ஒரு தந்தை தன் குடும்பத்துக்குத் தேவைகளையும், வறுமைகளையும் தவிர வேறு எதை அதிகமாகச் சேர்த்து வைத்திருக்க முடியும்? அத்தனை வறுமைக்கும் நடுவே சத்தியமூர்த்தி கல்லூரிப் படிப்புப் படித்து மீண்டதே, அந்தக் குடும்பத்தின் மிகப்பெரிய சாதனைதான். பலருடைய உதவிகளும், கல்லூரியில் கிடைத்த 'ஸ்காலர்ஷிப்' வசதிகளும் தான் அவன் தன்னுடைய கல்லூரிப் படிப்பை நடுவில் நிறுத்த நேரிடாமல் தொடர்ந்து கற்று முடிக்கத் துணையாயிருந்தன. மத்திய தரக் குடும்பத்துப் பெற்றோர் பலர் சாதாரணமாக எதிர்பார்ப்பது போல் அவன் பி.காம். படித்துச் சார்ட்டர்ட் அக்கௌண்ட், காஸ்ட் அக்கௌண்டன்ஸி போன்ற துறைகளில் தேர்ந்து பெரிய ஆடிட்டராகிப் பணம் குவிக்க வேண்டும் என்றுதான் அவன் தந்தையும் எதிர்பார்த்தார். அவன் தமிழில் மோகமுற்றுத் தமிழ் ஆனர்ஸ் தேறி எம்.ஏ. ஆகி இப்படி கல்லூரி விரிவுரையாளனாகப் போக நேரிடும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. அதில் அவருக்கு ஏற்பட்ட வருத்தமும் ஏமாற்றமும் அதிகம் தான். ஆயினும் உடம்பாலும், மனத்தாலும், தன்னை மீறி வளர்ந்துவிட்ட பிள்ளையை என்ன சொல்லி எப்படித் தடுப்பதென்று தோன்றாமல் 'அவன் போக்குப்படியே போகட்டும்' என்று விட்டுவிட்டார். ஆசிரியர் தொழிலில் தான் இருந்து பட்ட துன்பங்களை எண்ணித் தன் பிள்ளையாவது அந்தத் தொழில் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருக்க வேண்டும் என்று அந்த ஏழைத் தந்தை கவலைப்பட்டதெல்லாம் வீணாகப் போயிற்று. "சத்யம்? நீயாவது 'டானா' உத்தியோகத்துக்கு வந்து சேராமல் நல்ல உத்தியோகமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏணியைப் போல் நீ சாத்திய இடத்திலேயே சார்த்திக் கிடக்க உன்னைக் கற்பிப்பவனாகக் கொண்டு பலர் மேலே ஏறிப் போவதைப் பார்க்கும் வயிறெரிகிற தொழில் இது" என்று தந்தை ஏமாற்றத்தோடு கூறிய பல வேளைகளில் அதைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டு சிரித்து விட்டுப் பதில் பேசாமல் போயிருக்கிறான் சத்தியமூர்த்தி. அப்படி எல்லாம் அவர் அந்தத் தொழிலை வெறுத்துப் பேசியிருந்தும் கூட நேற்று அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன்பு, "சத்யம்! குடும்பத்தை இன்னும் உன்னை எதிர்பாத்துத் தவிக்கவிடாதே அப்பா! உத்தியோகத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் பிடிவாதமாக இருந்துவிட்டாய். உத்தியோகத்துக்குப் போவதற்கு இன்னும் நீ தாமதம் செய்தால் தண்ணீரில் ஓட்டைப் படகைப் போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம் நிச்சயமாகத் தாங்காது. இண்டர்வ்யூவை வெற்றிகரமாக முடித்துவிட்டு 'ஆர்டரை'க் கையில் வாங்கிக் கொண்டு வந்து சேர்வதற்கு முயற்சி செய்" என்று பாதி ஆர்வமும் பாதி நப்பாசையுமாக