45
ஒவ்வொரு மனத்திலும் ஒரு சோகக் கதை உண்டு. அது கதையாக வெளிப்படாத வரை உலகத்துக்குக் கிடைக்க வேண்டிய சுவாரசியமான அநுபவம் ஒன்று நஷ்டமாகி விடுகிறது. காலமே அடங்கி ஒடுங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் மல்லிகைப் பந்தல் நகரமெங்கும் ஒருவகை அசதி தெரிந்தது. மென்று சுவைத்து நிதானமாகச் சாப்பிடுகிறவனுக்குச் சோற்றில் உள்ள கல் தெரிகிறாற் போல் நின்று நிதானித்துப் பார்க்கிறவனுக்கு வாழ்க்கையின் துன்பங்கள் தெரிகின்றன. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் துன்பங்கள் எதிர்கொண்டு தெரிவதைச் சத்தியமூர்த்தி உணர்ந்தான். பிறர் பொறாமைப்படுவதற்கும் சிந்திப்பதற்கும் காரணமில்லாமலே தான் ஆளாகி விடுவதைப் பல சமயங்களில் அவன் புரிந்து கொண்டிருக்கிறான். பூபதியின் மரணத்துக்கு அநுதாபம் தெரிவித்துக் கல்லூரி மாணவர்கள் நடத்திய இரங்கற் கூட்டத்தில் தான் மனம் உருகிச் சொற்பொழிவாற்றியதற்கு வம்புக்காரர்கள் என்ன அர்த்தம் கற்பித்துப் பேசிக் கொள்ளுகிறார்கள் என்பதைக் கேட்டு அவன் மனம் வருந்தினாலும் பொறுத்துக் கொண்டான். மிருகத் தன்மைகள் இல்லாத மனிதர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் வாழ்வில் தென்படுகிறார்கள் என்று எண்ணத் தோன்றியது அவனுக்கு. அநுதாப ஊர்வலமும், கூட்டமும் முடிந்து அவன் அறைக்குத் திரும்பிய போது மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. மழை 'இதோ வந்துவிட்டேன்' என்று பயமுறுத்துவது போல் மேகங்கள் கவிந்து இருட்டிக் கொண்டிருந்தது. மழையை உறுதியாக எதிர்பார்த்துப் பாதுகாப்புச் செய்து கொண்ட மாதிரி மனிதர்கள் கரும் பூதங்களைப் போல் மழைக்கோட்டுக்குள் புகுந்து நடமாடிக் கொண்டிருந்தார்கள். 'லேக் அவின்யூ'வில் மரங்களின் உச்சிகளில் கூட மேகங்கள் வந்து தழுவினாற் போல் தெரிந்தன. சத்தியமூர்த்தி நேரே மாடிப் படியேறி அறைக்குப் போகாமல் குமரப்பனுடைய கடைக்குள் நுழைந்தான். குமரப்பன் ஏதோ பெரிய விளம்பரப் பலகை ஒன்றைத் தரையில் வைத்துக் கீழே படுத்துவிட்டாற் போல் சாய்த்து அதில் எழுதிக் கொண்டிருந்தான். சத்தியமூர்த்தி கடைக்குள் வருவதைப் பார்த்துவிட்டு, "ஒரு பதினைந்து நிமிஷம் அந்த நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளைப் படித்துக் கொண்டிரு சத்தியம்! இந்த வேலையை முடித்துவிட்டு வருகிறேன். இது ஒரு ஜவுளிக் கடை போர்டு. தீபாவளி சீஸனுக்காக எழுதச் சொல்லியிருக்கிறார். விரைவில் முடித்துக் கொடுத்துவிட வேண்டும்" என்றான் குமரப்பன். "ஆகா! தாராளமாக உன் வேலையை முடித்துவிட்டு வா! நான் நீ வரும் வரை காத்திருக்கிறேன்" என்று நண்பனுக்கு மறுமொழி கூறிய சத்தியமூர்த்தி நாற்காலியில் அமர்ந்து