59
ஒரு வேளை சந்தேகமும் பொறாமையும் இந்த உலகத்தில் இல்லாமலிருந்தால் முக்கால்வாசி மனிதர்கள் தேவர்களாயிருப்பார்களோ என்னவோ? கண்ட காட்சியினால் மனத்தின் அமைதியும் நிதானமும் குலைந்து போய்ப் புயல் வேகத்தில் மின்னல் நுழைந்தாற் போல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த ஜமீந்தாரையும் அவருக்கு அருகிலே நின்ற மோகினியையும் கடந்து வீட்டிற்குள்ளே சென்றான் சத்தியமூர்த்தி. பாரதி உடல் நலமின்றிப் படுத்திருந்த அறையை அடைவதற்கு முன் உள்கூடத்தில் நேர் எதிர்புறத்துச் சுவரில் படங்கள் மாட்டியிருந்த இடத்தில் ஒரு கணம் தயங்கி நின்றான் அவன். முதலில் கவனிக்காமலிருந்து அவன் உள்ளே நுழைந்த போது மட்டுமே நிமிர்ந்து நோக்கி முறைத்துப் பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுத்த ஜமீந்தார் முகத்தை வேறு பக்கமாக வெறுப்போடு திருப்பிக் கொண்டார். 'வருவார் வருவார்' என்று ஆசையோடு காத்திருந்தவர் வந்து படியேறி உள்ளே நுழைந்ததும், பின்னால் ஓடிப்போய் உபசரிக்க முடியாமல் ஜமீந்தார் பக்கத்திலிருந்து தன் ஆவலை அடியோடு கட்டுப்படுத்திக் கொள்ளும்படி செய்துவிட்ட வேதனையோடு தயங்கித் தயங்கி அவனைப் பின் தொடர்ந்த மோகினியின் பார்வை - உள் கூடத்தில் அவனுடைய கண்கள் மேலே மாட்டியிருந்த படங்களில் எந்தப் படத்தைப் பார்த்துத் தயங்கினவோ அந்தப் படத்தைப் பார்த்து அவள் தீயை மிதித்தவள் போலானாள். 'எப்போது அந்தப் படத்தை எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? யார் அதை அங்கே கொண்டு வந்து மாட்டினார்கள்?' என்பதொன்றுமே புரியாமல் அவளுக்குத் தலைசுற்றியது. 'என்ன அக்கிரமம் இது?' என்று கொதித்துக் குமுறும் மனநிலையோடு உள்ளே விரைந்தாள் அவள். நிலைக்கண்ணாடி அளவுக்குப் பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்த அந்த வண்ணப் புகைப்படத்தில் அவளும் ஜமீந்தாரும் கழுத்தில் ரோஜாப்பூ மாலையணிந்து மணமக்களைப் போல் அருகருகே நிற்பதாகத் தெரியக் கண்டு பாதாதி கேச பரியந்தம் நடுங்கினாள் அவள். 'கழுத்தில் ரோஜாப்பூ மாலையோடும் வாயிதழ்களில் நாணப் புன்முறுவலோடும் இப்படி ஒரு புகைப்படத்தை நான் எடுத்துக் கொண்டதே இல்லையே' என்று கொதிக்கும் மனத்தோடு அந்தப் படத்துக்குக் கீழே தயங்கி எரிமலையாய் நிற்கும் சத்தியமூர்த்தியை நெருங்கிய போது அவன் அவள் தன்னருகில் வந்து நிற்பதையே அருவருத்து வெறுக்கிறவனாகப் பாரதியின் அறையை நோக்கி விரைந்தான். 'என்ன சூழ்ச்சி இது? இந்த அநியாயத்தை யார் செய்தார்கள்? இதை இப்படியே இழுத்துக் கீழே தள்ளிச் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தால் என்ன?' என்பது போல் ஆத்திரம் பொங்கிட, அது உடைத்தெறிய முடியாத உயரத்தில் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆற்றாமையும், அழுகையுமாகப் பாரதியின் அறைக்குள் மோகினி தயங்கித் தயங்கி நுழைந்தாள். மோகினி உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும், பாரதி தன் அருகே அமர்ந்து தன்னை விசாரித்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம், "சார்! இதோ வாசல்பக்கமாக யார் வந்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்! உங்கள் மோகினி