9
தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய் விடாதா? அங்கையற்கண் அம்மை தன்னோடு ஆலவாய் நகரமாகிய மதுரை மாநகரத்தில் கோயில் கொண்டருளியிருக்கும் மதிப்பிற்குரிய சொக்கநாதப் பெருமாள் பல தலைமுறைகளுக்கும் முன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்து புகழ்பெற்றார் என்பார்கள். இன்றைய மதுரையில் 'மூன்லைட் அட்வர்டைஸிங்' ஏஜன்ஸியோடும் அதன் விளம்பரப் பிரதாபங்களோடும் கோவில் கொண்டருளியிருக்கும் திருவாளர் கண்ணாயிரம் அவர்களோ தம்முடைய ஒவ்வொரு நாளிலும் எண்ணத் தொலையாத பல திருவிளையாடல்களைப் புரிந்து புகழ் பெற்றுக் கொண்டிருந்தார். கண்ணாயிரம் அவர்களுடைய ஒவ்வொரு விநாடியும் ஒரு திருவிளையாடலே. சொக்கநாதப் பெருமானுக்கு இந்த நூற்றாண்டில் அவதாரம் செய்து திருவிளையாடல் புரியும் உத்தேசம் ஏதாவது இருக்குமானால் அவர் அநாவசியமாக நம்முடைய கண்ணாயிரம் அவர்களிடம் தோற்றுப் போய்விட நேரிடும். தெரிந்துதான் முன்பே பெற்றோர்கள் அவருக்கு இப்படிப் பெயர் வைத்தார்களோ என்னவோ, கண்ணாயிரத்துக்கு ஆயிரம் கண்கள், ஆயிரம் மனம், ஆயிரம் திட்டங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத வியாபார மனம் அவருடையது. இந்த விநாடியில் பார்த்த பார்வை அடுத்த விநாடி வரை அப்படியே இருக்காது. இந்த விநாடியில் நினைத்த மனம் அடுத்த விநாடி வரை அப்படியே நினைக்காது. அவருடைய ஒரு திட்டத்தில் நூறு திட்டங்கள் அடங்கியிருக்கும். "கண்ணாயிரம் நீங்கள் பெரிய காரியவாதி" என்றோ, "நீர் பெரிய காரியவாதி ஐயா" - என்றோ நண்பர்கள் தங்கள் தங்கள் பழக்கத்தின் தரத்துக்கேற்றபடி எப்போதாவது கண்ணாயிரத்தைக் குத்திக் காட்டினால் அதற்குக் கண்ணாயிரம் சொல்கிற மறுமொழி மிகவும் பிரமாதமாயிருக்கும். "நீங்கள் என்னைக் காரியவாதி என்று ஒப்புக் கொள்வதற்காக நான் பெருமைப்படுகிறேன். நாம் நம்முடைய அவசியத்துக்காகத்தான் வாழ வேண்டுமேயொழிய அநாவசியமாக ஒரு விநாடி கூட வாழக்கூடாது. நமக்கு நாமும் நம்முடைய தேவைகளும் தான் அவசியம். அதற்கு அப்பால் மற்றவையெல்லாம் அநாவசியம்" என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்வார் கண்ணாயிரம். "தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளையும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய்விடாதா?" என்று யாராவது விவரம் தெரிந்தவர்களோ, விவகாரம் தெரிந்தவர்களோ எதிர்த்துக் கேட்டுவிட்டால் கண்ணாயிரத்துக்குக் கோபம் வந்துவிடும். வாணக் குழாய் போன்ற பெரிய மூக்குக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு வண்டுகள் ஒட்டிக் கொண்டிருப்பது போல் ஒட்டிக் கொண்டு தெரியும் இட்லர் மீசையும் அந்த மீசையோடு சேர்ந்து கோபமுமாகத் தெரியும் போது கண்ணாயிரம் கண்ணாயிரம்தான். தான் எதையும் எதற்காகவும் கண்டிக்கலாம், கோபிக்கலாம்; ஆனால் தன்னை எதற்காகவும், யாரும் கண்டிக்கக் கூடாது, கோபிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறவர் கண்ணாயிரம். ஆத்திசூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழு வெண்மேனியோடு சொக்கநாதப் பெருமான் எதிரே வந்து நின்றால் கூட, "உம்முடைய திருவிளையாடல் பிரதாபங்களைப் பற்றி ஆறுக்கு - நாலு - இரண்டு பத்தி மூன்று கலர் விளம்பரம் ஒன்று கொடுக்கிறீரா?" என்று கேட்பதற்குக் கண்ணாயிரம் தயார். ஒவ்வொரு விநாடியையும் பணமாக்கி விடவேண்டும் என்று தவித்துக் கொண்டு துறுதுறுவெனத் திரிபவர் கண்ணாயிரம். மூன்லைட் அட்வர்ட்டைஸிங் ஏஜன்ஸி காரியாலயத்தின் நிலைப்படிக்கு மேலே, "உங்கள் வரவு நல்வரவாகுக" என்று எழுதியிருக்கும் வரவேற்பு வாசகத்தில் வரவு என்ற பதம் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் இரண்டு இடங்களிலும் அதற்கு 'வருமானம்' என்று தான் பொருள்படும். 