நண்பனுடைய அந்தச் சிறிய கடையை நன்றாக உற்றுப் பார்த்துக் கவனிப்பது போல் அங்கும் இங்குமாக உலாவினான். ஒரு மூலையில் 'நாய்கள் ஜாக்கிரதை' என்று சிறிய எச்சரிக்கைப் பலகைகள் - எழுத்துடனும் நடுவில் ஒரு நாய்த் தலை படத்துடனும், பளபளவென்று புதிய வண்ணத்தில் 'தொடாதே அபாயம்' என்ற எச்சரிக்கைப் பலகைகளும் சில இருந்தன. சத்தியமூர்த்தி இந்த விளம்பரப் பலகைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குமரப்பன் தன் வேலையை முடித்துக் கொண்டு கைகழுவி விட்டு அவனருகே வந்து நின்றான். அப்போது குமரப்பனுடைய முகத்தில் குறும்புத்தனமானதொரு மலர்ச்சி தெரிந்தது.
"என்னடா சத்தியம்! நமது கலைக்கூடத்தில் உருவாகும் அமர இலக்கியங்களையெல்லாம் இவ்வளவு கவனமாகப் பார்க்கிறாயே? இந்தக் கடை ஆரம்பமான நாளிலிருந்து இங்கே அதிகமாகச் செலவழிந்திருக்கிற போர்ட்டுகள் என்ன தெரியுமா? 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற போர்டு தான். பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன் இங்கே ஒரு - 'டாக் ஷோ' (நாய்க் காட்சி) நடந்ததே. அந்த நாய்க் காட்சியில் பலர் புதிய நாய்கள் விலைக்கு வாங்கினார்கள். அதோடு நம் கடைக்கு வந்து இந்தப் 'போர்டி'லும் ஒன்று வாங்கிக் கொண்டு போனார்கள். 'ஒவ்வொரு பங்களாவிலும் நாய்கள் இருக்கும் என்பதும் அவை கடிக்கும் என்பதும், எங்கும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை தானே? அப்படி இருக்கும் போது 'நாய்கள் ஜாக்கிரதை' என்று இரண்டு வார்த்தைகளை எழுதி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? சும்மா 'ஜாக்கிரதை' என்று மட்டும் ஒவ்வொரு பங்களாவின் வாசற் கதவிலும் போர்டு போட்டால் போதுமே? அந்தப் போர்டைப் பார்த்ததுமே அது ஒரு பங்களா என்பதையும் - அதற்குள் நாய்கள் இருக்கும் என்பதையும் - அவை கடிக்கும் என்பதையும் பார்த்தவன் தெரிந்து கொள்ள முடியாதோ?' என்று முதல் நாள் போர்டு வாங்க வந்த ஓர் பணக்கார ஆளிடம் விளையாட்டாகப் பேசப் போய் அவன் என்னிடம் பழியாகச் சண்டைக்கு வந்துவிட்டான். நானும் அவனைச் சும்மா விடவில்லை. உடனே 'தொடாதே! அபாயம்' என்ற போர்டைக் கையில் எடுத்துக் காண்பித்தேன் அவ்வளவு தான்! ஆள் வாலைச் சுருட்டிக் கொண்டு பேசாமல் போய்ச் சேர்ந்தான். இதே போல் 'டாக் ஷோ'வுக்கு நானும், இந்த ராயல் பேக்கரி ரொட்டிக்கடை நாயரும் போயிருந்த போது ஒரு பெரிய வம்பு வந்து சேர்ந்தது. பகுதி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் நாய்களை அணிவகுத்து, அந்தந்த பகுதிக்கு மேல், அங்கு உள்ளேயிருக்கும் நாயின் இனம், பெயர், வயது, அது எந்த நாய்க் 'கிளப்'பின் பிரதிநிதியாக 'ஷோ'வில் கலந்து கொள்கிறது