உங்களைப் பார்க்க வந்து நிற்கிறாள்..." என்று தன்னுடைய சொந்த ஆசாபாசங்களைத் தீர்மானமாகத் தியாகம் செய்துவிட்டு நிர்ச்சலனமான குரலில் சிரித்துக் கொண்டே கூறிய போது மோகினியின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காமல் வெறுப்போடு தலைகுனிந்து கொண்ட சத்தியமூர்த்தி, "தயவு செய்து மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் மோகினி என்று சொல்லுங்கள்!" என்று கோபத்தோடு மோகினிக்கும் கேட்கும்படியான குரலில் பாரதிக்குப் பதில் கூறினான். இந்தக் குத்தலான வார்த்தைகளைக் கேட்டு மோகினியின் தலையில் பேரிடி விழுந்தது போலாயிற்று. "யாரோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்! அந்தப் படத்தைப் பற்றி எனக்கு ஒரு பாவமும் தெரியாது!" என்று அப்போதே அவர் காலில் விழுந்து கதற நினைத்தாள் மோகினி. அந்த நிலையில் மிக அருகிலிருந்த அவளுடைய தெய்வத்துக்கோ அவள் அழுகை ஒரு சிறிதும் காதில் கேட்கவில்லை. பதற்றத்தோடு பதற்றமாக உள்ளே ஓடிப்போய் நடுங்கும் கைகளால் காப்பி கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள் மோகினி. அப்போதுதான் பாரதியிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டு திரும்பிப் புறப்பட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் எதிரே போய் பேச வார்த்தை எழாமல் தளர்ந்து போய்விட்ட நாவுடன் காப்பியை அவள் நீட்டிய போது, "இந்த உபசாரம் எல்லாம் நீங்கள் ஜமீந்தாருக்குச் செய்தால் போதும். நான் இங்கு என்னுடைய மாணவியைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் வந்தேன். உங்கள் கையால் காப்பி குடிக்க இங்கே வரவில்லை..." என்று ஆத்திரத்தோடு வெட்டினாற் போலப் பதில் சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தான் அவன். இதைக் கேட்டதும் மோகினியின் கையிலிருந்த காப்பி டவரா கீழே நழுவியது. பாரதிக்கோ ஒன்றுமே புரியவில்லை. சத்தியமூர்த்தி சாருக்கு இவ்வளவு கோபம் வந்து அவள் பார்த்ததே இல்லை. 'புயலைப் போல் வந்தேன். மின்னலைப் போல் மறைந்துவிட்டேன்' என்று 'ஷோரப் அண்ட் ரஸ்டம்' காவியத்தில் படித்திருப்பதையொப்பச் சத்தியமூர்த்தி வேகமாக வந்தார்; ஆத்திரமாகத் திரும்பிப் போய்விட்டார் என்று எண்ணியபோது அவளுக்கும் அழுகைதான் வந்தது.
சத்தியமூர்த்தி சாரை வரச்சொல்லி தோழியின் மூலமாக ஏற்பாடு செய்த போது அவர் தன்னிடம் மட்டுமே கோபமாகவும், ஆத்திரமாகவும் நடந்து கொள்வாரென்றும் மோகினியைப் பார்த்ததும், அவருடைய ஆத்திரம், கோபம் எல்லாம் பறந்து போய், முகத்தில் புன்முறுவல் மலரும் என்றும் கற்பனை செய்து வைத்திருந்த பாரதி அந்தக் கற்பனைக்கு நேர்மாறாகத் தன்னிடம் அவர் பரிவாக நடந்து கொண்டு விசாரித்து விட்டுப் போனதையும், அதே வேளையில் மோகினியைக் கடுமையாக வெறுத்து அவளைப் பார்க்கவே பிடிக்காதவரைப் போல் முகத்தை முறித்துக் கொண்டு போய்விட்டதையும் நினைத்துக் காரணம் ஒன்றும் விளங்காமல் மனம் திகைத்துக் கலங்கினாள்.