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸி' காரியாலயத்தில் நல்வரவு அதிகமாயிருக்கலாம். ஆனால் செலவு என்னவோ வெறும் வார்த்தைகள் தான். கண்ணாயிரம் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் செய்கிற அதிகபட்ச மரியாதை ஒரு கப் காபி அல்லது வெற்றிலை + சீவல் + சுண்ணாம்பு (தேவையானால்) + பன்னீர்ப் புகையிலை. மிகவும் அதிகபட்சமாகச் செய்கிற மரியாதை போர்ன்விடா அல்லது ஓவல் என்று இப்படி ஏதாவது இருக்கும். வருகிறவர்களுக்குச் செய்கிற அதிக பட்ச அவமரியாதை என்னவென்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். மரியாதை, அவமரியாதைகளுக்கு அங்கே தனித்தனி இலட்சணங்கள் கிடையாது. அங்கே செய்யப்படுகிற மரியாதைகளிலும் அவமரியாதை இருக்கலாம். அதேபோல் அவமரியாதைகளிலும் மரியாதை இருக்கலாம். வருகிறவன் புத்திசாலியாயிருந்தால் அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். புத்திசாலிகள் வகையாக வந்து சிக்கிக் கொண்டாலோ கண்ணாயிரம் அவர்களைச் சீக்கிரமே முட்டாள்களாக மாற்றிவிடுவதில் சமர்த்தர். கண்ணாயிரத்தினிடம் முட்டாள்களைப் புத்திசாலிகளாக மாற்றும் உலகத்துக்குத் தேவையான திறமை இல்லாவிட்டாலும் புத்திசாலிகளை முட்டாள்களாக மாற்றும் உலகத்துக்குத் தேவையில்லாத திறமை ஏராளமாக இருந்து தொலைத்தது.
கண்ணாயிரத்தின் வாழ்க்கையில் வேகம் அதிகம். அவரிடம் அநியாயமான சுறுசுறுப்பு இருந்தது. மதுரைச் சீமையில் சுற்றுவட்டாரத்துப் பட்டி தொட்டிகளைச் சேர்ந்த ஜமீந்தாரோ, மிட்டாதாரோ, மிராசுதாரோ, சமஸ்தானாதிபதியோ மதுரைக்கு வருகிறார் என்றால் அவர் தங்குவதற்கு இடம் முதல், அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் வரை எல்லாம் கண்ணாயிரத்தின் கையில், கண்ணாயிரத்தின் பொறூப்பில் தயாராயிருக்கும். இப்படிப் பல பிரமுகர்களைக் கட்டிக் காக்கிற ஒரு பெரும் பிரமுகராயிருந்தார் கண்ணாயிரம். பிரமுகர்களை வரவேற்பதற்கும், வழியனுப்புவதற்குமாக முக்கால்வாசி நேரம் ரயில்வே பிளாட்பாரத்திலேயே நாட்களைக் கழிக்கிறவர் அவர். ஒரு காரியம் முடிகிற இடத்தில் இன்னொரு காரியம் ஆரம்பமாகிறாற் போல அவ்வளவு விரைந்த சுறுசுறுப்பான வாழ்க்கையை உடையவர் அவர். முடிந்த காரியத்துக்குப் பக்கத்தில், முடிய வேண்டிய காரியம் வந்து காத்துக் கொண்டிருப்பது அவருடைய வழக்கம். அன்று அதிகாலையில் யாரையோ இரயிலேற்றி விட வந்தவர் அதே இரயிலில் மோகினியும் அவள் தாயும் அவர்களோடு அவர் முற்றிலும் எதிர்பாராத ஆளாகச் சத்தியமூர்த்தியும் வந்து இறங்கக் கண்டார். கூந்தல் தைல விளம்பரப் படத்துக்காக மோகினியின் தாயிடம் முன்பணம் கொடுத்துத் தேதி குறித்திருப்பது ஞாபகம் வந்தது அவருக்கு. உடனே 'இன்று காலையிலேயே அந்தப் புகைப்படத்தை எடுத்து முடித்து விட்டால் என்ன?' என்று கண்ணாயிரத்தின் வியாபார மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. 'இந்தப் பையன் சத்தியமூர்த்தி எப்படி மோகினியோடும் அவள் தாயோடும் இரயிலில் சேர்ந்து வர நேரிட்டது?' என்ற சந்தேகம் அவருடைய மனத்தில் வந்து அலைமோதவே சத்தியமூர்த்தியிடமே நேரில் அதைக் கேட்டுவிட்டு அவன் ஆத்திரப்பட நேர்ந்ததால், இரயில் பிளாட்பாரத்தில் அவனிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