என்பன போன்ற விவரங்களைக் குறிக்கும் அறிவிப்புப் பலகையும் போட்டிருந்தார்கள். ஒரே ஒரு பகுதியில் மட்டும் அங்கு இருக்க வேண்டிய நாய் வெளியே எங்கோ கொண்டு போகப்பட்டிருந்ததனாலோ என்னவோ - அந்த நாய்க்குச் சொந்தக்காரி போல் தோன்றிய ஓர் முரட்டு ஆங்கிலோ - இந்தியப் பெண்மணி மட்டும் உள்ளே உட்கார்ந்திருந்தாள். மழையினால் போர்டில் நாயின் பெயர் அழிந்து போய் 'ஷீலாராணி' என்ற அந்த நாய்க்கு உடமைக்காரியின் பெயர் மட்டும் அறிவிப்புப் பலகையில் தெரிந்தது. "நாயர்! இது ரொம்ப நல்ல வெரைட்டியாயிருக்கும் போல் தெரிகிறது. 'ஷீலாராணி' என்று பெயர் போட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு பெண் மாதிரியே இருக்கிறது பார்த்தீர்களா?" என்று நான் சிரிக்காமல் உடன் வந்திருந்த நாயரிடம் காதருகே சொன்னேன். நாயருக்கோ அடக்க முடியாத சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்துவிட்டது. மனிதர் அந்த இடத்திலே சிரித்துத் தொலைக்கப் போய், அந்தப் பெண்மணி என்னுடைய பயங்கரமான நகைச்சுவையைப் புரிந்து அதன் விளைவாக 'வாட் டு யூ மீன்...' என்று சீறிப் பாயத் தொடங்கிவிட்டாள். தப்பித்தோம், பிழைத்தோம் என்று நாயரை இழுத்துக் கொண்டு ஓட்டமெடுத்தேன் நான். அதற்கு இரண்டு மூன்று நாளைக்கு முன் இந்த மல்லிகைப் பந்தலில் வழக்கமாக வருடா வருடம் நடைபெறும் ஃபிளவர் ஷோ (மலர்க் காட்சி) ஃபுரூட் ஷோ (பழக் காட்சி) ஆகியவற்றில் அந்தப் பூக்களுக்கும், பழங்களுக்கும் அருகே அவற்றின் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று இந்த ஊர் நகரசபைக் கமிஷனர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். முதல் காரியம் அவன் கூப்பிட்டனுப்பியதே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நகரசபை அதிகார அடக்குமுறைக்குப் பயப்படாவிட்டால் நானும் என் கடையும் காலம் தள்ளிக் குப்பை கொட்ட முடியுமா? அதற்காக அவனைச் சந்திக்கப் போனேன். 'டிசைன்' 'போர்டு' எழுதுகிற பெயிண்டர் என்றால் ஏதோ கைகட்டி வாய் பொத்தி 'எசமான் உத்தரவுக்கு, அடிமை காத்திருக்கேனுங்க' என்பது போல் வந்து நிற்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
"இந்த ஊர்க்காரர்களுக்குப் பூக்காட்சியிலும் பழக்காட்சியிலும் மல்லிகைப் பூவுக்குக் கீழே, 'இதுதான் மல்லிகைப் பூ' என்றும், ஆரஞ்சுப் பழத்துக்குக் கீழே, 'இதுதான் ஆரஞ்சுப் பழம்' என்றும் எழுதி வைத்தால்தான் புரியுமோ சார்?' என்று பேச்சுப் போக்கில் சிரித்துக் கொண்டே மெதுவாக வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் அந்தக் கமிஷனரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு வந்தேனடா சத்தியம். அப்புறம்தான் ஆள் என்னை