8

     ஒரு பெண்ணுக்குத் தான் அழகாயிருக்க வேண்டுமென்ற ஞாபகமே, தன் இதயம் அழகனாக ஒப்புக் கொண்டு அங்கீகரிக்கிற ஒருவனுக்கு முன்பு தான், நிச்சயமாகவும் தவிர்க்க முடியாமலும் ஏற்படுகிறது.

     மல்லிகைப் பந்தலின் அழகும் அமைதியும் இணைந்த வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு பரிபூரணமான முழுநாள் ஓடி மறைந்து விட்டது. குளிர்ச்சி நிறைந்த அந்த மலைநாட்டு நகரத்தில் ஒவ்வொரு நாளும் பொழுது புலர்வதே ஒரு சுவையான அநுபவம். பாலாவி போல் பனிமூடிய மலைத் தொடர்களிடையே ஒவ்வொரு நாள் காலை நேரமும் விடிவதற்குச் சோம்பல்பட்டுக் கொண்டே மெல்ல விடிவது போலிருக்கும். காற்றில், ஆடி அலைக்கழிக்கப்பட்டு மெல்ல உதிரும் பூவைப் போல அப்படி மந்தமாக விடிவதிலும் ஓர் அழகு இருக்கும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பறப்பதற்குச் சிலிர்த்துக் கொள்ளும் கருவண்டுகளாய்க் கண்களைத் திறந்து பார்த்தாள் பாரதி. பச்சை மரகதப் பரப்பாக வளர்ந்து கிடந்த தோட்டத்துப் புல்வெளியில் வைரம் சிதறினாற் போல் பனித்துளிகள் மின்னின. ஓரிரு கணங்கள் தான் அந்தப் பனித்துளிகளும் பசும்புல் வெளியும் தம்முடைய அந்த நேரத்து அழகால் அவளைக் கவர முடிந்தது. ஏதோ ஒரு நினைவால் சிறப்பாகவும் நிரந்தரமாகவும் கவரப்பட்டுவிட்ட ஒரு மனம் அவ்வப்போது சாதாரணமாய்க் கவரப்படும் பல நினைவுகளாலும் கூடத்தான் ஆண்டு அநுபவிக்க விரும்புகிற அந்த ஒரு நினைவே ஞாபகப்படுத்தப் பெறும். முதல் நாள் மாலை அவசரம் அவசரமாக அந்தக் கடிதத்தை எழுதி எடுத்துக் கொண்டு போய்த் தானே தபாலில் சேர்த்ததையும், அந்தக் கடிதத்தைப் பதறும் கையினால் தபால் பெட்டியில் போட்டு விட்டுப் பின்னால் யாரோ வந்து நின்று தன்னைக் கவனிப்பது போல் தோன்றவே திரும்பிப் பார்த்தபோது, "என்னைக் கூப்பிட்டுக் கொடுத்திருந்தால் நானே தபாலில் சேர்த்திருப்பேனே? நீங்கள் எதற்காகச் சிரமப்படுகிறீர்கள்?" என்ற கேள்வியோடும் தபாலில் சேர்ப்பதற்காக வைத்திருந்த வேறு கடிதங்களோடும் கல்லூரி ஹெட்கிளார்க் நின்று கொண்டிருந்ததையும் இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தாள் பாரதி. முகவரி எழுதியிருந்த பக்கம் வெளியே தெரியும்படி தான் கடிதத்தை தபால் பெட்டிக்குள் போட்டதையும், திறந்திருந்த பெட்டியின் கீழ்ப்பக்கமாக அது வந்து விழுந்ததையும், ஹெட்கிளார்க் பின்புறம் நின்றபடியே படித்துப் பார்த்திருப்பாரோ என்ற பயமும் திகைப்பும் நேற்று இரவே வெகுநேரம் வரை அவள் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. இன்று காலை இப்போது இரண்டாவது முறையாக அந்த நினைவு வந்த போதும் "ஹெட்கிளார்க்" தபாலில் சேர்ப்பதற்காகக் கொண்டு வந்திருந்த கடிதங்களில் சத்தியமூர்த்திக்குப் போட்டியாக வந்த அந்த முதியவருக்கு அனுப்பப்படும் ஆர்டரும் இருக்குமோ என்ற அநாவசியமான பீதி வேறு அவளுக்கு ஏற்பட்டிருந்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரி ஹெட்கிளார்க் சிதம்பரம் ஏறக்குறைய கல்லூரி முதல்வரின் வார்த்தைக்குத் தலையாட்டுகிறவர் என்பதும் அவளுக்குத் தெரியும். தான் தபால் பெட்டியில் போட்ட கடிதத்தில் சத்தியமூர்த்தியின் முகவரி எழுதப்பட்டிருந்ததை ஹெட்கிளார்க் படித்திருந்தால் அதை நிச்சயமாகக் கல்லூரி முதல்வரிடம் சொல்லுவார் என்பதையும் அவளால் அனுமானம் செய்ய முடிந்தது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.