அப்புறம் அவர் இரயிலிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த மோகினியை அவள் தாயோடு சந்தித்ததும், அவளிடம் கூந்தல் தைல விளம்பரத்தை ஞாபகப்படுத்தியதும், தன் காரிலேயே அவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டதும் மிகவும் வேகமாக நிகழ்ந்தேறிய நிகழ்ச்சிகள். புற்ப்படுவதற்கு முன், "இரயிலில் எங்களோடு இதே வண்டியில் வந்தவர் பேனாவைத் தவறவிட்டுப் போயிருக்கிறார். அதை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் பிளாட்பாரத்திலேயே எங்காவது இருக்கிறாரா என்று பார்க்கிறேன்" - என்று மோகினி பிளாட்பாரத்தின் மறுகோடிக்குப் போக முந்திய போது, "யார்? அந்தப் பயல் சத்தியமூர்த்தியைக் கேட்கிறாயா? அவனை நானும் வழியில் எதிரே பார்த்தேன். அவன் இதற்குள் போயிருப்பானே? பையன் அவசரக் குடுக்கை. உங்கள் வண்டியில் அவனும் கூட வந்ததை நானே பார்த்தேன். எங்கள் தெருவில் இருக்கிற பையன் தான். உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இந்தப் பேனாவை நானே அவனிடம் கொடுத்து விடுகிறேன் மோகினி. நீ எதற்கு வீணாகச் சிரமப்பட வேண்டும்?" என்று அவளைத் தடுத்தார் கண்ணாயிரம். தன்னிடம் அவர் பதில் சொல்லிய விதமே மோகினிக்குப் பிடிக்கவில்லை. ஆள் இல்லாதபோது மற்றவர்களைப் பற்றிப் பயல், பரட்டை என்றெல்லாம் பேசுவது கண்ணாயிரத்துக்கு வழக்கம். அப்படிப் பேசிப் பேசியே பெரிய மனிதரானவர் அவர். "நானே நேரில் சந்தித்து இந்தப் பேனாவை அவரிடம் கொடுக்க வேண்டும்" என்று மோகினி உறுதியாகக் கூறியபோது, அவளுடைய தாய் அவளை உறுத்துப் பார்த்தாள். "பைத்தியம் பிடித்துப் போய் அலையாதே..." என்று கடுமையான குரலில் மிரட்டினாள். காரியவாதியான கண்ணாயிரம் இந்த நிலையில் தமக்குச் சாதகமாக எல்லாம் முடிவதற்கு அப்போது தாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார். தாய்க்கும் மகளுக்கும் சண்டை வந்து ஒருவருக்கொருவர் முகத்தைத் தூக்கிக் கொண்டு நின்றால், "மயில் தோகை மார்க் கூந்தல் தைலத்து'க்காக எடுக்க வேண்டிய புகைப்படம் பாழாகி விடுமோ என்ற பயத்தில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு சமாளித்தார் அவர். கௌரவத்தை விடக் காரியம் முக்கியமாயிற்றே அவருக்கு. "புகைப்படம் எடுக்கிற இடத்துக்குப் போவதற்கு முன் அந்தப் பையனுடைய வீட்டு வாயிலில் காரை நிறுத்தி அவனை வெளியே கூப்பிடுகிறேன். நீயே பேனாவை அவனிடம் கொடுத்துவிடலாம். பாவம்! உன் ஆசையைத் தான் நாங்கள் கொடுப்பானேன்?" என்று மோகினியைப் பார்த்து அசட்டுச் சிரிப்பைப் சிரித்தார் கண்ணாயிரம். நாகரிகமில்லாத அந்தச் சிரிப்பை எரித்து விடுவது போன்ற பார்வையால் எதிர் கொண்டாள் மோகினி. கண்ணாயிரத்தின் காரில் அவர் உடன் இருந்து ஓட்டிக் கொண்டு வர அமர்ந்து செல்வதை நினைத்த போது ஏதோ நரகத்தில் உட்கார்ந்திருப்பதைப் போல் அருவருப்பாகவும் வேதனையாகவும் உணர்ந்தாள் மோகினி. 