யாரென்று புரிந்து கொண்டான்? ஒழுங்காகக் கேட்டத் தொகையைக் கொடுத்துப் போர்டுகளை எழுதி வாங்கிக் கொண்டான்." சத்தியமூர்த்தி சிரித்தபடியே நண்பன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக அங்கு ஒரு மூலையில் அரைகுறையாக எழுதி வைக்கப்பட்டிருந்த ஒரு போர்டு சத்தியமூர்த்தியின் கண் பார்வையில் தென்பட்டுச் சிரிப்பு மூட்டியது. "என்னடா குமரப்பன்! இதற்கு என்ன அர்த்தம்?" என்று சிரித்தபடியே கேட்டுக் கொண்டே நண்பனிடம் அந்தப் போர்டை எடுத்துக் காட்டி வினவினான் சத்தியமூர்த்தி. அந்தப் 'போர்டில்' 'உத்தரவின்றி உள்ளே பிரசவிக்கக்கூடாது' என்று குண்டு குண்டாக எழுதியிருந்தது. அதைப் பார்த்துக் குமரப்பனும் விழுந்து விழுந்து சிரித்தான். "இதில் ஒரு சுவாரசியமான கதையே அடங்கியிருக்கிறது சத்தியம்! நம்முடைய ராயல் பேக்கரி நாயர் சிபாரிசு செய்தார் என்று அவருக்காக ஒரு மலையாளிப் பையனை - மாதம் அறுபது ரூபாய் சம்பளம் பேசி என் கடையில் எனக்கு உதவியாகச் சிறு போர்டுகள் டிசைன்கள் எழுத அமர்த்திக் கொண்டேன். அவனுக்குத் தமிழ் கொஞ்சம் தகராறு. நன்றாகத் தமிழ் பேசவோ எழுதவோ வராது. 'செகண்ட் அவென்யூ'வில் பிரபலமான மெடர்னிட்டி ஹோம் (பிரசவ ஆஸ்பத்திரி) வைத்து நடத்தி வருகிறாளே - ஒரு இங்கிலீஷ்கார டாக்டர் அம்மாள் - அந்த அம்மாளுடைய பிரசவ ஆஸ்பத்திரியில் உபயோகத்துக்காக 'உத்தரவின்றி உள்ளே பிரவேசிக்கக் கூடாது' என்று நான்கு போர்டுகள் வேண்டும் என்று எழுதித் தரச்சொல்லிக் கேட்டிருந்தார்கள். அந்த நான்கு போர்டுகளையும் எனக்கு வேறு வேலை இருந்ததனால் என்னுடைய 'அஸிஸ்டெண்டாக' வந்திருந்த புத்திசாலியை எழுதச் சொல்லப் போக அவன் நான்கு பலகைகளிலுமே 'உத்தரவின்றி உள்ளே பிரசவிக்கக் கூடாது' என்று எழுதி எடுத்துக் கொண்டு போய்ப் பிரசவ ஆஸ்பத்திரியில் அவர்கள் சொன்ன இடங்களில் எல்லாம் ஆணியடித்து மாட்டிவிட்டு வந்து விட்டான். இரண்டு நாள் கழித்து மூஞ்சியில் எறியாத குறையாகப் போர்டுகளைத் திருப்பிக் கொண்டு வந்து எறிந்து விட்டுப் போனாள் அந்த இங்கிலீஷ் டாக்டரம்மாளுடைய நர்ஸ். என்னடா சங்கதி என்று போர்டுகளைப் பார்த்தால் படுபாவிப்பயல், 'உத்தரவின்றி உள்ளே பிரசவிக்கக் கூடாது' என்று எழுதிப் பிரசவ ஆஸ்பத்திரியின் பிழைப்பிலேயே மண்ணைப் போட்டிருக்கிறான். முதல் வேலையாகப் பையனைக் கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்" என்று தன்னுடைய அனுபவத்தை மிகவும் இரசித்துச் சொன்னான் குமரப்பன். கடையைப் பூட்டிய பின் நண்பர்கள் தேநீர் பருகி விட்டு அறைக்குப் போனார்கள். மழையினால் எங்கும் வெளியில் உலாவப் போக முடியவில்லை. பேசிக் கொண்டிருந்த போது நடுவில் மோகினியைப் பற்றி