"என்ன அக்கா! ஏன் அவர் இப்படி உங்களிடம் கோபித்துக் கொண்டு போகிறார்" என்று அறை மூலையில் தலை குப்புறச் சுருண்டு விழுந்து விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்த மோகினியைக் கேட்டாள் பாரதி. "சிறிது நேரத்துக்கு முன்புதானே நீ என்னைப் பாக்கியசாலி என்று சொல்லியிருந்தாய் பாரதி! என்னுடைய பாக்கியம் இப்போது எப்படி முடிவாகியிருக்கிறது, பார்த்தாயா?" என்று அழுகைக்கிடையே பதில் கூறிய மோகினி தான் ஜமீந்தாருக்குக் காப்பி கொடுத்து உபசரிக்கும் போது அவர் எதிர்பாராதவிதமாக உள்ளே நுழைந்ததையும், நடுக்கூடத்தில் இன்றைக்கென்று பார்த்து எப்படியோ, எங்கிருந்தோ முளைத்து வந்து சேர்ந்திருக்கும் அந்தப் படத்தைப் பார்த்ததையும் விவரித்தாள். இதைக் கேட்டு ஒரு நீண்ட பெருமூச்சுவிட்ட பாரதி, "சந்தேகமும், பொறாமையும் தாக்காத மனித இதயமே இருக்க முடியாது போல் தோன்றுகிறது அக்கா! ஒரு வேளை சந்தேகமும் பொறாமையும் இந்த உலகத்தில் இல்லாமலிருந்தால் முக்கால்வாசி மனிதர்கள் தேவர்களாயிருப்பார்களோ என்னவோ? அப்படியும் கூடச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் நம்முடைய இதிகாசங்களில் தேவர்கள் கூடச் சந்தேகமும் பொறாமையும் பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்" என்று துக்கத்தோடு பதில் கூறினாள். அந்த நிலையில் மோகினியைப் பார்க்கவே சகிக்காமல் பாரதிக்குப் பரிதாபமாக இருந்தது. சந்தர்ப்பங்கள் சதி செய்து அவளுடைய ஒரே நம்பிக்கையைப் பாழாக்கி விட்டதோடு அவளைத் துரதிர்ஷ்டசாலியாகவும் நிரூபித்து விட்டதை எண்ணி பாரதி மனம் உருகினாள். 'இந்தப் பாழாய்ப் போன ஜமீந்தாருக்கு இன்றைக்கென்று பார்த்தா இவள் கையால் காப்பி குடிக்க வேண்டுமென்று ஆசை வரணும்?' என்பதாக ஜமீந்தார் மேல் திரும்பியது பாரதியின் கோபம். கோபத்தோடு கோபமாக மோகினியிடம் அப்போது ஒரு கேள்வி கேட்டாள் பாரதி. "அக்கா! உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். இப்படிக் கேட்பதனால் என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் எப்போதாவது கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிந்து புன்முறுவல் பூத்த முகத்தோடு தனியாக நின்றோ வேறு யாரோடும் சேர்ந்தோ புகைப்படம் ஏதாவது எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?" இதைக் கேட்டுச் சிறிது நேரம் தயங்கிவிட்டு மோகினி பதில் கூறினாள்: "எத்தனையோ படம் எடுக்கிறார்கள். முதல் முதலாக நாட்டியம் அரங்கேற்றம் ஆன தினத்திலே எங்க நட்டுவாங்கம் வாத்தியாரு - அவருக்கே ஆசை தாங்காமே ஒரு பெரிய தும்பிச்சங்கை ரோஜாப்பூ மாலையை வாங்கி எங்கம்மா கையிலே கொடுத்து எனக்குப் போடச் சொன்னாரு. அப்போதுதான் சபைக்குக் கூசினாற் போல மேடையிலே கழுத்திலே மாலையோடு சிரித்துக் கொண்டு நின்றேன். அதைப் படம் பிடிச்சாங்க. அதிலே ஒரு பிரதி மஞ்சள்பட்டி அரண்மனையிலே கூட உண்டு." "ரொம்ப சரி! அந்தப் படத்தையும் அதற்குப் பக்கத்தில் ஜமீந்தார் படத்தையும் வைத்துத் தந்திரமாக இணைத்து ஒன்றாக்கி வர்ணம் தீட்டிப் பெரிதாக்க முடியும்! பணத்தை வாரி இறைத்தால் இதைச் செய்து கொடுக்க ஆயிரம் போட்டோகிராபர்கள் ஓடி வருவார்கள் அக்கா! ஜமீந்தாரைக் குஷிப்படுத்துவதற்காகக் கண்ணாயிரம் இந்த அற்பத்தனமான காரியத்தைச் செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!" என்று