'அம்மாவுக்கு இப்படியெல்லாம் இது நரகமாகத் தோன்றாது'. ஏனென்றால் இந்த விதமான நரகங்களில் உழன்று உழன்று பணம் சேர்த்துக் கொண்டு வாழ ஆசைப்படுவதுதான் அம்மாவின் வாழ்க்கை இலட்சியம். எனக்காகவே இந்த மாதிரி நரகங்களைப் படைத்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறாளே அம்மா? நான் கண்ணாயிரத்திடம் சிரிக்கச் சிரிக்கப் பேசினால் அம்மாவுக்குத் திருப்தியாயிருக்கும். கண்ணாயிரம் அறிமுகப் படுத்துகிற மஞ்சள்பட்டி ஜமீந்தாருக்கு என் கைகளால் சிற்றுண்டி கொடுத்தால் 'பெண் பிழைக்கத் தெரிந்தவளாக இருக்கிறாளே' என்று அம்மா மகிழ்ச்சி அடைவாள். 'பணமும் பகட்டும் உள்ளவர்களுக்கு முன் எல்லாம் நீ தாராளமாகச் சிரித்து முகம் மலரப் பேச வேண்டும்டீ பெண்ணே! உன்னுடைய சிரிப்புக்கு முன்னால் எந்தக் கொம்பனாக இருந்தாலும் மயங்கியே ஆகவேண்டும்' என்று பச்சையாகவே வாய் கூசாமல் என்னிடம் சொல்கிற அம்மா முன் நான் நியாயம் பேசி என்ன பயன்? நானாக 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று எந்த விதமாகவும் வாழ்க்கையைப் பற்றி நினைக்கக் கூடாதாம். நான் எப்படி வாழவேண்டும் என்று அம்மா நினைக்கிறாளோ அப்படித்தான் நான் வாழ வேண்டுமாம். 'இன்னொருவர் நினைக்கிறபடி - சொல்கிறபடி - கட்டளையிடுகிறபடி அடிமைகள் தான் வாழ்வதாகச் சொல்வார்கள்.' அம்மா என்னைப் பெண்ணாகப் பெறவில்லை. பெண்ணாக வளர்க்கவும் இல்லை. அடிமையாகப் பெற்றாள். அடிமையாகத் தான் வளர்க்கவும் ஆசைப்படுகிறாள். தனக்கு மட்டுமல்ல; தனக்கும், தான் கையைச் சுட்டிக் காண்பிக்கிறவர்களுக்கும், அவர்களுடைய கீழ்த்தரமான விருப்பங்களுக்கும், எல்லாமாகச் சேர்ந்து ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் அடிமையாக இருக்க வேண்டுமென்று அம்மா ஆசைப்படுகிறாள். கைகளிலும் கால்களிலும் கனமான இரும்பு விலங்குகளைப் பூட்டிக் கொண்டு முரட்டி அடிமையாக இருப்பதையும் விடக் கேவலமானது இப்படிப் பூவும், பொன்னும், பட்டும், பணமும், பகட்டுமாக அலங்கரித்துக் கொண்டு யார் யாருடைய விருப்பங்களுக்கோ, எப்படி எப்படியோ மிகவும் மென்மையான அடிமையாக இருப்பதுதான். இதை எப்படி நான் என் அம்மாவுக்குப் புரியவைப்பேன்? அவளுக்குப் புரிய வைப்பதை விடப் பட்டப்பகலில் எல்லோரும் காணும்படி மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்திலே எறிக் கீழே குதித்து என் உயிரை மாய்த்துக் கொள்வது என்னால் சுலபமாக முடிகிற காரியம். என்னுடைய இந்த அழகே எனக்குப் பெரிய பகை. நான் ஏன் இப்படி அழகாகப் பிறந்து தொலைத்தேன்? பார்த்தவர்கள் அருவருப்பு அடையும் படியான அவலட்சணமாகப் பிறந்திருந்தோமானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்? அப்போது நான் யார் கண்ணிலும் படமாட்டேன். என்னைப் பார்க்கிறவர்கள் மனமும் கலங்கித் தவிக்காது. 'பார்க்கிற கண்ணில் இலட்சணமாகத் தெரிய வேணும்டீ, பெண்ணே' என்று கூச்சமில்லாமல் உபதேசம் செய்கிறாள் அம்மா. அழகை முதலாக வைத்தும் ஒரு வியாபாரமா? சீ! சீ! என்ன வாழ்க்கையோ? என்ன பிழைப்போ? போன மார்கழியிலே டான்ஸுக்காக மனப்பாடம் பண்ணின ஆண்டாள் பாசுரத்திலே, 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்று ஒரு வரி வந்ததே, - அந்த வரியை நெட்டுருப் போடுகிற ஒவ்வொரு தடவையும் எனக்கு அழுகையே வந்திருக்கு. அம்மாவோ 'மானிடருக்காகவே பேச்சுப்பட்டு, ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவருக்குப் பேச்சுப்பட்டு