அவனிடம் சொல்லியனுப்பியிருந்தார். இரயிலிலிருந்து இறங்கி நேரே வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினால் அந்த அகால நேரத்துக்கும் விழித்திருந்து எழுந்து வந்து கதவைத் திறக்கக்கூடியவர் அப்பாதான். கதவைத் திறந்துவிட்டுத் தன்னை எதிரே பார்த்தவுடன், "ஏண்டா, இண்டர்வ்யூ என்ன ஆயிற்று?" என்று ஆவலோடு கேட்கப் போகிற அவருக்கு நம்பிக்கை அளிக்கும்படியாக அப்போது தான் என்ன பதிலைச் சொல்ல முடியும் என்பதைச் சத்தியமூர்த்தி சிந்தித்தான். உடனடியாக நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரப் போகிற செய்தியைத் தன்னிடமிருந்து தந்தை எதிர்பார்த்தது தவறில்லை என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். அப்பாவைப் போல் வாழ்வில் ஏமாற்றங்களையும், துயரங்களையும் அதிகமாகச் சந்தித்தவர் இப்படித்தான் எதிர்பார்த்துத் தவிக்க முடியும் என்பதும் அவனுக்குத் தெரியும். வாழ்க்கையில் ஏமாற்றமடைகிறவர்கள் நிறைய இருப்பார்கள். ஆனால் அப்பாவைப் போல் வாழ்க்கையையே ஏமாற்றமாக அடைந்தவர்களின் துன்பம் மிகவும் பெரியது. சத்தியமூர்த்திக்கு நினைவு தெரிந்து தந்தை கிழிசல் இல்லாத சட்டையும், வேட்டியும் அணிந்து அவன் பார்த்ததில்லை. ஆசிரியர் தொழிலின் மேலேயே அவர் கசப்பையும் வெறுப்பையும் வளர்த்துவிட்டுக் கொண்டதற்கு அவரே ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்து அடைந்த துன்பங்கள் தான் காரணம் என்பதும் சத்தியமூர்த்திக்குத் தெரியும். தன்னைப் பற்றிய அப்பாவின் கற்பனைகளையும், ஆசைகளையும் அவன் பொறுத்துக் கொண்டான். காரணம் அவருடைய உத்தியோக வாழ்வில் அவர் அதிகமாக அதிருப்தியும் துன்பமும் அடைந்தவர் என்பதுதான். ஊருக்குப் போய் இறங்கியவுடன் தன் தந்தை தன்னைக் கேட்கப் போகிற கேள்வியையும், 'இண்டர்வ்யூ' முடிகிற நேரத்தில் திடீரென்று புதிராக மாறிவிட்ட பூபதி தன்னைப் பற்றி என்ன முடிவுக்கு வந்திருப்பார் என்ற கேள்வியையும் மனத்தினுள்ளே எதிரெதிராக நிறுத்திப் பார்த்தான் சத்தியமூர்த்தி. இரண்டு கேள்விகளுமே விரோதிகள் எதிரெதிரே சந்தித்து கொண்டாற் போல் ஒரு விளைவும் இன்றி அப்படி அப்படியே திகைத்து நின்றன. முதல் நாள் அவனுடைய சூட்கேசில் துணிமணிகளை எடுத்து நிரப்பிக் கொண்டே, "என் கைராசி வீணாகிவிடாது அண்ணா! திரும்பி வரும் போது கையில் ஆர்டரோடு வரப்போகிறாய். பார்த்துக் கொண்டே இரு..." என்று உற்சாகத் துள்ளலோடு தன் தங்கை ஆண்டாள் கூறியிருந்ததையும் இப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. சிறிய தங்கை கல்யாணியைவிட ஆண்டாள் விவரம் தெரிந்தவள். குடும்பக் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொண்டவள். சிறிய தங்கையின் உலகம் துப்பறியும் நாவல்களை ஒரே மூச்சில் படிப்பதோடு ஆரம்பமாகி 'எம்பிராய்டரி' வேலைகளோடு முடிந்துவிடும். மூத்தவள் ஆண்டாள் மேல்தான் சத்தியமூர்த்திக்குப் பாசம் அதிகம். 