கூறிவிட்டு டிரைவர் முத்தையாவை உடனே வரவழைத்து, 'கண்ணாயிரம் கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஏதாவது போட்டோ ஸ்டூடியோவுக்கோ கண்ணாடி பிரேம் போடும் இடத்துக்கோ காரில் போனாரா?' என்பதைப்பற்றி விசாரித்த போது அவன் உடனே விவரமாக எல்லாவற்றையும் அவளுக்குக் கூறினான். நான்கு நாட்களுக்கு முன் இரண்டு பெரிய படங்களை எடுத்துக் கொண்டு மல்லிகைப் பந்தல் பஜாரிலுள்ள ஒரு சிறந்த புகைப்பட நிறுவனத்துக்கு கண்ணாயிரம் காரில் போனதாகவும், முந்திய தினம் மாலையில்தான் அந்தப் படங்களில் உள்ள தனித்தனி உருவங்களை இணைத்து ஒன்றாகச் செய்தது போலாக்கிப் பெரிய படமாகப் பிரேம் போட்டுத் திரும்பி வாங்கி வந்ததாகவும், சிறிது நேரத்துக்கு முன்பே தன்னிடம் அதை ஜமீந்தார் அறையிலிருந்து அங்கே உள் கூடத்தில் எடுத்து வந்து மாட்டச் சொன்னதாகவும் டிரைவர் முத்தையா கூறியபோதுதான் பாரதிக்கு தன்னுடைய அநுமானம் முற்றிலும் சரியென்று புரிந்தது. கண்ணாயிரத்தின் அந்த அற்பத்தனமான சந்தோஷம் பேதையான மோகினியின் துரதிர்ஷ்டமாக முடிந்து விட்டதை எண்ணி அவள் மிகவும் வருந்தினாள். மோகினியின் மகிழ்ச்சிக்காகத் தன்னையும் தன் ஆசைகளையும் கூட வெளிப்பட, நஷ்டத்தைக் காண்பித்துக் கொள்ளாமலே அந்தரங்கமாகத் தியாகம் செய்துவிட்டு அவள் பொருட்டுச் சத்தியமூர்த்தியை அங்கு வரவழைத்த பாரதி அது எப்படியோ அசம்பாவிதமாக முடிந்து மோகினியைத் துரதிர்ஷ்டசாலியாக்கி விட்டதை எண்ணி எண்ணி நிலை கொள்ளாமல் தவித்தாள். உள்கூடத்து ஊஞ்சல் கம்பியைப் பற்றிக் கொண்டு சத்தியமூர்த்தி அந்த வீட்டிலிருந்து நடந்து வெளியேறிச் சென்ற வழியையே வெறித்துப் பார்த்துக் கண்ணீர் மல்க நிற்கும் மோகினியைக் கண்டு மனம் ஒரு நிலை கொள்ளாமல் பரிதாபமுற்றாள் பாரதி. மோகினியோ அப்போது அதற்கு முன் எப்போதுமில்லாதபடி மனம் இடிந்து போயிருந்தாள். சத்தியமூர்த்தியையும் தன்னையும் விலக்கிப் பிரிக்கும் மெல்லிய வேற்றுமை வலை ஒன்றை விதி தங்களுக்கிடையே அந்த விநாடியிலிருந்து தொடங்கி மிக வேகமாகப் பின்னிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அவர் கடுமையாகவும், தீவிரமாகவும் மனம் மாறும்படி அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் அன்று அங்கே தற்செயலாக நேர்ந்து விட்டதையும், சந்தர்ப்பம் தனக்கெதிராகச் சதி செய்து விட்டதையும் எண்ணி மனம் நொந்து போயிருந்தாள் அவள். அப்போது ஊஞ்சல் கம்பிகளைப் பற்றிக் கொண்டிராவிட்டால் நிற்கவே சக்தியிராது போன்ற பலவீனத்தை உணர்ந்திருந்தாள் மோகினி. தன்னை வெறுத்துவிட்டு வெளியேறுகிற சத்தியமூர்த்தியைப் பின் தொடர முடியாமல் ஊசலாடும் மனமும் ஓய்ந்து தளரும் கால்களுமாகத் துவண்டு நின்ற போதுதான் அப்படியே யுகம் யுகமாக அவரிடமிருந்து பின் தங்கி நின்று விட்டது போல் அத்தனை பெரிய சலிப்பு வாழ்க்கையின் மேல் அவளுக்கு ஏற்பட்டது. தன்னைப் போல் துர்ப்பாக்கியசாலி வாழ்க்கையில் வேறொருவரும் இருக்க முடியாதென்றும் அப்போது அவளுக்குத் தோன்றியது. உள்ளே அறையிலிருந்த பாரதி சிறிது நேரம் கழித்து டிரைவர் முத்தையாவிடம் சொல்லிக் கோபத்தோடு இரைந்து