வாழவேண்டும்' என்கிறாள். இப்படி மனத்தை அரித்தெடுக்கும் பல நினைவுகளோடு கண்ணாயிரத்தின் காரில் போய்க் கொண்டிருந்தாள் மோகினி. போன மார்கழியில் இந்த ஆண்டாள் பாசுரத்துக்குத் தானே ஆண்டாள் வேடமிட்டுக் கொண்டு பக்தி சிரத்தையோடு அபிநயம் பிடித்த ஞாபகம் வந்தது அவளுக்கு. அதற்கும் முந்திய மற்றொரு ஞாபகமாக ஸ்ரீவில்லிப்புத்தூர்க் கோவில் திருவாடிப் பூரத் திருவிழாவில் தேர் அன்றைக்கு இரவு இதே பாசுரத்தைப் பாடி ஆண்டாளின் கால்கள் மிதித்து நடந்த புண்ணிய பூமியிலே ஆண்டாளுக்கு முன்பாகவே ஆண்டாள் வேடமிட்டு ஆடிய நினைவும் அவளுக்கு இப்போது உண்டாயிற்று. 'மனிதனுக்குப் பயன்படுவதற்காக என் வாழ்வைப் பேரம் பேசினால் நான் வாழவே மாட்டேன்' என்று பொருள்படும் அந்த அழகிய பாசுரைத்தை இரைந்து பாடிக் கொண்டே உயிரை விட்டுவிட வேண்டும் போல் மோகினி தன் வாழ்க்கையை ஒரு சுமையாகவும், கனமாகவும் தனக்குத்தானே பலமுறை உணர்ந்திருக்கிறாள். 'மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்ற பாசுரத்துக்கு அபிநயம் பிடித்துக் கொண்டே மானிடர்களைக் கவர்ந்து காசு சேர்க்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசைக்கும், தன் அந்தரங்கத்துக்கும் எட்டு ஏணி வைத்தாலும் எட்டாது என்று அவள் உணர்ந்துதான் இருந்தாள். வாழ்வதற்கு ஏதோ ஓர் உயர்ந்த நோக்கமும் அர்த்தமும் இருக்க வேண்டுமென்று அவள் எண்ணி எண்ணிப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள். வாழ்வதற்கு ஒரே நோக்கமும் ஒரே அர்த்தமும் பொருள் சேர்ப்பதுதான் என்று அவளுடைய பேராசை பிடித்த அம்மா அவளிடம் வற்புறுத்துகிறாள். 'என்னுடைய இதயத்தின் இருட்டு - என்றைக்கு விடியப் போகிறதோ' என்று அவள் ஈரம் கசிந்திருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பெருமூச்சு விடவும், "இதுதான் அந்தப் பையன் சத்தியமூர்த்தியின் வீடு! இறங்கி வா... அவனைக் கூப்பிட்டுப் பேனாவைக் கொடுத்துவிட்டுப் போகலாம்" என்று கண்ணாயிரம் காரை நிறுத்திக் கீழே இறங்கி மோகினி இறங்குவதற்காகப் பின்புறம் வந்து கதவைத் திறந்து விடவும் சரியாக இருந்தது. பயல், அவன், இவன் என்று ஆளில்லாத போது பேசிவிட்டாலும் சத்தியமூர்த்தியிடம் கண்ணாயிரத்துக்கு ஏதோ ஒரு பயம் இருக்கிறது என்பதை "மிஸ்டர் சத்தியமூர்த்தி இருக்கிறாரா?" என்று அவர் மரியாதையாக விசாரித்ததிலிருந்து தெரிந்து கொண்டாள் மோகினி. சத்தியமூர்த்தியிடம் பேனாவைக் கொடுத்து விட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின், "என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விடைபெற்ற போது சத்திய வேட்கை நிறைந்த அந்த அழகிய கண்களின் பார்வையிலிருந்து விடுபட்டு பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் தான் அவளிடம் மீதமிருந்தது. உலகத்தில் சாதரணமாக எல்லாருடைய கண்களும் தன்னைப் பார்க்கிறாற் போல் பார்க்காமல் சத்தியமூர்த்தியின் கண்கள் தன்னைப் பார்க்கும் போது அவற்றில் ஓர் ஆழ்ந்த அநுதாபம் இருப்பதை அவள் உணர்ந்தாள். இப்படி ஓர் அநுதாபத்துக்காகத்தான் அவள் பிறந்ததிலிருந்து தவித்துக் கொண்டிருந்தாள். பேனாவைக் கொடுத்த பின் சத்தியமூர்த்தியின் வீட்டு வாசலிலிருந்து கார் புறப்பட்ட போது, "பையன் தமிழ் எம்.