விசாரித்தான் குமரப்பன். சத்தியமூர்த்தியின் அந்தரங்கத்திலோ - அவளைப் பற்றிய கவலைகளும் தவிப்புமே நிரம்பியிருந்ததனால் யாராவது மோகினியைப் பற்றி ஞாபகப்படுத்திப் பேசினால் கூட வேதனையாக இருந்தது அவனுக்கு. சிறிது நேரம் தயங்கிய பின் மதுரையில் நடந்தவற்றைப் பற்றிய விவரங்களைக் குமரப்பனிடம் கூறினான் சத்தியமூர்த்தி. எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குமரப்பன் சிறிது நேரம் மலைத்தாற் போல் உட்கார்ந்திருந்தான். அப்புறம் சற்று நேரத்துக்குப் பின் ஒரு பெருமூச்சையும் விட்டு விட்டு வெளிப்படையாக வேடிக்கையானதும், ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது ஆழ்ந்த துயரம் தெரியக் கூடியதுமான ஒரு வாக்கியத்தைச் சத்தியமூர்த்தியிடம் கூறினான் அவன். "கடைசியில் கிளியைப் பிடித்துக் கூண்டில் அடைத்தே விட்டார்கள் என்று சொல்!" இதைக் கேட்டுச் சத்தியமூர்த்தி நண்பனுக்குப் பதில் சொல்லாமல் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடி இருந்தான். மனத்துக்குப் பிடித்தமான வாத்தியத்தில் மனத்துக்குப் பிடித்தமான இராகத்தை வாசித்தது போல் மோகினியோடு உரையாடிய வேளைகளை எல்லாம் இப்போது நினைத்து மனமுருகினான் அவன். அவன் பதில் பேசாமல் சும்மா இருப்பதைப் பார்த்துக் குமரப்பனே மேலும் கேட்டான்: "என்ன? பதில் பேசாமல் திகைத்து உட்கார்ந்து விட்டாய்?" "பதில் பேச என்ன இருக்கிறது? கூண்டில் அடைபட்டு விட்டதாகச் சொல்கிறாய், அந்தக் கிளியின் மனத்தில் உள்ள நினைவுகள் ஒவ்வொன்றும் ஒரு சோகக் கதையாயிருக்கிறது..." "ஒவ்வொரு மனத்திலும் ஒரு சோகக்கதை உண்டு. அது கதையாக வெளிப்படாத வரை உலகத்துக்குக் கிடைக்க வேண்டிய சுவாரசியமான அநுபவம் ஒன்று நஷ்டமாகிவிடுகிறது சத்தியம்..." "ஆனால் மோகினியின் சோகம், கதைகளை எல்லாம் விடப் பெரியது குமரப்பன்..." "என்ன செய்யலாம்? வசீகரமான நினைவுகளோடு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறோம். ஆனால், அங்கு மிகவும் குரூரமான நினைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனியாக இருந்து சிந்திக்கும் போது அழகாயிருக்கிற இந்த வாழ்க்கையை - பலரோடு கலந்து வாழும் போது - தடைகளும் - இடையூறுகளும் நிறைந்ததாயிருப்பதை மிகவும் கசப்போடு நீயும் நானும் புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் மேலே என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கித் தளர்ந்துதான் நிற்க வேண்டியிருக்கிறது..." "இடையூறுகளையும் - தடைகளையும் பற்றி நான் கவலைப்படவில்லை குமரப்பன்! அவைதான் என்னுடைய தைரியத்தையும் சிந்தனையையும் வளர்க்கின்றன. பிரச்சினைகள் சூழ்ந்து நின்று உறுத்தும் போது தான் நான் பலசாலியாயிருக்கிறேன். ஆனால் என்னை