கண்ணாயிரத்தைக் கூப்பிட்டனுப்பினாள். கண்ணாயிரம் மிகவும் திமிராக நடந்து வந்தார். அவரிடம் அந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அதைக் கூடத்தில் யார் மாட்டியதென்று அவள் கடுமையான கோபத்தோடு விசாரித்த போது, அவர் வஞ்சகமான விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே, "நேற்று வரை அந்தப் படத்தை ஜமீந்தார் படுத்திருந்த அறையில் தான் மாட்டியிருந்தார். இன்று மாலையில் தான் ஜமீந்தாரே என்னைக் கூப்பிட்டுக் 'கண்ணாயிரம்! இன்னிக்குச் சாயங்காலம் இங்கே ரொம்ப முக்கியமான விருந்தாளி ஒருத்தர் பாரதியைப் பார்க்க வரப்போறாரு. அவரு இந்தப் படத்தையும் பார்க்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். இன்னிக்கு மட்டும் இதை அங்கே கூடத்திலே மாட்டிவை' என்று சிரிச்சிக்கிட்டே சொன்னாரு. அதனால் தான் இங்கே கொண்டாந்து மாட்டினேன்" என்று கூறிய போது தான் பகலில் மகேசுவரி தங்கரத்தினமும் தானும் டெலிபோனில் பேசியதை ஜமீந்தார் முன்புறம் தமது அறையிலுள்ள எக்ஸ்டென்ஷனிலிருந்து இரகசியமாக 'ஓவர் ஹியர்' செய்திருக்கிறாரென்று பாரதியால் அநுமானம் பண்ண முடிந்தது. உள்பகுதியிலும் முன் அறையிலுமாக அந்த வீட்டில் இருந்த ஒரே எண்ணுக்குரிய இரண்டு டெலிபோன் ரெஸீவர்களில் ஒன்றைக் கையிலெடுத்தால் இன்னொன்றில் மற்றொருவர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்க முடியும் என்பதைப் பாரதியும் அறிவாள். ஜமீந்தாரும், கண்ணாயிரமும் செய்திருக்கிற அநியாயங்களை நினைத்த போது அவளுடைய வயிறெரிந்தது. அவர்களை எண்ணிய போதே 'வெல் டிரஸ்டு ரோக்ஸ்' என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் பாரதி. அக்கிரமமாகத் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தை மாட்டியிருந்த இடத்திலிருந்து வெளியில் எடுத்தெறியச் சொல்ல வேண்டும் போல மனம் குமுறினாள் அவள். மோகினியின் பரிசுத்தமான காதலை ஒப்புக் கொண்டு தன்னுடைய ஆசையைத் தனக்குள்ளேயே பெருந்தன்மையாகத் தியாகம் செய்து கொண்டிருந்தாள் பாரதி. ஆனால், இப்போது தானே ஒப்பி மகிழ்ந்த மோகினியின் காதலுக்குக் கூட கெடுதல் வருவதை அவளால் சிறிதும் தாங்க முடியவில்லை. "கவலைப்படாதீர்கள் அக்கா! 'நீங்கள் பாக்கியசாலி' என்று நான் சொல்லிய வார்த்தையை மறுபடியும் இறுதி வரை நிரூபிப்பது என் பொறுப்பு. மறுபடியும் என் தோழி மகேசுவரியை வரவழைத்து, அவளிடம் விவரமாக உங்கள் கைப்படவே கடிதம் எழுதிக் கொடுத்துச் சத்தியமூர்த்தி சாரிடம் கொண்டு போய்ச் சேர்க்கச் சொல்கிறேன். அவர் மனம் சமாதானம் அடையும் விதத்தில் அந்தக் கடிதத்தை நீங்கள் தான் அக்கா எழுத முடியும். உடனே எழுதுங்கள். நான் இப்போதே டிரைவர் முத்தையாவிடம் சொல்லி மகேசுவரி தங்கரத்தினத்தை வரவழைக்கிறேன்" என்று பாரதி ஆறுதலாக யோசனை கூறிய போது, மோகினி அந்த வார்த்தைகளை நம்பி அப்படியே சத்தியமூர்த்திக்கு மிகவும் உருக்கமாகத் தன் நிலையை விளக்கி, ஒரு கடிதம் எழுதலானாள். கடந்த சில நாட்களில் தான் உடல் நலமின்றிக் கிடந்த போது மோகினி தனக்குப் பணிவிடை செய்த விசுவாசத்தினாலும், இந்தப் பரந்த உலகில் சத்தியமூர்த்தியைத் தவிரத் தனக்குத் துணை என்று வேறு