ஏ. தேறிவிட்டு வீட்டோட வறட்டு வேதாந்தம் பேசிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். திமிருக்கு ஒன்றும் குறைவில்லை. இந்தத் திமிர் பிடித்தவனுக்கு வேலை பார்த்துக் கொடுக்கச் சொல்லி இவனுடைய தந்தை என்னிடம் சிபாரிசுக்கு வேறு வருகிறார்" என்று அலட்சியமாகச் சொல்லத் தொடங்கினார் கண்ணாயிரம். மோகினி முகத்தைச் சுளித்தாள். அவளுடைய அருமை அம்மாவோ கண்ணாயிரத்துக்குத் தலையாட்டிக் கொண்டு அதை உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். கண்ணாயிரத்திடமிருந்து அற்பத்தனமான புறம் பேசும் குணத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மோகினி மனம் நொந்தாள். அதே வீதியில் நாலைந்து வீடு தள்ளிச் சென்ற பின் கார் மறுபடியும் நின்றது. அதுதான் கண்ணாயிரத்தின் வீடு என்று அம்மா காதருகே முணுமுணுத்தாள். மோகினி பதிலே சொல்லவில்லை. கேட்டுக் கொள்ளாதது போல் இருந்து விட்டாள். "முத்தழகு அம்மா! நம் வீட்டுக் காப்பி இந்த ஊரிலேயே தரமான காப்பி என்று பெயர் பெற்றதாகும். குடித்த பின் மோகினியே 'சர்டிபிகேட்' கொடுக்கப் போகிறாள், பாருங்கள்! இறங்கி வந்து பல் விளக்கிக் காப்பி குடியுங்கள். அதற்குள் நான் ஸ்டூடியோவுக்குப் ஃபோன் செய்து நாம் படம் பிடிக்க வரப்போவதை அவர்களுக்குச் சொல்லி விடுகிறேன்" என்று கண்ணாயிரம் உற்சாகமாக அரட்டைச் சொற்களில் அவர்களை அழைத்த போது, "ஆகா! அதற்கென்ன? உங்கள் வீட்டுக் காப்பியைப் பற்றிச் சொல்லியா தெரிய வேணும்! மனுஷாளைப் போலத் தானே பண்டமும் இருக்கும்!" என்று ஒத்துப் பாடிப் புகழ்ந்து கொண்டே காரிலிருந்து கண்ணாயிரத்தோடு சேர்ந்து இறங்கிவிட்டாள் அம்மா; கிழே இறங்கி நின்று கொண்டு அம்மா, மோகினியையும் இறங்கும்படி கையசைத்துக் கூப்பிட்டாள். மோகினி காரிலிருந்து இறங்கவே இல்லை. "நீ போய்விட்டு வா, அம்மா! எனக்குக் காப்பியும் வேண்டாம்; டீயும் வேண்டாம்; சீக்கிரமாகப் படத்தைப் பிடித்துக் கொள்ளச் சொல். காலா காலத்தில் வீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போகணும்..." என்று கடுமையாகவும் கண்டிப்பாகவும் அம்மாவுக்குப் பதில் கூறினாள் மோகினி. "இப்போ நீ இறங்கி வரப் போகிறாயா இல்லையா? என்னடீது மரியாதை தெரியாமே...!" என்று அம்மா மிரட்டினாள். பெண் அசைந்து கொடுக்கவே இல்லை. "பரவாயில்லை! சிரமப்படுத்த வேண்டாம். பாவம்! அவளுக்கு நம் வீட்டுக் காப்பி கொடுத்து வைக்கவில்லை போல் இருக்கிறது. மஞ்சள்பட்டி ஜமீந்தார் ரயில்லேருந்து இறங்கறப்பவே, "கண்ணாயிரம்! பிளாஸ்க்கிலே உங்க வீட்டுக் காப்பி கொண்டாந்திருக்கியா இல்லியா? அதை முதல்லே சொல்லு. நீ காப்பி கொண்டாரலையின்னா இப்படியே ஊருக்குத் திரும்பிடறேன். நாளைக்கு மறுபடி ரயிலேறி வந்து காப்பியோட உன்னை எதிர்பார்க்கிறேன்பாரு" என்று பேச்சுக்குப் பேச்சு 'முத்தழகம்மா' என்ற பேரைக் குழைவோடு சொல்லி விளித்து நாசூக்காகக் குழைந்தார் கண்ணாயிரம். இப்படி நாலுதரம் யாராவது பேரைச் சொல்லிப் போலியாகக் கூப்பிட்டால் கூட அம்மாவுக்கு உச்சி குளிர்ந்து போய்விடும் என்று மோகினிக்கு நன்றாகத் தெரியும். இப்போது கண்ணாயிரம் அம்மாவிடம் குழைந்த குழைவினால் அம்மா தன்னைக் கோபத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதையும் அவள் புரிந்து கொண்டாள். "சொன்னால் கேள்! எனக்குக் காப்பி வேண்டாம். நீ மட்டும் போய்விட்டு வாம்மா..." என்று