'இந்த வீட்டின் வைகறைப் போது என்னிடமிருந்துதான் விடிகிறது' என்பது போல் விடிகாலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் 'அண்ணா உன் பாயையும் தலையணையையும் திண்ணையில் கொண்டு போய் வைத்துவிட்டேன்' என்று சொல்ல வருவது வரை தன் தங்கை ஆண்டாள் அந்த வீட்டில் பம்பரமாகச் சுழன்று உழைப்பது சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரியும். ஓடியாடி உழைக்க முடியாமல் தளர்ந்து போன அம்மாவின் வாயினாலேயே தங்கை ஆண்டாள் புகழப்படுவதைக் கேட்டு சத்தியமூர்த்தி பூரித்துப் போயிருக்கிறான். கல்லூரிப் படிப்பு முடிகிற வரை அவன் ஊரோடு வீட்டில் அதிகம் தங்கியதே இல்லை. விடுமுறைகளுக்கு வருவது போவது தவிர, அவனுக்குத் தொடர்ந்து வீட்டில் தங்க வாய்த்ததில்லை. அவன் விடுமுறைக்காக ஊர் வரும் ஒவ்வொரு முறையும் அம்மா ஆண்டாளைச் சுட்டிக்காட்டி, - "சத்தியம்! இந்த வீட்டின் ஒரே சுறுசுறுப்பு இவள்தானடா அப்பா...!" என்ற வாக்கியத்தை நாலைந்து தடவையாவது சொல்லத் தவறமாட்டாள். அம்மாவுக்கும் சத்தியமூர்த்திக்கும் ஆண்டாளின் மேல் பிரியமென்றால் கல்யாணி அப்பாவுக்குச் செல்லம். சத்தியமூர்த்தியோ, அம்மாவோ அப்பா காது கேட்கக் கல்யாணியைக் கடிந்து கொள்ளவும், கோபித்துக் கொள்ளவும் கூடத் தயங்குவார்கள். அப்படியே தப்பித் தவறிக் காது கேட்கும்படி அவர்கள் அவளைக் கடிந்து கொள்ள நேரிட்டாலோ, "அவளுக்கென்ன தெரியும்? அவள் குழந்தை! அவளைக் கோபித்துக் கொள்ளாதீர்கள்..." என்பார் அப்பா. "இந்தப் பிறவி மட்டும் கடைத்தேறுவதற்கு நீ குறைந்தபட்சம் ஒரு கோடி துப்பறியும் நாவல்களாவது படிக்க வேண்டும், கல்யாணீ!" என்று சத்தியமூர்த்தி எப்போதாவது கல்யாணியை வம்புக்கு இழுப்பான். "நிச்சயமாக நம் கல்யாணிகள் பிறவி கடைத்தேற ஒரு கோடி துப்பறியும் நாவல்கள் போதாது அண்ணா!" என்று அந்த நேரம் பார்த்து ஆண்டாளும் சத்தியமூர்த்தியோடு சேர்ந்து கொள்வாள். இதைக் கேட்டுக் கல்யாணிக்குக் கோபம் கோபமாக வரும். "பார் அப்பா, இவர்களை! கட்சி கட்டிக்கொண்டு இரண்டு பேருமாக என்னிடம் வம்புக்கு வருகிறார்கள்" என்று அப்பாவிடம் போய்ப் புகார் செய்வாள் கல்யாணி. "அவளுக்கென்ன தெரியும்? அவள் குழந்தை?" என்று வழக்கமான வாக்கியத்தோடு செல்லப் பெண்ணுக்குப் பரிந்து கொண்டு வருவார் அப்பா. அந்த வீட்டின் வசதிகளற்ற வறுமை வாழ்விலும் இப்படி ஒரு செல்லம், பரிவு எல்லாம் உண்டு. மதுரையில் தன் வீட்டைப் பற்றியும் அதன் பலங்களையும் பலவீனங்களையும் பற்றியும் ஒவ்வொன்றாகச் சிந்தித்தான் சத்தியமூர்த்தி. அப்பாவிலிருந்து தங்கை ஆண்டாள் வரை தன்னுடைய மல்லிகைப் பந்தல் இண்டர்வ்யூ சாதகமாக முடிந்து தான் ஆர்டருடனோ, அல்லது ஆர்டர் நிச்சயமாகக் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையுடனோ திரும்புவதாகத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று அவன் அறிந்திருந்தான். ஆனால் நிச்சயமான எந்த விடையுடனும் இப்போது அவன் ஊர் திரும்பவில்லை. கல்லூரி அதிபர் பூபதியும் உறுதி கூறாமல் விடை கொடுத்திருந்தார். கல்லூரி முதல்வரும் உறுதி கூறாமல் தான் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பியிருந்தார். "பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். அவர் எல்லா விவரமும் சொல்லுவார்" என்று கல்லூரி முதல்வரிடம் அவனை அனுப்பியிருந்தார் பூபதி. கல்லூரி முதல்வரோ அவனுடைய சர்டிபிகேட்களின் ஒரிஜனல்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, "நீங்கள் போகலாம். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதற்கு முன் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறோம்" என்று மறுமொழி கொடுத்திருந்தார். இரண்டு பேருடைய விடைகளும் ஏறக்குறைய ஒரே விதமானவைதாம். அவற்றுக்கு ஆழமான அர்த்தமான விளைவோ எதுவும் எதிர்பார்ப்பதற்கில்லை. வழக்கமான, எல்லாருக்கும் எல்லா இடத்திலும் சொல்லுகிற விடைதான் அது. தன்னுடைய பேச்சின் இறுதிப் பகுதியில் பூபதியோடு தான் முரண்பட்டதை அவர் விரும்பவில்லை என்ற உண்மை சத்தியமூர்த்திக்குப் புலப்பட்டிருந்தாலும் அவ்வளவு பெருந்தன்மையான மனிதர் அந்தச் சிறிய கருத்து முரண்பாட்டை ஒரு தகுதிக்குறைவாக எடுத்துக் கொண்டு தன்னை வெறுக்க முடியும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஆனபடி ஆகட்டும் என்று அந்தச் சிந்தனையையே மறக்க முயன்றான் சத்தியமூர்த்தி. இரயில் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கோடை நாட்களில் அந்த நிலையத்துக்கு "ரிட்டன் டிக்கட்" வசதி உண்டாகையால் சத்தியமூர்த்தியிடம் திரும்புவதற்கும் டிக்கட் இருந்தது. அந்த இரயில் மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்துக்கு வரவேண்டிய நேரத்தைக் கடந்து இரண்டு - இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்திருந்ததனால் மதுரைக்குப் போய் இறங்கும் போது ஏறக்குறைய விடிகிற நேரமாகி விடுமென்று தோன்றியது. வண்டியில் கூட்டமே இல்லை. நிலையத்தில் அந்த இரயிலுக்காகக் காத்திருந்தவர்கள் தொகையும் அதிகமில்லை. பிளாட்பாரத்தில் இரயில் வந்து நிற்கும் வேளைகளில் இந்த நிலையத்தில் வழக்கமாகக் கேட்கும் மலைப்பழம் விற்பவர்களின் கூக்குரல் கூட அப்போது ஏறக்குறைய இல்லாமல் ஓய்ந்து ஒடுங்கிப் போயிருந்தது. தான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நேராக உள்ள ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி மேலே சாமான்கள் வைக்கும் பலகையில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டு விட்டான் சத்தியமூர்த்தி. முதல்நாள் உறக்கமிழந்து போயிருந்ததால் அதிகச் சோர்வின் காரணமாகப் படுத்தவுடன் தூக்கம் கண்களில் வந்து கெஞ்சிற்று. அந்த நிலையத்தில் அந்த நேரத்துக்குத் தெற்கேயிருந்து வருகிற இரயில் ஒன்று வடக்கேயிருந்து தெற்கே போய்க் கொண்டிருக்கும் இந்த இரயிலை 'கிராஸ்' செய்ய வேண்டியதாயிருந்தது. அதனால் தெற்கே போகிற இரயில் அரைமணி நேரம் கழித்துத்தான் புறப்பட்டது. இரயில் அங்கிருந்து புறப்பட்டது கூடச் சத்தியமூர்த்திக்குத் தெரியாது. அவன் நன்றாக உறங்கிப் போயிருந்தான். நாள் தங்கின விருந்தாளியைப் போல் அந்த இரவு நேரத்துப் பிரயாணிகள் இரயில் சுவாரஸ்யமோ, சுறுசுறுப்போ இல்லாமல் மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. 'மெயில் கௌரவமோ' 'எக்ஸ்பிரஸ் அந்தஸ்தோ' இல்லாத அந்த ஏழை பாசஞ்சர் வண்டி, ஏனோதானோ என்று வாழும் விறுவிறுப்பில்லாத மக்களைச் சுமந்தபடி ஏனோ தானோ என்று இயங்கியது. அப்போது எந்தவிதமான நினைவோ கனவோ உறுத்தாத மனத்தோடு அடித்துப் போட்டமாதிரி நன்றாக உறங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. முக்கால்மணி நேரத்துக்கு மேல் அவனுடைய ஆழ்ந்த உறக்கம் இடையூறின்றித் தொடர்ந்தது. அவன் ஏறியிருந்த பெட்டியில் அவனைத் தவிர வேறு மனித சஞ்சாரமேயில்லை. ஏதோ ஒரு சிறிய நிலையத்தில் இரயில் நின்று புறப்பட்ட போதுதான் அவன் படுத்திருந்த பெட்டியின் கீழே உள்ள இருக்கையிலிருந்து அந்தக் குரல் ஒலிகள் வலுத்து அவனை எழுப்பின. கண் விழித்துப் பார்த்தபோது வண்டிக்குள் புதிதாக யாரோ பிரயாணிகள் ஏறி இருப்பதாய்த் தெரிந்தது. பலகையில் எழுந்து உட்கார்ந்து கீழ்ப்புறமாகக் குனிந்து வார்த்தைகளாலேயே ஒருவருக்கொருவர் சாடிக்கொள்ளும் அந்த விநோதப் பிரயாணிகள் யாரென்று பார்க்க வேண்டும் போல ஆவலாயிருந்தும் அப்படிச் செய்யாமல் படுத்திருந்தபடியே அவர்களுடைய உரையாடலை உற்றுக் கேட்டான் சத்தியமூர்த்தி. நடுநடுவே ஏதோ நாட்டிய மேடையில் கேட்கிறாற் போலச் சலங்கை ஒலிகளும் கண்ணாடி வளைகளின் ஒலிகளும் வேறு கேட்டன. சத்தியமூர்த்தியின் தூக்கம் நிச்சயமாகக் கலைந்தே போய்விட்டது. வாக்குவாதம் வலுத்துச் சண்டை போடுகிற தொனியில் பேசிய குரல்கள் இரண்டும் பெண்களுடையவையாயிருந்தன. அவர்கள் அந்த நிலையத்தில்தான் ஏறியிருக்க வேண்டும் என்று அவன் அநுமானம் செய்ய முடிந்தது. இரண்டு பெண் குரல்களில் சற்றே வயது மூத்து முதிர்ந்ததாக ஒலித்த குரல் கண்டிப்பும் அதிகார மிடுக்கும் பொருந்தியதாக இருந்தது. "வெட்கங்கெட்ட மூளி! நீ இப்படிச் செய்யலாமா? இதே மாதிரிப் போய்க்கிட்டிருந்தா நீ பிழைச்சு உருப்பட்டாப்போலத்தான் போ..." இதற்குப் பதிலுரைத்த