யாருமில்லாமல் உள்ளும் புறமும் அந்த ஒரே உயிர்த் துணையையே உணர்ந்து தவிக்கும் மோகினியின் பரிசுத்தமான காதலை மதித்துத் தானே தன்னையே தியாகம் செய்து கொள்வதென்று பாரதி முடிவு செய்திருந்ததனாலும் தன்னுடைய கஷ்டத்தை மறந்து மோகினியின் காதல் வெற்றி பெற மட்டுமே அவள் பாடுபட்டாள். மகேசுவரி தங்கரத்தினத்தை வரவழைத்து மோகினி எழுதிய கடிதத்தை லேக் அவின்யூவிலுள்ள சத்தியமூர்த்தியின் அறைக்குக் கொடுத்தனுப்பிய போதும், அப்படிக் கொடுத்தனுப்பிய பின் மோகினிக்கு ஆறுதல் கூறிய போதும், சத்தியமான அந்தக் காதல் வெற்றி பெறப் பாடுபடுகிற ஒரே ஒரு புண்ணியமாவது தனக்குக் கிடைக்கட்டுமென்ற பரந்த மனப் பண்புதான் பாரதியிடமிருந்தது. ஆனால் எல்லாருக்கும் மேலாக விதியோ வேறு விதமாக இருந்தது. பாரதியை விசாரித்து விட்டுப் போக வந்த இடத்தில் மோகினிக்கும் ஜமீந்தாருக்கும் மணமாகிப் புதுமணத் தம்பதிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டது போல் அலங்காரமாக எடுத்து ஆடம்பரமாக மாட்டப்பெற்ற புதிய பெரிய படத்தை அங்கே பார்த்ததாலும், தன்னுடைய சகலவிதமான அவநம்பிக்கைகளிடையேயும் ஒரே ஒரு நிச்சயமாக இருந்த அவளே நிச்சயமற்று ஜமீந்தாரிடம் சிரித்துப் பேசி உபசாரம் செய்து கொண்டு நின்ற நிலையில் அவளைச் சந்தித்ததாலும், மனம் வெறுத்து வேதனையோடு அங்கிருந்து வெளியேறியிருந்தான் சத்தியமூர்த்தி. எவ்வளவோ மனப்பக்குவமும் நிதானமும் உள்ளவனாயிருந்தும், அந்த நிலையை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. 'இந்த மாதிரிப் பெண்களை 'இருமணப் பெண்டிர்' என்று திருவள்ளுவர் எத்தனை பொருத்தமாக இழித்துக் கூறியிருக்கிறார்! 'சூதாட்டத்தையும், குடியையும் போல் மன ஒருமை இல்லா பெண்ணின் அன்பும் ஒருவனைச் சீரழித்துவிடும்' என்று அவர் கூறியிருப்பது எவ்வளவு பெரிய உண்மை. ஒழுக்கமும், நேர்மையும் இல்லாத சதைப் பிண்டமான அந்த ஜமீந்தாரின் பக்கத்தில் கழுத்து நிறைய மாலையோடும் இதழ்கள் நிறையப் புன்சிரிப்போடும் நிற்கிறாளே இந்தக் கேடு கெட்டவள்! அதுதான் வெறும் படம் என்றால் என் கண்களாலேயே அந்த வீட்டு வராந்தாவில் கால் நீட்டிச் சாய்ந்திருந்த ஜமீந்தாருக்கு இவள் காப்பி டிபன் கொடுத்து உபசாரம் எல்லாம் செய்து பயபக்தியோடு அருகே நிற்கிற கோலத்தை நான் சற்று முன்பு கண்டேனே? நான் கண்ணால் கண்டது எப்படிப் பொய்யாகும்? 'நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும்; அல்லது நீங்கள் வாழ்ந்து என்னை நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும்' என்று என்னிடம் இந்தக் கூத்தாடுகிறவள் நாடகமாடியதெல்லாம் எத்தனை பெரிய நடிப்பு?' என்று தனக்குள் அவளைக் கடுமையாக நினைக்கும் நினைப்புகளுடனே நடையை வேகமாக்கித் தன் அறைக்கு விரைந்து கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அறையில் குமரப்பன் அவனை எதிர்பார்த்துப் பரபரப்போடும், மதுரையிலிருந்து வந்திருந்த அவசரமான தந்தியோடும் காத்திருந்தான். "என்னடா சத்தியம்! கல்லூரி விட்டதும் உடனே அறைக்குத் திரும்பி வரக் கூடாதோ? நம் கலெக்டர் மதுரையிலிருந்து உடனே புறப்பட்டு வரச் சொல்லித் தந்தி கொடுத்திருக்கிறார். இப்போது