இரண்டாம் தடவையாகவும் அழுத்திச் சொன்னாள் மோகினி. அவள் பிடித்தால் பிடித்த முரண்டுதான் என்று அம்மாவுக்குத் தெரியும். "நீ ஒரு நாளைக்கும் உருப்படவே போறதில்லை..." என்று வயிற்றெரிச்சலோடு மகளைப் பார்த்துக் கைகளைச் சேர்த்துச் சொடுக்கி முறித்துவிட்டுக் கண்ணாயிரத்தோடு படியேறி உள்ளே போனாள் அம்மா. "காரியத்தைக் கெடுத்துவிடுவிங்க போல் இருக்கே. அது போக்குப்படியே விட்டுப் பிடியுங்க முத்தழகம்மா! முதலில் போட்டோவுக்கு உட்கார்ந்து காரியம் முடியட்டும். அது முக்கியம். அப்புறம் மத்ததைப் பார்த்துக்கலாம்" என்று அம்மாவை உள்ளே அழைத்துப் போகும் போது கண்ணாயிரம் சொல்லிக் கொண்டு சென்றதைக் காரில் உட்கார்ந்தபடியே மோகினியும் கேட்க முடிந்தது. 'என்ன நரக வாழ்க்கை இது? போட்டோ முடிந்து வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக அம்மாவிடம் கண்டித்துச் சொல்லிவிட வேண்டும். எண்ணெய் விளம்பரம், சீயக்காய்ப் பொடி விளம்பரமென்று இனிமேல் என் உயிரை வாங்கப்படாது அம்மா! மானமாக ஏதாவது செய்து சம்பாதித்துப் போடுகிறேன். கோவில் திருவிழா, நல்லவர்கள் நடத்துகிற சபை ஆண்டு விழா என்று கௌரவமாக நாலு இடங்களில் நான் படித்திருக்கிற நடனத்தைக் கலையாக ஆடுகிறேன். அதில் கிடைக்கிற சம்பாத்தியம் நமக்குப் போதும். இந்த அல்ப ஆசைகளையெல்லாம் விட்டுவிடு. இனிமேலாவது என்னைப் புரிந்து கொள். மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், மயில்தோகை மார்க் கூந்தல் தைலக்காரனும் அவர்களைக் கட்டிக் கொண்டு அழுகிற கண்ணாயிரமும் எக்கேடு கெட்டு வேண்டுமானால் போகட்டும். நீ என்னை அநியாயமாகக் கொல்லாதே. நான் இதற்கெல்லாம் ஆளில்லை...' என்று அம்மாவிடம் எப்படி எப்படிச் சீற்றத்தோடு பேச வேண்டும் என்பதை நினைத்த போது அந்த நினைப்பே துணிவாகவும் சுறுசுறுப்பாகவும் ஓடியது அவள் மனத்தில். இரண்டு மாதங்களுக்கு முன் முதன்முதலாக இந்த மஞ்சள்பட்டி ஜமீந்தார் என்ற பெருங்குடி மகனைக் (நிறையக் குடிப்பவரை) கண்ணாயிரம் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவுக்கு அறிமுகப்படுத்தியதையும், அம்மா தனக்கு அவரை அறிமுகப்படுத்திய போது தான் கனன்று சீறி விழுந்ததையும் இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தாள் மோகின். 'அன்றைக்கு எங்கிருந்துதான் தனக்கு அவ்வளவு கோபம் வந்ததோ?' என்பதை இப்போது எண்ணுகிற வேளையில் அவளுக்கே வியப்பாயிருந்தது. அம்மாவும் சுற்றியிருந்தவர்களும் கீழ்த்தரமாக நடந்து கொள்ள முயன்ற பல வேளைகளில் தான் முரண்டு பிடித்து நெருப்பாக இருந்து அவர்களைச் சுட்டிருந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தன அவளுக்கு. இப்ப்டி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் மிகச் சிரமப்பட்டுத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்த காரணத்தால் தான் நடுநடுவே வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஒரேயடியாகப் போய்ச் சேர்ந்துவிடலாமா என்ற அலுப்பும், சோர்வும், விரக்தியும் அவளுக்கு ஏற்பட்டன. சில நாட்களில் உயிர் வாழ்வதற்கே அலுப்பாகவும் சோர்வாகவும் இருந்திருக்கிறது அவளுக்கு. "மோகினி!... உனக்கு நானே காப்பிக் கொண்டு வந்து விட்டேன்." -கையில் டவரா டம்ளருடனும் வாய் நிறைய விஷமச் சிரிப்புடனும் கண்ணாயிரம் காரருகே நின்று