இளையகுரல் வீணையின் தந்தியை மெதுவாக வருடினாற்போல் இனிமையும் நளினமும் இங்கிதமும் மென்மையும் இழைத்து மெல்லச் சீறியது. "இப்படி மானங்கெட்டுப் பிழைக்கிறதுக்கு எங்கேயாவது ஆற்றிலே குளத்திலே விழுந்து செத்தா நல்லது. நீயா என்னைக் கொல்லப் போகிறதில்லே; நானாகச் சாகவிடவும் போகிறதில்லே. இப்படியே தான் தொடர்ந்து நீ என்னைச் சித்திரவதை செய்துகிட்டிருக்கப் போறே..." இப்படி ஒலித்த இந்தச் சொற்களின் தொடர்ச்சியாகவே வளைகளும் சலங்கைகளும் குலுங்கி ஒலித்ததனால் அவைகளை இந்தச் சொற்களுக்குரியவள் தான் அணிந்திருக்க வேண்டும் என்பதையும் அவன் புரிந்து கொள்ள முடிந்தது. இரயில் பெட்டி நிறைய முகப்பௌடரும், சந்தனமும், சாதிப் பூக்களும் கம்மென்று மணக்கத் தொடங்கியிருந்தன. சத்தியமூர்த்தி மேலும் அந்த உரையாடலைத் தொடர்ந்து கவனித்தான். "உன் மனசிலே நீ என்ன தான் நினைச்சுக்கிட்டிருக்கியோ? தெரியலை... சின்னஞ் சிறு கிராமத்திலே அம்மன் கோவில் திருவிழாவுக்கு நாலுவிதமான மனுசாளும் தான் வந்திருப்பாங்க. ஒருத்தருக்குப் பாம்பாட்டி நடனம் பிடிச்சிருந்தா இன்னொருத்தருக்கு 'மயில் டான்ஸு' தான் பிடிக்கும். யார் மனசும் குறைப்படாமே தான் நடந்துக்கணும்... கால்லே சலங்கையைக் கட்டிக்கிட்டு இதுக்குன்னு பெறந்து வளர்ந்தப்புறம்... அதெல்லாம் பார்த்தா முடியுமா?" "அதெல்லாம்னா... எதெல்லாம்?" "உன் திமிர் பிடிச்ச கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நான் ஆள் இல்லேடிம்மா." "அம்மன் கோவில் திருவிழா நடத்தற மனுசங்களா இவங்க...? நிஜமா அம்மனைக் கும்பிட்டுத் திருவிழா எடுக்கிறவங்களா இருந்தால் பெண்களைத் துச்சமா மதிக்கிற சின்ன நினைப்புத் தோணுமா இவங்களுக்கு? ஒருத்தன் உதடு ரெண்டையும் குவிச்சு 'ஹுய்'னு சீட்டியடிக்கிறான். இன்னொருத்தன் கண்ணைச் சாய்க்கிறான். அந்தக் கண்ணிலே கொள்ளியைத் தான் வைக்கணும்." "இப்படி வாய்த் துடுக்கு இருக்கப்படாதுடீ உனக்கு." "ஏன்?... இருந்தா என்னவாம்?" "சீக்கிரமா அழிஞ்சி இருந்த எடம் தெரியாமப் போயிடுவே!" "அப்படிப் போயிட்டா உனக்கு சந்தோஷம் தானே...?" "இருந்து இப்படி என் கழுத்தை அறுக்கிறதுக்குப் பதில் அதையாவது செய்யலாம் நீ..." - எதிர்த்தரப்பிலிருந்து இதற்குப் பதில் இல்லை. வளைகளும் சலங்கைகளும் மெல்லக் குலுங்கிய பின் சிறிது நேரம் கழித்து விசும்பியழுகிற இளங்குரல் எழுந்தது. அந்தக் குரல் விசும்பியழுவது கூட மிகவும் நயமானதோர் இன்னிசையாக உருவாகி ஒலித்தது. "பேசறதையும் பேசிப்பிட்டு எதுக்குடீ இந்தச் சாகஸம்?" இந்தக் கேள்விக்கும் எதிர்த்தரப்பிலிருந்து பதில் இல்லை. அழுகைக்குரல் பெரிதாகியது. "பெரிசா அழுதுட்டாப்பிலே ஆச்சா? நீ பெறந்த பெறப்புக்கு ரோஷம் என்னா வேண்டிக் கெடக்கு? பேசின தொகைக்கு ஒழுங்கா ஆடிப்பிட்டு வரணுமா, இல்லையா?" "அப்படி ஆடறதுக்கு நா ஒண்ணும் தெருக்கூத்துப் படிச்சுக்கலை. 