கிளம்பினால் பஸ் நிலையத்திலிருந்து இன்னும் பத்துப் பதினைந்து நிமிஷத்தில் புறப்படவிருக்கும் அஞ்சரை மணி பஸ்ஸில் மதுரை போகச் சரியாயிருக்கும். உடனே புறப்படு சொல்கிறேன். நானும் உன்னோடு மதுரை வரை வந்து விட்டுத் திரும்ப நினைத்திருக்கிறேன்" என்று குமரப்பன் அவசரப்படுத்தியதும் மறுபேச்சுப் பேசாமல் கல்லூரிக்கு ஒரு வாரம் லீவு எழுதிக் கொடுத்து அதை மறுநாள் காலை கல்லூரி முதல்வரிடம் சேர்க்குமாறு ரொட்டிக்கடை ஆளிடம் கூறிவிட்டு நண்பனோடு மதுரைக்குப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. இந்தப் பிரயாணம் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான பெரிய மாறுதலை ஏற்படுத்தப் போகிறதென்று சத்தியமூர்த்திக்குத் தெரியும். யாரோ ஒருத்தியினுடைய அன்பு தடையாக இருந்து அவனைக் கடந்த ஒரு வாரமாக இதற்குத் தயங்கச் செய்து கொண்டிருந்தது. இன்று இந்த விநாடியிலோ 'உலகத்தில் எல்லாப் பெண்களுக்கும் இரண்டு மனங்களென்ன, ஈராயிரம் மனங்கள் கூட இருக்க முடியும்; பிடிவாதமாகக் காதலித்து அதற்காக உயிர் விடுகிற ஒரு மனப் பெண்களை வாழ்வில் சந்திக்கவே முடியாது போலும்! ஒரு வேளை நல்ல கவிகள் எழுதுகிற மகா காவியங்களில் வேண்டுமானால் அப்படி ஓரிரு பெண்கள் கற்பனையாக வரலாம்' என்று நினைக்கும் வறண்ட மனத்தோடும் வெறுப்போடும் அவன் இருந்தான். எனவே குமரப்பனுடைய வேண்டுகோளையும் கலெக்டருடைய தந்தியையும், அதன் விளைவுகளையும் சிறிதும் தயக்காமல் எதிர்பார்த்து, ஏற்றுக் கொள்ளவும் கருதி அவன் உடனே நண்பனோடு மதுரைக்குப் புறப்பட்டு விட்டான். கல்லூரி வேலை நிறுத்தம் பற்றிய விசாரணைக்காக வந்திருந்த கலெக்டர் திரும்பும் போது, "சத்தியம் உனக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். என் மனப்பூர்வமாக உனக்கு நான் கூறுகிற இந்த அறிவுரையை நீ ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உன் விருப்பத்தைப் பொறுத்தது. இவ்வளவு நல்ல படிப்பையும், தோற்றத்தையும் வைத்துக் கொண்டு உன்னைப் புரிந்து கொள்ளாத இவர்களுக்கிடையே நீ சாதாரண விரிவுரையாளனாக இருந்து என்ன பயன்?" "உனக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் இடையே எவ்வளவு பிரச்சினை - வேறுபாடுகள் எல்லாம் உண்டாகி அவற்றிலிருந்து நீ தப்பி வென்று விட்டாலும், இனியும் உன் மேல் வைரம் வைத்துக் கொண்டு பழிவாங்க அவர்கள் நேரம் பார்த்திருப்பார்கள். தனியார் நிர்வாகத்திலுள்ள எல்லாக் கல்லூரிகளிலும் இப்படிப்பட்ட பாரபட்சங்கள் நிறைய உண்டு. பூபதி உயிரோடிருந்திருந்தால் நடப்பது வேறு. அவரும் போய்ச் சேர்ந்துவிட்டார். 'ஹென்றி வான் டைக்' 'டு தி அன்னோன் டீச்சர்' என்ற பெயரில் ஒரு கவிதை பாடியிருக்கிறான் தெரியுமா? அதுதான் இப்போது எனக்கு நினைவு வருகிறது." "'ஆசிரியனே! நீ எல்லாருடைய இதயத்திலும் இருளகற்றி ஒளி பரப்பி அவர்களைப் புகழுக்குரியவர்களாக்குகிறாய்; ஆனால் உன் புகழும் பெருமையும் எல்லாருக்கும் மொத்தமாக மறந்து போய் விடுகின்றன. நீ இருளில் கிடந்து வாடுகிறாய்?' என்று அந்தக் கவிதையில் அவன் கூறுகிறான். உன்னுடைய வாழ்வும் படிப்பும் அப்படி