9

     தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய் விடாதா?

     அங்கையற்கண் அம்மை தன்னோடு ஆலவாய் நகரமாகிய மதுரை மாநகரத்தில் கோயில் கொண்டருளியிருக்கும் மதிப்பிற்குரிய சொக்கநாதப் பெருமாள் பல தலைமுறைகளுக்கும் முன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்து புகழ்பெற்றார் என்பார்கள். இன்றைய மதுரையில் 'மூன்லைட் அட்வர்டைஸிங்' ஏஜன்ஸியோடும் அதன் விளம்பரப் பிரதாபங்களோடும் கோவில் கொண்டருளியிருக்கும் திருவாளர் கண்ணாயிரம் அவர்களோ தம்முடைய ஒவ்வொரு நாளிலும் எண்ணத் தொலையாத பல திருவிளையாடல்களைப் புரிந்து புகழ் பெற்றுக் கொண்டிருந்தார். கண்ணாயிரம் அவர்களுடைய ஒவ்வொரு விநாடியும் ஒரு திருவிளையாடலே. சொக்கநாதப் பெருமானுக்கு இந்த நூற்றாண்டில் அவதாரம் செய்து திருவிளையாடல் புரியும் உத்தேசம் ஏதாவது இருக்குமானால் அவர் அநாவசியமாக நம்முடைய கண்ணாயிரம் அவர்களிடம் தோற்றுப் போய்விட நேரிடும். தெரிந்துதான் முன்பே பெற்றோர்கள் அவருக்கு இப்படிப் பெயர் வைத்தார்களோ என்னவோ, கண்ணாயிரத்துக்கு ஆயிரம் கண்கள், ஆயிரம் மனம், ஆயிரம் திட்டங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத வியாபார மனம் அவருடையது. இந்த விநாடியில் பார்த்த பார்வை அடுத்த விநாடி வரை அப்படியே இருக்காது. இந்த விநாடியில் நினைத்த மனம் அடுத்த விநாடி வரை அப்படியே நினைக்காது. அவருடைய ஒரு திட்டத்தில் நூறு திட்டங்கள் அடங்கியிருக்கும். "கண்ணாயிரம் நீங்கள் பெரிய காரியவாதி" என்றோ, "நீர் பெரிய காரியவாதி ஐயா" - என்றோ நண்பர்கள் தங்கள் தங்கள் பழக்கத்தின் தரத்துக்கேற்றபடி எப்போதாவது கண்ணாயிரத்தைக் குத்திக் காட்டினால் அதற்குக் கண்ணாயிரம் சொல்கிற மறுமொழி மிகவும் பிரமாதமாயிருக்கும்.

     "நீங்கள் என்னைக் காரியவாதி என்று ஒப்புக் கொள்வதற்காக நான் பெருமைப்படுகிறேன். நாம் நம்முடைய அவசியத்துக்காகத்தான் வாழ வேண்டுமேயொழிய அநாவசியமாக ஒரு விநாடி கூட வாழக்கூடாது. நமக்கு நாமும் நம்முடைய தேவைகளும் தான் அவசியம். அதற்கு அப்பால் மற்றவையெல்லாம் அநாவசியம்" என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்வார் கண்ணாயிரம். "தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளையும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய்விடாதா?" என்று யாராவது விவரம் தெரிந்தவர்களோ, விவகாரம் தெரிந்தவர்களோ எதிர்த்துக் கேட்டுவிட்டால் கண்ணாயிரத்துக்குக் கோபம் வந்துவிடும். வாணக் குழாய் போன்ற பெரிய மூக்குக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு வண்டுகள் ஒட்டிக் கொண்டிருப்பது போல் ஒட்டிக் கொண்டு தெரியும் இட்லர் மீசையும் அந்த மீசையோடு சேர்ந்து கோபமுமாகத் தெரியும் போது கண்ணாயிரம் கண்ணாயிரம்தான். தான் எதையும் எதற்காகவும் கண்டிக்கலாம், கோபிக்கலாம்; ஆனால் தன்னை எதற்காகவும், யாரும் கண்டிக்கக் கூடாது, கோபிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறவர் கண்ணாயிரம். ஆத்திசூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழு வெண்மேனியோடு சொக்கநாதப் பெருமான் எதிரே வந்து நின்றால் கூட, "உம்முடைய திருவிளையாடல் பிரதாபங்களைப் பற்றி ஆறுக்கு - நாலு - இரண்டு பத்தி மூன்று கலர் விளம்பரம் ஒன்று கொடுக்கிறீரா?" என்று கேட்பதற்குக் கண்ணாயிரம் தயார். ஒவ்வொரு விநாடியையும் பணமாக்கி விடவேண்டும் என்று தவித்துக் கொண்டு துறுதுறுவெனத் திரிபவர் கண்ணாயிரம். மூன்லைட் அட்வர்ட்டைஸிங் ஏஜன்ஸி காரியாலயத்தின் நிலைப்படிக்கு மேலே, "உங்கள் வரவு நல்வரவாகுக" என்று எழுதியிருக்கும் வரவேற்பு வாசகத்தில் வரவு என்ற பதம் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் இரண்டு இடங்களிலும் அதற்கு 'வருமானம்' என்று தான் பொருள்படும். 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸி' காரியாலயத்தில் நல்வரவு அதிகமாயிருக்கலாம். ஆனால் செலவு என்னவோ வெறும் வார்த்தைகள் தான். கண்ணாயிரம் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் செய்கிற அதிகபட்ச மரியாதை ஒரு கப் காபி அல்லது வெற்றிலை + சீவல் + சுண்ணாம்பு (தேவையானால்) + பன்னீர்ப் புகையிலை. மிகவும் அதிகபட்சமாகச் செய்கிற மரியாதை போர்ன்விடா அல்லது ஓவல் என்று இப்படி ஏதாவது இருக்கும். வருகிறவர்களுக்குச் செய்கிற அதிக பட்ச அவமரியாதை என்னவென்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். மரியாதை, அவமரியாதைகளுக்கு அங்கே தனித்தனி இலட்சணங்கள் கிடையாது. அங்கே செய்யப்படுகிற மரியாதைகளிலும் அவமரியாதை இருக்கலாம். அதேபோல் அவமரியாதைகளிலும் மரியாதை இருக்கலாம். வருகிறவன் புத்திசாலியாயிருந்தால் அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். புத்திசாலிகள் வகையாக வந்து சிக்கிக் கொண்டாலோ கண்ணாயிரம் அவர்களைச் சீக்கிரமே முட்டாள்களாக மாற்றிவிடுவதில் சமர்த்தர். கண்ணாயிரத்தினிடம் முட்டாள்களைப் புத்திசாலிகளாக மாற்றும் உலகத்துக்குத் தேவையான திறமை இல்லாவிட்டாலும் புத்திசாலிகளை முட்டாள்களாக மாற்றும் உலகத்துக்குத் தேவையில்லாத திறமை ஏராளமாக இருந்து தொலைத்தது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.