32

     ஒரு தொழிலை நாம் செய்கிற போது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேண்டும். இல்லாவிட்டால் அதை நாம் ஒரு போதும் நாணயத்தோடு செய்வதற்கு முடியவே முடியாது.

     காலையில் சத்தியமூர்த்தி விழித்து எழுந்திருப்பதற்கு முன்பாகவே குமரப்பன் எழுந்து நீராடி உடைமாற்றிக் கொண்டு மாடி வராந்தாவில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டே எதிர்ப்புறம் மலைக் காட்சிகளையும், ஏரியையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். ஆள் மிகவும் உற்சாகமாய் இருப்பதற்கு ஓர் அடையாளம் போல் அவனுடைய வாயிதழ்கள் ஏதோ விருப்பமான பாடலைச் சீட்டியடித்துக் கொண்டிருந்தன.

     "இதென்ன புது வழக்கமாக இருக்கிறதே, குமரப்பன்? நீ எப்போதுமே நேரங்கழித்து விழித்துக் கொள்கிறவனாயிற்றே?" என்று கேட்டுக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்து வந்தான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் இன்னும் எழுந்திருக்கவில்லை. இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார்.

     "ரொம்ப நாட்களாக ரொம்ப விஷயங்களில் நேரம் கழித்துத்தான் விழித்துக் கொண்டிருந்தேனடா, சத்தியம்! ஆனால் இப்போதெல்லாம் சீக்கிரமாகவே விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். காலையில் மட்டுமில்லை. எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களிலுமே சீக்கிரமாக விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன்" என்று குமரப்பன் கூறிய பதிலில் இரண்டு தொனி இருந்தது. சத்தியமூர்த்தி அவ்வளவில் விட்டுவிடாமல் நண்பனை மேலும் தூண்டிக் கேட்டான். "என்ன தான் சொல்கிறாய் நீ? உன்னுடைய திடீர் வரவு தான் ஆச்சரியமாக இருக்கிறதென்றால் நீ பேசுகிற பேச்சும் ஆச்சரியமாகவே இருக்கிறது குமரப்பன்! கொஞ்சம் புரியும் படியாகத்தான் சொல்லேன்."

     "நீ என்னுடன் ஒரு மணி நேரம் தனியாக வெளியில் உலாவ வருவதற்குத் தயாராயிருந்தால் எல்லாவற்றையும் சொல்கிறேன். சொல்வதற்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் உன்னைப் போல் ஓர் உண்மை நண்பனிடம் எல்லாவற்றையும் மறக்காமல் சொல்லியும் ஆக வேண்டும். நான் எதைச் சொல்லப் போகிறேனோ அதில் நீ கவலைப்படுவதற்கும் ஒன்றுமில்லை; நான் கவலைப்படுவதற்கும் ஒன்றுமில்லை; தனக்காகத் தான் கவலைப்படுவதே அவமானம் என்று எண்ணும் உண்மைத் தைரியசாலி ஒருவன் தனக்கு அனுதாபப்படுவதாகப் பிறர் கவலைப்படுவதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் குமரப்பன். அவசரமாகப் பல் விளக்கி நீராடி முடித்துக் கொண்டு நண்பனுடைய வேண்டுகோளை மறுக்காமல் அவனோடு உலாவச் சென்றான் சத்தியமூர்த்தி. பக்கத்து உணவு விடுதியில் காலைக் காப்பி சிற்றுண்டியை முடித்துக் கொண்டு புறப்பட்டார்கள் நண்பர்கள். சிறிது தொலைவு வரை மௌனமாக நடந்த பின்பு குமரப்பன் தானாகவே பேச்சை ஆரம்பித்தான்.

     "குத்துவிளக்கில் வருகிற வாரம் என்ன கார்டூன் வரும் என்று நேற்றிரவு நீ என்னைக் கேட்டாயல்லவா? கொந்தளிக்கும் கடலில் ஒரு சிறு படகு தத்தளிப்பதாகவும் அந்தப் படகின் நடுவே ஒரு குத்துவிளக்கு காற்றில் ஆடியசைந்து அவிவதாகவும் வரைந்து, கொந்தளிப்பின் மேல் ஊழல் என்றும் படகின் மேல் தரமின்மை என்றும் எழுதி நிர்வாகியின் மேஜை மேல் கொண்டு போய் எறிந்தேன். திரும்பிப் பாராமல் வந்துவிட்டேன். கடந்த ஒரு வாரத்திற்குள் அந்தப் பத்திரிகையின் நிர்வாகம் உரிமை எல்லாம் கைமாறி மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடம் போய்விட்டது. அவரும் கண்ணாயிரமும் அடிக்கடி காரியாலயத்துக்கு வந்து எல்லாரையும் வாயில் வந்தபடிப் பேசி மிரட்டுகிறார்கள்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.