இருளடைவதாய் ஆகிவிடக் கூடாது. நான் சொல்வதைக் கேள். சமீபத்தில் ஆங்கிலச் செய்தித்தாளில் நான் ஒரு விளம்பரம் பார்த்தேன். மேற்கு ஜெர்மனியிலுள்ள ஹிடல்பர்க், மார்பர்க் ஆகிய பல்கலைக் கழகங்களில் பழமையான கீழ்த்திசை மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சித் துறைக்காகத் தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்களைக் கேட்டு இந்தியாவிலுள்ள ஜெர்மன் தூதராலயத்தின் சார்பில் அரசினரின் விளம்பரம் வந்திருந்தது. பயிற்சிக் காலத்தில் மாதம் 1500 மார்க்ஸ் (சுமார் ரூ. 1875) உதவித் தொகையாகத் தருகிறார்கள். இரண்டு மூன்று வருடங்கள் நான் கூறிய ஜெர்மானியப் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சித் துறையில் இருந்து விட்டு மொழியியல் துறையில் டாக்டர் பட்டத்தோடு நீ இந்தியாவுக்குத் திரும்பி வா. இந்த வேலைக்குத் தகுதியும் தோற்றப் பொலிவும் உள்ள நீ அவசியம் தேர்வு பெறுவாய்." "ஊருக்குப் போனதும் விண்ணப்பத்தாளும் விவரங்களும் உனக்கு அனுப்பி வைக்கிறேன். உடனே பூர்த்தி செய்து உன் முகவரி கொடுக்கும் போது மட்டும் கவனமாக உன் பெயரை எழுதி மேற்பார்வை என்று போட்டுக் கீழே என்னுடைய மதுரை முகவரியைக் கொடுத்து விடு. டெல்லியிலுள்ள ஜெர்மன் தூதராலயத்தில் விரைவில் உனக்கு 'இண்டர்வியூ' நடைபெறும். இண்டர்வியூவில் நம்முடைய சென்னையைச் சேர்ந்த மொழியியல் பேராசிரியர் ஒருவரும் தேர்வாளராக இருப்பார். அவர் எனக்கு மிகவும் வேண்டியவர். நீ தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவருக்கு நான் சிபாரிசு செய்து எழுதுகிறேன். இந்த மல்லிகைப் பந்தல் கல்லூரியில் உனக்கும் இவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்ட பின் நீ தொடர்ந்து இங்கு இருப்பது உன்னுடைய எதிர்காலத்துக்கு எந்த விதத்திலும் நல்லதில்லை. நான் சொல்லுகிற இந்த ஏற்பாட்டினால் உன் எதிர்காலமும் விரைவில் ஒளிபெறும். உன் வீட்டு வறுமையும் ஓரளவு குறையும். திரும்பும் போது இந்தியாவின் எந்தப் பெரிய பல்கலைக் கழகத்திலும் நல்லதொரு பேராசிரியர் பதவியைப் பெற ஏற்ற தகுதியோடும் டாக்டர் பட்டத்தோடும் நீ திரும்பலாம்" என்று கூறிவிட்டுப் போயிருந்தார். குமரப்பனுக்கும் அவருடைய இந்த யோசனை பிடித்திருந்தது. சத்தியமூர்த்தி மட்டும் சிறிது தயங்கினான். ஆனால் ஊர் சென்ற மறுநாளே கலெக்டர் அனுப்பிய விண்ணப்பங்களை மட்டும் தயங்காமல் அவர் கூறியபடியே பூர்த்தி செய்து அவன் டெல்லிக்கு அனுப்பி வைத்திருந்தான். அதன் தொடர்பாகத் தான் இன்று கலெக்டரிடமிருந்து அவசரமாகத் தந்தி வந்து அவனும் நண்பன் குமரப்பனும் உடனே மதுரைக்குப் புறப்பட்டிருந்தார்கள். பஸ்ஸில் போகும் போது குமரப்பன் பேச்சுப் போக்கில் சத்தியமூர்த்தியிடம் மோகினியைப் பற்றி ஏதோ சொல்லத் தொடங்கிய வேளையில், "வேறு ஏதாவது பேசு! ஊரிலுள்ள நாட்டியக்காரிகளைப் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை?" என்று சத்தியமூர்த்தி முகத்தைச் சுளித்து வெறுப்போடு மிகவும் கடுமையாகக் கூறியதைக் கண்டு அவனுடைய அந்தத் திடீர் மனமாறுதலுக்குக் காரணம் ஒன்றும் புரியாமல் குமரப்பன் திகைத்தான். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|