'இது சரசுவதியோட இலட்சணம்'னு சொல்லியிருக்காரு வாத்தியாரு..." என்று அழுகையோடு குமுறிக் கொண்டு பதில் பேசியது இளங்குரல். திடீரென்று முதியவளிடமிருந்து சத்தியமூர்த்தியே இரண்டாவது முறை நினைக்கக் கூசும்படி துச்சமான வார்த்தை ஒன்று வெடித்தது. மேலே ஒருவன் படுத்திருப்பதை மறந்து தாங்கள் மட்டுமே அந்தப் பெட்டியில் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு வார்த்தைகளைத் தடிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். முதியவள் நெருப்பாய் விட்டெறிந்த அந்த ஒரு வார்த்தை இளையவளிடம் விளைவித்த ஆத்திரம் அடக்க முடியாததாக இருந்தது. இப்போது சத்தியமூர்த்தி எழுந்து உட்கார்ந்து கீழே தலையை நீட்டிப் பார்க்க வேண்டியதாயிற்று. பார்த்த கண்களுக்கு விருந்தாகத் தாமரை பூத்தாற் போன்ற அந்த முகம் தான் முதன் முதலாக அவனுக்குத் தோன்றியது. வானவில்லைப் போல் நிறங்களின் அழகிய பக்குவமெல்லாம் இணைந்த அற்புதமாய்த் தெரிந்தாள் அந்தப் பெண். காலில் நாட்டியத்துக்காகக் கட்டிக் கொண்டிருந்த சலங்கைக் கொத்துக்களை அறுத்தெறிந்துவிட்டு, "நான் விழுந்து செத்தால் தான் உனக்கு என்னைப் புரியும்..." என்று இரயில் கதவைத் திறந்து கொண்டு பாயத் தயாராகிவிட்டாள் அந்த இளம்பெண். இனியும் தான் மேலேயிருந்து சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனிதத் தன்மையில்லை என்று படவே சத்தியமூர்த்தி கீழே இறங்கி அவர்களுக்குள் சமரசம் செய்ய முயன்றான். அவனைக் கண்டவுடன் தங்கள் இருவரைத் தவிர மூன்றாவதாக ஆண்பிள்ளை ஒருவன் அந்த வண்டியில் இருக்கிறான் என்பதை அறிந்ததே அவர்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவனைக் கண்டு அந்த இளம் பெண் தான் அதிகக் கூச்சமடைந்தாள். அவளை அரட்டி மிரட்டிக் கொண்டிருந்த முதியவள் அதிக வெட்கமோ கூச்சமோ கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கும் சேர்த்துக் கூச்சப்படுவது போல் அத்தனை அதிகமான வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டு நாணி நின்றாள் அந்த இளம்பெண். நாட்டிய கோலத்தில் அந்த இளம்பெண் மருண்டு நின்றதே ஓர் அழகிய அபிநயமாயிருந்தது. முன்னங்காலைத் தூக்கிக் கொண்டு பாய்வதற்குத் திமிறி நிற்கும் அழகு, அவளிடம் தென்பட்டது. அந்த அழகில் அடக்கமும் இருந்தது. அப்போது அவள் முகத்தில் தெரிந்த மடப்பமும், பயிர்ப்பும், கூச்சமும், நாணமும் மிக உயர்ந்த குடும்பத்துப் பெண்களிடம் கூடக் காண அருமையானவைகளாயிருப்பதைப் பார்த்துச் சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட்டான். தேடிக் கண்டுபிடிக்க முடியாத அல்லது விரும்பாத பல இடங்களில் வாழ்க்கையில் மிக