நினைத்து எனக்காகத் தவித்து என்னை அடையவும் முடியாமல் அடையவேண்டும் என்ற ஆசையை விடவும் முடியாமல் இன்னொருவர் வேதனைப்படுவதைத்தான் நான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..." "இன்னொருவருடைய தூய்மையான அன்பு என்பது வாழ்க்கையில் மனிதன் அடைகிற விலைமதிப்பற்ற பண்டங்களில் ஒன்று. எந்த விலைமதிப்பற்ற பண்டத்தையும் கவலையோ பாதுகாப்போ இல்லாமல் அடைய முடியாது என்பது வாழ்க்கைத் தத்துவம்!" "உண்மைதான்? நம்முடைய ஒவ்வொரு விருப்பமும் - அப்படி விருப்பமாகப் பிறக்கும் போதே - கவலையோடும் - ஏமாற்றத்தோடும் சேர்ந்துதான் பிறக்கின்றது" - தங்களுக்குள் இப்படி நீண்ட நேரம் வரை பேசிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள். அடுத்த நாள் காலை கல்லூரி வகுப்புக்கள் வழக்கம் போல் தொடங்கிவிட்டன. மாணவர்களின் அன்பையும் ஆர்வத்தையும் கண்டு சில நாழிகை நேரம் அவன் தன் கவலைகளை மறக்க முடிந்தது. மறுதினம் காலையில் - பூபதியின் மகள் பாரதியும், ஜமீந்தாரும், கண்ணாயிரமும் மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். "இன்று காலையில் அவர்கள் வந்ததும் வராததுமாக நாம் போய் நிற்க வேண்டாம். வர்த்தகப் பிரமுகர்களும், நண்பர்களுமாகத் துக்கம் விசாரிக்கிற கூட்டம் இன்னும் இரண்டு நாளைக்கு அங்கே நிறைந்திருக்கும்.. எனவே, நாம் நாளை அல்லது நாளன்றைக்குப் போய் அந்தப் பெண்ணிடம் ஒரு மரியாதைக்காகத் துக்கம் விசாரித்துவிட்டு வரலாம்" என்று கல்லூரி முதல்வர் ஆசிரியர்களிடம் எல்லாம் கூறியிருந்தார். பூபதியின் மகளைத் துக்கம் விசாரிக்கப் போகிற வேளையில் அதே வீட்டில் மஞ்சள்பட்டியாரையும், கண்ணாயிரத்தையும் சந்திக்க நேரிடுமோ என்று கூசித் தயங்கிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. இரண்டு நாட்களுக்குப் பின்பு ஒரு நாள் மாலை கல்லூரி வகுப்புக்கள் முடிந்து ஆசிரியர்களும், முதல்வரும் கூட்டமாகப் பாரதியைச் சந்திக்கப் புறப்பட்டபோது அவனும் சேர்ந்து செல்ல வேண்டியிருந்தது. கூட்டத்திலிருந்து தன்னை அவனால் பிரித்துக் கொள்ள முடியவில்லை. ஆசிரியர்களை எல்லாம் பார்த்ததும் பாரதி பெரிதாகக் கதறி அழுதுவிட்டாள். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் அவள் அருகே வீற்றிருந்தனர். சத்தியமூர்த்தி சிறிது தொலைவு தள்ளி அமர்ந்திருந்தான். அத்தனை பேருக்கு நடுவிலும் அவளுடைய கண்கள் அவனிடமிருந்து தனியாக ஏதோ அநுதாபத்தைத் தேடுவதுபோல் அடிக்கடி அவனை நிமிர்ந்து பார்த்தன. அவனும் அவளுடைய துயரத்துக்காக மனம் வருந்தினான். வாடி இளைத்து முகம் கறுத்துக் களையிழந்து போயிருந்தாள் அந்தப் பெண். அங்கே பூபதியின் படம் ஒன்று