கொண்டிருந்தார். ஏதேதோ யோசனைகளில் மூழ்கியிருந்த மோகினி அவர் வந்து நின்றதைக் கவனித்துப் புரிந்து கொள்வதற்கே சில விநாடிகள் ஆயின. "எனக்குக் காப்பி வேண்டாம் சார்! சீக்கிரமாக வந்து ஸ்டூடியோவுக்கு அழைத்துப் போய்ப் படத்தைப் பிடித்துக் கொண்டு அனுப்புங்கள். வீட்டுக்குப் போய்த் தலை முழுக வேண்டும்" என்று அவள் சுடச்சுடப் பதில் கூறிய விதமும் பதிலின் முடிவில் இரட்டுற மொழிதலாக இரட்டைப் பொருளில் 'தலை முழுக வேண்டும்' என்று கூறிய வாசகமும் கண்ணாயிரத்தைப் பொசுக்கின. அவர் முகத்தில் ஈயாடவில்லை. காப்பியோடும் ஏமாற்றத்தோடும் வீட்டுக்குள் திரும்பிப் போனார் அவர். கால்மணி நேரத்தில் அவரும் முத்தழகம்மாளும் மறுபடியும் வெளியே வந்தார்கள். கண்ணாயிரம் அமைதியாக ஆனால் உள்ளே நீறு பூத்து அடங்கிய கோபத்தோடு காரை ஓட்டினார். அம்மா மோகினையை எரித்து விடுவது போல் பார்த்தாள். "தள்ளி உட்கார்ந்து தொலை. இப்படி இடிச்சிட்டு உட்கார்ந்தால் தான் நீ என் வயிற்றிலே பொறந்த அருமை தெரியுமாக்கும்?" என்று திரும்பி வந்து காரில் அமர்ந்ததும் காரணமின்றி அம்மா தன்னிடம் கொதித்துப் பேசியதிலிருந்தே அவள் மனநிலையை மோகினி புரிந்து கொள்ள முடிந்தது. தான் சொல்லியபடி பிறர் கேட்காத போது வருகிற இந்த ஆற்றாமைக் கோபம் அம்மாவிடம் அதிகமாக உண்டு என்பது மோகினிக்குத் தெரியும். 'தான் கண்ணாயிரத்தின் வீட்டுக்குள் வரவில்லை' என்பதுதான், அம்மாவின் இந்தக் கோபத்துக்குக் காரணம் என்றும் மோகினி புரிந்து கொண்டாள். சிறிது நேரத்தில் கார் வெளி வீதியிலிருந்து பிரபலமான பெரிய ஸ்டூடியோ ஒன்றின் வாயிலில் போய் நின்றது. கண்ணாயிரம் தன்னோடு அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஸ்டூடியோவுக்கு உள்ளே சென்றார். சுற்றிலும் மலைப் பின்னணியோடு மயில் ஒன்று தோகை விரித்தாடுகிற ஸீன் கட்டி விட்டு எதிரே காமிராவை நிறுத்தி மோகினியைப் புகைப்படம் எடுக்க ஏற்பாடு ஆகியிருந்தது. பெரிய அழகிய தோகையை விரித்துக் கொண்டு நிற்கும் மயில் போல் கட்டுக் கடங்காத கருங்குழல் அலை அலையாக அவிழ்ந்து தொங்கி, கூந்தலும் முகமும் சேர்த்துப் படத்தில் விழுகிறாற் போல் காமிராவுக்கெதிரே அமர்ந்தாள் மோகினி. கண்ணாயிரம் ஏதோ சொல்ல அவள் அருகில் வந்தார். பதுங்கிப் பதுங்கி அவர் அருகில் வந்த விதத்திலேயே வியாபாரத் தந்திரம் தெரிந்தது. ஆனாலும் பயந்து கொண்டே தான் வந்தார். "இதோ ஒரு நிமிஷம்! படம் பிடிக்கிறதுக்கு முன்னாடி இந்தச் சேலையைக் கட்டிக்கிடணும். அப்பத்தான் எடுப்பாக இருக்கும்" என்று கரைகளில் பளபளவென்று தங்கச் சரிகையிட்டு மஸ்லினை விட மிக இலேசாக இருக்கும் புடவை ஒன்றைப் பிரித்து மோகினியிடம் நீட்டினார் கண்ணாயிரம். "கண்ணாயிரம் சார்! எனக்கு ஒரு சந்தேகம்! உங்கள் மயில் தோகை மார்க் கூந்தல் தைலத்தைப் பெண்கள் தலைக்குத் தடவிக் கொள்வதற்காக விற்கப் போகிறீர்களா? அல்லது புடவைக்குத் தடவிக் கொள்வதற்காக விற்கப் போகிறீர்களா? முதலில் அதைச் சொல்லி விடுங்கள். அப்புறம் நீங்கள் என்னைப் போட்டோ பிடிக்கலாம்!" என்று ஆணியடித்தாற் போல் அழுத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அந்த வெங்காயச் சருகுச் சேலையை அவர் கையிலிருந்து வலிந்து பறிந்து ஒரு மூலையில் ஆத்திரத்தோடு வீசி எறிந்தாள் மோகினி. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|