மென்மையான குணங்கள் அமைந்திருந்து அவை பிறருக்குத் தெரியாமலே போய்விடுகிற சமுதாய நஷ்டத்துக்காகச் சத்தியமூர்த்தி தனக்குள் பலமுறை வருந்தியிருக்கிறான். இன்றும் அப்படி அவன் வருந்த நேரிட்டது. "அம்மா! நீங்கள் உங்கள் பெண்ணிடம் இன்னும் சிறிது நாகரிகமாகப் பேசலாமே? அப்படிப் பேசினாள் இரயிலில் உடன் வருகிற மற்ற பிரயாணிகளும் உங்களை அநாகரிகமாய் நினைத்துக் கொள்ளக் காரணமாயிராது" என்று சத்தியமூர்த்தி கூறியதைக் கேட்டு முகத்தைச் சுளித்தாள் அந்த முதிய அம்மாள். "எங்கள் அம்மாவுக்கு நாகரிகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. 'நாகரிகத்தை' எவ்வளவு 'அட்வான்ஸ்' வாங்கிக் கொண்டு விற்கலாமென்று அவள் நினைப்பாள்..." என்று கீழே தலையைக் கவிழ்த்துக் கொண்டே, குமுறலோடு அவனிடம் பதில் பேசியது அந்த இனிய குரல். 'இன்னொருத்தனுக்கு முன் சந்தி சிரித்து விடும்போல் இருக்கிறதே' என்ற பயத்தினாலோ என்னவோ அம்மாக்காரி பதில் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டாள். சண்டை ஒருவிதமாக ஓய்ந்து அமைதியடைந்த நிலைக்கு வந்தது. சத்தியமூர்த்தி மறுபடியும் மேலே ஏறிப்படுத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் கீழ்ப்புறமிருந்து அந்தப் பெரிய அம்மாள் குறட்டை விடும் ஓசை கிளம்பிற்று. அந்த அம்மாளின் குறட்டை கூட மிடுக்குடனே மிரட்டுவதுபோல் இருந்தது. சத்தியமூர்த்திக்குத் தூக்கம் மறுபடியும் வரவில்லை. படுத்தபடியே புரண்டு கொண்டிருந்தான். கண்கள் மட்டும் தூங்குவது போல் சும்மா மூடியிருந்தன. கீழே இருந்து பரவும் நறுமணங்கள் அவற்றைச் சுமந்து கொண்டிருப்பவளின் சோகமான வேதனைகளை அவனுடைய ஞாபகத்தில் படரச் செய்தன. அவன் ஏதேதோ தொடர்பு உள்ளனவும், தொடர்பு அற்றவனுமாகிய சிந்தனைகளைத் தனக்குள் சிந்திக்கத் தொடங்கினான். அதிகாலை மூன்றரை மணி இருக்கும். இரயில் மதுரைப் பாலம் நிலையத்தைக் கடந்து வைகைப் பாலத்தில் 'தடதட'வென்று ஓசையிட்டு ஓடத் தொடங்கியிருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் தன்னுடைய உணர்ச்சியின் மானத்தை இரண்டாம் முறையாக அவனுக்கு நிரூபிக்கும் காரியத்தைச் செய்யலானாள். அவளுடைய கைவளைகள் ஓசைப்பட்டுக் கண்ணை மூடிக் கொண்டிருந்த அவனை எழுப்பிவிட்டன. கண்களைத் திறந்து விழித்ததும் இரயில் கதவைத் திறந்து கொண்டு வைகையில் பாய்ந்து விடத் துணிவும் நிலையில் அவளைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. பார்த்ததும் திடுக்கிட்டான். அவள் நினைத்ததைச் செய்துவிட அந்த நிலையில் அவளுக்கு அரைகணமே போதும். மேல் பலகையிலிருந்து கீழே குதித்துத் தாவி அவளைக் காப்பாற்றவோ குறைந்த பட்சம் அவனுக்கு இரண்டு கணமாவது வேண்டுமே? பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|