61

     இந்தத் தேசத்தின் இன்றைய வாழ்க்கையில் வாழ வேண்டும் என்கின்ற ஆசைகள் ஒருபுறமும் வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்கள் வேறு ஒரு புறமுமாக முரண்பட்டு நிற்கின்றன.

     மாறுதலும் விரைவும் மிக நெருங்கிய உறவினர்கள் போல் இருக்கிறது. அதனால் தான் சந்தர்ப்பங்கள் மாறும் போது வாழ்க்கையே மிகவும் வேகமாக ஓடிவிடுவது போல் தோன்றுகிறது.

     "என்ன தான் விரோதம் வந்துவிட்டாலும அவரிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் நீ இதைச் செய்யலாமா? என்னமோ போ. வீட்டோடு ஒட்டாமல் போயாச்சு?" என்று அம்மா கண்கலங்கி விடைகொடுத்த போதும், தங்கைகள் ஏறக்குறைய அழுகிற நிலைக்கு மனம் வருந்தியதையும் கண்டும் காணாதவனாகப் புறப்பட்டு விட்டான் சத்தியமூர்த்தி. கலெக்டர் இரயில் நிலையத்துக்கு வந்து வாழ்த்துக் கூறி அவனை வழியனுப்பினார்.

     மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் அந்த எக்ஸ்பிரஸ் வண்டி மூன்று நிமிடங்கள் நின்றது. குமரப்பன் மலைக்கு பஸ் ஏறுவதற்காக அங்கே இறங்கிக் கொண்டான். மறுநாள் காலை சத்தியமூர்த்தி சென்னையை அடையும் போது இரயில் இரண்டரை மணி நேர தாமதத்தோடு ஒன்பதே முக்கால் மணிக்கு எழும்பூருக்குப் போய்ச் சேர்ந்ததனால் நிலையத்திலேயே குளித்து உடை மாற்றிக் கொண்டு அவசரம் அவசரமாகச் சென்டிரல் நிலையத்துக்குப் போய் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸைப் பிடிப்பதற்குத்தான் நேரம் சரியாயிருந்தது. கலெக்டர் கடிதம் கொடுத்துச் சொல்லியனுப்பியிருந்த சென்னைப் பிரமுகர்களை டில்லியிலிருந்து திரும்பும் போதுதான் பார்க்க முடியுமென்று தோன்றியது. பாரதத்தின் தலைநகருக்குத் தமிழ்நாட்டின் தலைநகரிலிருந்து புறப்படும் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் தனக்குரிய சகலவிதமான கம்பீரங்களுடன் ஒன்றே முக்கால் நாள் ஓடி அலுத்த களைப்போடு டெல்லி மாநகரை அடைந்த போது - டெல்லியிலுள்ள மதராஸி ஓட்டல் ஆட்கள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தை முற்றுகையிட்டுக் கிராக்கி பிடிப்பதற்குப் பறந்தார்கள். மறுநாள் காலையில் இண்டர்வ்யூ. களைப்பாக இருந்ததனால் ஓய்வு கொள்ள விரும்பிய சத்தியமூர்த்தி ஸ்டேஷனுக்கு வந்திருந்த ஹோட்டல் ஏஜெண்டுகளில் யாரோ ஒருவரோடு புறப்பட்டுப் போய் மலிவான ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கினான். கையில் பணம் குறைவாகக் கொண்டு வந்திருந்ததனால் இண்டர்வ்யூ முடிந்ததும் அடுத்த இரயிலில் திரும்பத் திட்டம் போட்டு ஸ்டேஷனில் இறங்கியதும் முன்னேற்பாடாகத் திரும்புவதற்கு டிக்கட் கூட எடுத்தாயிற்று.

     ஜெர்மன் தூதராலயத்தில் மறுநாள் காலையில் நிகழ்ந்த இண்டர்வ்யூவுக்கு மொத்தம் ஏழு பேர்கள் வந்திருந்தார்கள். அதில் சத்தியமூர்த்தி உள்பட மூவர் முதல் வகுப்பில் தேறிய ஆனர்ஸ் பட்டதாரிகள். இருவர் வெறும் எம்.ஏ.க்கள். இன்னும் இருவர் வெறும் பி.ஓ.எல். தகுதி மட்டுமே உடையவர்கள். இண்டர்வ்யூவில் தூதராலயத்தைச் சேர்ந்தவர்கள் உலக அரசியல், நிலவியல் பற்றிச் சில கேள்விகள் கேட்டனர். மற்றவர்கள் மொழியியல் பற்றிச் சில கேள்விகள் கேட்டார்கள். சத்தியமூர்த்தி திருப்திகரமாகவும் நன்றாகவும் மறுமொழிகளைக் கூறினான். இண்டர்வ்யூ முடிந்ததும் கலெக்டரின் அறிமுகக் கடிதங்களுக்குரியவர்கள் சிலரைச் சந்தித்தான். எல்லாரும் 'நீங்கள் தேர்ந்தெடுக்கப் பெறுவது உறுதி. அதில் சந்தேகமே படவேண்டாம்' என்ற தோரணையில் அவனிடம் நம்பிக்கையளித்துப் பேசினார்கள். அங்கிருந்தே கலெக்டருக்கும் நண்பன் குமரப்பனுக்கும் கடிதங்கள் எழுதினான் சத்தியமூர்த்தி. திரும்பும் போது மதுரையைச் சேர்ந்த பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவரை இரயில் நிலையத்தில் இரயிலேறுகையில் தற்செயலாக அவன் சந்திக்க நேர்ந்தது. அவரை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவரோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான் அவன். அவரும் அவன் வந்த காரியத்தை அறிந்து அவனை மனப்பூர்வமாகப் பாராட்டினார்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.