பெரிதாக்கப்பட்டுச் சுவரில் மாட்டி மாலை சூட்டப் பெற்றிருந்தது. கல்லூரி முதல்வர் ஜமீந்தாரையும் சந்தித்துத் துக்கம் கேட்க வேண்டும் என்று விரும்பியவராகப் பாரதியிடமே அவரைப் பற்றி விசாரித்தார். அவரும் கண்ணாயிரமும் எஸ்டேட்டுகளைச் சுற்றிப் பார்க்கக் காரில் புறப்பட்டுப் போயிருப்பதாகத் தெரிவித்தாள் அவள். "நாளைக்குச் சாயங்காலம் காலேஜ் போர்டு மீட்டிங் இருக்கிறதே? அதற்குள் திரும்பி வந்து விடுவார்களோ இல்லையோ?" என்று பாரதியைக் கேட்டுவிட்டுப் பின்புறம் சிறிது தள்ளினாற் போல் நின்றிருந்த ஹெட்கிளார்க்கை ஜாடை காண்பித்து அருகில் வரவழைத்து... "மீட்டிங் சர்க்குலர் எல்லாருக்கும் கையெழுத்துக்குப் போய் வந்து விட்டதா இல்லையா?" என்று விசாரித்தார் கல்லூரி முதல்வர். 'ஆமாம்' என்று தலையை ஆட்டினார் ஹெட்கிளார்க். பாரதியிடம் தனியாக இரண்டு ஆறுதல் வார்த்தைகள் மனத்தைத் தொடும்படியாகப் பேச வேண்டும் என்று சத்தியமூர்த்தி நினைத்திருந்தது வீணாயிற்று. இதே போல் அவனைப் பார்த்ததும் தனியே கதறியழ வேண்டுமென்று அவளும் நினைத்து அந்த நினைப்பைச் செயலாக்க முடியாமல் வீணாகியிருக்கலாம். துக்கம் விசாரிக்கிற சடங்கை முடித்துக் கொண்டு ஆசிரியர்கள் புடைசூழத் திரும்பிப் புறப்பட்டு விட்டார் கல்லூரி முதல்வர். சத்தியமூர்த்தியும் அவர்களோடு புறப்பட்டு விட்டான். அந்த வீட்டின் கடைசிப் படியிலிருந்து அவன் திரும்பிப் பார்த்துத் தன் கண்களின் பார்வையையும் உட்புறம் திருப்பிய போது கதவருகே அவனையே பார்த்தபடி பாரதி கண்கலங்க நின்றிருந்தாள். ஒரு கணம் தயங்கி விட்டுக் கூட்டத்தோடு கூட்டமாக விரைந்து நடந்தான் அவன். ஆனால் அவனுடைய மனம் மட்டும் இன்னும் ஒரு கணம் அதிகமாக அங்கே தங்கியது. "ஏன் சார்! உங்களைத்தானே? உங்களுக்கு இந்த விவரம் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டுமே? பாரதிக்குத் திருமணமாகி, அவள் கணவன் வீடு போகிறவரை - பூபதியின் சொத்துக்களுக்கும், பெண்ணுக்கும் ஜமீந்தார் தான் 'கார்டியனாமே'? நிஜம்தானா அது?" என்று சத்தியமூர்த்தியை விசாரித்தார் வம்பளப்பதில் ஆர்வம் உள்ள ஒரு பேராசிரியர். 'தனக்கு அந்த விவரம் ஒன்றும் தெரியா'தென்று அவருக்கு அடக்கமாக மறுமொழி கூறினான் அவன். "இத்தனை வயசுக்கு மேலே இந்த ஜமீந்தார் யாரோ ஒரு நாட்டியக்காரியிடம் மனத்தைப் பறிகொடுத்திருக்கிறாமே! இது தெரியுமா உங்களுக்கு?" என்று அதே வம்புக்காரப் பேராசிரியர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டு சென்ற போது சத்தியமூர்த்தி உடனே அருகில் ஓடிப் போய் அவரைக் கன்னத்தில் அறைய வேண்டும் போலப் பொறுமை இழந்திருந்தான். ஆனால், அவன் தன் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|